அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்

பாதிக்கப்பட்ட பெண்கள் பலநூறாயிருந்தாலும், சாதிக்கும் துடிப்புடன் தடைகளைமீறி வெற்றிகொண்ட பெண்கள் சிலநூறுபேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனைப்பெண்களைப்பற்றிப் பேசப்போகும் பகுதி இந்தப் பெண்டிர் தேசம்.

இதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.


பார்வதியின் சபதம்
--------------------------

 


நாட்டையும் பெண்ணென்போம்
நடை நெளிந்து ஓடுகிற
ஆற்றையும் பெண்ணென்போம்
அளவிலா அறிவுதரும்
ஏட்டையும் பெண்ணென்போம்
இடையின்றித் தேடுகிற
தேட்டையும் பெண்ணென்போம்
ஆனால்,
வீட்டுப் பெண்ணைமட்டும்
வேலைசெய்யும் அடிமையென்போம்

என்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை. சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.

திண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள்.

கணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்ற செலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.

அடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்ன செய்யப்போகிறாய்? படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப் பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.

பெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பை முடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகு பார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்து பேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.

மேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின் முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்று நின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து. பெண்ணென்றால் பார்வதியை மாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,
இன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.


செவ்வாய், 23 அக்டோபர், 2018

உறக்கமில்லாத இரவு

தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா.  தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள்,  "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா?  ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.

கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.

வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது. 

மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது.  மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.

செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள்.  அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள்  இதழைக் கையில் எடுத்தாள். 

முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.

வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.

முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

  மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். 

நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.

சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள். 

அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.

பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.

அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள். 

இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.

தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும்  தனிமையும்.



சனி, 8 பிப்ரவரி, 2014

பாசக்காரி சிறுகதை



நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.

சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.

அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.

ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.

எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக்  காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி  உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.

முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.

பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.

அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.

அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.

சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை  நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.

பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம்  நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.

அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும்  அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின்  ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.  ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.

சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை.  பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.

இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த  தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.

எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு  சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .

உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.



வெள்ளி, 3 டிசம்பர், 2010

மக்கு மண்டூகம்!

'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறது வெயிலுமுத்து வாத்தியாரின் வழக்கம்.

 அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.  கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச் சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம் வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம் போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.

ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும் பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.

அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச் சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.

வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.

நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத் தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப் போவான்.

ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒரு நாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒரு தடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மா கிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

 தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு, (அதாங்க...மண்டூகம்) 
அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.

அதே மாதிரிதான், நல்லவர்களோட பல காலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்  முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.

அதே மாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத் தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தான்.
 
அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசி வரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.

                                               *********



வெள்ளி, 19 நவம்பர், 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின் பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க. 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக் கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப் போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலி தாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அது மட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன். ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப் பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டு முடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச் சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்  குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப் பாட்டியின் பேத்தி போலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறு குழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர் துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? 

********


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

குழந்தைகளைக் குற்றம் சொல்லாதீங்க...

"எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்து வந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.

"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப் பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்ற சேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.

"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச் சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப் பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.

இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.

அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக் கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக் குழந்தை.

இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு வரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.

பக்கத்து வீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து, இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.

கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில் செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக் குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?

என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப் போட்டுடுவான், என் கண்ணை விட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.

குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.

விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக் குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.

வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடி விளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.

மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்த பின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

புதன், 8 செப்டம்பர், 2010

லால்பாக் பெங்களூரு

அமீரகத்தின் அதிகமான வெம்மை, கண்ணைக்கூசவைக்கும் வெயிலிலிருந்துவிலகி, பெங்களூரு வந்தபோது,அவ்வப்போது பெய்த மழையும்,உறுத்தாத இளம்வெயிலும்,கண்ணைக் குளிர்விக்கும் பசுமையும் மனதை நிறைத்தது. பாதிநாளை எங்களுடன் பகிர்ந்துகொண்ட லால்பாகின் அழகான காட்சிகளில் சில இங்கே...























சில்க் காட்டன் மரமாம்...

























லால்பாக் ஏரியில் நீந்திய பாம்பு...




சனி, 4 செப்டம்பர், 2010

அகரம்முதலான அனைத்துக்கும் காரணமாய்...



அகரம் தொடங்கி நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களும் நம் வணக்கத்துக்குரியவர்கள்தான். தாய்தான் நமக்கு முதல் ஆசிரியை என்று சொல்லுவார்கள். ஆனால்,ஆசிரியர்களாயிருந்த பெற்றோருக்குப் பிறந்து, ஆசிரியர்களாலேயே வளர்க்கப்பட்ட காரணத்தால் எப்போதும் என் மனதில் ஆசிரியர்களுக்கு உயர்வான ஒரு இடமுண்டு.

ஐந்தாம் வகுப்புவரை, ஆசிரியர்களாயிருந்த அப்பா அம்மாவுக்கு எங்கெல்லாம் மாற்றலாகிறதோ அங்கெல்லாம் சென்று படித்ததால், வீட்டிலிருக்கும்போதுகூட எனக்குப் பள்ளிக்கூடத்திலிருப்பதுபோலவே தோன்றும். ஆனால், ஒருநாள்கூட, வீட்டில் அப்பாவோ அம்மாவோ புத்தகத்தை எடுத்துப்படி என்று கட்டாயப்படுத்தியதில்லை. (பிள்ளை தானாவே படிக்கும் என்ற நம்பிக்கைதான்...)கண்டதைக் கற்றால் பண்டிதனாகலாம்னு அப்பா அடிக்கடி சொல்லக்கேட்டு, கடலை வாங்குகிற காகிதம் முதற்கொண்டு, எங்க ஊர் சின்னஞ்சிறு நூலகத்திலிருந்த எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்ததுண்டு.

அம்மாவின் பள்ளியைவிட்டு, ஆறாம் வகுப்புப் போனபோதுதான் புதிதாகச் சிறகுமுளைத்தது போலிருந்தது. டீச்சர் பொண்ணு என்கிற பெயர் மாறி, சொந்தப் பெயரோடு முன்னேறத் தொடங்கிய காலம். பின்னாலிருந்து இழுத்த அச்சத்தையும் தயக்கத்தையும் மாற்றி, 'உன்னால் முடியும், நீ எல்லாவற்றிலும் பங்கெடுக்கவேண்டும்' என்றுசொல்லி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பிள்ளையார் சுழியாயிருந்த என் சரித்திர ஆசிரியை எமிலிப்பொன் டீச்சரை என்றும் என்னால் மறக்கவேமுடியாது.

ப்ளஸ் ஒன் படித்தபோது, எனக்குக் கிடைத்த மிக அருமையான கணித ஆசிரியையைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். புரியலன்னு சொன்னா எத்தனை தடவையும் சொல்லித்தரத்தயங்காத ஆசிரியை அவர்கள்.அவங்க வகுப்பில் நடந்த ஒரு மறக்கமுடியாத சம்பவம்...

அன்றைக்கு கணிதத்தில் வகுப்புத் தேர்வு. ஒரு டெஸ்க்கில் ரெண்டுபேர் உட்கார்ந்து எழுத மற்றவர்கள் வகுப்பிற்குள்ளும், வராண்டாவிலும் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம்.திடீரென்று 'ஏய் எழுந்திரு' என்று டீச்சர் சத்தம்போட, எழுதிக்கொண்டிருந்த எல்லாரும் நிமிர்ந்தோம். வராண்டாவில் தரையில் உட்கார்ந்து தேர்வு எழுதிய ஒரு பெண், காலுக்கடியில் கணக்கு நோட்டை வைத்துப் பார்த்து எழுத, அது எங்க டீச்சர் கண்ணில் பட்டுவிட்டது. நீ எழுதியதுபோதும் பேப்பரைக் கொடுத்து விட்டுப்போ என்று கணக்கு டீச்சர் சொன்னதும், ஆயிரம் காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தாள் அவள். அவற்றில் எதுவுமே நடக்காமல்போக, அழுதுகொண்டு வகுப்பை விட்டுப்போன விடுதி மாணவியான அந்தப்பெண், விடுதி அறைக்குச்சென்று பல்பை(bulb)நொறுக்கி வாயில்போட்டுக்கொண்டு, டீச்சர் திட்டியதால்தான் இப்படிச் செய்தேன் என்று நாடகமாடிவிட்டாள்.

