செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை!

படம்: நன்றி!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். வருவோரும் போவோருமாக உயிர்ப்போடு விளங்கும் தெருக்கள். மதுரை நகரத்தின் நாளங்காடி...

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்"

அங்கே, விற்க விற்கக் குறையாமல் பொருட்கள் வந்திறங்கியபடியே இருக்க, விற்பனைக்கு வந்த பொருட்களை இறக்கிவைக்கிற ஓசையும், அவற்றை விலைகொடுத்து அள்ளிச்செல்லுகின்ற மக்கள் கூட்டம் எழுப்பும் ஒலியும் சேர்கையில் ஆற்றுநீர் ஓடிவந்து அலைகடலோடு கலப்பதுபோன்ற  ஆரவாரம் அங்கே.

தெருக்களில், சுவை மிக்க பலகாரக்கடைகள், வட்டத் தட்டுக்களில், கட்டிவைத்த, கொட்டிவைத்த பூக்களை விற்கும் கடைகள், மகரந்தம் போல மென்மையாக வாசனைத் திரவியங்களைப் பொடித்து விற்கும் கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகள், சங்கு மற்றும் சுட்ட சுண்ணாம்பினை விற்கும் கடைகள் என்று பலவிதமான கடைகள். 

சங்குகளை அறுத்துப் பதமாக்கி அவற்றில் வளையல் செய்கிறவர்களும், ஒளிபொருந்திய வயிரக்கல்லில் துளையிடும் தொழில் செய்பவர்களும், பொன்னை உரசிப்பார்த்து வாங்குகிற பொன் வியாபாரிகளும், செம்பினை எடைபோட்டு வாங்கும் வணிகர்களும், ஆடை விற்பனை செய்பவர்களும், குஞ்சம் கட்டி விற்பவரும், பூக்களும், சந்தனமுமாகிய நறுமணப் பொருட்களை விற்பவர்களும், ஓவியம் வரைபவர்களும், கடலின் கரையில் படியும் கருமணல் படிவுகளைப்போல, தெருவோரங்களில் புடவைகளை விரித்துக்கட்டி நெசவு செய்பவர்களும், ஒருவர் கால் மற்றவர்மேல் படுமளவுக்கு நெருக்கமாக நின்று விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

"பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர்களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை (பிரியாணி???) விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவையுடைய சோற்றினை வழங்குபவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப்பாகக் காணப்பட்டது அந்த வீதி.

இவை தவிர, இரவு நேர அங்காடிகளில், மரக்கலங்களில் வந்திறங்குகிற பொருட்களை வாங்குவோரும், தாம் கொண்டுவந்த பொருட்களை விலைக்கு விற்றுக் கிடைத்த பொருளுக்கு மதுரை மாநகரில் கிடைக்கிற அழகிய அணிகலன்களை வாங்கிச்செல்லுகிற வெளிநாட்டு வணிகர்களும் சேர, அலை ஓசையும் அவற்றோடு விளையாடும் நீர்ப்பறவைகளின் ஓசையும் இயைந்ததுபோல எங்கும் ஓசை நிறைந்திருந்தது. 

இவையெல்லாம், பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி காட்டுகிற மதுரையும் அவற்றில் நடக்கிற வியாபாரங்களைப் பற்றிய செய்தியுமாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்திருந்தும், இன்னும் அதே உயிர்ப்புடன் உறங்கா நகரமாக இயங்குகிற மதுரையை நினைக்கையில் மனசு வியக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வைகையைக் காணோம், வறட்சியாகிப்போச்சு என்று ஆயிரம்தான் சொன்னாலும் என்றைக்கும் மதுரை மதுரைதான்!!!


-சுந்தரா

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உறங்கா நகரம் மதுரை!

சென்னைக்குச் செல்கிற அந்தத் தனியார் பேருந்து மதுரை ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தத்தில் நின்றது. மணி இரவு 10. எடுத்து வந்திருந்த இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, சாப்பாடு கட்டியிருந்த இலையினையும் காகிதத்தையும் போட்டுவிட்டு வரலாமென்று கீழே இறங்கினேன். பளிச்சென்ற விளக்குகள்,  போவதும் வருவதுமாய் மக்கள் கூட்டம், இரவென்று சொல்லமுடியாதபடி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது மதுரை.

சுற்றிலும் தனியார் பேருந்துகளுக்கான சிறு அலுவலகங்கள், பெட்டிக்கடைகள், பழக்கடைகள், தேநீர்க் கடைகள் தெரிந்ததேயன்றி குப்பைகளைப் போட குப்பைத் தொட்டியொன்றும் கண்ணில் படவில்லை.

சுற்றிலும் பார்த்த என்னிடம் அக்கா, ரெண்டு பத்து ரூவாக்கா வாங்குங்கக்கா என்றபடி அருகில் வந்த செயற்கைப் பூச்சாடி விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம், தம்பி குப்பையைப் போட குப்பைத்தொட்டி எங்கேயிருக்குப்பா? என்றேன். அக்கா, சும்மா இந்த பஸ்ஸுக்கு அடியில போடுங்கக்கா என்று சொல்லிவிட்டு, அக்கா ஒண்ணாச்சும் வாங்குங்கக்கா என்றான். பஸ் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. இருப்பா, ரெண்டாவே குடு என்றேன். இருந்ததிலேயே பளிச்சென்ற நிறத்தில் இரண்டு பூச்சாடிகளை நீட்டினான்.

கொடுத்ததை வாங்கிக்கொண்டு அவனிடம், தம்பி உன் பேரென்னப்பா என்றேன். 'அழகர்க்கா...' என்று சட்டென்று கண்கள் மின்னச் சொன்னவனிடம் 'படிக்கிறியா...' என்றேன். 'ம்ம்...எட்டாப்புப் படிக்கிறேன்க்கா. வீட்ல படிச்சுமுடிச்சிட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்தான் பூ விக்க வருவேன். எனக்கு முன்னாடி என் அண்ணன் வருவான்' என்றான்.

'ஆமா, உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல்?' என்றவுடன், ஒருநிமிடம் யோசித்துவிட்டு 'மீனாச்சி கோயில்க்கா...' என்றான். அதுதவிர என்றவுடன் 'மல்லிப்பூ, இட்லி, ஜிகர்தண்டா, திருமலை நாயக்கர் மஹால்,  திருப்பரங்குன்றம் அப்புறம் அழகர் கோயில்' என்றவனிடம் நீ அடிக்கடி எந்த கோயிலுக்குப் போவே? என்ற கேள்விக்கு, மடப்புரம் காளி கோயில்க்கா. அங்கதான் எங்கம்மா அடிக்கொருக்கா கூட்டிட்டுப் போகும் என்றான். அப்போ, மீனாட்சி அம்மன் கோயில்? என்று கேட்டவுடன், எப்பவாச்சும் போவோம்க்கா என்றான்.

ஆமா, எத்தனை மணிவரைக்கும் பூச்சாடி வியாபாரம் பண்ணுவே என்று கேட்க? இப்ப போயிருவேன்க்கா. இனி நாளைக்கு சாயந்திரம் எட்டுமணிக்கு வருவேன் என்றவனிடம், 'சரி தம்பி படிப்பை மட்டும் விட்டுராதே' என்றதும் சரிங்கக்கா என்று சிரித்தபடி நகர்ந்துபோனான் அவன். சுற்றிலும் அவனைப்போல் நிறைய சிறுவர்கள் பழங்கள், பைகள், தொப்பிகள், பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கூவிக்கூவி விற்கிற சத்தங்கள், புறப்படுகிற பேருந்துகளின் ஒலி, சென்னை, திருச்சி, பேருந்துகளுக்குப் பயணிகளைக் கூப்பிடுகிற நடத்துனர்களின் சத்தம், பக்கத்துப் பரோட்டாக் கடையில் கொத்துப் பரோட்டா போடுகிற சத்தம், இடையிடையே அங்கே திரிகிற மாடுகள் எழுப்புகிற சத்தம் என்று கலவையான சத்தங்கள் நிறைத்திருக்க இரவென்ற எண்ணமே எழவில்லை. உறங்கா நகரம் அந்த நள்ளிரவிலும் உற்சாகமாகவே தெரிந்தது. 

சனி, 22 பிப்ரவரி, 2014

நடந்தாய் வாழி காவேரி!

இப்போதெல்லாம் விடுமுறையில், திருச்சிக்குப் போகவேண்டுமென்று பேச்செடுத்தாலே அங்கே இரண்டு நாள்தான் இருக்கமுடியும். அதுக்கு சரின்னு சொன்னா வரேன் என்று கண்டிப்போடு சொல்லுவார்கள் பிள்ளைகள். அவர்களிடம் என்ன காரணமென்று கேட்டால் சட்டென்று பதில்வரும். அங்கே தண்ணி நல்லாருக்காது.போர் தண்ணியில குளிச்சா தலை சிக்குப்பிடிச்சுப்போகும். சோப்புப் போட்டாக்கூட நுரையே வராது என்று ஆளுக்கொரு குறை சொல்லுவார்கள்.

கேட்கையில் மிகையாகத் தெரிந்தாலும் விடுமுறையான ஜூன் ஜூலையில் அங்கே செல்லும்போது அநேகமாக எப்போதும் அதே நிலைமைதான். குழாயில் வருகிற தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடித்தாலும் நன்றாக இல்லையென்று மினரல் வாட்டருக்கு முக்கால்வாசிப்பேர் மாறிவிட்டதாகச் சொன்னபோது, தென்னக நதிகளில் தலையாய நதியாக நம் தமிழ்ப்புலவன் பாரதி குறிப்பிட்ட காவிரியின் இன்றைய நிலைமை மனதைக் கனக்கவைத்தது உண்மைதான்.

இன்றைக்கு நிலைமை இப்படியென்றாலும், தென்னகத்தின் கங்கையெனுமளவுக்குப் புகழ் பெற்றது காவிரி நதி. தலைக்காவிரியில் பிறந்து வங்காள விரிகுடாவில் வந்து சேருகிற அந்தக் காவிரிப்பெண்ணுக்கு வருகிற வழியெங்கும் வழிபாடு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

 காதோலை,கருகமணி, கருப்பு வளை, இவற்றோடு பூ, பழம் படையலுமாகச் சீர்கொண்டுபோய் ஆடிப்பெருக்கில் அவளை வழிபடும் வழக்கம் காவிரிக்கரைகளில் இன்றும் கண்கூடாகப் பார்க்கிற ஒன்று. ஆடிப்பெருக்கன்று அவளை வழிபட்ட கையோடு புதுமணத் தம்பதிகள் தங்கள் மணநாளில் அணிந்த மாலைகளை அவளிடம் சமர்ப்பிக்கின்ற சடங்கும் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

கவிஞர்கள் பலருக்குக் கருப்பொருளாகவும், காண்பவர் கண்ணுக்குக் தாயாகவும் தென்படுகிற காவிரிக்கு இலக்கியத் தொடர்புகள் ஏராளம். 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில்,

"வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தனைய கடற்காவிரி
புனல் புரந்து பொன் கொழிக்கும்”

காவிரியின் மெல்லிய மணல் பொன்னிறமாகத் திகழ்வதால்தான் அதற்குப் பொன்னியென்றும், வடமொழியில் ஸ்வர்ண நதியென்றும் பெயர் வந்ததோ என வியக்கிறார் பட்டினப்பாலையின் உரையாசிரியரான நச்சினார்க்கினியர்.

