temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மதுரை யானை மலை யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில், கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும், முன்னூறு அடி உயரமுமாய் ஒரு யானை அமர்ந்திருப்பதுபோன்ற அருமையான தோற்றத்துடன் மதுரைக்கு அழகு சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது இந்த யானை மலை.


இந்த யானை மலையில் இரண்டு குடைவரைக்கோயில்கள், சமணர் குகைகள், மகாவீரர், கோமதேஷ்வரர் போன்ற சமணத்துறவிகளின் உருவங்கள் மற்றும் சமணத்துறவிகள் படுத்து உறங்கிய கல்லாலான படுக்கைகளும் இங்கே உள்ளதாக அறியமுடிகின்றது. இந்த மலைப்பகுதி முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இயற்கையாகவே மிக மிக அழகாக அமைந்துள்ள இந்த மலையின் அடிவாரத்தில், மக்களுக்கு அருளையும் வழங்கும் விதத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று குன்றுதோறாடும் குமரனுக்குரியது. மற்றொன்று நான்கு வகை யோகங்களை அருளும், யோக நரசிங்கப்பெருமாளுக்கு உரியது. இரண்டுமே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள்.


இதில், முருகனுக்குரிய கோயில், லாடன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. லாட தேசத்திலிருந்து வந்த சித்தர் ஒருவர் அங்கு தங்கியிருந்ததால் லாடன் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் முருகனும் தெய்வானையும் அமர்ந்திருக்கும் தோற்றம் மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது.

யோக நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் கருவறை மட்டும் குடைவரைக் கோயிலாகவும், மூலவரின் உருவம் மிகப் பெரிதாக மலைப்பாறையைச் செதுக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.



கோயிலைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழுள்ள காணொளியில் காணலாம்....

புதன், 9 பிப்ரவரி, 2011

சிவன் சொத்து!

மண்ணின் மேலும் மதங்களின் மேலும் மக்கள் கொண்டிருக்கும் பற்று மிகவும் சென்சிடிவான ஒன்று. 

குடும்பங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சில கோயில்களே கோர்ட் வரைக்கும் இழுக்கப்படும்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஒரு கோயில் அமைந்திருந்தால்?

 பதினொன்றாம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் அந்தக் கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்திருக்கும் கம்போடிய தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான போரில், இந்தக் கோயில், மேலும் சிதைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.


பிரசாத் பிரியா விஹார், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு இறையாயிருந்தவன் என்பதற்குச் சான்றுரைக்கும் வகையில், கெமர் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவாலயம் இது. அமைந்திருப்பது கம்போடிய, தாய்லாந்து எல்லையில் இருக்கும் டாங்கிரெக் மலையின்மீது. எல்லைச்சாமி மாதிரி இரண்டு நாடுகளுக்கிடையே இருப்பதுதான் இங்கு பிரச்சனையே.

எல்லைக்கு நடுவில், கோயில் எங்கே இருக்குது பாருங்க...


1962 ம் ஆண்டிலேயே இந்தச் சொத்துப் பிரச்சனை தலைதூக்க, பிரச்சனையில் தலையிட்ட பன்னாட்டு நீதிமன்றம், இந்தக் கோயில் கம்போடியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும் ஆசை யாரைவிட்டது? அதனால், இன்றுவரை ஓயவில்லை பிரச்சனை. 

தமிழகத்தில், பழங்காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற்கு, அக்கால மன்னர்கள் ஏராளமான சொத்துக்களை எழுதி வைத்ததாகவும், தற்காலத்தில் அத்தகைய சொத்துக்களெல்லாம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகவும் படித்ததும் கேட்டதும் உண்டு. கிராமங்களில் அப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்கள் சொல்வார்கள், சிவன் சொத்து குலநாசம் என்று. அதாவது சிவனுக்குரிய சொத்தை அபகரித்துப் பயன்படுத்துபவர்களின் குலம் தழைக்காமல் அழிந்துபோகும் என்று. இங்கே ரெண்டு நாட்டுப் பிரச்சனையில் யார் குலத்தைக் குற்றம்சொல்வது?


மன்னர்களின் காலத்தில் மதிப்போடிருந்த ஆன்மீகத் தலங்கள் பல, பிற்கால அரசியல் மாற்றங்களால் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதை நாம் பல நாடுகளில் பார்க்கமுடிகிறது. இந்து மதத்தின் பழம்பெருமைக்குச் சான்றாக நிற்கும் இந்தச் சிவன் சொத்து,  இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு அழிந்துபோகக்கூடாதென்று, உலக இந்துக் கலச்சார அமைப்பு ஒன்று உலகெங்குமிருக்கிற இந்து மக்களின் ஆதரவை வேண்டியிருக்கிறது.

அதை இங்கே பார்க்கலாம்...

மக்களுக்குக் கஷ்டம்ன்னு வந்தா கடவுள்கிட்டபோய் முறையிடலாம். ஆனா, கடவுளுக்கே கஷ்டம்வந்தா எங்கேபோய் முறையிடுவதாம்????

எல்லாம் அவனோட திருவிளையாடல்ன்னு சிவனேன்னு இருக்கவேண்டியதுதான்.

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து.
படங்கள் உபயம்: google