வகுப்பில் அத்தனை பேருக்கும் கடும்கோபம், தான் தப்பு செய்ததோடு டீச்சர்மேல் பழிவரும்படி செய்திருக்கிறாளே என்று. ஆனால், அடுத்த நாள் வகுப்புக்கு வந்த எங்க டீச்சர், அவள் பழிபோட்டதில் எனக்கொன்றும் வருத்தமில்லை, ஆனால்,அவளுடைய செயலால் நல்லாப் படிக்கிற பிள்ளைகள்கூட அதிர்ச்சியில் நேற்று சரியாவே பரிட்சை எழுதல. அதுதான் எனக்கு வருத்தம் என்று சொன்னார்கள். இன்றுவரை அவர்களை மறக்கமுடியவில்லை.இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, காப்பியடித்து மாட்டிக்கொண்ட அந்தப்பெண்ணும் ஒரு ஆசிரியரின் மகள். அவளால் அன்று இரண்டு ஆசிரியர்களுக்குச் சங்கடம்.

கல்லூரிக்காலத்தில் கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களுமே குறிப்பிடத் தகுந்தவர்கள்தான். சின்ன விஷயமென்றாலும் அதனைச் சீர்தூக்கிப் பாராட்டி, இன்னும் என்னென்ன செய்தால் முன்னேற்றம் காணலாம் என்று, சொல்லிக் கொடுத்த தெய்வங்கள் அவர்கள். இன்றும் நான் கற்றுக்கொண்ட அந்த சாராள் தக்கர் கல்லூரியைக் கடந்து செல்ல நேர்ந்தால், கையெடுத்துக் கும்பிடத்தான் தோன்றுகிறது.

கல்லூரி நாட்களில், கவிதைப் போட்டிகளிலும் கவியரங்கங்களிலும் என்னைப் பங்கெடுக்கத்தூண்டி, என்னுடைய கவிதையைத் தானே பத்திரிகைக்கு அனுப்பி வைத்து, மாணவக் கவிஞர்கள் பகுதிக்கு எழுதச்சொல்லி ஊக்கமளித்த பேராசிரியை பிச்சம்மாள் அவர்களை என் வாழ்வில் மறக்க இயலாது.

வழக்கமாக நம் சிறுவயது ஆசிரியர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவோம். ஆனால், ஆசிரியர்களுக்கு நம்மை நினைவிலிருக்காது. ஆனால்,போன வருஷம் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது, இதற்கு மாறாக நடந்தது ஒரு சம்பவம்.

வங்கியில் என்னைப் பார்த்துவிட்டு, என் அருகில்வந்து, "நீ இங்க தானேம்மா படிச்சே..." என்று கேட்ட அவர்களை, என்னால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. 'ஆமா, ஆனா, நீங்க யாருன்னு தெரியலியே...' என்று நான் சொல்ல, அவங்க தன்னுடைய பேரைச் சொல்லவும், எனக்குக் கண்ணில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிட்டது.

என்னுடய ஆறாம் வகுப்பில், என் வகுப்பு ஆசிரியையாக இருந்த அவங்க, காலத்தின் கோலத்தில் எப்படியோ மாறிப்போயிருந்தாங்க. 'ஏன் டீச்சர் இப்படி ஆகிட்டீங்க...' என்று என்னையுமறியாமல் வார்த்தைகள் வந்துவிழ, 'என் கணவரும் இறந்துட்டாங்க, குழந்தைகளும் இல்லை, இப்போ,தனியாத்தான் இருக்கேன்' என்று அவங்க சொல்ல, மிகவும் வருத்தமாகிப்போனது. அத்தனை வருத்தத்திலும், "உங்க அம்மா ரொம்ப நல்லாப் படிப்பா... அவளை மாதிரி நீயும் நல்லாப் படிக்கணும்" என்று என் மகளின் தலையில் கைவைத்து ஆசியுரைத்தார்கள். நிஜமாகவே நெகிழ்ந்துதான் போனேன்.

குருவாக இருந்து குற்றங்கள் களையவைத்து, நம்மை உருவாக்கி உலகில் உயர்வினை அடையவைத்த அத்தனை ஆசிரியப் பெருமக்களையும் இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்தி வணங்குவோம்!

வாழாமல் வந்த வரலச்சுமி!


கழுவின பாத்திரத்தை அடுப்படியில கவுத்தி வச்சிட்டு கடுங்காப்பியைக் கையில் வாங்கிக்கிட்டு கிணத்தடியில போய் உங்காந்தாங்க லச்சுமி சித்தி.

காப்பியக் குடிச்சிட்டு, உளுந்தக் கழுவி கிரைண்டர்ல போடு. அப்டியே ராத்திரி சாப்பாட்டுக்கு ரசம் வச்சி தொவையலரைச்சிரு. பாத்துக்கிட்டிருந்த சீரியல்ல இருந்து கண்ணை நகர்த்தாம கவுரியத்தை சொன்னதும், கிணத்தடியிலிருந்து எந்திரிச்சி உளுந்துக் கிண்ணத்தை எடுத்துக்கிட்டு மறுபடியும் வெளிய போனாங்க லச்சுமி சித்தி. கால்ப்பக்கம் கிழிஞ்சிருந்த சேலையில் கால்தடுக்க, தூக்கிச் சொருகிக்கிட்டு, உக்காந்து உளுந்தைக் கழுவ ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல கிரைண்டர் ஓட ஆரம்பிச்சிது.

கைகள் அனிச்சையாய் வேலை செய்தாலும் சித்தியின் கண்கள் மட்டும் எப்பவும் வெறுமையாய் வேறெதையோ வெறித்துக்கொண்டிருக்கும். சின்ன வயசில் அத்தனை பேரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு, ஜான்சிராணி என்ற செல்லப் பெயரோடு வளையவந்த சித்தி, இன்றைக்கு வேலைக்காரியைவிடக் கேவலமாய்ப்போனது கொடுமையிலும் கொடுமை.

ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பிள்ளைகள்தான் பார்வதி ஆச்சிக்கு. சித்திக்குக் கல்யாணம் பேசினப்ப ஆச்சிக்கு அதில் அத்தனை இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு,பக்கத்து ஊர்தான்னாலும்,  உத்யோகம் வடக்கே நாக்பூர்ல ரயில்வே வேலைனு சொன்னாங்க. அத்தனை தூரம் மகளை அனுப்பணுமான்னு தயங்கினாங்க ஆச்சி. ஆனா, நான் வாக்குக் குடுத்துட்டேன்னு சொல்லி, ஆச்சி வாயை அடைச்சிட்டாங்க தாத்தா.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்த்ததோட சரி. பொண்ணு வீட்டுக்காரங்க யாரும் மாப்பிள்ளையப் பாக்கல. ஆனா, மாப்பிள்ளைப் பையன் நல்ல நிறமாயிருப்பான்னு சொல்லிக்கிட்டாங்க. நாலு நாள்ல நாக்பூர்லயிருந்து மாப்பிள்ளையோட போட்டோ வந்துது. சித்தியையும் பாப்பு ஸ்டூடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, பளிச்சுன்னு தெரியிறமாதிரி படம் எடுத்து, மாப்பிள்ளை வீட்ல கொண்டுபோய் குடுத்துட்டு வந்தாங்க தாத்தா.

முகூர்த்தத்தன்னிக்குதான் மாப்பிள்ளை வந்தார். காலைல ஆறுலேருந்து ஏழரைக்குள் கல்யாணம். ஏழு மணியாகியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரல. ஏழே காலுக்கு வந்து அரக்கப்பரக்கத் தாலிகட்டி முடிச்சாங்க. அவங்களுக்குள்ளயே ஏதோ கசமுசன்னு பேசிக்கிட்டாங்க. மாப்பிள்ளை நல்ல நிறம், சித்தி நிறம் குறைச்சல்னாலும் சிரிச்ச முகமா லட்சணமா இருப்பாங்க. மணமேடையில் மாப்பிள்ளை ஒரு தடவைகூட பொண்ணு பக்கம் திரும்பவே இல்ல. முகத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற மாதிரியே இருந்தாரு.

மறுவீட்டுக்குப் போகும்போது சித்தி ஒரே அழுகை. எல்லாம் பழகிட்டா சரியாயிடும்னு பக்குவம் சொல்லி அனுப்பி வச்சாங்க பெரியவங்க. ஆனா, கல்யாணத்துக்கு மறுநாளே, வேலை இருக்குதுன்னு சொல்லி நாக்பூர் கிளம்பிப் போயிட்டாராம் மாப்பிள்ளை. சித்திக்கிட்ட பேசக்கூட இல்லையாம்னு பின்னால பேசிக்கிட்டாங்க. வந்துருவான் வந்துருவான்னு மாமனாரும் மாமியாரும் சொல்ல, மூணு வருஷம் அங்கேயே இருந்தாங்க சித்தி. ஆனா, போன மாப்பிள்ளை வரவே இல்ல.

