tamil story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2018

வடக்குவீட்டு சாமி!


பூசை முடிந்து பிரசாதம் கொடுத்த கையோடு,அம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு ஆரம்பமானது. கோயில் திடலுக்குக் கூட்டம்கூட்டமாக வந்தவர்களில், ஒருசிலர் விரிப்பிலும் மற்றவர்கள் குளிர்ந்த மணலிலும் உட்கார்ந்து, வில்லுப்பாட்டுக் கேட்கிற பாவனையில், கோயிலுக்கு வருகிற போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஊரே கோயிலில் கூடிக்கிடந்தாலும், துரைப்பாண்டிக்கு மட்டும் கடையே கோயில், கல்லாப்பெட்டியே தெய்வமாக இருந்தது. காலையிலிருந்து கடை வேலையாக அங்குமிங்கும் அலைந்ததும், சாயங்காலம்,கடைக்கு வந்திருந்த சின்னவயசுக் கூட்டாளிகள் சிலருடன் நுங்கு போட்டுக்குடித்த மாலைப் பதநீருமாகச் சேர்ந்து, துரைப்பாண்டிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடையைச் சாத்தி, வாசலில் கற்பூரம் ஏற்றிவைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடந்தார் அவர். மனைவி செல்லக்கனியும், மகள் வனஜாவும் வில்லுப்பாட்டு முடிந்ததும்தான் வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தார்கள். பரீட்சையிருப்பதால் கொடைக்கு வரமுடியாதென்று, காரைக்குடியில் இஞ்சினீயரிங் படித்துக்கொண்டிருந்த மகன் கணேசன் சொல்லிவிட, துரைப்பாண்டிக்கும் அவர் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம்.

ஊர்க்கோடியில், சுற்றிலும் தென்னத்தோப்புக்கு மத்தியில் தன்னந்தனியாய் இருந்தது துரைப்பாண்டியின் பண்ணை வீடு. பத்து ஏக்கர் தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒற்றையாய் வீடு. வீட்டைப்பூட்டி, அடுப்படிக் கதவுக்குப் பின்னாலிருந்த ஆணியில் சாவியை மாட்டிவிட்டுப் போவதாக மனைவி சொன்னது நினைவிருந்தாலும்,கதவைத் திறக்க மனசில்லாமல், திண்ணையில் கிடந்த நார்க்கட்டிலில் படுத்தார் துரைப்பாண்டி. கோயிலில், வனவாசம் போன பாண்டவர்களைப் பற்றி, வில்லுப்பாட்டுக்காரர் பாடியது ஒலிபெருக்கியில் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு, அடிவயிறு கனத்தது போலிருக்க, எழுந்து வடக்குவீட்டுக்குப் பின்னால், வேலிப்பக்கம் போய்விட்டு வந்தார்.

வடக்குவீடு, புதிதாய்க் கட்டிய மேலவீட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்தது. அது, துரைப்பாண்டியின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு. பத்துக்குப் பதினைந்தில் ஒற்றை அறையும் முற்றத்துத் திண்ணையும் மட்டுமேயுள்ளது.சின்னதாக இருந்தாலும் உத்திரக் கட்டைகளும் முன்வாசல் கதவும் சுத்தத்தேக்கு என்று அப்பா பெருமையாகச் சொல்லுவார். அம்மா இருக்கிற வரைக்கும் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். அப்புறம், இன்னும் கொஞ்சம் வசதிக்காகக் கட்டியதுதான் மேலவீடு. புதுவீடு கட்டியதும் வடக்குவீடு, வயலிலிருந்து வரும் நெல்லையும், தோட்டத்துத் தேங்காய்களையும் சேமித்து வைக்கிற இடமாகிப்போனது. இப்பவும் பெற்றவர்களின் ஞாபகம் வரும்போதெல்லாம் வடக்குவீட்டுத் திண்ணையில்போய் வெறுந்தரையில் கொஞ்சநேரம் படுத்திருப்பார் துரைப்பாண்டி.

பழைய நினைவுகளுடன் பாதையில் நடந்தவர், அப்போதுதான் கவனித்தார். வடக்குவீட்டுத் திண்ணையில் எப்பவும் எரிகிற குண்டு பல்பு அன்றைக்கு ஏனோ எரியவில்லை. அனிச்சையாய் அவரது பார்வை கதவுப்பக்கம்போக, கதவின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் கசிந்தது தெரிந்தது. சந்தேகமாய்ப் பார்த்தார் துரைப்பாண்டி. உள்ள யாரு லைட்டைப் போட்டிருப்பாங்க என்ற கேள்வியுடன், திண்ணைப் படியேறி, கதவில் கைவைத்தார்.

கதவு, உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திக்கென்றிருந்தது அவருக்கு. இந்நேரத்தில் இங்கே யார் வந்திருப்பார்கள்? எவனாவது, திருட வந்திருப்பானோ என்ற சந்தேகத்தோடு, வலப்பக்கத்து ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தார். அதுவும் உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெல்ல வந்து, மீண்டும் கதவு இடைவெளியில் எட்டிப்பார்த்தார் துரைப்பாண்டி.