ஆடிப்பெருக்கில் கூடி வழிபடப்பெறும் காவிரிப்பெண்ணுக்குத் தான் தமிழ்க் குறுமுனிவன் அகத்தியரின் மனைவியென்ற கர்வமும் உண்டு.
ஆம், குறுமுனி அகத்தியர் கவேர மகரிஷியின்  மகளான லோபமுத்திரையை மணந்துகொண்டு, அவளை ஒரு சமயம் கமண்டலத்தில் நீராக்கித் தன்னுடன் எடுத்துச்செல்ல, அந்தக் கமண்டல நீரைக் கணபதியாகிய விநாயகப்பெருமான் காகமாகி வந்து தட்டிவிட, அந்நீரே காவிரி நதியானதாகப் புராணக்கதையாகச் சொல்லுவார்கள்.

இதே கருத்தையே,

"கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது 
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை" 

காந்தமன் எனும் அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்தவள் காவிரி என்று மணிமேகலை கூறும்.

மணிமேகலையில் காந்தமன் எனப்படுகின்ற அதே கண்டம சோழன் எனும் மன்னன், குறுகிய பகுதியிலேயே பாய்ந்துகொண்டிருந்த காவிரியைக் குடகுமலைப் பாறைகளை உடைத்துச் சோழ நாட்டுக்குள் கொண்டுவந்தானென்றும் கூறப்படுகிறது. அந்தச் சோழ மன்னனின் பெருமுயற்சியால் தானோ என்னவோ மிகக் குறுகிய நதியாகப் பாறை இடைவெளியில் பாய்ந்துகொண்டிருந்த, ஆடுதாண்டும் காவிரி என அழைக்கப்பட்ட காவிரி, சோழ மண்டலத்தில் நுழைந்து அகண்ட காவிரியாகி அதைப் பொன்விளையும் பூமியாகப் பூரிக்கவைத்திருக்கிறது.

இவ்வாறு அன்றைக்குக் கண்டமன் கொண்டு வந்த காவிரிக்குக் கல்லணை கட்டிப் பெருமை பெற்றான் மன்னன் கரிகால் சோழன். அவனை,

"குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே"

மலையெனக் குவித்துவைக்கப்பட்ட நெற்குவியல்கள், மூடைகளில் நிரப்பித் தைக்கப்பட்டும் மிகுந்துபோய் எங்கும் பரந்துகிடக்கின்ற,ஒருவேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையுமளவுக்குக் காவிரியின் நீரால் செழுமைப்படுத்தப்பட்ட, நிலப்பகுதிக்குத் தலைவன் என்று பொருநராற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது. 

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!

வண்டுகள் மொய்க்கும்படியாக மலர்களை ஆடையாகப் போர்த்தி, கரிய கயல்கள் கண்களாகி விழித்து நோக்க, நடைபயிலுகின்ற காவிரியின் அழகைச் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்துப்பாடுகிறார் இளங்கோவடிகள்.

கவிஞர்கள் தன் பங்குக்குக் காவிரியைப் பாட, கல்கி அவர்களின் காவிரி வர்ணனை அதன் மேல் அவருக்கிருந்த காதலைச் சொல்லாமல் சொல்லும். பொன்னியின் செவன் ஒன்பதாவது அத்தியாயத்தில் அவர் காவிரியைப் புகழும் அழகைப் பாருங்கள்...

"குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?
பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப் பெண் யார்தான் இருக்க முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?
கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!" 
என்று காவிரியின் அழகைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார் கல்கி.

இத்தனை புகழ்பெற்ற நம் காவிரிப் பெண், அகத்தியர் என்ற திரைப்படத்தின் பாடலாக கே. டி. சந்தானம் அவர்களது படைப்பில், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கம்பீரமான குரலில் எவ்வாறு நடைபயிலுகிறாள் என்பதையும் கேட்டு மகிழுங்கள்.

இலக்கியத்தில் படிக்கும்போதும், எத்தனையோ பாடல்களில் கேட்கும்போதும் காவிரியை நினைத்து மகிழ்கிற தமிழனின் மனசு, வளருகிற பயிருக்காகவும், வாழ்வாதாரமான குடிநீருக்காகவும் இன்றைக்கு வழக்குப்போட்டு அண்டை மாநிலத்திடம் சண்டைபோடுகிற நிலைமையைப் பார்த்தால் வருந்தத்தான் செய்கிறது.

                                                                            *********

சனி, 15 பிப்ரவரி, 2014

மூதுரைக் கதைகள் - 1 ஆளில்லா மங்கைக்கு அழகு

கல்யாணம் பண்ணி இன்னிக்கி நாப்பத்தெட்டு வருஷமாச்சு. கட்டிக்கிட்டு வந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் தான். பொறந்த இடத்திலயும் பெருசா எதுவும் வசதியாயிருக்கல. கடவுள் புண்ணியத்துல பிள்ளைங்க நாலுபேரும் நல்லாப் படிச்சதால இன்னிக்கி எல்லாக் கஷ்டமும் தீர்ந்துபோச்சு. ஆனா, இதையெல்லாம் பார்க்க அவங்க அப்பாவுக்குத்தான் குடுத்துவைக்காம போச்சு.

அப்பல்லாம், நாலு பிள்ளைங்களும் படிச்ச காலத்துல அவங்க அப்பா ஒரு ஆள் சம்பளம். அதுல, அம்பது ரூவா  ஒதுக்கி பெரியவனுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் புஸ்தகம் வாங்கவும், சின்னவனுக்குக் கிழிஞ்சுபோன பள்ளிக்கூடத்து யூனிஃபாரத்துக்குப் பதிலா புதுசு வாங்கவும்கூட எவ்வளவோ சிரமப்பட்டிருக்கோம். 

ஆனா, இப்பப் பாருங்க,  பிள்ளைங்க  தலையெடுத்த பிறகு, என்ன வேணும்னு நெனச்சாலும், அது அடுத்த நிமிஷமே கிடைக்குது. ஆனா, கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு, காசு செலவழிக்கத் தெரியாம பழகிப்போன இந்தப் பிறவிக்கு, இப்போ அதை அனுபவிக்க நினைச்சாலும் முடியல.

நேத்துப் பாருங்க பேச்சுவாக்குல, "கல்யாணத்தப்போ மாம்பழக் கலருல பச்சைக்கரை போட்ட பட்டுச் சேலை வாங்கணும்னு ஆசைப்பட்டதையும், உனக்கு அறுவதாம் கல்யாணத்துக்கு அந்தக் கலர் சேலை வாங்கிருவோம்னு அவங்கப்பா கிண்டலா சொன்னதையும் சின்னப்பையன் குமார் கிட்ட விளையாட்டா சொல்லிட்டிருந்தேன், கிறுக்குப்பய,  அங்க இங்க அலைஞ்சு, அதே நிறத்துல ஒரு பட்டுச் சேலையக் கொண்டு வந்து சாயங்காலமே கையில குடுக்குறான்.

எனக்கு சட்டுன்னு கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சு கண்ணம்மா. போற வயசுல இதைக் கட்டிக்கிட்டு நான் எங்க போகப்போறேன் வரப்போறேன்?" என்று சொன்ன காந்திமதிப் பாட்டியிடம், "இதெல்லாம் குடுப்பினை காந்திமதி, அன்னிக்கி அத்தனை வறுமையிலயும், பொறுமையே தவமா நீ குடும்பத்தைக் காப்பாத்தினதுக்குக் கிடைச்ச பரிசு. இந்தப் பரிசுக்கு நீ முழுக்க முழுக்க தகுதியானவதான். ஆனா என்ன, கொஞ்சம் காலங்கடந்து ஒனக்குக் கிடைச்சிருக்கு... அவ்வளவுதான்" என்றாள் காந்திமதியின் தோழி கண்ணம்மா பாட்டி.

இப்போ, நீ சொல்லிப் புலம்புற இதே விஷயத்தைப் பத்தி,
நம்ம ஔவையார் அப்பவே மூதுரைப் பாட்டுல எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காங்க தெரியுமா?

"இன்னா விளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா வளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு"


"அதாவது, சுபமான, மங்கல விழாக்காலங்களில் இல்லாமல் மற்றைய காலங்களில் பூக்கிற அழகிய பூக்களையும், துணைவனில்லாத ஒரு இளம் பெண்ணுக்கு அமைந்திருக்கிற அழகையும்போல,  இளமைப் பருவத்தில் வந்து வாட்டுகிற வறுமையும், அனுபவிக்க இயலாத முதுமைப் பிராயத்திலே வந்து சேர்கின்ற இனிமையும் துன்பத்தையே தரும் என்று மூதுரையின் மூன்றாவது பாட்டில் அன்னிக்கே சொல்லியிருக்காங்க..." என்று கண்ணம்மா பாட்டி சொல்ல,

" அடடே...நம்ம மனசு புரிஞ்சாப்பல எவ்வளவு அருமையா அப்பவே சொல்லி வச்சிருக்காங்க பாரு!" என்று ஔவையின் பாடலைக் கேட்டு வியந்து போனாள் காந்திமதிப் பாட்டி.

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஊரார் பிள்ளை



தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவரவர் பிள்ளைகளைப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் ட்யூஷன் நடத்துமிடங்களில் அடைத்துவிட்டு, அம்மாக்கள் டீயும் கையுமாய் டி.வி சீரியல்களில் ஆழ்ந்திருந்த நேரம்...வீட்டுக்கருகிலிருந்த  காந்திசிலைகிட்ட கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள் எட்டுவயசு சிந்துவும் அவள் தம்பி அருணும்.

அம்மா வர நேரமானால், அண்ணாச்சி கடையில் ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டு, நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த இந்திரா ஆன்ட்டி வீட்டில் தொல்லைபண்ணாம உட்கார்ந்திருக்கணுமென்பது ஏற்கெனவே அவர்கள் அம்மா அனு சொல்லிவைத்திருந்த விஷயம். இந்திராவும் அனுவும் ஒரே ஊர்க்காரங்க என்பதோடு ஒரே பள்ளியில் படித்தவர்களும் கூட.

பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, இந்திரா ஆன்ட்டி வீட்டுக் காலிங்பெல்லை மாற்றிமாற்றி அடித்தார்கள் ரெண்டுபேரும். வழக்கத்துக்கு மாறாக, சந்துரு அங்கிள், இந்திரா ஆன்ட்டியின் கணவர்வந்து கதவைத் திறந்தார்.

கையிலிருந்த கண்ணாடி கிளாசில் மிரிண்டாவுடன் நின்ற அவர், "என்ன பசங்களா, உங்க அம்மா இன்னும் வரலியா? என்றார். அம்மாவுக்கு இன்னிக்கு ஓவர்டைம் இருக்குதாம். அவங்க வரவரைக்கும் இங்கயே இருக்கச்சொன்னாங்க அங்கிள்...என்றான் அருண். அதற்குள், "ஆன்ட்டி, குடிக்கத் தண்ணி வேணும்..." என்று உட்புறம் பார்த்துக் குரல்கொடுத்தாள் சிந்து

"ஆன்ட்டி வீட்ல இல்லைடா, கோயிலுக்குப் போயிருக்காங்க...தண்ணிதானே வேணும், நானே கொண்டுவரேன்" என்றபடி உள்ளேபோனார் அங்கிள். ஆன்ட்டி வீட்ல இல்லேன்னதும் சந்தோஷம் கிளம்பியது அருணுக்கு. ஆன்ட்டி பார்க்கிற அறுவையான சீரியல்களைப் பார்க்காமல், ஆதித்யா சேனல் பார்க்கலாமென்று வேகவேகமாக ரிமோட்டைக் கையிலெடுத்தான். "ஆதித்யா வேண்டாண்டா அருண்...அனிமல் ப்ளானட் பார்க்கலாம்" என்றாள் சிந்து அதற்குள், இரண்டு டம்ளர்களில் மிரிண்டாவும் சின்ன பாட்டிலில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார் சந்துரு அங்கிள்.