நாலாவது வருஷம் அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணம்ஆகி, ரெண்டு வயசில் பிள்ளையும் இருப்பதாகக் கடிதம் வர, அதைக் கேட்ட அதிர்ச்சியில், சோறு வடிக்கும்போது பாத்திரத்தைத் தவறவிட்டு, கை காலெல்லாம் தீப்பட்ட கொப்புளத்தோட ஆச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க சித்தி.

செல்லமா வளத்த பொண்ணு வாழாம வந்து நின்ன சோகத்தில் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாங்க ஆச்சியும் தாத்தாவும். ஆனா, எல்லாச் சோகத்தையும் உள்ளயே பூட்டிவச்சு உருக்குலைந்துபோன சித்தி, இன்னிக்கு தம்பி வீட்டுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரி.

வரலட்சுமியா வாழப்போனவங்க வாழாவெட்டியா வந்ததைக்கண்டு பலர் மனசு வருத்தப்பட்டாலும், சின்ன வயசில கொஞ்ச ஆட்டமா ஆடுனா, அதான் இன்னைக்கி அனுபவிக்கிறா என்று அழுக்கு வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் பெண்களில் சிலர்.

சனி, 26 ஜூன், 2010

மடித்துச் சுருட்டிய மஞ்சள் பை!

 


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டத்துக்குக் குறைவிருக்காது. பஸ்சில் ஒருதடவை பர்சோடு பணத்தைப் பறிகொடுத்ததிலிருந்து, வெளியே வந்தா எப்பவும் கொஞ்சம் 'அலர்ட்டா' இருக்கிறது வழக்கம். அதுவும் பிள்ளைகளோடு போனா ரொம்பவே எச்சரிக்கையாயிருக்கிறதுண்டு.

மகளுக்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, பஸ்ஸுக்கு வந்து நின்னப்போ, பக்கத்தில் என் அப்பா வயசுப் பெரியவர் ஒருத்தரும் வந்து நின்னார். திரும்புகையில் ஸ்நேகமாய்ச் சிரித்தார், பதிலுக்கு நானும் சிரித்தேன். என் மகனிடம் பேச ஆரம்பித்தார். அதற்குள், கலைந்த தலையும், லுங்கியுமாக ஒரு ஆள், அவரிடம், "ஐயா, காலுக்கடியில, காசைத் தவறவிட்டிருக்கீங்க பாருங்க..." என்றான். ஒரு பத்து ரூபாயும் ரெண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளும் அவர் அருகில் கீழே கிடந்தது.

அவர் குனியுமுன்னால் என் மகன் குனிந்து எடுத்து, இந்தாங்க தாத்தா என்று அவரிடம் கொடுத்தான். அவர், என்னோடதா என்று திகைத்தாலும், சட்டைப் பையில் வாங்கி வச்சுக்கிட்டார். ஆனாலும், முகத்தில் சந்தேக ரேகை ஓடியது. அடுத்த ஐந்து நிமிஷத்தில், நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு சின்னப்பையன் வந்து, அவர் சட்டையின் பின்னால் தெரியாதது மாதிரி, கையிலிருந்த ஐஸ்கிரீமைக் கொட்டிவிட்டான்.

அவன், அம்மா மாதிரி இருந்த பெண்மணி ஒருத்தி வந்து, "பெரியவரே, பையன் தெரியாம உங்க சட்டையில, ஐஸ்கிரீமைத் தடவிட்டான். பக்கத்துக் கடையில தண்ணி வாங்கித் தாறேன். நீங்க கழுவிக்குங்க..." என்றாள். அவர், கையிலிருந்த மஞ்சள் பையைக் கீழே வைக்காமல், கையில் கோர்த்துக்கொண்டே சட்டையை லேசாக சுத்தம் செய்துவிட்டு வந்து, மறுபடியும் எங்க பக்கத்தில் நின்றார். நான் அந்தப் பெண்ணையே கவனித்துக்கொண்டிருந்தேன்.

முதலில் கீழே காசு கிடக்குதுன்னு சொன்னவன், ஐஸ்கிரீம் கொட்டிய சிறுவன், அவன் அம்மா, கையில் பிளாஸ்டிக் கோணிப்பையுடன் ஒருவன் என்று ஒரு நாலைந்து பேர் அந்தப் பெரியவரையே கவனித்தபடி, அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து வந்துவிட, நாங்கள் முன்னாலும் அந்த ஆட்களில் ரெண்டுபேர் பின்னாலும் ஏறிக்கொண்டார்கள். பஸ்சில் ஏறியதும் நான் அந்தப் பெரியவரிடம் சொன்னேன், ஐயா கீழே கிடந்த பணம், மேலே கொட்டிய ஐஸ்கிரீம் எல்லாமே வேண்டுமென்றே அவங்க செய்தமாதிரி இருந்தது என்று.

அதற்கு அவர், நானும் நினைச்சேம்மா, நான் பையில ஒரேயொரு அஞ்சு ரூபாதான் வச்சிருந்தேன் பஸ்சுக்கு. இப்ப மாசத் தொடக்கம் இல்லியா, வயசானவன், பென்ஷன் பணத்தை வாங்கி, மஞ்சப் பையில சுத்தி வச்சிட்டுப்போறேன்னு நினைச்சிருப்பாங்க. ஆனா, நான் என் நண்பர் வீட்டுக்குப்போன இடத்தில அவங்க, வீட்ல காய்ச்ச ரெண்டு வாழைக்காய் கொடுத்தாங்க. அதைத்தான் பையில சுருட்டி வச்சிருந்தேன். அப்படியே பையைத் திருடியிருந்தாலும் அவங்க அநியாயத்துக்கு ஏமாந்துதான் போயிருப்பாங்க என்று சொல்லிவிட்டு, வாழைக்காயை வெளியில் எடுத்துக்காட்டிச் சிரித்தார்.

ஆக, எங்கிட்ட திருடணும்னு நினைச்சு எனக்கு இருபது ரூபாய் குடுத்துட்டுப்போயிருக்காங்க...
பஸ்ஸை விட்டு இறங்கினதும், போற வழியில பிள்ளையார் கோயில் உண்டியல்ல போட்டுட்டுப் போகணும் என்றபடி அந்தப் பெரியவர் இறங்கிப்போனார். பின்னால் ஏறிய அந்த ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பிப்பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. அவர்கள் கைவரிசையைக் காட்ட அடுத்த ஒருத்தர் அகப்பட்டிருப்பாரோ என்னவோ...

                                                     **************

சனி, 22 மே, 2010

ஹர்ஷினியின் கடைசி வார்த்தைகள்



"At the airport and blah =_= Only thing to look forward to is the rain'"

விமானத்தில் ஏறுமுன் கடைசியாக,தன்னுடைய அலைபேசிவாயிலாக ட்விட்டரில் ஹர்ஷினி பதிவு செய்த வார்த்தைகள் இதுதான். மழையை எதிர்பார்த்து மங்களூருக்குப்போன பதினெட்டு வயதுப் பூ, நெருப்பில் கருகிப்போனது கண்ணீர்க்கதை.

ஹர்ஷினி பூஞ்சா...என் மகளுடைய பள்ளியில் சென்ற வருடம் படித்து முடித்த பெண். சிலுசிலுவென்று அந்தப் பெண்ணின் பேச்சும்கூட மழை மாதிரிதான் இருக்கும் என்றுசொல்லி மறுகுகிறாள் என் மகள். அப்பா அம்மாவுடன் உறவினரின் கல்யாணத்துக்கு ஊர்வந்த குடும்பம் மொத்தமாக அழிந்துபோயிருக்கிறது.

இதேமாதிரி என் மகனின் பள்ளியில் படித்து, தற்போது ப்ளஸ் 2 முடித்து, நம் ஊரில் கம்ப்யூட்டர் படிப்புக்காக வந்த அக்ஷய் போலார், தன் அம்மாவுடனும் பாட்டியுடனும் அதே விமானத்தில் பயணித்து இறந்துபோயிருக்கிறான். எங்கே திரும்பினாலும் குழந்தைகள் பெரியவர்களென்று எல்லோரிடமும் இதே பேச்சுதான்.

ஆண்டு விடுமுறைக்குப்போக ஆவலாயிருந்தவர்கள் மனதிலெல்லாம் மருட்சி நிறைந்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்யப்போகிறோமோ என்று.

கடைசியாக நண்பரொருவர் சொன்ன வார்த்தைகள் மனதைத் தைத்தது.கொத்துக்கொத்தாக இறந்துபோனவர்கள் பலர், இங்கே இருந்தபோதும் உறவுகளுக்காக உழைத்தார்கள், இப்போது செத்தும் பல லட்சங்களாக அவர்களின் பாக்கெட்டை நிறைக்கப்போகிறார்கள். பணமிருக்கும்வரைக்கும், உறவுகளின் மனதில் 
அவர்களின் நினைவிருக்குமென்று.