உள்ளே, அரைக்கை சட்டையும்,கைலியுமாகக் கதவுக்கு முதுகுகாட்டி யாரோ நின்றுகொண்டிருக்க, அவன் கையில் புகைந்துகொண்டிருந்தது சிகரெட். ஒருசில வினாடிகளில், அவன் மிகமெதுவாக, யாருடனோ பேசியபடித் திரும்பினான். திரும்பிய அவன் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார் துரைப்பாண்டி. தேரிக்காட்டு ஏலத் தகறாரில் அவருடன் பகைத்துக்கொண்ட பக்கத்துத்தெரு பால்த்துரையின் மகன் தாமோதரன். அப்பனைப்போலவே இவனும் சண்டை சச்சரவுக்குப் பயப்படாதவன். உள்ளே, அவனுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்களென்று தோன்றியது அவருக்கு.

அவன் எதுக்காக இந்த நேரத்தில் இங்கே வந்தான்? நிச்சயம்,ஏதாவது கெடுதல் செய்வதற்காகத்தானிருக்குமென்று தோன்றியது அவருக்கு. ஒருவேளை, பழைய பகையை மனதில்வைத்து, தன்னை அடித்துப்போட வந்திருப்பானோ? அல்லது, ஊரே கோயிலில் இருக்கும்போது, உள்ளே நுழைந்து, கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருப்பானோ என்று பலவாறாய் எண்ணியபடி, உள்ளே தாளிட்டிருந்த வடக்குவீட்டுக் கதவைச் சத்தமின்றி வெளியில் தாளிட்டார் துரைப்பாண்டி. வில்லுப்பாட்டுச் சத்தத்தில், வெளியில் பூட்டியது அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

மேலவீட்டுப்பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் வாசல்கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. உள்ளறையிலிருந்த அலமாரி மட்டும் திறந்திருந்தது. மற்றபடி என்னவெல்லாம் இல்லையென்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. "பாவிப்பய, பாட்டுச்சத்தத்துல, வீட்டைக் கொள்ளையடிக்கலாம்னு வந்திருக்கிறானென்று நினைத்து ஆத்திரத்துடன் வெளியேவந்தார். மறுபடிபோய், வடக்குவீட்டுக் கதவைப் பூட்டு வைத்துப் பூட்டினார். அந்தச் சத்தம் உள்ளே கேட்டிருக்கவேண்டும். ஒருசில வினாடிகளில், உள்ளிருந்து 'யாரு'ன்னு கேட்டபடியே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர். பின்னால், ஜன்னல் திறக்கிற சத்தம் கேட்டது. எவ்வளவு தைரியமிருந்தா என்னோட வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருப்பானுங்க என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது அவருக்கு. "இருங்கடா, இன்னிக்கு ஊரைக்கூட்டி உங்க திருட்டுத்தனத்தை எல்லாருக்கும் தெரியவச்சிட்டுத்தான் மறுவேலை" என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, காம்பவுண்ட் கேட்டைத் தாண்டித் தெருவில் இறங்கி   நடந்தார்.

கதவு தட்டப்படுவது இப்போது காதில் விழவில்லை. எட்டிநடந்தார் அவர். அதற்குள் குப்பென்று ஒரு வெளிச்சம் வரத் திரும்பிப்பார்த்தார். வடக்கு வீட்டின் ஜன்னல் பக்கத்திலிருந்து, நெருப்பின் ஜுவாலை தெரிந்தது. திக்கென்று அதிர்ந்தார் அவர். வடக்கு வீட்டுக்குள், டிராக்டருக்கு வாங்கிவைத்த டீசல், ஜெனெரேட்டருக்கு வாங்கிவைத்த பெட்ரோல், காலிக் கோணிகளென்று எரிவதற்குத் தோதான ஏகப்பட்டபொருட்கள் இருந்தது நினைவுவந்தது அவருக்கு. விக்கித்து நின்றார். சட்டென்று சமாளித்துக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறக்க எத்தனிக்க, அதற்குள், கெட்டிக்கதவோடு, வடக்குவீடு மொத்தமாகப் பற்றி எரியத் தொடங்கியது.

அடப்பாவமே, அவசரப்பட்டுட்டானே, அவமானத்துக்குப் பயப்பட்டு அவனுக்கே தீ வச்சுக்கிட்டானோ? அவனோட, உள்ளே இன்னும் யாரெல்லாம் இருந்திருப்பார்களோ என்ற கேள்விகளோடு, இப்போ யாரைக்கூப்பிடுவது? எப்படிப்போய்ச் சொல்வது? யாரிடம் சொன்னாலும் நான்தான் பற்றவைத்தேனென்று நினைப்பார்களோ என்று யோசித்து, மொத்தமாய் அதிர்ந்துபோன அவர், சத்தமில்லாமல் அங்கிருந்து வேகவேகமாய் வெளியேறி நடந்தார்.

வழியில் போகும்போதே, கோயிலில் வேட்டுச்சத்தம் கேட்டது. மண்டபத்தில்போய் உட்கார்ந்தார் அவர். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவரை மேலும் அதிரவைக்க, அங்கே, பாண்டவர்களைத் தங்கவைத்த அரக்குவீடு பற்றியெரிந்த கதையைப் பாடிக்கொண்டிருந்தார் பாட்டுக்காரர். அதற்குள், கோயிலில்,நள்ளிரவு பூஜைக்கான மணியொலித்தது. வில்லுப்பாட்டை நிறுத்திவிட்டு, எல்லாரும் பூஜையைப் பார்க்க எழுந்துபோனார்கள்.

பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே, "ஐயோ,துரையண்ணன் வீடு தீப்பிடிச்சு எரியுது"ன்னு யாரோ சத்தமாய்க் குரல்கொடுக்க, மொத்தக் கூட்டமும் கலைந்து ஓடியது. "ஐயையோ..." என்று குரல்கொடுத்தபடி செல்லக்கனி ஓட, அவளுக்குப் பின்னால் துரைப்பாண்டியும் ஒன்றுமறியாதவர்போல ஓடிப்போனார். ஆளாளுக்கு, தோட்டத்துப் பம்புசெட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அணைப்பதற்குள், வடக்குவீடு மொத்தமாய் எரிந்துபோயிருந்தது.

பத்துமூடை நெல்லு, மூணு மூடை கடலை, ஐநூறு அறுநூறு தேங்கா, என் மாமியார் புழங்கின அருமையான தேக்குமர பீரோ அத்தனையும் போச்சே என்று அலறினாள் செல்லக்கனி. அதிர்ந்துபோனவராய் மேலவீட்டுத் திண்ணையில் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார் துரைப்பாண்டி. எரிந்ததை அணைத்துவிட்டு, அவரவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டது ஊர். அழுதுகொண்டிருந்த செல்லக்கனி அப்போதுதான் கவனித்தாள், இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், தன் வயசுப் பெண்பிள்ளைகளோடு உட்கார்ந்து வில்லுப்பாட்டு கேட்கப்போகிறேனென்று சொல்லிப்போன வனஜா, இதுவரைக்கும் வீடு வரவில்லையென்று.

கண்ணைத் துடைத்துக்கொண்டவளுக்கு மனதில் என்னென்னவோ பயம் கிளம்ப, மகளைப் பாத்தீங்களா என்று கணவரிடம் கேட்டாள். அவர் இல்லையென்று தலையசைக்க, மறுபடியும் கோயில் பக்கம் ஓடினாள் அவள். வனஜாவைக் காணவில்லை. அவளுடைய தோழிப்பெண்கள் ஒவ்வொருவர் வீடாய்ப் போய்த்தேடினாள். யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அதிர்ந்துபோனாள் அவள். வீடு பற்றியெறிந்த துயரம் சட்டென்று தொலைந்துபோக,பொட்டப்புள்ளயப்போயி எங்கேன்னு தேடுவேன் என்று தலையைப் பற்றி அழுதபடி வீட்டைநோக்கி நடந்தாள் அவள்.

அதற்குள், ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேசிக்கொண்டார்கள், வனஜாவும் பால்த்துரை மகன் தாமோதரனும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார்களென்று. மகன் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாய்மாலக்காரி, என்ன பொடிபோட்டாளோ என் புள்ளையை மயக்கிக் கூட்டிட்டுப்போயிட்டா... அவ எங்கபோனாலும் வெளங்கமாட்டா. அவ பண்ணின காரியத்துக்குத்தான், வேட்டு நெருப்பால வீட்டை எரிச்சிட்டாரு சாமி என்று, வாசலில்வந்து மண்ணைவாரித் தூற்றிவிட்டுப்போனாள் தாமோதரனின் தாய்.

கேட்டுக்கொண்டிருந்த துரைப்பாண்டி, நெடுமரமாய்ச் சரிந்தார். சட்டென்று வடக்குவீடு பற்றிக்கொண்டதன் மர்மம் விளங்கிப்போனது அவருக்கு. நடந்ததெல்லாம் கேள்விப்பட்டு, ஊரிலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தான் கணேசன். "அந்த கழுத, செத்துப்போச்சுதுன்னு நினைச்சுக்கோங்கப்பா. எங்களுக்கு நீங்க வேணும். நீங்க தைரியமாயிருங்கப்பா"ன்னு கையைப் பிடித்துக்கொண்டு அழுதான் அவன்.

துரைப்பாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. மகள் வனஜாவின்மேல் ஏகப்பட்ட பாசம் அவருக்கு. குலதெய்வம் வனபத்ரகாளியின் பெயரையொட்டி அவரது அம்மா, ஆசையாய்ப் பேத்திக்கு வைத்த பெயர். பக்தியில்லையென்றாலும் அழகாயிருந்ததென்பதால் அந்தப்பெயர் பிடித்துப்போனது அவருக்கு. மகளை வாய்நிறையக் கூப்பிடுவார் அவர்.

அந்த மகள், அப்பாவின் முன்னால் அசிங்கப்பட்டு நிற்க அஞ்சி, அவளையும் அவளோடு சேர்ந்தவனையும் அனலில் பொசுக்கிக்கொண்டாளென்பதை நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது அவருக்கு. உடைத்துச் சொல்லிவிட்டால் ரெண்டு குடும்பத்து நிம்மதியும் போய்விடும் என்பதோடு, செய்யாத கொலைப்பழியையும் சுமக்கவேண்டிவருமோவென்று அச்சமும் தோன்றியது அவருக்கு.

கணவனின் உள்ளத்துத் தவிப்பினை உணராதவளாக, "கவலைப்படாதீங்க...பொம்பளப்புள்ளமேல இம்புட்டுப்பாசம் வைக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். என்னிக்கிருந்தாலும் ஒருநாள், அது கல்யாணம் கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். ஆனா, இன்னிக்கி, நம்மளை அவமானப்படுத்தி அழவச்சிட்டுப் போயிருக்கு. பட்டுத் திருந்தினபிறகு, அந்த ரெண்டு கழுதையும் நம்ம கால்ல வந்து விழத்தான் போகுது. நீங்க கவலைப்படாதீங்க..." என்று அவரது கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள் அவர் மனைவி.