நீங்க ரெண்டுபேரும் சண்டைபோட்டுக்க வேணாம்..."அருண், நீ பெட்ரூம் டிவியில ஆதித்யா பாரு, நானும் சிந்து குட்டியும் ஹால் டிவியில அனிமல் ப்ளானட் பாக்குறோம்  என்று ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்து உட்காரவைத்தார் அங்கிள். உடனே, மிரிண்டா கிளாசுடன் சந்தோஷமாக அறைக்குள் ஓடினான் அருண் .கையிலிருந்த மிரிண்டாவை ஒரேமூச்சில் குடித்துவிட்டு, படுக்கையில் சரிந்தபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.  கொஞ்ச நேரம் கார்டூன் கதாபாத்திரங்களுடன் கூடக்கூடப் பேசிக்கொண்டிருந்தவன் பத்துநிமிஷத்தில் தூங்கிப்போய்விட்டான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான் சந்துரு.  பிரதோஷ பூஜை முடித்து, பிரசாதத்துடன் உள்ளே நுழைந்தாள் இந்திரா. இன்னிக்கும் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்களா?  வந்து ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டிங்கல்ல, காபி போட்டுத்தரவா என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சிந்துவும் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தாள். இன்னிக்கும் இந்தப் பசங்க இங்க வந்துதான் லூட்டியடிச்சுதா? என்று எரிச்சலுடன் கேட்டவள் எப்பத்தான் இவங்க அப்பாவும் அம்மாவும் புள்ளைங்க விஷயத்துல கரிசனம் காட்டப்போறாங்களோ என்று கணவனிடம் சொன்னபடி பூஜையறைக்குப் போனாள் இந்திரா.

படுக்கையறையிலும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அங்கே உறங்கிக்கொண்டிருந்த அருணைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் அளவு மீறிப்போய்விட்டது. அழுக்குக் காலோட இதுங்கள சோபாவுலகூட நான் உக்காரவிடமாட்டேன். நீங்க என்னன்னா, படுக்கைல ஏறி அழுக்காக்கவிட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க" என்று இறைந்தவளிடம் "இதுக்குப்போயி கோவப்படுறியே இந்திரா, நம்ம வீட்ல குழந்தைங்க இருந்திருந்தா கட்டில்ல ஏறி விளடமாட்டாங்களா?" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முற்பட, "ஓ... எனக்குக் குழந்தையில்லைன்னு வேற குத்திக் காட்டுறீங்களோ?

காசு காசுன்னு இவங்க அப்பாவும் அம்மாவும் காலநேரம் தெரியாம அலையிறாங்க...அவங்க வரதுக்குள்ள இதுங்க தூங்கிடுது. காலையில, விடிஞ்சும் விடியாமலும் எழுப்பி மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பிடுறாங்க. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தண்ணியைக் குடுங்க, டிவியைப் போடுங்க ன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க. சொல்லப்போனா இதுங்க அப்பா அம்மா இதுங்ககிட்ட உட்கார்ந்து அஞ்சு நிமிஷமாவது பேசுவாங்களோ என்னவோன்னு கூடத் தெரியலை. ஆனா நாம  இதுங்களோட கேள்விக்கெல்லாம் பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு..." என்று அவள் எரிச்சலில் படபடக்க,

"நாம தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கோம்னு தைரியம்தான் இந்திரா. அவங்க ரெண்டு பேரும் குறைஞ்ச சம்பளக்காரங்க. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கணும்னா ஓவர்டைம் பாத்தாதான் ஓரளவுக்கு அவங்களுக்குக் கட்டுப்படியாகும் என்ற கணவனிடம், "ஓ, அப்போ அவங்க காசு சம்பாதிக்கிறதுக்காக நான் அவங்க புள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கணுமோ?  என்று அவள் குரலை உயர்த்திக் கூப்பாடு போட,

தெருமுனையில், நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அருணின் அம்மா அனு.  ஓவர்டைமோட சேர்த்து இந்த மாசம் ஒம்பதாயிரம் கிடைச்சிருக்கு. சிந்து கேட்ட வீடியோ கேமும், அருணுக்கு ஒரு சைக்கிளும் இந்த மாசம் கட்டாயம் வாங்கிரணும் என்று மனசுக்குள் நினைத்தபடி, முக்குக் கடை அண்ணாச்சியிடம் குழந்தைகளுக்குப் பிடித்த ரெண்டு மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்டு, ஓட்டமும்நடையுமாக வீட்டை நோக்கி வேகவேகமாய் வந்தவள் இந்திரா வீட்டில் போய்ப் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காய் அழைப்புமணியை அழுத்துவதற்குள் அங்கே கேட்ட சம்பாஷணை அவளை முகத்திலறைந்தது. ஒருநிமிஷம் செயலற்றுப்போய் நின்றுவிட்டாள் அவள்.

அதே நேரம், இந்திராவிடம் மேலும்மேலும் பேசிச் சண்டையை வளர்க்க விரும்பாத சந்துரு,  "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு பழமொழியே சொல்லுவாங்க...இருக்கிற நிலையைப் பார்த்தா இனி நமக்கு அந்த பாக்கியமே இல்லாம போயிடும்போல.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி,..."சரி, நான், கடைக்குப்போயி சிகரெட் வாங்கிட்டு வந்துடறேன். நீ கதவைச் சத்திக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.

வாசலில் நின்ற அனுவைப் பார்த்ததும் சட்டென்று அவன் முகம் சங்கடத்தில் வெளிர, அதைக் கண்டுகொள்ளாமல், அப்போதுதான் வந்தவள்போல, கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.  "இந்திராவையும் கூப்பிடுங்க... எங்க வீட்டுக்காரருக்கு அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால நான் இன்னியோட வேலையை விட்டுட்டேன். கூடிய சீக்கிரம் அந்தப்பக்கமாவே வீடு பாத்திட்டுப் போயிரலாம்னு இருக்கோம்" என்றவள், "சிந்தூ, அருண்..." என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். உள்ளிருந்து அவர்களை எழுப்பிக் கூட்டிக்கொண்டுவந்தாள் இந்திரா. அப்பாடா என்ற ஒரு விடுதலை அவள் முகத்தில் தெரிந்தது. "இன்னிக்கும் இங்கயே தூங்கிருச்சுங்களா? தேங்ஸ் இந்திரா..." என்று அவள் முகத்தைப் பார்த்து மெல்லச் சொன்னவள் பிள்ளைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அனு, சொல்வது உண்மையில்லை என்று உள்ளுக்குள் ஏதோ உணர்த்த, மறுகிய மனத்துடன் வெளியிறங்கி நடந்தான் சந்துரு.

சனி, 8 பிப்ரவரி, 2014

பாசக்காரி சிறுகதை



நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.

சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.

அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.

ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.

எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக்  காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி  உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.

முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.

பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.

அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.

அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.

சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை  நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.

பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம்  நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.

அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும்  அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின்  ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.  ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.

சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை.  பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.

இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த  தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.

எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு  சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .

உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.



புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

சனி, 1 பிப்ரவரி, 2014

கூட்டாஞ்சோறும் குழந்தைப் பருவமும்




"ஏய், எத்தனை நாளைக்கிதான் ஒளிஞ்சு புடிச்சு, ஏழாங்கல்லு, பல்லாங்குழி, தாயம்னு விளையாடுறது? வேற ஏதாச்சும் வித்தியாசமா செய்யலாம்ப்பா... நாளைக்கு நாமெல்லாஞ் சேர்ந்து கூட்டாஞ்சோறாக்கலாமா?" சலிப்பில் வாடியிருந்த முகங்களில் சந்தோஷ மழை தெளிக்கும் மேகம்போலத் தன் கருத்தைச்சொன்னாள் செல்வி.

பட்டென்று அந்த இடத்தை ஒரு உற்சாகம் சூழ்ந்துகொண்டது. "ஏய், யாராரு என்னென்ன கொண்டுவரணும்னு இப்பவே பேசிக்கிட்டாத்தான் நாளைக்குள்ள எல்லாத்தையும் சேக்கமுடியும். ஏல செல்வி, நான் காப்படி அரிசி" என்று ஆரம்பித்து வைத்தாள் கன்னியம்மா.

"காப்படியரிசி யாருக்குப்போதும்? அரப்படியாச்சும் வேணும். அதனால நான் காப்படி எடுத்துட்டு வாரேன்" என்றாள் குமுதா.

"எங்கம்மா பருப்பு டப்பாவ எங்க வச்சிருக்குன்னு எனக்குத் தெரியும். அதனால, நான் பருப்பு" என்றாள் கோமதி. "உப்பு, புளி,மொளகா என்னோட பங்கு" என்றாள் மாலதி.

ஆமா, கூட்டாஞ்சோறுக்கு வேறென்ன வேணும்? என்று அப்பாவியாய் லச்சுமி கேக்க, அத்தனை சாமானையும் எதுல போட்டுப் பொங்குறது? அதுக்கு சட்டிப்பானை வேணும் என்று சண்முகவடிவு சொல்ல, "அப்ப சட்டியும் பானையும் நாங்கொண்டுவாரேன்" என்ற லச்சுமியிடம், அப்ப கரண்டியென்ன உங்க பாட்டி கொண்டுவருவாகளா? அதையும் நீயே எடுத்துட்டு வந்துரு என்றாள் வடிவு. 'களுக்'கென்று சிரித்தபடியே சரியென்று தலையாட்டினாள் லச்சுமி.

அதற்குள், பொம்பிளப்பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறாக்கப்போகிற விஷயம் பயலுகளுக்கும் தெரிந்துபோக, "ஏய், எங்களையுஞ் சேத்துக்கோங்கப்பா..." என்று ரெண்டொருத்தர் வந்து நிக்க, "அப்ப சரி. ஏலேய் ஆறுமுகம், நீ உங்க தோட்டத்லேருந்து வெறகு எடுத்துட்டு வந்துரு. மாணிக்கம் நீ எல்லாருஞ் சாப்டுறதுக்கு எலையறுத்துட்டு வந்துரு" என்றாள் அவைத் தலைவியாயிருந்து ஆரம்பித்துவைத்த செல்வி.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டிருந்த எட்வின், "எப்பவுமே இந்தப் பொம்புளப்புள்ளைகளுக்கு புத்தி கம்மிதான்" என்று சொல்ல "ஏலேய்ய்ய்ய்ய்...." என்று மொத்தப் பிள்ளைகள் கூட்டமும் எகிற, "பின்ன என்ன? காய்கறியே இல்லாம கூட்டாஞ்சோறாக்கப் போறீகளா?" என்று சிரித்தான் எட்வின். "அட ஆமால்ல..."என்று அசடு வழிந்த பிள்ளைகளிடம், "சரி, என்னோட பங்குக்கு நான் கத்திரிக்காயும், தக்காளியும் கொண்டுவாரேன்" என்றான் எட்வின்.

"ஏல எட்வினு, நீ புத்திசாலிதான்..." என்று சிரித்த குமார், "நா உருளக்கிழங்கு கொண்டாறேன். வேறெதாச்சும் வேணுமாப்பா?" என்றான். "கூட ரெண்டு வெங்காயமும் பச்சமொளகாயும் கொண்டாந்துரு" என்று லச்சுமி சொல்ல சரியென்று தலையாட்டினான் குமார்.

"முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்களே..." என்று நக்கலாகச் சிரித்த பாண்டியிடம் "என்னடா அது?" என்று அப்பாவியாய்க் கேட்டாள் வடிவு. "காயெல்லாம் வெட்டுறதுக்குக் கத்திய விட்டுட்டீங்களே..." என்று பாண்டி சிரிக்க, "அதெல்லாம் ஒன்ன மாதிரி ரவுடிப் பையனுக்குத்தான் தோணும்" என்று குமுதா அவனை வாற, "சரிசரி...நீ வரும்போது சின்னதா ஒரு கத்தியெடுத்துட்டுவா...மறந்தாப்புல அருவாளத் தூக்கிட்டு வந்துறாத..."என்று அவனைப் பார்த்து சிரித்தாள் செல்வி.