******


செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என்னோட மகனுக்கும் இந்த வயசுதான் இருக்கும்...!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை... 

பார்க் பெஞ்சுகளில் அமர்ந்து பொருளாதாரத்தை அலசுபவர்களும், கருமமே கண்ணாக நடைப்பயிற்சி செய்பவர்களும், குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு, குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டிருக்கும் பெற்றவர்களுமாக நிறைந்திருந்தது பூங்கா.

சுற்றிச்சுற்றிவந்து கீழே கிடக்கிற குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தம்செய்துகொண்டிருந்தார் சீருடை அணிந்த பணியாளர் ஒருத்தர்.பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளைகள் தமிழில் பேசியதைக் கவனித்திருப்பார்போலிருக்கிறது. பக்கத்தில் வந்து, 'நம்ம ஊராம்மா...' என்றார். திரும்பிப்பார்த்துத் தலையசைத்தேன். எனக்கு விழுப்புரம் பக்கம்... நீங்க எங்கேம்மா? என்றார். எனக்கு திருச்செந்தூர் பக்கம் என்றேன்.அதற்குள்,முந்திக்கொண்டு என்மகன், திருச்சி என்றான்.

அம்மாவுக்குத் திருச்செந்தூர், உனக்குத் திருச்சியா என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் அவர். 'ஆமாங்க, அவன் பிறந்த ஊரை அவனோட ஊர்ன்னு சொல்றான்' என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், பின்னாலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம். ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் ஒரு சின்னப்பையன். பக்கத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் வேகமாய்ப்போய் அந்தக் குழந்தையிடம் ஹிந்தியில்,உங்க அம்மா எங்கே என்று கேட்டார். அந்தச் சிறுவனுக்கு விளங்கவில்லை. தனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டுப்பார்த்தார். அதற்கும் பதில்சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தான் பையன். 'இறக்கிவிட்டா புள்ள தனியா எங்கேயாவது போயிடக்கூடாதுல்ல...' என்று என்னிடம் சொல்லிவிட்டு,சுற்றுமுற்றும் பார்த்தார் அவர்.

அதற்குள் எங்கிருந்தோ வந்துவிட்ட அந்தப்பையனின் அம்மா, அழுதுகொண்டிருந்த மகனையும்,அருகில் நின்ற அந்த சீருடைப் பணியாளரையும் பார்த்துவிட்டு,மகனிடம் ஏதோ கேட்டாள். என்ன சொன்னானோ அந்தப்பையன், காச்சுமூச்சென்று அரபியில் கத்தத்தொடங்கினாள் அந்தப்பெண். அதிர்ந்துபோன அந்த மனிதர் அரபியில் அந்தப்பெண்ணிடம் சொல்லி விளங்கவைக்கமுயற்சித்தார். அவர் சொல்வதைக் காதில்கூட வாங்காமல் குழந்தையை இறக்கி இழுத்துக்கொண்டுபோய்விட்டாள் அந்தப்பையனின் அம்மா.

திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அதற்குள்,சமாளித்துக்கொண்ட அவர், 'புள்ளையப் பாத்துக்காம இவுங்க உட்டுட்டுப் போயிடறாங்க. நாம என்னன்னு கேட்டா அதுக்கும் கத்துறாங்க...இங்க வேலைக்கு வந்து இதுமாதிரி நிறைய பாத்தாச்சும்மா' என்றவர் பெருமூச்சு விட்டபடி, 'எம்புள்ளைக்கும் இந்த வயசுதான் இருக்கும்...பொறந்தப்ப பார்த்தது. இப்ப, ஊர்ல ஒண்ணாவது படிக்கிறான்...' குரல் கம்மச் சொல்லிவிட்டு, சுத்தம் செய்கிற வேலையைத் தொடர்ந்தார் அவர். எனக்குப் பேச்சு வரவில்லை.

குடும்பக் கஷ்டம், கூடப்பிறந்தவங்களின் கல்யாணம், பிள்ளைங்களோட படிப்பு,பெத்தவங்களோட மருத்துவச்செலவுன்னு ஏதாவதொரு தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்க, இதுபோல மக்களின் வாழ்க்கை இந்தப் பாலைவனத்தில் பாசத்துக்கு ஏங்கியவாறே பலவருடங்களைக் கடத்தவைக்கிறது. ஆனால், உறவுகளைத் தேடி ஏங்கிப்போய், இவர்கள் ஊருக்கு வரும்போது, இவர்களைப் பணங்காய்ச்சி மரங்களாக மட்டுமே பார்க்கிற நம் சமூகத்தை நினைக்கையில், என்னையுமறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

மருந்தெல்லாம் மாறிப்போச்சு!!!

ஆண்டு விடுமுறையில ஊருக்குவந்தா முதல் நாலைஞ்சுநாள் நம்மளைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு. சாப்பாடு, தண்ணீர் வித்தியாசத்தால உடம்புசரியில்லாமப் போறது இப்பல்லாம் வாடிக்கையாயிடுச்சு.

போனவருஷமும் இதையெல்லாம் கடந்து, உறவுக்காரங்க வீடுகளுக்கு விசிட் அடிக்கத்தொடங்கியிருந்தோம்.விருந்து, உபசாரமெல்லாம் கொஞ்சம் அதிகமாகிப்போக, கடைசியில் அஜீரணம்தான் மிஞ்சியது. ஆளாளுக்கு டைஜின் சாப்பிடு, ஜெலுசிலைக் குடி, ஈனோவைக் குடின்னு ஏகப்பட்ட அறிவுரை சொன்னாங்க. "எலுமிச்சம்பழச்சாறில் உப்புப்போட்டுக் குடிக்கலாமே" என்றேன் நான். ஐயே, அதெல்லாம் பாட்டி காலத்து வைத்தியம். பட்டுன்னு பலன் குடுக்காது. இது உடனே கேட்கும்ன்னுசொல்லி, மாத்திரையைக் கையில திணிச்சாங்க.

ஆஹா,இப்பல்லாம் நம்ம ஊர்ல,அறிவுரை மாதிரியே மருந்து மாத்திரையும்ம் தாராளமாய்க் கிடைக்கிதேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்கான சாமான்கள் இருக்கோ இல்லையோ, இப்பல்லாம், எல்லார் வீட்டிலும் அவரவருக்கென்று ஒரு வண்டி மாத்திரை இருக்கிறது. இதை,அவங்க சாப்பிடுறதுமில்லாம அடுத்தவங்களுக்கு ரெக்கமெண்டேஷன் வேற பண்றாங்க...

அதிலும், சின்னக்குழந்தைங்க இருக்கும் வீடுன்னா சொல்லவே வேண்டாம். அலமாரி நிறைய அடுக்கிவச்சிருக்காங்க மருந்துகளை.ஒண்ணு வேலை செய்யலேன்னா இன்னொண்ணுன்னு ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு அதில.

முன்னெல்லாம், சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில, சுக்கு, மிளகு, திப்பிலி,அக்கரா, சித்தரத்தை, ஜாதிக்காய், மாயக்காய்ன்னு மருந்துப் பொருட்கள் உள்ள ஒரு டப்பாவும், அதை உரசிக்கொடுக்க ஒரு உரைகல்லும் கட்டாயம் இருக்கும்.பிள்ளை வளர்ப்பான் என்று சொல்லுகிற வசம்புக்கு இதில் ஸ்பெஷல் இடம் உண்டு. அதை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, உரசி நாக்கில் தேச்சு விடுவாங்க. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பொருமலுக்கும், வாய்வுக் கோளாறுகளுக்கும் வசம்பு அருமருந்துன்னு சொல்லுவாங்க.

வாரத்தில் ரெண்டு நாள்,இந்த மருந்துகளை உரைகல்லில் உரசி, நாக்கில் தடவி விடுவாங்க.சிலர், இந்த மருந்துகளோடு சுத்தமான தங்கத்தையும் கொஞ்சம் உரசிக்கொடுப்பாங்க. பிள்ளை தளதளன்னு தங்கமாட்டம் இருக்குமாம் :)

முன்னெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில, வீட்டில அம்மா, பாட்டின்னு குழந்தைகளைக் கொண்டாட ஆள் இருப்பாங்க. இன்று, அவசர யுகம்... அனுபவமும், அறிவுரை சொல்ல ஆளும் இல்லாத இளம் பெற்றோர்கள். ஒரு பிள்ளை பெற்று வளர்ப்பதற்குள் 'போதும்டா சாமீ' என்று சலிச்சுக்கிறாங்க.மூணு குழந்தைகள் இருக்குன்னு சொன்னா, உங்களுக்கு கோயிலே கட்டலாம்னு அதிசயப்படுறாங்கன்னா பாருங்களேன்...