அவள் சொல்லச்சொல்ல, இன்னுங்கொஞ்சம் அழுகைவந்தது அவருக்கு. மகள், ஓடிப்போகவில்லை, ஒரேயடியாய்ப் போய்விட்டாளென்ற உண்மை தெரிந்தால், செல்லக்கனி என்ன ஆவாள் என்று நினைக்க நினைக்க இற்றுப்போனது அவர் மனசு.

மொட்டைக் கட்டிடமாய் நின்றது வடக்குவீடு. அதைப் பார்க்கப்பார்க்க ஆறவில்லை அவருக்கு. எரிந்து கிடந்தவற்றின் மிச்சத்தை மனைவி தடுக்கத்தடுக்க தானே ஒற்றை ஆளாய்ச் சுத்தம் செய்தார் துரைப்பாண்டி. சுற்றி நின்ற சுவரை, மொத்தமாய்த் தட்டிவிட்டு, கெட்டித்தூண்களும், நடுவில் ஒற்றைப் பீடமுமாய் அங்கே ஒரு கோயில் கட்டச்சொன்னார்.

நடப்பது என்னவென்று புரியாமல் நின்ற மனைவியிடம், "இதுவரைக்கும் நடந்ததெல்லாம் குலதெய்வக் குத்தம் கனி...நம்ம சாமி, வனபத்ரகாளியை நெனைச்சு, இனி இங்க நித்தமும் வெளக்கேத்தணும்" என்றார் அவர். சாமியுமாகாது கோயிலுமாகாது என்றிருந்த கணவனின் அந்தத் திடீர் பக்திக்குக் காரணம் புரியாவிட்டாலும், இப்பவாவது புத்தி வந்ததேயென்ற திருப்தியுடன், சம்மதமாய்த் தலையாட்டினாள் செல்லக்கனி.


ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

யார் அம்மா?

"அம்மா....இவளப் பாரும்மா...கலரிங் புக்கைக் குடுக்கமாட்டேங்கறா..."என்று கத்தினான் சின்னவன் சதீஷ்

"அடியேய், உனக்கும் அவனுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்டி, அவன்கிட்ட போயி மல்லுக்கட்டறியே என்றாள் கோமதி", பன்னிரண்டு வயதான சாருவின் அம்மா.

"அஞ்சு வயசு வித்தியாசம்...அதுக்கு நான் என்னம்மா பண்ணட்டும்? அஞ்சு வயசு சின்னவங்கிறதுக்காக இந்தப் பையன் பண்ற தொல்லையெல்லாம் தாங்கிக்கணுமா நான்?" என்று அழத் தயாரானாள் சாரு.

"அதென்னடி, இந்தப்பையன், அந்தப்பையன்னு பேசறே... அவன் உன் தம்பிடீ..." என்றவளிடம்,

"இதையே திருப்பி அவனுக்கும் சொல்லிக்குடும்மா... அவ உன்னோட அக்காடா..."ன்னு என்றாள் சாரு.

"அவனுக்கும் உன்னோட வயசு வந்தா அவனும் புரிஞ்சுக்குவான். கொஞ்சநாள் பொறுத்துக்கோடீ..."

"ஓ...அவனுக்கும் என்னோட வயசு வரணும்னா இன்னும் அஞ்சு வருஷம்...அதுவரைக்கும் இந்தக் கழுதை பண்ணுறதையெல்லாம் நான் தாங்கிக்கணும். ஆனா, அப்பவும் அவன் என்னோட அஞ்சு வயசு சின்னவனா தானே இருப்பான். அதுமட்டுமில்லாம, இதே வசனத்தை நீயும் மறக்கமாட்டியே..." என்று சாரு பதில் சொல்ல, அவளிடம்

"பெரிய பொண்னுன்னா கொஞ்சம் பொறுத்துத்தான் போகணும்டா குட்டி" என்றாள் கோமதி.

"ஆமாம்மா, நீ பெரியவ... நீ பெரியவன்னு சொல்லியே என்னோட சின்னவயசு  ஆசையெல்லாம் மழுங்கடிச்சிட்டே... ஏம்மா நீ என்ன மொதல்ல பெத்தே?  இவன் பொறந்த அன்னிலேருந்து நான் நானா இல்லை... அவனுக்கு அக்காவாதான் இருக்கேன்.

அவன் பொறந்ததுலே இருந்து, ஒரு அஞ்சு வயசுப் பொண்ணுக்குரிய என்னோட எதிர்பார்ப்புகளை நீங்க யாரும் புரிஞ்சுக்கலை. ஆனா, ஒரு அக்காவா, மூத்த பொண்ணா உங்க எதிர்பார்ப்புகளைத்தான் நான் நிறைவேத்தியிருக்கேன்.

அவனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டுப் போணும். பஸ்ல இருந்து இறக்கி வகுப்புல கொண்டு விடணும்.  பஸ்ல போகும்போது தூங்கிட்டா எழுப்பி விடணும். வாந்தி எடுத்தா துடைச்சு விடணும். லஞ்ச் டைம்ல, அவனைச் சாப்பிட வைக்கணும். அவன் க்ளாஸில எதையாச்சு தொலைச்சிட்டா தேடிக் குடுக்கணும். இவன் கூட யாராச்சும் சண்டை போட்டா விலக்கி விடணும். திரும்பி வரும்போது பஸ்ஸுக்கு வராம விளையாடிட்டு இருக்கிறவனைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து பஸ்ல உக்கார வைக்கணும். ஆக, இவனையே கவனிச்சு கவனிச்சு, எனக்கு என்னோட வேலையைக் கூடக் கவனிக்கமுடியாமப் போகுது"  என்று சாரு அடுக்கிக்கொண்டே போக,

"ஏய், என்ன இது... கொஞ்சம் விட்டா பெரியமனுஷி மாதிரி பேசிட்டே போறே..." என்றாள் கோமதி.