அடுத்தநாள், அடுப்புக்குக் கல்லைக் கூட்டி, நெருப்புப் பெட்டி கொண்டுவர, ஆரம்பமானது கூட்டாஞ்சோறுப் படலம். "ஏய், யாருமே தண்ணியெடுத்துட்டு வரலேல்ல? ஏலேய், நீங்கபோயி பம்புசெட்டுல தண்ணி புடிச்சிட்டுவாங்க" என்று செல்வி சொல்ல, "ஏய், அதெல்லாம் பொம்புளப்புள்ளைகளோட வேல..." என்று மறுதலித்தான் மாணிக்கம்.

"ஏலேய், இங்க பார்டா, வெளையாட்டுன்னு வந்துட்டா ஆம்பள பொம்பளன்னு வித்தியாசம் பாக்கக்கூடாது ஆமா..." என்று வடிவு சொல்ல, "சரி மொதல்லயே இப்டி பக்குவமாச் சொல்லியிருக்கலாம்ல..." என்று பானையை வாங்கிக்கொண்டு புறப்பட்ட பயல்களிடம், "பானை நெறய தண்ணி வேணும், எங்கியும் போட்டு ஒடைக்காம பத்திரமா கொண்டுவாங்கடா... அப்றம், எங்க அம்மா வையும்" என்று எச்சரித்தாள் லச்சுமி.

"சரி தாயி, உன் பானைக்கு நான் காவல்" என்று பாண்டி சொல்ல, பம்புசெட்டுக்குப் புறப்பட்டார்கள் ஆண்பிள்ளைகள். பானை நிறைய வந்த தண்ணீரில் பருப்பையும் அரிசியையும் கொட்டி, ஓலைக்குமேல் உட்காந்து ஒவ்வொரு காயாக நறுக்கிப்போட்டாள் கன்னியம்மா. அரிசியும் பருப்பும் கொதிக்கையில், அத்தனை பேருஞ் சேர்ந்து ஆரவாரம் செய்ய, உப்பு, புளியைக் கரைத்து ஊற்றிய லட்சுமிக்கு ஒரே சந்தோஷம், நாமளும் சமையல் செய்றோம்ல்ல என்று.

"ஏய், வெந்துருச்சான்னு பாருப்பா...வாசத்தைப் பாக்கும்போது, இப்பவே பசிக்குது" என்றான் பாண்டி.  "பொறுடா, சாப்பாட்டுராமா, உங்க வீட்டுக் கத்திய வச்சு எலைய நறுக்கி வையி" என்று அவனுக்கொரு வேலை கொடுத்தாள் செல்வி.

பத்து நிமிஷத்தில் கூட்டாஞ்சோறு தயாராயிருச்சு. மத்தியில் உட்கார்ந்தபடி எல்லாருக்கும் எடுத்தெடுத்து இலையில் வைத்தாள் வடிவு. உப்பிருக்கா உரைப்பிருக்கா என்று உணரத் தோன்றாமல், சிரிப்பும் பேச்சுமாக விறுவிறுவென்று உள்ளே போனது சாப்பாடு. சோற்றுப் பாத்திரம் காலியாக, அங்கே அத்தனை முகங்களிலும் நிரம்பி வழிந்தது பொய்க்கலப்பில்லாத உண்மையான உற்சாகம்.

                                                                *********

பின்குறிப்பு: பிள்ளைப்பருவத்தில் விளையாடிய விளையாட்டுக்களும், இது போன்ற இனிய நிகழ்வுகளும் என்றைக்கும் மனதில் இளமையாய் நிலைத்திருக்கக்கூடியவை. இதையெல்லாம் இழந்து,  கணினியும், கைபேசியும், தொலைக்காட்சியுமே கதியென்று வளருகிற இந்தக் காலத்துக் குழந்தைகளை நினைக்கையில், மனதில் வருத்தம்தான் மேலிடுகிறது.

திங்கள், 7 நவம்பர், 2011

சிக்கிலிங்கிராமம்

திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கணேசனுக்கு விழிப்பு வந்தது. ரயில் நின்ற கையோடு, கடகடவென்று அத்தனைபேரும் இறங்கிப்போய்விட, கம்பார்ட்மெண்ட்டில் அவர்மட்டுமே இருந்தார். கையில் சுருட்டிவைத்திருந்த மஞ்சள் பையைக் கீழே வைத்துவிட்டுத் தலையை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டார். முன்னெல்லாம்,வாரநாட்களில் ஸ்ரீவைகுண்டத்தில் வேலைபார்த்துவிட்டு, வார இறுதியில் ஊருக்கு வரும்போதெல்லாம், வீட்டுக்குப்போகிற ஆசையும் அம்மா கையால் சாப்பிடுகிற ஆவலுமாய் ரயில் நின்ற கையோடு வேகவேகமா இறங்கி நடப்பார் அவர். இப்போது ஊரில் நமக்கென்று யாரிருக்கிறார்கள் என்ற விரக்திவந்து விழிகள் நிறைந்தாலும், ஊர் நினைப்போடு நாமாவது இருக்கிறோமே என்ற எண்ணத்துடன்,மெல்ல எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி நின்றார்.

போவோரும் வருவோருமாகப் பிளாட்பாரம் நெரிசலாக இருந்தது. காலையில் எழுந்ததும், வீட்டில் குடித்த செம்புத்தண்ணீர் வெறும்வயிற்றில் அலைய, எதையாவது கொண்டா கொண்டா என்று இரைச்சலிட்டது வயிறு. ரயில் நிலையத்தின் வாசலில் ஆட்டோவும், டாக்ஸிகளுமாகப் பாதையை மறைத்துக்கொண்டு நின்றன. பெரியவரே, எங்க போகணும்? என்றவாறு பின்னால் வந்த ஆட்டோக்காரரை, பக்கதுலதாம்ப்பா....வண்டியெல்லாம் வேணாமென்று விலக்கிவிட்டு, பக்கவாட்டுப்பாதையில் நடந்தார் கணேசன்.

சாலைக்குமாரசாமி கோயில் வாசலில் செருப்புகளைக்கழற்றிவிட்டு , ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கும்பிட்டுவிட்டு நிமிர்ந்தார் கணேசன். சுற்றிலும் நடைபாதைக்கடைகளில், பழங்கள், காய்கறிகள், பழைய புத்தகங்கள், பாத்திரங்களென்று விற்பனைக்கு எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள் வியாபாரிகள். மெல்ல ரயில்வே லைன்வழியாக நடந்தார். ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே சிக்கிலிங்கிராமத்து வயல்காற்று தொட்டுத் தழுவிக்கொண்டதுபோலிருந்தது அவருக்கு.

இப்போதிருக்கிற தலைமுறைப் பிள்ளைகளிடம் சிக்கிலிங்கிராமம் என்று சொன்னால் நிச்சயமாய் அவர்களுக்குத் தெரியாது. சிக்க நரசய்யன் கிராமம் என்கிற பெயரைப் பழைய தலைமுறை மக்கள் பாசமாய் சிக்கிலிங்கிராமமென்று சொல்ல, இப்போதிருக்கிற மக்கள் அதை சி.என்.வில்லேஜ் என்று நாகரீகமாய்ச் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.

வேகவேகமாய்க் கடந்துபோகிற வாகனங்களைப் பார்த்தபடி தெருவோரமாய் நடந்தார். "ஏடே,கணேசா, எப்டிப்பா இருக்கே...எவ்வளவு நாளாச்சு ஒன்னப்பாத்து. உடம்புக்கெல்லாம் எப்டி, சௌரியம்தான? என்றபடி நரைத்த தாடியும் மீசையுமாகக் கிட்டத்தில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை கணேசனுக்கு. "நீங்க..." என்று தயங்கியவரைப்பார்த்து, "பாத்தியா, ஆளையே தெரியல உனக்கு. அதுக்குத்தான் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து போகணும்கிறது என்றவர், மரக்கடை முத்துவேல் மகன், உன் சிநேகிதன் சோமு என்றபடி கையைப்பிடிக்க,"அடடே சோமுவா நீ? என்னய்யா, ஆளேமாறி அடையாளம்தெரியாமபோயிட்ட? என்றவாரு அவரைத் தோளுடன் சேர்த்தணைத்துக்கொண்டார் கணேசன்.

சோமுவுக்கும் கணேசனுக்கும் சிக்லிங்கிராமத்தில் பக்கத்துப்பக்கத்துவீடுதான். எட்டாவதுவரைக்கும் சாஃப்டர் ஸ்கூலில் ஒன்றாகத்தான் படித்தார்கள். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, அப்பா வைத்திருந்த மரக்கடைக்கு வேலைக்குப்போய்விட்டார் சோமு. படித்துமுடித்து பத்தொன்பதாவது வயதிலேயே பள்ளிக்கூட வாத்தியாரானார் கணேசன். சின்னவயசில் சோமுவும் கூட்டாளிகளுமாய்ச் சேர்ந்து பக்கத்துத் தோப்பில் மாம்பழம் திருடிய கதையெல்லாம் நினைவுவந்தது கணேசனுக்கு. நன்றாகக் கனிந்த மாம்பழங்களைப் பறித்து, கல்லில் வைத்து உருட்டியெடுத்து, சின்னதாய்த் துளையிட்டு, உள்ளேயிருக்கிற சாறைக்குடித்துவிட்டு, அதில் காற்றை ஊதிக் கண்ணுக்குப்படுகிறமாதிரி வைத்துவிட்டு வருவார் சோமு. தோட்டத்துக்கு வருகிற தோட்டக்கார மாரிமுத்துத் தாத்தா, அதை எடுத்துப் பார்த்து ஏமாந்துபோய், ஏழெட்டு ஊருக்குக் கேட்கிறமாதிரி அந்தப்பயபுள்ள, இந்தப்பயபுள்ள என்று அப்பாக்களையும் சேர்த்து வைதுவிட்டுப்போவார்.இப்ப நினைத்தாலும் சிரிப்புவந்தது அவருக்கு.

இப்ப அந்த இடத்தில் தோப்புமில்லை மாமரங்களுமில்லை, வரிசையாக வீடுகட்டிப் பெரிய குடியிருப்பாக்கியிருந்தார்கள். அப்புறம், எப்டியிருக்கே சோமு? உன் வீட்டம்மா சௌக்கியமா? மக்களெல்லாம் உன்னை நல்லாப் பாத்துக்கிறாங்களா? போனமுறை வந்தப்ப நீ வெளியூர்ல இருக்கிறதாச் சொன்னாகளே? என்றபடி அவரைப்பார்த்து ஆதுரமாய்க் கேட்டார் கணேசன். பதில் சொல்லாமல், கோயில் பக்கம் பார்வையை ஓட்டினார் சோமு. என் வீட்டுக்காரிக்கு உடம்புக்கு சொகமில்லாம மதுரை ஆஸ்பத்திரியில வச்சிருந்தோம் கணேசா. ரெண்டுமாசம் முன்னால அவளும் மேல போயிட்டா. சாவுக்கு வந்த புள்ளைக, பதினாறு கழிஞ்சதும் அதது வேலைமுடிச்சிருச்சுன்னு ஊருக்குப் போயிட்டாக. இப்ப நா மட்டுந்தான் இருக்கேன். குறுக்குத்துறை முருகனும், சாலைக்குமார சாமியும்தான் சதம்னு நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். நீ எப்படியிருக்கே? உன் வீட்ல எல்லாரும் சௌரியமா? ஏன் ஒத்தையா வந்துருக்கே? கூட யாரையாவது கூட்டிட்டு வரலாம்ல என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் சோமு.