ஓடியாடி வேலைசெய்தா உடம்புக்கு நல்லது, கூடிவிளையாடினா குழந்தைகளுக்கு நல்லது. ஆனா, ரெண்டுமே இல்ல இப்போ. குனிஞ்சு நிமிர்ந்து வேலைசெய்றதையே மறந்தாச்சு நாம. கூட்டுப்பறவைகளா மாறிட்டாங்க குழந்தைங்க. தொலைக்காட்சியும் கணினியும்தான் வீட்டில் ஓயாமல் உழைக்கிறதாகிப்போச்சு.

வாரம் ஒருமுறை சுக்குக்கஷாயம், மாசத்துக்கொருதடவை வேப்பிலை மருந்து, ஜலதோஷம் வந்தா சுக்குக்காப்பி,வயிற்றுப்பிரச்சனைன்னா, ஓமத்திரவம்ன்னு சின்னச்சின்ன, எளிதாகக்கிடைக்கிற பொருள்களாலேயே சுகப்படுத்திக்கொண்டோம் அந்தக்காலத்தில்.

ஆனா இப்ப,சின்ன விஷயத்துக்கெல்லாம், ஏகப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு, பின்னாடி வரப்போகும் பக்கவிளைவுகளின் தீவிரம் புரியாமலிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. பெரியவர்கள் சொன்னால் கேட்கக்கூடிய பொறுமையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் இன்ஸ்டன்ட் ரெமெடி வேணும். அதுமட்டும்தான் அவங்களுக்கு முக்கியம்.

ஆறேழு தும்மல் போடுறதுக்குள்ள அதிக சக்தியுள்ள ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட்டு, வெளியே வரவேண்டிய நீரை உள்ளேயே அழுத்தி, வயிற்றுப் பாதிப்பு மற்றும் இன்னபிற விஷயங்களையும் இலவச இணைப்பாக வரவழைத்துக்கொள்கிறார்கள்.

கொள்ளை விலைக்கு மருந்தையும் வாங்கி, சொல்லாமலே கூடவரும் பாதிப்புகளையும் அனுபவிப்பதைவிட, சரியான நேரத்தில் தூங்கி, சரியான உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு, அளவான உடற்பயிற்சியோடு அவசியமான ஆரோக்கியமுறைகளைக் கடைப்பிடிச்சா, அநாவசியப் பிரச்சனைகள் பலவற்றை நாம தவிர்க்கலாம்.

அதையும் மீறி, சீரியசான பிரச்சனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கலாம், தவறில்லை. ஆனா, சின்னச்சின்ன விஷயங்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம்கொடுத்து, ஏதேதோ மருந்துகளைச் சாப்பிட்டு எதிர்ப்பு சக்தியைக் கெடுத்துக்கொள்ளாமலிருப்பது ரொம்பரொம்ப முக்கியம்.

***************

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல் நினைவுகள்!

புத்தாண்டின் பூரிப்பையும் அள்ளிக்கொண்டு பொங்கல் வந்தாச்சு...ஊர்ல இருந்திருந்தா இந்நேரம் உட்காரவே நேரமிருந்திருக்காது. இங்கேயிருப்பதால் சாவகாசமா பதிவே போடமுடியுது :)

பொங்கலன்று, அமீரகத்திலிருந்து,பாதிக் காசில் நம்ம ஊருக்கு போன் பண்ணலாம்ன்னு இங்குள்ள தொலைத்தொடர்புத்துறை (Etisalat)அறிவித்ததைத் தவிர பொங்கலுக்கு வேற ஒண்ணும் ஸ்பெஷலா இல்லை. முன்னெல்லாம், ஊரிலிருக்கும்போது, மார்கழி பிறந்ததுமே பொங்கலுக்கான கோலாகலம் கூடிவிடும்.

வெள்ளையடிக்கிறது,வேண்டாத சாமான்களைக் கழிக்கிறது,பரணிலிருக்கிற பாத்திரங்களையெல்லாம் எடுத்துக் கழுவிக் காயவைக்கிறதுன்னு வேலைக்குப் பஞ்சமே இருக்காது.அத்தோடு பண்டிகைக் காலத்து சுவாரசியமும் கொஞ்சமும் குறையாம இருக்கும். புதுசுபுதுசா கோலம் போடுறதும், கலர்ப்பொடி வாங்குவதும், வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பிவைப்பதுமாக உற்சாகம் களைகட்டும்.

இப்பல்லாம் கேஸ் அடுப்பில், குக்கர் பொங்கல் வச்சாலும், அந்தநாட்களில், களிமண்ணில் பொங்கல் கட்டிசெய்து,காவிப்பட்டை கட்டிய முன் வாசலில் அடுப்புக்கூட்டி, பனை ஓலையை விறகாக்கிப் பொங்கல் வைத்த ஞாபகம் வராமலில்லை.

அடுப்புக் கட்டி செய்யக் களிமண் கொண்டுவந்ததும், கட்டி செய்யிறாங்களோ இல்லையோ, சின்னச்சின்னதா சட்டி பானையும், செப்பு சாமான்களும் செய்து காயவைத்த நினைவுகள் இன்னும் மனசில் காயாமலிருக்கிறது.

ஒதுங்கவைக்கிறேன்னு சாமான்களை உடைச்ச நினைவுகளையும், கழுவி வைக்கிறேன்னு,நிலைக்கண்ணாடியைக் கொண்டுபோய் வாய்க்கால் தண்ணீரில் அமிழ்த்திக் காலிபண்ணிய கதையையும் என்றைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் மிஞ்சும்.

அடுப்படி பிளாஸ்டிக் டப்பாக்களைக் கழுவுறேன்னு சொல்லி,நல்லபுள்ளையா வாங்கிட்டு வாய்க்காலுக்குப்போயி, டப்பாக்களைக் கப்பலாக்கிக் கூட்டாளிகளுடன் போட்டிபோட்டு விளையாடிய நினைவுகளெல்லாம் இப்போதும் மனசில் ஏக்கத்தை வரவழைக்கத்தான்செய்கிறது.

இப்பல்லாம் நம்ம ஊரில்கூட வருஷாவருஷம் வெள்ளையடிக்கிறதும்,வாசலில் காவிப்பட்டைபோட்டு அலங்கரிக்கிறதும், வெளிவாசலில் பொங்கல் வைக்கிறதும் குறைஞ்சிருந்தாலும், தமிழர் திருநாளான பொங்கலின் வருகை எல்லோருக்கும் பூரிப்பைத் தருவதாகத்தான் இருக்கிறது.

மஞ்சளும் மலர்களும் மணம்சேர்க்க, பொங்கலும் கரும்பும் சுவைகூட்ட நாம் எங்கேயிருந்தாலும் பொங்கல் திருநாளின் பெருமைகள் கொஞ்சமும் குறையாமல், வளர்ந்துவரும் சந்ததிக்கும் நம் பழமையான பாரம்பரியத்தை எடுத்துச்சொல்லும் கடமையுணர்வோடு தைத்திருநாளைக் கொண்டாடுவோம்.

மனம்நிறைந்த மகிழ்ச்சியுடன் அத்திருநாளைக் கொண்டாடிட,
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

********

திங்கள், 4 ஜனவரி, 2010

புர்ஜ் துபாய் கோலாகலம்!

துபாயில் எப்போது,என்ன நடந்தாலும் அது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும்வகையில்தான் அமைகிறது, அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாகயிருந்தாலும் சரி. நேற்றைய கோலாகலம் அதற்கெல்லாம் சிகரம்வைத்தாற்போல இருந்தது என்று சொன்னால் அது கொஞ்சம்கூட மிகையாகாது.

ஆவலுடன் எதிர்பார்த்த அனைவரின் எண்ணத்தையும் பூர்த்திசெய்வதுபோல, உலகின் மிக உயரமான புர்ஜ் துபாய் நேற்று துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களால் மிகவும் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

828 மீட்டர் உயரம், 160 தளங்கள்,1.5 பில்லியன் டாலர்கள் பொருட்செலவில், ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பினால் உண்டாக்கப்பட்ட பூமியின் மிக உயரமான பிரம்மாண்டம் இது.

ஆயிரக்கணக்கான வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு ஐந்துமணிக்கே விழா தொடங்கப்பட்டாலும், இரவு ஏழு மணிக்குமேல்தான் சிறப்பு விருந்தினர்கள் வருகைதர நிகழ்ச்சிகள் களைகட்டத் துவங்கியது.புர்ஜ் துபாயின் விளக்குகளை எரியவைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் மன்னர்.


 


அமீரகத்தின் தேசிய கீதத்துக்கு அழகாக வளைந்து நெளிந்து நடனமாடி மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தின அங்கிருந்த நீரூற்றுகள்.