"ம்ம்...ஆமாம்மா...பெரியவ மாதிரி நடந்துக்கணும்...ஆனா, பேசக்கூடாது...அப்டித்தானே?

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. நான் நாலாவது படிச்சப்ப அரைப் பரிட்சையில கணக்குல கம்மி மார்க்ன்னு என்னைக் கரண்டிக் கணையால அடிச்சே ஞாபகம் இருக்கா? உனக்கு எங்கே இருக்கப்போகுது... இன்னமும் பாரு... அந்தத் தழும்பு என் கால்லயும் மனசுலயும் அப்டியே இருக்கு. ஆனா, அந்தப் பரிட்சைக்கு முந்தினநாள் என்ன நடந்திச்சுன்னு ஞாபகம் இருக்கா? இருக்காது உனக்கு.

அன்னிக்கி இந்தப் பையன், அதான் உன்னோட அருமை மகன், அப்பாவோட சைக்கிள்ல ஏறி, கீழே விடுந்து அடிபட்டுக்கிட்டான். அவனைத் தூக்கிட்டு நீங்கல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடுனீங்க... என்னை அடுத்த வீட்டுல விட்டுட்டு... நான் அங்கேயிருந்து அழுது அழுது எதுவுமே படிக்கல. ஸோ, நான் குறைஞ்ச மார்க் வாங்கக் காரணம் நீங்க... ஆனா, அடி வாங்கினது நான். 

இது மட்டுமா, இன்னும் பாட்டி வீட்டுக்குப் போனப்ப அவன் பைப் தொட்டியில விழுந்து அடிபட்டுக்கிட்டான். ஓடிவந்த நீ, அப்பவும் என்னைத்தான் திட்டினே... நான் ஏன் அவனைக் கவனிச்சுக்கலேன்னு...

நீயே நினைச்சுப் பாரும்மா. நான் சின்னவளா இருந்தப்ப எனக்கு அம்மாவா இருந்த மாதிரி, தம்பிக்கும் நீதானே அம்மா? அப்போ, நீ ஏன் அவனை கவனிச்சுக்கக்கூடாது? உன்னோட பொறுப்பையெல்லாம் என் மேல இறக்கி வச்சிட்டமாதிரி, அவனை  நான் ஏன் கவனிச்சுக்கணும்?  அவன் செய்யிறதெல்லாம் நான் ஏன் பொறுத்துக்கணும்? அவனால நான் ஏன் திட்டும் அடியும் வாங்கி அழணும்?

போனவாரம் கூட இப்படித்தான்... என்று அவள் இன்னொரு சம்பவத்துக்கு  நீதி கேட்க ஆயத்தமாக, அவளை ஓடிச்சென்று இறுக அணைத்துக்கொண்டாள் கோமதி. அம்மாவின் அணைப்பில் குலுங்கிக்குலுங்கி அழுதுவிட்டாள் குழந்தை.

 அழுகிற அந்தக் குழந்தையின் உடல் குலுங்கக் குலுங்க, கோமதியின் மனசில் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்தது. சின்னச் சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியம், இந்தக் குழந்தையின் மனசில் எத்தனை பரிதவிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கையில் அவளுக்கு உடம்பு நடுங்கியது.

மகளின் மனபாரத்தைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக, "அம்மாவை மன்னிச்சுக்கடா குட்டி" என்று சொல்லி, அழுகிற மகளின் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாள்.  இனி, அவனுக்கும் அம்மாவா உங்க ரெண்டு பேரையும் நானே கவனிச்சிக்கிறேன் என்று சொன்னபோது, அவள் கண்களும் நிறைந்திருந்தது.

                                                          *******


சனி, 8 பிப்ரவரி, 2014

பாசக்காரி சிறுகதை



நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.

சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.

அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.

ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.

எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக்  காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி  உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.

முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.

பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.

அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.

அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.

சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை  நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.

பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம்  நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.

அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும்  அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின்  ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.  ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.

சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை.  பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.

இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த  தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.

எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு  சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .

உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.



புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

திங்கள், 7 நவம்பர், 2011

சிக்கிலிங்கிராமம்

திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கணேசனுக்கு விழிப்பு வந்தது. ரயில் நின்ற கையோடு, கடகடவென்று அத்தனைபேரும் இறங்கிப்போய்விட, கம்பார்ட்மெண்ட்டில் அவர்மட்டுமே இருந்தார். கையில் சுருட்டிவைத்திருந்த மஞ்சள் பையைக் கீழே வைத்துவிட்டுத் தலையை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டார். முன்னெல்லாம்,வாரநாட்களில் ஸ்ரீவைகுண்டத்தில் வேலைபார்த்துவிட்டு, வார இறுதியில் ஊருக்கு வரும்போதெல்லாம், வீட்டுக்குப்போகிற ஆசையும் அம்மா கையால் சாப்பிடுகிற ஆவலுமாய் ரயில் நின்ற கையோடு வேகவேகமா இறங்கி நடப்பார் அவர். இப்போது ஊரில் நமக்கென்று யாரிருக்கிறார்கள் என்ற விரக்திவந்து விழிகள் நிறைந்தாலும், ஊர் நினைப்போடு நாமாவது இருக்கிறோமே என்ற எண்ணத்துடன்,மெல்ல எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி நின்றார்.