அவுகவுக வேலையப் பாத்துக்கிட்டு எல்லாரும் நல்லாருக்காகடே. எனக்குத்தான் நம்ம ஊரு,சாமி, இன்னும் மக்க மனுஷங்க ஞாபகமெல்லாம் அடிக்கடி வந்துருது. அப்படி வரும்போதெல்லாம் பையன்கிட்ட சொல்லிட்டு, கொஞ்சம் காசையும் வாங்கிக்கிட்டு இங்க வந்துருவேன்.நாள்முழுக்க நம்ம ஊர்த் தண்ணியையும் காத்தையும் நல்லா அனுபவிச்சிட்டு, சாயங்காலத்து ரயில்ல திரும்பிப்போயிருவேன். மாசத்துக்கொருக்கா வந்துட்டுத்தான் இருக்கேன். உன் சம்சாரம் தவறின விஷயம் தெரியாமப்போச்சுது சோமு என்று ஆறுதலாய் அவர் கையைபிடித்துக்கொண்டார் கணேசன்.

அது கிடக்குது விடு.உனக்குத்தான் மாசாமாசம் பென்சன் பணம் வருமுல்ல...அப்புறம் எதுக்கு மகன் கிட்ட கையேந்தணும்? என்றார் சோமு. அதெல்லாம் கையெழுத்துப்போட்டுக் குடுக்கிறதோட சரி சோமு. அவனாப்பாத்து செலவுக்கு ஏதாவது குடுப்பான். சிலசமயம் அதுவுங்கூட மறந்துபோயிரும் அவனுக்கு. ஆனா, என்னதான் நடந்தாலும், மாசத்துக்கொருவாட்டி வந்து நம்ம மண்ணை மிதிக்காம இருக்கிறதில்லை என்றார் கணேசன்.

சொல்லச்சொல்லக் கேக்காம, இங்க அரமனைமாதிரியிருந்த வீட்ட வித்துப்புட்ட. அதுமட்டும் இருந்திருந்தா வந்த காலோடு திரும்பாம நாலுநாள் இங்க தங்கணும்னு தோணியிருக்கும்ல என்றார் சோமு. என்ன பண்றது சோமு, உபயோகமில்லாத பழைய பொருளையெல்லாம் உடனே வித்துப் பணமாக்கிரணும்னு பாக்குதுக இந்த காலத்துப் புள்ளைங்க. என்ன செய்ய? அழுத்திக் கேட்டாக. அதான் வித்துக்குடுத்துட்டேன் என்றார் கணேசன். "ம்ம்...சொத்துசொகம் மட்டுமில்ல, சொந்தத்துலகூட பழசாகி, உபயோகமில்லாமப் போச்சுன்னா உதறத்தான் செய்யிறாங்க" என்றபடி, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சோமு.

அதைவிடு கணேசா, நம்ம கூட்டாளிகள் நாலுபேர்ல, இப்ப நீயும் நானும்தான் இருக்கோம். மத்தவங்கல்லாம் போய்ச் சேர்ந்துட்டாங்க. சரிய்யா...ஒன்னப்பாத்ததுல இன்னிக்கி ரொம்ப சந்தோசம். நான், நம்ம குறுக்குத்துறைவரைக்கும் போறேன். நீயும் கூட வரியா என்றார் கணேசன். இல்ல, கணேசா...நீ போயிட்டு வா.எனக்கு அவ்வளவுதூரம் நடக்கத் தோதுப்படாது. நா இங்க கோயில் திண்ணையிலதான் உக்காந்திருப்பேன் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுத் திரும்பி நடந்தார் கணேசன். அதற்குள், பின்னாலிருந்து கணேசா... என்று மெல்லமாய்க் கேட்டது சோமுவின் குரல். என்னய்யா, என்றபடித் திரும்பினார் கணேசன். அடுத்ததடவை நீ இங்க வரும்போது, நான் இருப்பனோ மாட்டனோ...என் வீட்டுக்காரி போனதுக்கப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட்டும் நாளாகிப்போச்சுது. இப்ப, உங்கூட சேர்ந்து ஒருபிடி சாப்பிடணும்னு தோணுது கணேசா என்று மெல்லமாய்ச் சொன்னார் சோமு. பக்கென்று தொண்டைக்குழிக்குள் அடைத்தது கணேசனுக்கு.

சிறுவயசில்,சிக்கிலிங்கிராமத்துக்கே செல்லப்பிள்ளை சோமு. எல்லார் கூடவும் நல்லாப் பேசுவான். என்ன வேலை சொன்னாலும் செய்வான். பள்ளிக்கூடத்துக்கு வரும்போது கால்சட்டைப்பைக்குள் நெல்லுப்பொரியும் அச்சுவெல்லமும் அள்ளிப் போட்டுக்கொண்டுவருவான். வழி நெடுக அவன் அள்ளியள்ளித்தர ரெண்டுபேரும் தோளில் கைபோட்டுக்கொண்டே கதைபேசிக்கொண்டு நடப்பார்கள். மரக்கடைக்கு வேலைக்குப்போனபிறகும்கூட, பள்ளிக்கூடம் விடும் நேரத்துக்கு, வாசலில் சைக்கிளில் வந்து நிற்பான். அண்ணாச்சி கடையில் வறுத்தகடலை வாங்கிக்கொடுப்பான். அம்மா செய்ததாகச்சொல்லிக் கொழுக்கட்டை கொண்டுதருவான்.பள்ளிக்கூடத்திலிருந்து, விடாமல் பேசிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டு மறுபடியும் வேலைக்குப்போவான். அவனுக்கா இந்த நிலைமை ஆறவில்லை அவருக்கு.

தோழனின் கையைப்பிடித்து மறுபடியும் சாலைக்குமாரசாமி கோயில்பக்கம் இருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துச்சென்றார் கணேசன். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் என்ன சாப்பிடுறே சோமு? என்றார். ரெண்டு வடையும் ஒரு தோசையும் சொல்லு கணேசா என்றார். தனக்கும் அதையே கொண்டுவரச்சொன்னார். ருசித்துச் சாப்பிட்ட சோமுவைப்பார்த்துக்கொண்டே தானும் சாப்பிட்டார் கணேசன். ஆளுக்கொரு காப்பியும் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியில் வந்ததும், கணேசா, நீ குறுக்குத்துறைக்குப் போயிட்டுவா. எனக்கு மனசும் வயிறும் நெறஞ்சிருக்கு. நா இங்க கோயில் திண்ணையில கொஞ்சநேரம் தூங்குறேன். திரும்பி வரும்போது கட்டாயம் என்னப் பாத்துட்டுத்தான் போகணும் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுச் சிரித்தபடி நடந்தார் கணேசன்.

குறுக்குத்துறைக்குப்போனதும், படித்துறையில் உட்கார்ந்து, கைநிறைய ஆற்று நீரை அள்ளிக்குடித்தார். சட்டை நனைந்து நெஞ்சு குளிர்ந்தது அவருக்கு. முருகனைக் கும்பிட்டு, மனசிலிருந்த கவலையெல்லாம் முறையிட்டுவிட்டு, பின்பக்கத்து மண்டபத்துக்கு வந்து சரிந்து உட்கார்ந்தார். சின்ன வயசில் அம்மாவுடன் ஆற்றில் குளிக்கவரும்போது,குளித்தபின் அங்கே நின்றுதான் அம்மா உடைமாற்றிக்கொள்ளுவாள். அம்மா உடுப்புமாற்றுகிற வரைக்கும், ஆற்றில் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருப்பார் கணேசன். பைக்குள்ளிருந்து துண்டை எடுத்து விரித்துக்கொண்டு கால்களை நீட்டிப்படுத்தார். அம்மா மடியில் படுத்துக்கொண்ட அதே சுகம் தெரியக் கண்களை மூடிக்கொண்டார். சற்றுநேரம் உறங்கி எழுந்திருக்க, உடம்பும் மனசும் இலேசானதுபோலிருந்தது அவருக்கு. ரயிலுக்கு நேரமாகிவிட்டிருந்தது. சோமுவைப் போய்ப்பார்க்க நேரமில்ல. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நடந்தார். இரவு எட்டரைக்கெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டார்.

மறுநாள், காலையில், வீட்டுத்திண்ணையில் சாய்வுநாற்காலியில் கண்ணைமூடிப் படுத்திருந்தார் கணேசன். தொலைபேசி மணியடித்தது. எடுத்துப்பேசிய அவருடைய மகன் சரவணன்,"அப்பா, சிக்கிலிங்கிராமத்தில, உங்க சினேகிதர் சோமுங்கிறவர் நேத்து இறந்துபோய்ட்டாராம்" என்று சொல்ல, "குடுத்துவச்சவன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணைமூடிக்கொண்டார் கணேசன்.


செவ்வாய், 25 அக்டோபர், 2011

தித்திப்பாய் ஒரு தீபாவளி!


டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திறந்து கடைக்குள் நுழைந்தார் கதிரேசன். காலையிலேயே, தீபாவளிக்கான கடைசிநேர வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. காசை வாங்கிப்போடுவதும் கடன் சொல்லுபவர்களுக்குக் கணக்கெழுதிவைப்பதுமாக விறுவிறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

முதலாளி கதிரேசன் உள்ளே நுழைந்ததும் அவரது கண்களை ஒரேயொரு வினாடி நேரடியாகச் சந்தித்து மீண்டது கருணாகரனின் கண்கள். ஒன்றும் விசேசமில்லை என்று அந்தப் பார்வையிலிருந்து புரிந்துகொண்டார் கதிரேசன். மனசுக்கு சங்கடமாயிருந்தாலும் பிரச்சனையைத் தன்னால் தீர்த்துவிடமுடியுமென்ற தெளிவோடு தானும் கடைப்பையன்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் மூழ்கினார் கதிரேசன்.

பதினோருமணி சுமாருக்குக் கடையில், கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது. தனக்கும் மற்றவர்களுக்கும் தேனீர் வாங்கிவரச்சொல்லிவிட்டு, கணக்கப்பிள்ளையிடம் கல்லாவில் எவ்வளவு தேறும் பாருங்க என்றார் கதிரேசன். சில்லறையும் தாளுமா ரெண்டாயிரத்துக்கிட்ட இருக்கும்ங்க, என்ற கணக்கப்பிள்ளை, "அண்ணாச்சி, நாம வேணும்னா டீச்சர் வீட்டுக்கும், வக்கீலய்யா வீட்டுக்கும் ஒருதடவை ஆளனுப்பிக் கேட்டுப்பாப்பமா?" என்றார்.

"இல்லையில்லை...வேணாம் கணக்கு...அவுக ரெண்டுபேரும் கைக்குக் காசு வந்ததும் தவறாம கொண்டுவந்து குடுக்கிறவங்க. என்ன பிரச்சனையோ, இப்பக் கொஞ்சம் தாமதமாயிருச்சு. நாமளா போய்க் கேட்டா சங்கடப்படுவாக" என்று அவசரமாய்க் கதிரேசன் மறுக்க, "அதுவும் சரிதான்... "என்றபடி அமைதியாகத் தன் கோப்பைத் தேநீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார் கணக்கு கருணாகரன்.