 


 


அப்புறம், புர்ஜ் துபாய் ஒரு பாலைவன ரோஜாவின் வடிவத்தில் உருவாகி வளர்ந்த கதையை ஒலியும் ஒளியுமாக அங்கே அமைக்கப்பட்டிருந்த திரைகளில் காட்டினார்கள். புர்ஜ் துபாய் உருவான வரலாறைப் பெருமையுடன் பேசினார் மன்னர்.

கதை சொல்லச்சொல்ல நீரும் நெருப்பும் போட்டிபோட்டுக்கொள்ள நீரூற்றுகளும் மின்னும் லேசர் ஒளிஓவியமுமாக, கோலாகலம் தொடங்கியது.

 


 


 


 


 


 



பின்னர், சுற்றிலுமிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு அந்த இடத்தை வாணவேடிக்கைகள் அலங்கரிக்க மக்களின் ஆச்சர்யக் கூச்சலும் கரகோஷமும் விண்ணைப்பிளந்தது.நிஜமாகவே சொற்களுக்குள் அடங்காத அற்புதமான காட்சிகள்.புர்ஜ் துபாயின் அடிமுதல் நுனிவரை ஒளிப்பூக்கள் சிதற, விண்ணை வெளிச்சமாக்கியது வாணவேடிக்கை. கண்ணிமைக்க மறந்தது மக்கள்கூட்டம்.

 


 


 


கண்களை நிறைத்த காட்சிகளால் சொர்க்கம்போலத்தான் தெரிந்தது அந்த இடம்.

*********

புதன், 9 டிசம்பர், 2009

என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்?

பள்ளி செல்லும் காலத்திலிருந்தே இதுமாதிரி, நிறைய பயமுறுத்தல்களைப் பார்த்தாகிவிட்டது. "இன்னும் நாலே வருஷத்தில் நாமெல்லாம் அழிஞ்சுபோயிருவோம்.  நமக்கெல்லாம் முதுமையே வராமல் முடிவு வந்துடும்" என்றெல்லாம் பிள்ளைப்பருவத்தில் பேசித்திரிந்திருக்கிறோம்.

அதுபோல இப்போது இன்னுமொரு பயமுறுத்தல் 21/12 /2012 என்ற இலக்கில் மீண்டும் தொடங்கி மக்களை அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது, அதிலும் அதிகமாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பிள்ளைகளை.

நம்ம நாட்காட்டியில் நாளைக்கு என்ன கிழமையென்று தெரியாதவர்கள்கூட இப்போது மாயர்களின் நாட்காட்டியைப்பற்றி மாய்ந்துமாய்ந்து பேசுவது ஆச்சர்யம்தான்.

மாயர்கள், கிமு வில் தோன்றி, கி பி பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து, தென்னமெரிக்காவில் குறிப்பாகச் சொல்லப்போனால் குவாதிமாலா பகுதியில் வாழ்ந்த, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்த மனித இனமென்று சொல்கிறார்கள். இவர்கள் வேறுயாருமல்ல, தென்னகத்துத் தமிழினம்தான் என்றுகூட எங்கோ படித்ததாக நினைவு.

திடீரென்று இவர்களுடைய நாட்காட்டிக்கு என்ன ஆனதென்று உங்களுக்குக் கேள்வி எழலாம். மேலே சொல்லப்பட்ட மாயர்களின் நாட்காட்டி, கி.பி. 2012-ல் முடிவடைவது தான் இதற்கெல்லாம் காரணம்.

மாற்றங்கள் பலவற்றைப் பார்த்துப்பார்த்தே பழகிப்போனது நம் மனித இனம். மேடுகள் பள்ளமாகவும், வீடுகள் மணல்மேடுகளாகவும், ஆறு ஊராகவும், ஊரே ஆறாகவும், கடல்கரை குடியிருப்பாகவும், குடியிருப்புக்கள் கடலுக்குள்ளும் கால ஓட்டத்தில் மாறிப்போன கதையைக் கண்டும் கேட்டும் வளர்ந்திருக்கிறோம்.

ஆற்றில் வருகிற நீரெல்லாம் மணலெடுத்த பள்ளத்தில் நிரம்பிவிட, நீருக்குள் இருந்த பகுதியெல்லாம் இன்று மண்மேடாகி மரங்கள் மண்டிக்கிடப்பதை ஆற்றில்மணல் அள்ளும் பகுதியிலிருப்பவர்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள்.

அதுபோல,சின்ன வயசிலிருந்தே எங்க ஊர்ப்பக்கம் முதுமொழிமாதிரி ஒன்று சொல்வார்கள். "திருச்செந்தூர் அழிய, துவாரகாபுரி  தெரிய..." என்று. ஒருபுறம் பள்ளமாக மறுபுறம் உயரத்துக்கு வரும் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டியது. தென்கோடியிலிருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் போகும்போது நாட்டின் மேற்குக்கோடியிலிருக்கும் கடல்கொண்ட துவாரகை மீண்டும் வெளியே தென்படும் என்பது முன்னோர் கணக்கு.

இன்றைய நிலைமையில் உலக வெப்பமயமாதலை, வருமென்று சொல்கிற பேரழிவோடு சம்பந்தப்படுத்தி மக்கள் கொஞ்சம் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். கடலோர நகரங்கள் தங்கள் பரப்பளவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மைதான்.வந்துபோன சுனாமி இந்த அழிவிற்கான எச்சரிக்கை மணியை அடித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

வரும்காலத்திலும் இதுபோன்ற பெரும் சுனாமிகளையும், புதையவைக்கும் பூகம்பங்களையும், சுழன்றழிக்கும் சூறாவளிகளையும் உலகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

5125 வருடங்களைக் கொண்ட மாயர்களின் நாட்காட்டி வரும் 21/12/ 2012 அன்றுடன் முடிவுறுகிறது என்கிறார்கள். அந்தக் கணக்குப்படி, அந்த நாளுக்குப்பின் பூமிப்பந்துக்கு ஏதேனும் பேரழிவு நேரலாமென்ற அச்சமே மனிதர்களை ஆட்டிப்படைப்பதோடு, "2012" என்ற பெயரில் படமாகவும் வந்து இன்னும் பயமுறுத்தத்தொடங்கியுள்ளது.

இருக்கிற நாட்களை உற்சாகமாய்க் கழிக்கவிடாமல் மக்களைக் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்வதே இவர்களுக்கு வழக்கமாய்ப்போய்விட்டது. படத்தைப் பார்க்கலாம், படமெடுத்தவரின் கற்பனையை ரசிக்கலாம்...ஆனா, அதையே நினைச்சு பயந்துகிட்டிருந்தா அடுத்துவரும் நாளெல்லாம் அர்த்தமில்லாமல்போய்விடும்.

அதனால, இதில் நாம புத்தியோடு சிந்திச்சுப் புரிஞ்சுக்கவேண்டியது என்னன்னா, படம் பார்ப்பவருக்கு பயம் சேரும், படமெடுத்தவருக்குப் பணம் சேரும் என்ற எளிதான கணக்கைத்தான்.

சொல்லிக்கொண்டிருக்கிற கெடுவுக்கு இன்னுமிருப்பது கிட்டத்தட்ட 1105 நாட்கள்தான். அப்போது பார்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று. அதுவரைக்கும் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுட்டு, முடிஞ்சவரைக்கும் இயற்கையை சேதப்படுத்தாம, அவரவர் கடமையை ஒழுங்கா செய்துட்டு வருவோம்.

அதுக்கப்புறம் இந்த 2012 ஆம் வருடத்தில் என்ன நடந்துதுன்னு அடுத்த
2013 ல் விவரமா மீண்டும் பேசுவோம்!

******

சனி, 24 அக்டோபர், 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்) யாரை, யாரு, எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும் புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு. என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு. ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்) எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அது மாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப் பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து, பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு, மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம், அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு, நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக் கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு என்ற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில் (பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க... நன்றி :)

*******

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாசல்படி வாஸ்துவும், விளையாடும் கிரகங்களும்



"எம் புள்ளைக்குப் பொறுப்பில்லையா? என்ன பேச்சுப் பேசுற நீ?"

நீ நேத்து வந்தவ...அவனை வளர்த்து, ஆளாக்கி,படிக்க வச்சு,கல்யாணமும் கட்டிவச்ச
எங்களுக்குத்தெரியாதா அவனைப்பத்தி?