போவோரும் வருவோருமாகப் பிளாட்பாரம் நெரிசலாக இருந்தது. காலையில் எழுந்ததும், வீட்டில் குடித்த செம்புத்தண்ணீர் வெறும்வயிற்றில் அலைய, எதையாவது கொண்டா கொண்டா என்று இரைச்சலிட்டது வயிறு. ரயில் நிலையத்தின் வாசலில் ஆட்டோவும், டாக்ஸிகளுமாகப் பாதையை மறைத்துக்கொண்டு நின்றன. பெரியவரே, எங்க போகணும்? என்றவாறு பின்னால் வந்த ஆட்டோக்காரரை, பக்கதுலதாம்ப்பா....வண்டியெல்லாம் வேணாமென்று விலக்கிவிட்டு, பக்கவாட்டுப்பாதையில் நடந்தார் கணேசன்.

சாலைக்குமாரசாமி கோயில் வாசலில் செருப்புகளைக்கழற்றிவிட்டு , ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கும்பிட்டுவிட்டு நிமிர்ந்தார் கணேசன். சுற்றிலும் நடைபாதைக்கடைகளில், பழங்கள், காய்கறிகள், பழைய புத்தகங்கள், பாத்திரங்களென்று விற்பனைக்கு எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள் வியாபாரிகள். மெல்ல ரயில்வே லைன்வழியாக நடந்தார். ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே சிக்கிலிங்கிராமத்து வயல்காற்று தொட்டுத் தழுவிக்கொண்டதுபோலிருந்தது அவருக்கு.

இப்போதிருக்கிற தலைமுறைப் பிள்ளைகளிடம் சிக்கிலிங்கிராமம் என்று சொன்னால் நிச்சயமாய் அவர்களுக்குத் தெரியாது. சிக்க நரசய்யன் கிராமம் என்கிற பெயரைப் பழைய தலைமுறை மக்கள் பாசமாய் சிக்கிலிங்கிராமமென்று சொல்ல, இப்போதிருக்கிற மக்கள் அதை சி.என்.வில்லேஜ் என்று நாகரீகமாய்ச் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.

வேகவேகமாய்க் கடந்துபோகிற வாகனங்களைப் பார்த்தபடி தெருவோரமாய் நடந்தார். "ஏடே,கணேசா, எப்டிப்பா இருக்கே...எவ்வளவு நாளாச்சு ஒன்னப்பாத்து. உடம்புக்கெல்லாம் எப்டி, சௌரியம்தான? என்றபடி நரைத்த தாடியும் மீசையுமாகக் கிட்டத்தில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை கணேசனுக்கு. "நீங்க..." என்று தயங்கியவரைப்பார்த்து, "பாத்தியா, ஆளையே தெரியல உனக்கு. அதுக்குத்தான் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து போகணும்கிறது என்றவர், மரக்கடை முத்துவேல் மகன், உன் சிநேகிதன் சோமு என்றபடி கையைப்பிடிக்க,"அடடே சோமுவா நீ? என்னய்யா, ஆளேமாறி அடையாளம்தெரியாமபோயிட்ட? என்றவாரு அவரைத் தோளுடன் சேர்த்தணைத்துக்கொண்டார் கணேசன்.

சோமுவுக்கும் கணேசனுக்கும் சிக்லிங்கிராமத்தில் பக்கத்துப்பக்கத்துவீடுதான். எட்டாவதுவரைக்கும் சாஃப்டர் ஸ்கூலில் ஒன்றாகத்தான் படித்தார்கள். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, அப்பா வைத்திருந்த மரக்கடைக்கு வேலைக்குப்போய்விட்டார் சோமு. படித்துமுடித்து பத்தொன்பதாவது வயதிலேயே பள்ளிக்கூட வாத்தியாரானார் கணேசன். சின்னவயசில் சோமுவும் கூட்டாளிகளுமாய்ச் சேர்ந்து பக்கத்துத் தோப்பில் மாம்பழம் திருடிய கதையெல்லாம் நினைவுவந்தது கணேசனுக்கு. நன்றாகக் கனிந்த மாம்பழங்களைப் பறித்து, கல்லில் வைத்து உருட்டியெடுத்து, சின்னதாய்த் துளையிட்டு, உள்ளேயிருக்கிற சாறைக்குடித்துவிட்டு, அதில் காற்றை ஊதிக் கண்ணுக்குப்படுகிறமாதிரி வைத்துவிட்டு வருவார் சோமு. தோட்டத்துக்கு வருகிற தோட்டக்கார மாரிமுத்துத் தாத்தா, அதை எடுத்துப் பார்த்து ஏமாந்துபோய், ஏழெட்டு ஊருக்குக் கேட்கிறமாதிரி அந்தப்பயபுள்ள, இந்தப்பயபுள்ள என்று அப்பாக்களையும் சேர்த்து வைதுவிட்டுப்போவார்.இப்ப நினைத்தாலும் சிரிப்புவந்தது அவருக்கு.