கடையின் மற்ற சம்பளக்காரர்களுக்கெல்லாம் ஒருவாரம் முன்னதாகவே சம்பளம் போட்டுவிட்டார் கதிரேசன். தீபாவளிக்கென்று, புதுக்கம்பெனியொன்றிலிருந்து, முறுக்கு, சீடை, மைசூர்பாகு, சோன்பப்டியென்று நிறைய வாங்கி அடுக்கிவிட்டதால், கையிருப்புக் கரைந்துவிட, கடைசியில், கணக்குப்பிள்ளைக்கும் தன் வீட்டுச் செலவுக்கும் பணம் தட்டுப்பாடாகிப்போனது அவருக்கு. அதற்கு, முக்கியமான ரெண்டு இடத்திலிருந்து வரவேண்டிய பணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கதிரேசன். அந்தப் பணம் மட்டும் கிடைத்திருந்தால் தீபாவளிக்கு முந்தினநாளில் உட்கார்ந்து, காசுக்காக யோசித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்காதே என்ற எண்ணம் ஓடியது அவர் மனதில்.

மதியத்துக்குமேல் வீட்டுக்குத் துணியெடுக்க விடுப்புக்கேட்டிருந்தார் கணக்கு.  அதற்குள், எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேயென்ற தவிப்பு கதிரேசனுக்கு. அவரிடம், "கடையைப் பாத்துக்கங்க கணக்கு, நான் வீடுவரைக்குப் போயிட்டுவந்துர்றேன் என்றார் கதிரேசன். அவரது மனதின் நோக்கம் புரிந்த பதைப்புடன், "அண்ணாச்சி, இப்ப ஒண்ணும் அவசரமில்லை. வருசாவருசம் தீபாவளி வரும். பணம் வரட்டும் நாம பாத்துக்கிடலாம்" என்றார் கணக்குப்பிள்ளை கருணாகரன். அவரைத் திரும்பிப்பார்த்துப் புன்னகைத்த கதிரேசன், காசுக்காகக் கத்திச் சண்டைபோடுகிற வேலையாட்களுக்கு மத்தியில் இத்தனை நல்ல ஊழியர் கிடைத்திருக்கிற சந்தோஷத்துடன்  "இருங்க, நான் இப்ப வந்துர்றேன்..." என்றபடி புறப்பட்டார்.

வீட்டுக்குள் நுழையும்போதே அதிரச வாசனை ஆளைத் தூக்கியது. "அடடா, அதுக்குள்ள சாப்பாட்டு நேரமாயிருச்சா? காலையிலயே, பலகாரம் செய்ய உட்காந்ததால, சமையல் கொஞ்சம் தாமதமாயிருச்சு என்றபடி, கழுவின கையைத் தலைப்பில் துடைத்தபடி அடுப்படியிலிருந்து வெளியில் வந்தாள் கற்பகம்.

கைச்செலவுக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் அவருக்குக் கடைசியாய் உதவுகிற அட்சயபாத்திரம் அவள்தான். "ஒண்ணும் அவசரமில்லம்மா... நீ நிதானமாப் பண்ணு. நான் ஒரு அவசரமான வேலையா வந்தேன்" என்றபடி அமர்ந்தவர், மெல்ல அவளுடைய முகத்தை நிமிர்ந்துபார்த்தார்.

என்ன கேட்டாலும் மறுக்காத மனைவியென்றாலும், அவளை நல்லநாளும் அதுவுமாய் சங்கடப்படுத்தப்போகிறோமேயென்று கதிரேசனின் மனசு மறுகியது. தாலிக்கொடியும் ரெண்டு வளையலும் தவிர, ஒரு ரெட்டைவடச் சங்கிலியுண்டு அவளிடம். விசேச நாட்களில் மட்டும் அந்த ரெட்டைச்சரம் அவள் கழுத்தில் மின்னும். மற்றபடி அநேக நாட்கள் அடகுக்கடையிலோ அல்லது அடுப்படி அலுமினிய டப்பாவிலோதான் இருக்கும்.

கறுப்புக்கு நகை போட்டா கண்ணுக்கு நிறைவா இருக்கும்னு அப்ப அம்மா சொன்னமாதிரி, அந்த ஒத்தை நகையைப்போட்டதும் பட்டுன்னு ஒரு பிரகாசம் கூடிரும் அவ முகத்தில். அந்தப் பிரகாசத்தை நாளைக்குப் பார்க்கமுடியாதேயென்ற தவிப்புடன், கைவிரல்களால் கணக்குப்போட்டபடி குனிந்து உட்கார்ந்திருந்தார் அவர். "என்னங்க, உடம்புக்கு முடியலியா? காலையிலேருந்து கடையில நிறைய வேலையா? சூடா காப்பி போட்டுத்தரவா?" என்றபடி அவருடைய நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள் அவள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..." என்றவர்,  "குடிக்க ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக்கிட்டு, அதோட, அந்த..." என்று தொடங்கியவர், "சொல்ல மறந்துபோச்சுங்க..." என்றபடி அவள் ஆரம்பிக்கவும்,  முகத்தைப்பார்த்து நிறுத்தினார். "நம்ப டீச்சரம்மா இல்ல, அவங்க வீட்ல, ஊர்லேருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்களாம். அதனால,கடைப்பக்கம்வந்து காசு குடுக்க முடியலன்னு, இப்பத்தான் வந்து ஆறாயிரம் பணமும், அவங்க வீட்ல செஞ்ச அச்சுமுறுக்கும் கொண்டுவந்து கொடுத்துட்டுப்போனாங்க" என்றாள் கற்பகம்.

"அடக் கழுத... இத, நான் வந்ததும் சொல்லியிருந்தா நான் இங்க உக்காந்துகிட்டு, உன்னயும் உன் அழகையும் நினைச்சு மறுகியிருக்கமாட்டேன்ல்ல" என்றபடி கண்கள் மின்னச் சிரித்தார் அவர். கணவனின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டவளாக, "ஓ...நீங்க ரெட்டைவடத்தைத் தட்டிட்டுப்போக வந்தீங்களாக்கும்" என்றபடி சிரித்தவள், "ஒண்ணும் பிரச்சனையில்லை, அதிகமாக் காசு தேவைப்பட்டா அதையும் வேணுன்னா கொண்டுபோங்க" என்றாள்.

"அதெல்லாம் இனி தேவைப்படாது கற்பகம். இப்பவே ஆரம்பிச்சாச்சு நமக்கு தீபாவளி என்றவர், நீ, சாயங்காலம், பிள்ளைகளைக் கூட்டிட்டுப்போயி, அவுங்களுக்குப் பிடிச்ச பட்சணம், பட்டாசு எல்லாம் வாங்கிக்குடு. கடையடைச்சிட்டு வரும்போது நான் எல்லாருக்கும் துணியெடுத்துட்டு வந்துர்றேன்.  இப்போதைக்கு, நீ செஞ்சு வச்சிருக்கிற அதிரசத்துல, கொஞ்சம்  எடுத்துக்குடு என்றபடி, வாசலை நோக்கி நடந்தார் அவர்.

அலைபேசி ஒலித்தது. குரலிலேயே விஷயம் புரிந்தது அவருக்கு. "அண்ணாச்சி, நீங்க புறப்பட்ட பத்தே நிமிஷத்துல வக்கீலய்யா வீட்லருந்து மொத்தப் பணமும் வந்திருச்சு. நீங்கவேற அவசரப்பட்டு வேற எந்த ஏற்பாடும் செஞ்சிடாதீங்க..." என்றார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

சந்தோஷம் கணக்கு...இங்கயும் ஒரு வரவு வந்திருக்கு. நான் இப்பவே, இனிப்போட வரேன். இந்த தீபாவளி நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான தீபாவளிதான் என்றபடி, அலைபேசியை அணைத்துவிட்டு, மனைவியின் பக்கம் திரும்பினார் கதிரேசன். கணவனின் சந்தோஷத்தைப்பார்த்து கற்பகத்தின் முகமும் மகிழ்ச்சியில் நிறைய, ரெட்டைவடம் போடாமலே இன்னிக்கி ரெட்டை அழகாயிருக்கே நீ"  என்றபடி மனைவியின் கன்னத்தில் தட்டிவிட்டுக் கடைக்குப் புறப்பட்டார் கதிரேசன்.

புதன், 28 செப்டம்பர், 2011

இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???

இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது, பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.

அதிகாலை ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச் செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.

அப்பா வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து, எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும் எட்டிப்பார்த்திருக்கிறான்.

எப்படி ஏறினானென்றும் தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும் சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.

அங்கே, அம்மாவையும் முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்  எட்டாவது மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே ஓடியிருக்கிறாள்.

செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்  தன் வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.

அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை. 

பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????
இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.

புதன், 15 ஜூன், 2011

சொல்லும் கொல்லும்!

படம்: "இணையத்திலிருந்து"


மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.

"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.

அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து  சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும்  பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா கத்த ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள் மகள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.

இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.

சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.

பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.

மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை.  "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.

"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட,  வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி.

"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.
 'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.

அதற்குள்,  "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.

என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை  பரமசிவம்.

 அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.

சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.

ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.

சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று.

நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு  'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.

ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை  ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.

அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.

"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப்  பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கடைசி சொட்டுக் கண்ணீர்.


வியாழன், 10 மார்ச், 2011

கண்ணோட்டமும் களிமண் உருண்டைகளும்!


கடற்கரையோரமாய்க் காலார நடந்துகொண்டிருந்தான் அந்த மனிதன். நீண்டதூரம் நடந்துசென்றபிறகு, கடலோரத்தில் சில குகைகள் தென்பட்டன அவனுக்கு. அவற்றுள் நுழைந்துபார்த்தான் அவன். அங்கிருந்த குகைகளில் ஒன்றில் ஒரு சிறிய சாக்குப்பை இருந்தது. அதற்குள் நிறையக் களிமண் உருண்டைகள் இருந்தது. யாரோ உருட்டிக் காயவைத்த விளையாட்டு உருண்டைகளைப்போல் தோன்றியது அவனுக்கு.

அந்தச் சாக்குப் பையை கையிலெடுத்துக்கொண்ட அவன் திரும்புகிற வழியில் ஒவ்வொரு உருண்டையாய்க் கடலுக்குள் எறிந்துகொண்டே வந்தான். முக்கால்வாசி உருண்டைகளைக் கடலுக்குள் வீசியபின், எதேச்சையாக அவன் வீசிய ஒரு களிமண் உருண்டை பாறையொன்றில் பட்டு உடைந்தது. உடைந்த களிமண் உருண்டைக்குள்ளிருந்து கண்ணைப்பறிக்கிற வைரக்கல் ஒன்று வெளிப்பட்டது.

'ஆஹா' என வியந்த அவன் மிச்சமிருந்த ஒருசில உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அத்தனைக்குள்ளும் வைரக்கற்கள் இருந்தன. 'ஐயோ மோசம் போனேனே, விலைமதிப்பில்லாத வைரங்கள் பலவற்றை அதன் மதிப்புத்தெரியாமல் கடலில் வீசியெறிந்துவிட்டேனே' என்று வருந்தியபடியே கடல்கரையில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தானாம் அவன்.

மனிதர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி விளக்குவதற்காகச் சொல்லப்படுகிற கதையிது. அநேக சமயங்களில் மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கிறோம். புறத்தோற்றத்தைப் பார்த்துப் பலரை உதாசீனப்படுத்திவிடுகிறோம். புறக்காரணிகளான, பணம், பதவி,அழகு,அந்தஸ்து இவற்றைமட்டும் கவனித்துவிட்டு, எத்தனையோ உறவுகளையும் நட்புகளையும் அலட்சியமாய்க் கடந்துபோய்விடுகிறோம். அவர்களுக்குள்ளும் அளப்பரிய அன்பும் நட்பும், நமக்குப் பயன்படக்கூடிய எத்தனையோ நல்லவிஷயங்களும் இருக்குமென்பதை அறிந்துகொள்ளாமலே போய்விடுகிறோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உயர்ந்த குணம் இருக்கும். மேல்தோற்றத்தில் அது கொஞ்சம் மறைந்துபோயிருக்கலாம். ஆனால், அதைக் கண்டுணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது என்றென்றைக்கும் இன்பத்தைக் கொடுக்கும்.