ஏதோ அவனைப் புடிச்ச கெட்ட நேரம்...ஏழரைச் சனி அவனை இப்படி ஆட்டிவைக்குது...அதோட நீ வந்து சேர்ந்த நேரம் வேற...தனக்குன்னு புள்ள குட்டின்னு வந்தா எல்லாம் தானா திருந்திடுவான். நீ அதுக்கான வழியைப்பாரு"

என்று ஆக்ரோஷமாகத் தன் மருமகளை அடக்கினாள் மாமியார் கமலம்மாள்.மனைவியின் கத்தலுக்கு மறுமொழி பேசாமல் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார் சண்முகம், கமலத்தின் கணவர்.

தெளிவாகப் புரிந்தது பூரணிக்கு... தன் கணவனின் செயல்களையெல்லாம் தன் மாமியார் நியாயப்படுத்துவதால்தான், அவன் தான் செய்வதைத் தவறென்று உணராமலே இருக்கிறான் என்று புரிந்ததால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள் அவள்.


அன்றைக்கு, காலையில் அவள் எழுந்து அறையைவிட்டு வெளியில்வந்தபோது, முன்வாசலில் மேஸ்திரியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் மாமியார்.

"என்னாச்சு மாமா?" என்று மாமனாரிடம் மெதுவாகக் கேட்டாள் பூரணி.

அவர், வாசல்ப் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு, மகனுக்காக ஏதோ வாஸ்து ஜோசியர்கிட்ட போனாளாம் உங்க அத்தை. அவர்,வாஸ்துப்படி,தலைவாசலுக்கு எதிரா பின்பக்கம் கதவு,ஜன்னல் இருந்தா அந்த வீட்ல காசு விரயமாகும்னு சொன்னாராம்.சும்மாவே ஆடுவா உங்க அத்தை... இதுபோதாதா அவளுக்கு, ஆளைக் கூப்பிட்டு வாசலையும் சன்னலையும் அடைக்கச்சொல்லிட்டிருக்கா...என்று மெதுவாகச் சொன்னார் அவர்.

ஆனா, இனிமே வீட்டுக் குப்பையை வெளியில்போடக்கூட வீட்டைச் சுத்திச்சுத்தி வெளியே போகணுமே...அதுவுமில்லாம வீட்டுக்குள்ள வெளிச்சமும் இருக்காது,காற்றோட்டமும் இருக்காதே என்றாள் பூரணி.

சரிதாம்மா...ஆனா, வாசலையும் ஜன்னலையும் அடைச்சிட்டா ஊதாரி மகன் உருப்பட்டுடுவான்னு நம்பிக்கை அவளுக்கு...இதில,நாம எது சொன்னாலும் எடுபடாது இப்போ என்று சொல்லிவிட்டு அகன்றார் அவர்.

கையில் காப்பியுடன் கிணற்றுத்தொட்டியில் உட்கார்ந்து பறவைகளின் குரலைக்கேட்கும் சுகம் இனிக் கிடைக்காது என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் பூரணி.அவளுக்கு மிகவும் பிடித்தமான,பின்வாசல் முல்லைக்கொடியும்,கிணற்றுத்தொட்டியும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு .

இடத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த வாரத்தில் வந்து வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப்போனார் மேஸ்திரி.

ஏதேதோ யோசித்தவாறே தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் பூரணி.

அன்று, காலையில் எழுந்து, தனக்கும் கணவனுக்குமாகக் காப்பியைக் கலந்தவள்,கணவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் குடிக்காமல் சென்று படுக்கையில் சரிந்தாள்.

என்னாச்சு பூரணி? ஏன் திரும்பவும் வந்து படுத்துட்டே? என்றான் மகேஷ்.

"தலை சுத்துதுங்க" என்று சொல்லிவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தாள் அவள்.

மகன் விஷயத்தைச் சொல்ல, மருமகளை வந்து எட்டிப்பார்த்தாள் கமலம்மாள்.

" எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம் என்று அம்மா சொல்ல, நீ மெதுவா குளிச்சுட்டு ரெடியாகு பூரணி...நான் ஆட்டோவுக்குச் சொல்லிட்டு வரேன் என்று புறப்பட்டான் மகேஷ்.

"நாள் அதிகமா ஆகலேங்கிறதால,இப்ப எதுவும் தெளிவாசொல்லமுடியல கமலாம்மா... இன்னும் ஒருவாரம் போகட்டும்.டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம். அதுவரைக்கும் இந்த மாத்திரையை வாங்கிக்குடுங்க" என்று சொல்லிச் சீட்டை நீட்டினாள் குடும்ப டாக்டர்.

"பாத்து வீட்டுக்குக் கூட்டிப்போம்மா" எனக்கு வேலையிருக்கு என்றுசொல்லிவிட்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்த நண்பனுடன் பைக்கில் புறப்பட்டான் மகேஷ். அங்கேயிங்கேன்னு சுத்திட்டு அர்த்தராத்திரியில வராம, நேரத்தோட வீட்டுக்கு வாப்பா என்றாள் கமலம்.தலையசைத்துவிட்டுச் சென்றான் மகேஷ்.

வீட்டுக்கு வந்தபோது, வாசலில் மேஸ்திரி கடப்பாறை மண்வெட்டியுடன் ஆட்கள் சகிதமாக வேலைக்கு வந்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த ரெண்டே நிமிஷத்தில் வயிற்றைப்பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள் பூரணி. பதறிப்போனாள் கமலம். ஓடிச்சென்று அளுடைய சிநேகிதியான அடுத்தவீட்டு மாமியை அழைத்து வந்தாள்.

வீட்டுக்குள் ஏதோ பதட்டம் என்றவுடன் வேலையைத் தொடங்காமல் தயங்கி நின்றார்கள் பணியாட்கள்.

என்னாச்சு கமலா? ஏன் இவால்லாம் வாசல்ல எமகிங்கராள் மாதிரி கடப்பாறையும் கம்புமா நிக்கறா என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் மாமி.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டவளாய், குமட்டறதுன்னு காலையில ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டாய். உடம்பு சூட்டோட வாயுவும் சேர்ந்து வயத்தை வலிக்கிறதுன்னு நினைக்கிறேன் என்று சொன்னவளாய்,

கமலா நீபோய் இவளுக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டா என்றுவிட்டு, பூரணியின் மாமனாரிடம் கேட்டு வேலையாட்கள் வந்த காரணத்தையும் தெரிந்துகொண்டாள்.

பாலைக் குடிச்சிட்டு, அடிவயித்தில விளக்கெண்ணெய் தடவிக்கிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு பூரணி.அப்புறமும் வலியிருந்தா ஆஸ்பத்திரிக்குப்போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கமலாவை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னாள் ஜானகி மாமி.

கமலா,எங்காத்து மாமாவைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய் என்றாள்.

திடீரென்று வந்த கேள்வியால் திகைத்த கமலம்," அவருக்கென்ன ஜானகி, அவருண்டு அவரோட வேலையுண்டுன்னு இருக்கார். உன்னையும் பிளைங்களையும் நல்லா வச்சிருக்கார்.ரொம்ப சிக்கனம்னு நீதான் குறைபட்டுக்குவே" என்றாள் கமலம்.

நம்ப ரெண்டுபேரோட வீடும் அடுத்தடுத்து ஒரேமாதிரி கட்டியதுதானே...வாஸ்து அமைப்பெல்லாம் ஒண்ணுபோலத்தானே இருக்குது. அப்ப எங்காத்துக்காரர் கஞ்சனாகவும், உன் பிள்ளை செலவாளியாவும் இருக்காங்கன்னா அதுக்கு வாஸ்து எப்படிப் பொறுப்பாகும்?

கிழக்குத்திசை வாசலும், மேற்குத்திசையில் பின்வாசலும் ஏகப்பட்ட ஜன்னல்களுமாய் எத்தனை அம்சமா கட்டியிருக்காங்க, அதைப்போய் மூடணும்ன்னு ஆளைக் கூட்டிவந்திருக்கியே என்றாள் மாமி.

படிக்கிற காலத்திலேயிருந்து மகன் கேட்கிறப்பல்லாம் காசைக்கொடுத்து நீ அவனை செலவாளியா வளத்துட்டே. சொந்தமா பிசினஸ் வச்சிக்கொடுத்து,போதாக்குறைக்கு சொந்தத்திலேயே ஒரு பொண்ணையும் கொண்டுவந்து கட்டி வச்சிட்டே. அவனுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாமப் போயிடுத்து. இனிமே, கொடுக்கிற கையைக் கொஞ்சம் சுருக்கிப்பார்...அவன் தன்னால சரியாயிடுவான். சம்பாதிச்சுட்டு வர்றதைவச்சு அவங்களோட செலவுகளைச் செய்யச்சொல். அவன் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா, எந்தக் கிரகமும் எதிர்க்க நிக்காது என்று சொல்லிச் சிரித்தாள் மாமி.