இப்ப அந்த இடத்தில் தோப்புமில்லை மாமரங்களுமில்லை, வரிசையாக வீடுகட்டிப் பெரிய குடியிருப்பாக்கியிருந்தார்கள். அப்புறம், எப்டியிருக்கே சோமு? உன் வீட்டம்மா சௌக்கியமா? மக்களெல்லாம் உன்னை நல்லாப் பாத்துக்கிறாங்களா? போனமுறை வந்தப்ப நீ வெளியூர்ல இருக்கிறதாச் சொன்னாகளே? என்றபடி அவரைப்பார்த்து ஆதுரமாய்க் கேட்டார் கணேசன். பதில் சொல்லாமல், கோயில் பக்கம் பார்வையை ஓட்டினார் சோமு. என் வீட்டுக்காரிக்கு உடம்புக்கு சொகமில்லாம மதுரை ஆஸ்பத்திரியில வச்சிருந்தோம் கணேசா. ரெண்டுமாசம் முன்னால அவளும் மேல போயிட்டா. சாவுக்கு வந்த புள்ளைக, பதினாறு கழிஞ்சதும் அதது வேலைமுடிச்சிருச்சுன்னு ஊருக்குப் போயிட்டாக. இப்ப நா மட்டுந்தான் இருக்கேன். குறுக்குத்துறை முருகனும், சாலைக்குமார சாமியும்தான் சதம்னு நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். நீ எப்படியிருக்கே? உன் வீட்ல எல்லாரும் சௌரியமா? ஏன் ஒத்தையா வந்துருக்கே? கூட யாரையாவது கூட்டிட்டு வரலாம்ல என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் சோமு.

அவுகவுக வேலையப் பாத்துக்கிட்டு எல்லாரும் நல்லாருக்காகடே. எனக்குத்தான் நம்ம ஊரு,சாமி, இன்னும் மக்க மனுஷங்க ஞாபகமெல்லாம் அடிக்கடி வந்துருது. அப்படி வரும்போதெல்லாம் பையன்கிட்ட சொல்லிட்டு, கொஞ்சம் காசையும் வாங்கிக்கிட்டு இங்க வந்துருவேன்.நாள்முழுக்க நம்ம ஊர்த் தண்ணியையும் காத்தையும் நல்லா அனுபவிச்சிட்டு, சாயங்காலத்து ரயில்ல திரும்பிப்போயிருவேன். மாசத்துக்கொருக்கா வந்துட்டுத்தான் இருக்கேன். உன் சம்சாரம் தவறின விஷயம் தெரியாமப்போச்சுது சோமு என்று ஆறுதலாய் அவர் கையைபிடித்துக்கொண்டார் கணேசன்.

அது கிடக்குது விடு.உனக்குத்தான் மாசாமாசம் பென்சன் பணம் வருமுல்ல...அப்புறம் எதுக்கு மகன் கிட்ட கையேந்தணும்? என்றார் சோமு. அதெல்லாம் கையெழுத்துப்போட்டுக் குடுக்கிறதோட சரி சோமு. அவனாப்பாத்து செலவுக்கு ஏதாவது குடுப்பான். சிலசமயம் அதுவுங்கூட மறந்துபோயிரும் அவனுக்கு. ஆனா, என்னதான் நடந்தாலும், மாசத்துக்கொருவாட்டி வந்து நம்ம மண்ணை மிதிக்காம இருக்கிறதில்லை என்றார் கணேசன்.

சொல்லச்சொல்லக் கேக்காம, இங்க அரமனைமாதிரியிருந்த வீட்ட வித்துப்புட்ட. அதுமட்டும் இருந்திருந்தா வந்த காலோடு திரும்பாம நாலுநாள் இங்க தங்கணும்னு தோணியிருக்கும்ல என்றார் சோமு. என்ன பண்றது சோமு, உபயோகமில்லாத பழைய பொருளையெல்லாம் உடனே வித்துப் பணமாக்கிரணும்னு பாக்குதுக இந்த காலத்துப் புள்ளைங்க. என்ன செய்ய? அழுத்திக் கேட்டாக. அதான் வித்துக்குடுத்துட்டேன் என்றார் கணேசன். "ம்ம்...சொத்துசொகம் மட்டுமில்ல, சொந்தத்துலகூட பழசாகி, உபயோகமில்லாமப் போச்சுன்னா உதறத்தான் செய்யிறாங்க" என்றபடி, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சோமு.

அதைவிடு கணேசா, நம்ம கூட்டாளிகள் நாலுபேர்ல, இப்ப நீயும் நானும்தான் இருக்கோம். மத்தவங்கல்லாம் போய்ச் சேர்ந்துட்டாங்க. சரிய்யா...ஒன்னப்பாத்ததுல இன்னிக்கி ரொம்ப சந்தோசம். நான், நம்ம குறுக்குத்துறைவரைக்கும் போறேன். நீயும் கூட வரியா என்றார் கணேசன். இல்ல, கணேசா...நீ போயிட்டு வா.எனக்கு அவ்வளவுதூரம் நடக்கத் தோதுப்படாது. நா இங்க கோயில் திண்ணையிலதான் உக்காந்திருப்பேன் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுத் திரும்பி நடந்தார் கணேசன். அதற்குள், பின்னாலிருந்து கணேசா... என்று மெல்லமாய்க் கேட்டது சோமுவின் குரல். என்னய்யா, என்றபடித் திரும்பினார் கணேசன். அடுத்ததடவை நீ இங்க வரும்போது, நான் இருப்பனோ மாட்டனோ...என் வீட்டுக்காரி போனதுக்கப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட்டும் நாளாகிப்போச்சுது. இப்ப, உங்கூட சேர்ந்து ஒருபிடி சாப்பிடணும்னு தோணுது கணேசா என்று மெல்லமாய்ச் சொன்னார் சோமு. பக்கென்று தொண்டைக்குழிக்குள் அடைத்தது கணேசனுக்கு.