இது,மின்னஞ்சலில் வந்த கதை. இன்னும் சிலருக்கு உதவுமென்ற நம்பிக்கையோடு இங்கே...

புதன், 9 மார்ச், 2011

அடிக்கடி வீட்டில் பிரச்சனையா?

வசிக்கிற வீடுகளை அழகுபடுத்தவேண்டுமென்கிற ஆவல் மக்களனைவருக்கும் பொதுவான ஒன்று.

பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.


உத்தம லக்ஷணங்களை உடைய பெண்கள் பார்க்க-மாமரங்களும்; நகைக்க-முல்லையும்; பாட-குரக்கத்தியும்; ஆட-புன்னையும்; உதைக்க-அசோகமும்; அணைக்க-மருதோன்றியும்; நட்புற-பாலையும்; நிந்திக்க-பாதிரியும்; சுவைக்க(முத்தமிட)-மகிழமரமும்; நிழல்பட-சண்பகமும் தளிர்த்து, அரும்பிப் பூக்கும்.

இதனை வில்லிபுத்தூராரும்:
ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.
“பொன் கொண்டு இழைத்த” என்று கம்பரால் புகழப்பட்ட இலங்கையில், இராவணன் ஏன் சீதையை அசோகவனத்தில் சிறையிலிட்டான்?

ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.

"அசோகம்' என்பதற்கு சோகத்தை அகற்றுவது என்று பொருளாகும். சோகம் நம்மிடம் எப்பொழுது குடிகொள்ளும்? மனம் பாதித்த நிலையில், மன உளைச்ச லுக்கு உட்பட்டு, உடல் நலிவடைந்து, ஆன்மா அவதிக்கு உள்ளாகும் பொழுது சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது.

இராவணன் தீவிர சிவபக்தன்தான். அவன் கண்மூடி தியானித்து மனமுருக வேண்டி னாலே எம்பெருமான் சிவன் நொடிப் பொழுதில் அவனருகில் தோன்றி, அவனுக்கு அருளாசியை வழங்கும் தன்மையைப் பெற்றவன். அப்பேர்ப்பட்ட இராவணன் மனம் பேதலித்து, சஞ்சலமடைந்து, பகவான் ஸ்ரீராம பிரானின் நாயகியாம் சீதாதேவியின்மீது ஆசை கொண்டு அவளைச் சிறையெடுத்துச் சென்றான்.

இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி சிறை வைக்கப்பட்ட இடம், அடர்ந்து வளர்ந்த அசோக வனமாகும். மணாளனைப் பிரிந்த சீதாபிராட்டியார் சோகமே உருவாகி, எப்பொழுதும் ஸ்ரீராம பிரானையே வேண்டிக் கொண்டிருந்தாள். எப்படியும் எம்பெருமான் வெகுசீக்கிரம் வந்து என்னை மீட்டெடுப்பார் என்று நம்பினாள். மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்த சீதாதேவிக்கு, அந்த வனத்தில் இருந்த அசோக மரங்களே சோகத்தை விரட்ட தைரியம் அளித்தன.

அப்பேர்ப்பட்ட அசோக மரம், ஸ்ரீராம பிரான்- சீதாதேவியின் அருட்பார்வைக்கு உட்பட்டு, இன்று அகிலமெல்லாம் கன்னியரின் மனக்குறையைப் போக்கும் தேவ மருந்தாய் பயன்பட்டு வருகிறது.

மகாவீரர் ஞானம் பெற்றதும், புத்தபிரான் அவதரித்ததும் அசோக மரத்தின் அடியில் தான். "உளுத்த உடலை இறுக்கி, உடலுக்கு வன்மை தரும் மூலிகை அசோகு' என்று தேரையர் என்னும் சித்தர் குறிப்பிட்டுள்ளார். மேன்மையான குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோக மரத்தினை, ஸ்ரீராம பிரான்- சீதாதேவியை மனதால் நினைத்து வலம் வர, சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வில் மேன்மை பெறலாம்.

உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.

காதலுக்கு என்று ஒரு மரம் ,,எது தெரியுமா?ராமாயணத்தில் சீதாபிராட்டியாரை
இலங்கேஸ்வரன் அசோக மரங்கள் சூழ்ந்த வனத்தில் சிறைப்ப்டுத்தினானே அந்த
அசோக மரம் தான் காதலுகென்ற மரம் சம்ஸ்கிருதத்தில் அசோகா என்றால் சோகம்
இல்லாத " என்று அர்த்தம் இரவில் அதிக நறுமணம் வீசும் சிவந்த மஞ்சள் அல்லது
ஆரஞ்சு நிறப்பூக்களைக் கொண்டது இது பர்மா இலங்கை மலேசியா இந்தியாவைப்
பூர்வீகமாகக் கொண்டதாகும் இதை மக்கள் காதலின் சின்னமாகக் கருதி காமதேவனுக்கு
அர்ப்பிக்கிறார்கள் காமதேவன் காதலின் சின்னம் ஆனவன் கோயில் அலங்காரங்களிலும்
பயன் படுத்துகின்றனர் மரங்களின் தேவர்கள் விருக்ஷதேவர்கள் இம் மரத்தைச் சுற்றி
ஆடிப்பாடி களிக்கின்றனராம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இதை அரசமரம் போல்
பூஜிக்கின்றனராம் வழக்கமாக நாம் பூங்காவில் நெடிய மரங்களை அசோக மரம்
என் நினைக்கிறோம் உண்மையில் அவைகள் நெட்டிலிங்க மரங்களே ,இதன்
இலைகள் மாவிலைப்போல் நீளமாகவும் ஆனால் வளைவுகளுடன் காணப்படும் பச்சைநிறபூக்கள்
நட்சத்திரம் போல் பூக்க மேலும் அழகு பெறும் உண்மையான் அசோக மரம் நெட்டி லிங்க
மரம் போல் உயரமாக வளராமல் மற்ற மரங்கள் போல் பரந்து வளர்ந்து சற்று குட்டையான
தோற்றம் தரும் ஆங்கிலத்தில் saraka asoka {caesalpiniacase } என்னும்
இனத்தைச் சேர்ந்தது ,
காதல்ர்கள் காதலிகள் அசோக மரத்தைப் படை எடுங்கள் காதலின் மன்னன் காமதேவனுக்கு
பூக்களை அர்ப்பணியுங்கள். 

வெள்ளி, 4 மார்ச், 2011

என்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை?


அம்மா,இங்க வாங்களேன்...

என்னடா?

இங்க வந்துபாருங்க...

இருடா, வேலையா இருக்கேன்...

சரிம்மா, நீங்க பிஸின்னா உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிவைக்கிறேன். அப்புறமா பாத்துக்கோங்க...

பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றைக்காண்பிக்க வந்தவன் நகர்ந்துபோனான்.

இருடா தம்பி, பிஸியெல்லாம் இல்லை, பத்து நிமிஷவேலைதான் இப்ப வந்துர்றேன்.

பத்து நிமிஷமா?...அப்போ நான் பிசியாயிடுவேனே...

அட, நீங்க பிசியாயிருவீங்களா? எல்லாம் நேரம்தான். சாருக்கு அப்படியென்ன வேலையிருக்குதாம்?

கம்ப்யூட்டர்ல ஆன்லைன் கேம் விளையாடப்போறேம்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆன்லைனில் இருக்காங்க.

நாலுநாள்ல பரிட்சை இருக்கு...அதுக்குப் படிக்காம ஆன்லைன் கேமா?

அம்மா, படிப்புக்குன்னு நேரம் ஒதுக்குறமாதிரி, என்ஜாய் பண்றதுக்கும் நேரம் ஒதுக்கணும்மா. இல்லன்னா, லைஃப் போரடிச்சுப்போயிடும்.

அதுசரி, இந்தத் தலைமுறைக்கு என்ன தெரியுதோ இல்லையோ, பிஸி, என்ஜாய் இந்த ரெண்டு வார்த்தைகளும் நல்லாவே தெரிஞ்சிருக்கு.

சரியாத்தான் தெரிஞ்சுவச்சிருக்கீங்க...அம்மா, உங்க காலத்துலல்லாம் நீங்க பிஸியாவே இருந்ததில்லையா?

இருப்போம்...படிப்பு, விளையாட்டுன்னு. ஆனா, உங்க அளவுக்கு இல்ல...


ஆமா,அப்பல்லாம் கம்ப்யூட்டர் கிடையாதில்ல... ஃபேஸ்புக்,சாட்,வீடியோ கேம்ஸ் இதெல்லாம் இல்லாம உங்களுக்கெல்லாம் எப்படிம்மா டைம்பாஸ் ஆச்சு?

ஏன் ஆகாது? அக்கம்பக்கத்துக் குழந்தைகளோட விதவிதமா விளையாடுவோம். வாரப்புத்தகம், லைப்ரரி புஸ்தகம் வாங்கிவச்சுப் படிப்போம். ஏகப்பட்ட கைவேலைகள் செய்வோம், வீட்டுத்தோட்டம் போடுவோம்...

அதெல்லாம் இருக்கட்டும்...அப்பல்லாம், பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா என்ன பண்ணுவீங்க?

பெரியவங்ககிட்ட இல்லேன்னா டீச்சர்கிட்ட கேப்போம், புத்தகங்களை ரெஃபர் பண்ணித் தெரிஞ்சுக்குவோம்.

ரெண்டே ஆப்ஷன்தானா? கூகிள் ஹெல்ப் இல்லாம நீங்கல்லாம் எப்படித்தான் படிச்சீங்களோ?

அதுசரி, கூகிள் மூலமா,இப்ப நீங்க நிறையத் தெரிஞ்சுக்கிறீங்க. அப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட அளவு தெரிஞ்சுக்கிட்டோம்.

என்னத்தைத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களோ? சின்ன சர்க்கிளுக்குள்ள சர்க்கஸ் பண்ணியிருக்கீங்க...

சரி அதுபோகட்டும்...அப்பல்லாம், டிவி கூடக் கிடையாதுல்லம்மா?

ஆமாடா...டிவியெல்லாம் நான் ஹைஸ்கூல் படிக்கிறப்பதான் ஃபேமஸாச்சு. அப்பவும் தூர்தர்ஷன்,ரூபவாஹினின்னு ரெண்டே ரெண்டு சேனல்தான் உண்டு.

ரெண்டே ரெண்டு சேனலா? இப்ப நாம இருநூறுக்கும் மேல பார்க்கிறோமே...

ஆமா, அப்ப ரெண்டுதான்... அதிலும் சாயங்காலம்தான் தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் சிலநேரம் தெளிவாத் தெரியாது. மாடியில ஏறி, ஆன்டெனாவை அங்கயும் இங்கயும் திருப்பி வைப்போம். அந்த அளவுக்கு சோதிக்கும்.

ஆன்டெனாவா? அப்ப, கேபிள் கனெக்ஷனெல்லாம் கிடையாதா?

ம்ஹூம்... மாடியில ஒரு ஏழெட்டு மீட்டர் உயரத்துல இரும்புக்கம்பியை வச்சு, அதுல கொடைக்கானலுக்கு ஒண்ணு, சிலோனுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆன்டெனா மாட்டியிருப்பாங்க. அதிலிருந்து ஒயரெடுத்து டிவியில குடுக்கணும்.

அடப்பாவமே...