கமலம், மாமியின் வார்த்தைகளை ஆமோதித்ததுதான் தாமதம், வாசலில் சென்று வந்தவர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டு வேலைசெய்யவேண்டாமென்று அனுப்பிவைத்தார் சண்முகம். எங்கே புழக்கடை வாசலில், பூவாசக் காற்றோடு புத்தகம் படிக்கும் சந்தோஷம் கெட்டுப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு.

வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தாற்போலிருந்தது பூரணிக்கு.எழுந்து அமர்ந்தவள் ஜன்னல் வழியாகப் பின்பக்கம் பார்த்தாள்.மரக்கிளையில்,கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுக்குக் கொஞ்சிக்கொஞ்சி இரைகொடுத்துக்கொண்டிருந்தது குருவியொன்று.

உட்புறம் திரும்பினாள்... அங்கே,உரக்கப்பேசிக்கொண்டிருந்த மாமி அவள் கண்களுக்கு சாமியாகத் தெரிந்தாள்.

*********

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

துபாய் மால் (The Dubai Mall) தொடர்ச்சி - புதிய படங்களுடன்

ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்,

"இந்தப்பதிவில்" துபாய் மால் (The Dubai Mall)

பற்றிச் சொல்லியாச்சு.

இன்னும் சில புதிய பகுதிகளைப் பற்றி படங்களுடன் மீண்டும்...

துபாய் மால் ஆரம்பித்த புதிதில் சென்றபோது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்நடமாட்டம் இருந்தது. நேற்று மறுபடியும் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது, சும்மா சொல்லக்கூடாது...நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பைவிடக் கடைகளும் அதிகமாக, கூட்டமும் அதிகமாகத்தான் இருந்தது.
ரமதான் விடுமுறையும் ஆரம்பமாகியிருப்பதால் கடைகளெல்லாம் விதவிதமான விளம்பரங்களோடு களைகட்டியிருந்தன.





கடைகளைத் தவிர்த்து காட்சிக்கு விருந்தாகும் விஷயங்களும் நிறைய இருக்கத்தான் செய்யுது. பரந்து விரிந்த இடவசதி. நேர்த்தியான அலங்காரங்கள்,ஆங்காங்கே உட்கார அழகிய இருக்கைகள்,உணவுக்கூடத்தருகே குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி என்று எல்லாமே அழகாக அமைத்திருக்கிறார்கள்.



சுத்தமாய் மின்னும் தரைப்பரப்பும் இத்தனை இடவசதியும் இருந்தா நம்ம ஊரில் கட்டுச்சோறு கொண்டுவந்து குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொல்லிச் சிரித்தார் ஒருவர் :)

இதோ,இரைச்சலுடன் ஜொலிக்கிற நீரருவி, குதிக்கும் மனிதச் சிற்பங்களுடன்...








மையப்பகுதியில் மின்னும் நட்சத்திர அலங்காரம்...






நிறம் மாறும் தரைப்பகுதி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



 


நிஜமோ என எண்ணவைத்த மலர்க் குவியல்கள்...


 


 


இந்தமுறையும் எல்லாத் தளங்களையும் முழுவதுமாய்ப் பார்க்கமுடியவில்லை. சென்றமுறை பார்க்காமல்விட்ட பகுதிகளை மட்டுமே பார்த்தோம். ஆனாலும் அதுக்கே நாலுமணி நேரம் ஆகிப்போச்சு.ஏன்னா, மாலின் (mall)பரப்பளவு அத்தனை பெரியது. இன்னும் பார்க்காமல் விட்ட பகுதிகளெல்லாம் இனிவரும் அடுத்தபதிவில்...

***********

புதன், 1 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (1)

வருஷா வருஷம் விடுமுறை வந்தாலும், பார்த்த இடங்களையே பார்த்துவிட்டுச் செல்வது அலுப்பாய்த் தோன்ற, சட்டென்று முடிவெடுத்து, ஆந்திர மாநிலத்துப்பக்கம் பார்த்துவரலாமென்று முடிவெடுத்தோம். ஆந்திராவில் திருப்பதியைத் தாண்டியறியாத எனக்கு இந்த ஆந்திரப் பயணம் மிகவும் ஆர்வமான விஷயமாகவே இருந்தது.

சென்னையிலிருந்து 494 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆதோனி நகரத்தை நோக்கி, சென்னையிலிருந்து இரவு புறப்படும் மும்பை ரயிலில் புறப்பட்டோம். சுந்தரத் தெலுங்கின் வாசனையும், சுவையில் காரமே மிஞ்சிய ரயில் பயண உணவுகளையும் ரசித்தபடி பயணித்தோம். வழியெங்கும் தென்பட்ட இயற்கை விழிகளைக் குளிர்வித்தது.







வழியில் வேடிக்கை காட்டிய இவரையும் பாருங்க...



காலை பத்துமணியளவில் ஆதோனியை அடைந்தோம். இளந்தூறலுடன் இனிதாக வரவேற்றது
ஆதோனி நகரம். ஆதோனியில் வரவேற்ற இயற்கையின் நுழைவாயில்...



இரண்டே நாட்களில் புறப்படவேண்டுமே என்று போன உடனே வருத்தம்தான் வந்தது. எங்கே பார்த்தாலும் அழகு. கொடிகள் பறக்கும் அழகிய சிறு ஆலயங்கள். நிறுத்திவைத்தாற்போல பாறைகள் நிற்கும் சிறு சிறு குன்றுகள். படர்ந்திருக்கும் பசுமையென்று மனசு அழகில் லயித்துத்தான் போனது. அமைதி குடிகொண்டிருந்த மந்திராலய மஹானின் ஆலயத்தையும் ஆங்காங்கே நீர் தெரிந்த துங்கபத்ரா நதியையும் கூட இந்தப்பயணத்தில் பார்த்தோம்.





இனி,ஆதோனி நகரத்தின் வரலாறு கொஞ்சம்...

பதினாறாம் நூற்றாண்டுவரை யாதவகிரியாக இருந்த ஆதோனி நகரம் முகலாயர்களின் பிடியிலிருந்தபோது ஆதவனியாகி தற்போது ஆதோனி என்றழைக்கப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருந்த இந்த நகரம், ஆங்கிலேய ஆட்சியில் சென்னை மாகாணத்தின் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்டதாயிருந்தது. தென்னகத்தின் தானியச் சந்தையாகவும் விளங்கியிருக்கிறது.

மலைகள் சூழ அழகுடன் விளங்கும் இன்றைய ஆதோனி நகரம், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட பருத்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகளுடன் இரண்டாவது மும்பை என மக்களால் அழைக்கப்படுகிறது. மலையில் அமைந்திருக்கும் ஹனுமான் கோயில் இங்கே மிக விசேஷமானது. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் 'ராம் ஜல்' என அழைக்கப்படும் இயற்கை நீர்த்தேக்கமே இங்குள்ள மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. துங்கபத்ரா நதியிலிருந்துவரும் நீரே இதற்கு ஆதாரமாகும்.

இங்குள்ள மக்களின் வழிபாட்டில் ராமபிரானும், ஆஞ்சனேயரும் முக்கிய இடம்பிடிக்கிறார்கள்.எங்குபார்த்தாலும் ராமபக்த ஹனுமான் கண்ணில்படுகிறார். முகம்மதியர்களும் இங்கே அதிக அளவில் வசிக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி ஜாமியா மசூதி மற்றும் பல மசூதிகளும் இங்கே உள்ளது.

பசுமையின் போர்வையில் மசூதி ஒன்று...



இதோ, மலையிலிருக்கும் ஹனுமான் ஆலயம்.
மலைக்குச் சென்று பார்க்க நேரமில்லாததால் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்த மலைக்கோயிலை புகைப்படக்கருவிமூலம்தான் பார்க்க நேர்ந்தது...



அருகிலிருந்த அழகிய ஆஞ்சனேயர் ஆலயம் ஒன்று...



குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று நம் தமிழ்நாட்டில் நாம் சொல்லுவோம்.
ஆந்திரமாநிலத்தில் மலையெல்லாம் கடவுளென்று மக்களெல்லாம் சொன்னார்கள்.மலையெல்லாம் மகேசனாக, இயற்கையாய் அமைந்த அழகு நந்தி...



நந்தியின் வடிவம் கொஞ்சம் தொலைவிலிருந்து...



இந்தப் பாறையிலும் இறைவடிவம் உண்டென்று சொன்னார்கள்.எனக்குத் தெரிந்தது. உங்களுக்கும் தெரியுதான்னு பாருங்க...



முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு சான்றாக அவர்கள் காலத்துக் கல்கோட்டையின் மிச்சம் இன்னும் அங்குள்ள மலைமீது காணப்படுகிறது.



அழகு நிறைந்த ஆதோனி மற்றும் ஆந்திரச் சுற்றுலாவின் தொடர்ச்சி இனி அடுத்த பகுதியில்...