சிறுவயசில்,சிக்கிலிங்கிராமத்துக்கே செல்லப்பிள்ளை சோமு. எல்லார் கூடவும் நல்லாப் பேசுவான். என்ன வேலை சொன்னாலும் செய்வான். பள்ளிக்கூடத்துக்கு வரும்போது கால்சட்டைப்பைக்குள் நெல்லுப்பொரியும் அச்சுவெல்லமும் அள்ளிப் போட்டுக்கொண்டுவருவான். வழி நெடுக அவன் அள்ளியள்ளித்தர ரெண்டுபேரும் தோளில் கைபோட்டுக்கொண்டே கதைபேசிக்கொண்டு நடப்பார்கள். மரக்கடைக்கு வேலைக்குப்போனபிறகும்கூட, பள்ளிக்கூடம் விடும் நேரத்துக்கு, வாசலில் சைக்கிளில் வந்து நிற்பான். அண்ணாச்சி கடையில் வறுத்தகடலை வாங்கிக்கொடுப்பான். அம்மா செய்ததாகச்சொல்லிக் கொழுக்கட்டை கொண்டுதருவான்.பள்ளிக்கூடத்திலிருந்து, விடாமல் பேசிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டு மறுபடியும் வேலைக்குப்போவான். அவனுக்கா இந்த நிலைமை ஆறவில்லை அவருக்கு.

தோழனின் கையைப்பிடித்து மறுபடியும் சாலைக்குமாரசாமி கோயில்பக்கம் இருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துச்சென்றார் கணேசன். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் என்ன சாப்பிடுறே சோமு? என்றார். ரெண்டு வடையும் ஒரு தோசையும் சொல்லு கணேசா என்றார். தனக்கும் அதையே கொண்டுவரச்சொன்னார். ருசித்துச் சாப்பிட்ட சோமுவைப்பார்த்துக்கொண்டே தானும் சாப்பிட்டார் கணேசன். ஆளுக்கொரு காப்பியும் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியில் வந்ததும், கணேசா, நீ குறுக்குத்துறைக்குப் போயிட்டுவா. எனக்கு மனசும் வயிறும் நெறஞ்சிருக்கு. நா இங்க கோயில் திண்ணையில கொஞ்சநேரம் தூங்குறேன். திரும்பி வரும்போது கட்டாயம் என்னப் பாத்துட்டுத்தான் போகணும் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுச் சிரித்தபடி நடந்தார் கணேசன்.

குறுக்குத்துறைக்குப்போனதும், படித்துறையில் உட்கார்ந்து, கைநிறைய ஆற்று நீரை அள்ளிக்குடித்தார். சட்டை நனைந்து நெஞ்சு குளிர்ந்தது அவருக்கு. முருகனைக் கும்பிட்டு, மனசிலிருந்த கவலையெல்லாம் முறையிட்டுவிட்டு, பின்பக்கத்து மண்டபத்துக்கு வந்து சரிந்து உட்கார்ந்தார். சின்ன வயசில் அம்மாவுடன் ஆற்றில் குளிக்கவரும்போது,குளித்தபின் அங்கே நின்றுதான் அம்மா உடைமாற்றிக்கொள்ளுவாள். அம்மா உடுப்புமாற்றுகிற வரைக்கும், ஆற்றில் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருப்பார் கணேசன். பைக்குள்ளிருந்து துண்டை எடுத்து விரித்துக்கொண்டு கால்களை நீட்டிப்படுத்தார். அம்மா மடியில் படுத்துக்கொண்ட அதே சுகம் தெரியக் கண்களை மூடிக்கொண்டார். சற்றுநேரம் உறங்கி எழுந்திருக்க, உடம்பும் மனசும் இலேசானதுபோலிருந்தது அவருக்கு. ரயிலுக்கு நேரமாகிவிட்டிருந்தது. சோமுவைப் போய்ப்பார்க்க நேரமில்ல. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நடந்தார். இரவு எட்டரைக்கெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டார்.

மறுநாள், காலையில், வீட்டுத்திண்ணையில் சாய்வுநாற்காலியில் கண்ணைமூடிப் படுத்திருந்தார் கணேசன். தொலைபேசி மணியடித்தது. எடுத்துப்பேசிய அவருடைய மகன் சரவணன்,"அப்பா, சிக்கிலிங்கிராமத்தில, உங்க சினேகிதர் சோமுங்கிறவர் நேத்து இறந்துபோய்ட்டாராம்" என்று சொல்ல, "குடுத்துவச்சவன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணைமூடிக்கொண்டார் கணேசன்.


புதன், 15 ஜூன், 2011

சொல்லும் கொல்லும்!

படம்: "இணையத்திலிருந்து"


மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.

"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.

அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து  சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும்  பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா கத்த ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள் மகள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.

இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.

சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.

பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.

மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை.  "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.

"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட,  வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி.

"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.
 'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.

அதற்குள்,  "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.

என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை  பரமசிவம்.

 அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.

சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.

ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.

சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று.

நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு  'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.

ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை  ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.

அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.

"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப்  பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கடைசி சொட்டுக் கண்ணீர்.