இதென்ன பெரிய பாவம்? வெள்ளிக்கிழமை வந்தா, தூர்தர்ஷன்ல எட்டுமணிக்கு ஆறேழு மொழிகள்ளேருந்து பாடல்கள் போடுவாங்க. அதுல ஒரேயொரு தமிழ்ப்பாட்டு வரும். அதப்பாக்க நாங்கல்லாம் எப்படிக் காத்துக்கிடப்போம் தெரியுமா? சிலநேரம் அதுகூடப் போடமாட்டாங்க. அவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.

ஐயோ பாவம்மா நீங்கல்லாம்... இப்ப நாங்க ஐபாட், வாக்மேன்னு எங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பிடிச்சநேரம் கேக்கிறோம். இந்த சௌகரியம்கூட இல்லாத அந்தக் காலத்தை நீங்க என்னவோ, அப்படி இப்படீன்னு பெருமையாப் பேசுறீங்க.


ஐபாட், வாக்மேன் இல்லாட்டி என்ன? அப்போ,ஆல் இண்டியா ரேடியோவும், இலங்கை வானொலியும் இருந்துச்சில்ல...

அதுல எப்பவும் பாட்டுப் போடுவாங்களா?

எப்பவும் கிடையாது, அதெல்லாம் ஃஎப்.எம் வந்த பிறகுதான்...
சினிமாப்பாட்டு,கர்நாடக இசை, கிராமியப்பாடல்கள், செய்திகள், நாடகம்,வேளாண்மை நிகழ்ச்சிகள், வினாடிவினா இன்னும் ஞாயிற்றுக்கிழமை வந்தா, ஒலிச்சித்திரம்கூடப் போடுவாங்க.

கேலிச்சித்திரம் கேள்விப்பட்டிருக்கேன். ஒலிச்சித்திரமா, அதென்னம்மா?

அதா, ஒரு முழுப்படத்தோட வசனத்தையும் அப்படியே ரேடியோவுல போடுவாங்க.

அப்போ,வசனத்தைமட்டும் கேட்பீங்களா?

ஆமா....படத்தோட கதை தெரிஞ்சிடும்ல.

நல்லாக்கேட்டீங்க கதையை...ஐயோ ஐயோ :)


பாவம்மா நீங்க. நிஜமாவே நாங்கல்லாம் கடவுளுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லணும்மா. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்துல எங்களைப் படைச்சிருக்காரேன்னு.

ஆனா, ஒரே ஒரு கஷ்டம்தான் இப்ப...

என்னடா?

உங்க லெக்சரைக் கேட்ட நேரத்துல, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைன் ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாங்க :)

அடிக் கழுதைய...அதுவும் நல்லதுதான், புத்தகத்தையெடுத்துப் படி...

படிக்கணுமா, அம்மா ஆளவிடுங்க...என்றபடி அங்கிருந்து நழுவினான் அவன்.

******


புதன், 9 பிப்ரவரி, 2011

சிவன் சொத்து!

மண்ணின் மேலும் மதங்களின் மேலும் மக்கள் கொண்டிருக்கும் பற்று மிகவும் சென்சிடிவான ஒன்று. 

குடும்பங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சில கோயில்களே கோர்ட் வரைக்கும் இழுக்கப்படும்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஒரு கோயில் அமைந்திருந்தால்?

 பதினொன்றாம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் அந்தக் கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்திருக்கும் கம்போடிய தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான போரில், இந்தக் கோயில், மேலும் சிதைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.


பிரசாத் பிரியா விஹார், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு இறையாயிருந்தவன் என்பதற்குச் சான்றுரைக்கும் வகையில், கெமர் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவாலயம் இது. அமைந்திருப்பது கம்போடிய, தாய்லாந்து எல்லையில் இருக்கும் டாங்கிரெக் மலையின்மீது. எல்லைச்சாமி மாதிரி இரண்டு நாடுகளுக்கிடையே இருப்பதுதான் இங்கு பிரச்சனையே.

எல்லைக்கு நடுவில், கோயில் எங்கே இருக்குது பாருங்க...


1962 ம் ஆண்டிலேயே இந்தச் சொத்துப் பிரச்சனை தலைதூக்க, பிரச்சனையில் தலையிட்ட பன்னாட்டு நீதிமன்றம், இந்தக் கோயில் கம்போடியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும் ஆசை யாரைவிட்டது? அதனால், இன்றுவரை ஓயவில்லை பிரச்சனை. 

தமிழகத்தில், பழங்காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற்கு, அக்கால மன்னர்கள் ஏராளமான சொத்துக்களை எழுதி வைத்ததாகவும், தற்காலத்தில் அத்தகைய சொத்துக்களெல்லாம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகவும் படித்ததும் கேட்டதும் உண்டு. கிராமங்களில் அப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்கள் சொல்வார்கள், சிவன் சொத்து குலநாசம் என்று. அதாவது சிவனுக்குரிய சொத்தை அபகரித்துப் பயன்படுத்துபவர்களின் குலம் தழைக்காமல் அழிந்துபோகும் என்று. இங்கே ரெண்டு நாட்டுப் பிரச்சனையில் யார் குலத்தைக் குற்றம்சொல்வது?


மன்னர்களின் காலத்தில் மதிப்போடிருந்த ஆன்மீகத் தலங்கள் பல, பிற்கால அரசியல் மாற்றங்களால் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதை நாம் பல நாடுகளில் பார்க்கமுடிகிறது. இந்து மதத்தின் பழம்பெருமைக்குச் சான்றாக நிற்கும் இந்தச் சிவன் சொத்து,  இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு அழிந்துபோகக்கூடாதென்று, உலக இந்துக் கலச்சார அமைப்பு ஒன்று உலகெங்குமிருக்கிற இந்து மக்களின் ஆதரவை வேண்டியிருக்கிறது.

அதை இங்கே பார்க்கலாம்...

மக்களுக்குக் கஷ்டம்ன்னு வந்தா கடவுள்கிட்டபோய் முறையிடலாம். ஆனா, கடவுளுக்கே கஷ்டம்வந்தா எங்கேபோய் முறையிடுவதாம்????

எல்லாம் அவனோட திருவிளையாடல்ன்னு சிவனேன்னு இருக்கவேண்டியதுதான்.

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து.
படங்கள் உபயம்: google

திங்கள், 31 ஜனவரி, 2011

என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!


பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.

பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?

ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.

நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை
மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.

கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.

இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.

ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் :(

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!
(Total cargo cost is Dh1,500)

எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல்,இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல்,
பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.

இதுதொடர்பான கருத்துக்களை Gulf News ல் படிக்க "இங்கே" பாருங்க...

பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது அவசியம்.

நன்றி: Gulf News


புதன், 26 ஜனவரி, 2011

பிடிசாபமும், பி.டி கத்தரிக்காயும்!

வரகரிசிச்சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுர வெனவே புளித்த தயிரும்,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.

வழுதுணங்காய் என்று அன்றைக்கு வாய்நிறைய அழைக்கப்பட்ட நம் கத்தரிக்காயின் ருசி, முற்றும்துறந்த முனிவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. ஊரூராய்ப் பயணித்துக்கொண்டிருந்த நம் ஔவைப்பாட்டியையும் அது அசத்தியதன் சாட்சியே மேலேயிருக்கும் பாடல்.

புல்வேளூரிலுள்ள பூதன் என்பவருடையவீட்டில் உணவருந்திய நம் பாட்டி, அங்கே கிடைத்த வரகரிசிச்சோற்றை, புளித்த தயிர்சேர்த்துப்பிசைந்து, வழுதுணங்காய் வதக்கலுடன் வயிறுநிறையச் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுக்கு ஈடாக உலகத்தையே கொடுக்கலாமென்று மனமுவந்து சொல்லியிருக்கிறாள்.

அங்கே அப்படியென்றால் இது, மனைவியின்மீதுள்ள கோபத்தால், கத்திரிக்காய்க்குச் சாபம் கொடுத்த முனிவரொருவரின் கதை...

 சுற்றியுள்ள கிராமத்து மக்களெல்லாம் சங்கடங்கள் நேரிடுகையில் வந்து அந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றுச்செல்வது வழக்கம். அன்றைக்கும் ஒரு குடியானவன் வந்து தன் குறைகளைச்சொல்லி, அறிவுரைபெற்றுச் செல்கையில் முனிவருக்குத் தன் தோட்டத்தில் விளைந்த சுவையான கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனானாம்.

நீராடச்சென்ற முனிவர் தன் பத்தினியிடம், கத்தரிக்காய்களைக் கறிசமைத்துவை நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச்சென்றாராம். கணவர் சொல்தவறாதவளாக,  அந்தப் பிஞ்சுக்கத்தரிக்காய்களைப் பசுநெய்யில் தாளித்து, உப்பிட்டு வதக்கினாளாம் முனிவரின் மனைவி. வதக்குகிற வாசனையில் வாயூற, ஒரு துண்டை எடுத்துச் சுவைபார்த்தாளாம். அபாரமான ருசியில் ஆசை அதிகமாக, ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சாப்பிட இறுதியில் ஒற்றைத்துண்டுமட்டுமே மிஞ்சியதாம்.அதையும் கணவருக்குக் கொடுக்கவா வேண்டாமா என்று அல்லாடியதாம் அவள் மனசு.

அதற்குள் நீராடச்சென்ற முனிவர் வந்து, உணவு பரிமாறு என்று உத்தரவிட்டாராம். வடித்த சாதத்தை ஒற்றைத்துண்டு கத்திரிக்காய் வதக்கலுடன் கொண்டுவந்து வைத்தாளாம் அவள்.
மிச்சக் கறியை எங்கேயென்றாராம் அவர். மொத்தமும் அவ்வளவுதானென்று அஞ்சியஞ்சிச் சொன்னாளாம் அவள்.

பர்த்தாவுக்குக் கொடுக்கக்கூட மனசில்லாதபடிக்கு, உன்னைத் அள்ளித்தின்னவைத்த அந்தக் கத்திரிக்காயில், இன்றுமுதல் புழுக்கள் குடியேறட்டும் என்று சாபமிட்டாராம் முனிவர். அன்றிலிருந்துதான், கத்தரிக்காய்க்குள் புழுக்கள் குடியேறியதாம்.

அன்றைக்குக் குடியேறிய புழுக்களை, இன்றைக்கு வெளியேற்ற, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் மரபணு மாற்றம்பெற்ற கத்தரிக்காய்கள், அதாவது B.T. Brinjal.

பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis, (B.T) என்ற நுண்ணுயிரியிலிருந்து எடுக்கப்பட்ட, நச்சுத்தன்மையுள்ள டி.என்.ஏ வை கத்தரிச்செடிகளில் உட்செலுத்தி, கத்தரிக்காய்களிலுள்ள பூச்சிகளை அழிக்கமுடியுமென்று கண்டறிந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

செடிகளிலேயே பூச்சிகளைக்கொல்லும் தன்மைவந்துவிடுவதால், விவசாயிகள் கத்தரிச்செடிக்குப் பூச்சிமருந்துகள் அடிக்கவேண்டிய அவசியமில்லை என்பது விஞ்ஞானிகளின் கூற்று. ஆனால், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை உட்கொண்ட எலிகளுக்கு, உடலுறுப்புகளில் பாதிப்பும் உடலியக்கத்தில் பிரச்சனைகளும்கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், உண்ணுகிற உணவு என்று அத்தனையும் மாசுபட்டுப்போயிருக்கிறதென்று இன்றைக்குநாம் அறிந்துகொண்டிருப்பதுபோல, இந்தக் கத்திரிக்காய்கள் பெரிதாய் என்னசெய்துவிடப்போகின்றன என்பதும் கால ஓட்டத்தில் கட்டாயம் தெரியவரும். அதுவரைக்கும், நாமும் கத்தரிக்காய் வதக்கலைக் கவலையில்லாமல் சாப்பிடுவோம்.

                                                 ************