சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2018

வடக்குவீட்டு சாமி!


பூசை முடிந்து பிரசாதம் கொடுத்த கையோடு,அம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு ஆரம்பமானது. கோயில் திடலுக்குக் கூட்டம்கூட்டமாக வந்தவர்களில், ஒருசிலர் விரிப்பிலும் மற்றவர்கள் குளிர்ந்த மணலிலும் உட்கார்ந்து, வில்லுப்பாட்டுக் கேட்கிற பாவனையில், கோயிலுக்கு வருகிற போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஊரே கோயிலில் கூடிக்கிடந்தாலும், துரைப்பாண்டிக்கு மட்டும் கடையே கோயில், கல்லாப்பெட்டியே தெய்வமாக இருந்தது. காலையிலிருந்து கடை வேலையாக அங்குமிங்கும் அலைந்ததும், சாயங்காலம்,கடைக்கு வந்திருந்த சின்னவயசுக் கூட்டாளிகள் சிலருடன் நுங்கு போட்டுக்குடித்த மாலைப் பதநீருமாகச் சேர்ந்து, துரைப்பாண்டிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடையைச் சாத்தி, வாசலில் கற்பூரம் ஏற்றிவைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடந்தார் அவர். மனைவி செல்லக்கனியும், மகள் வனஜாவும் வில்லுப்பாட்டு முடிந்ததும்தான் வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தார்கள். பரீட்சையிருப்பதால் கொடைக்கு வரமுடியாதென்று, காரைக்குடியில் இஞ்சினீயரிங் படித்துக்கொண்டிருந்த மகன் கணேசன் சொல்லிவிட, துரைப்பாண்டிக்கும் அவர் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம்.

ஊர்க்கோடியில், சுற்றிலும் தென்னத்தோப்புக்கு மத்தியில் தன்னந்தனியாய் இருந்தது துரைப்பாண்டியின் பண்ணை வீடு. பத்து ஏக்கர் தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒற்றையாய் வீடு. வீட்டைப்பூட்டி, அடுப்படிக் கதவுக்குப் பின்னாலிருந்த ஆணியில் சாவியை மாட்டிவிட்டுப் போவதாக மனைவி சொன்னது நினைவிருந்தாலும்,கதவைத் திறக்க மனசில்லாமல், திண்ணையில் கிடந்த நார்க்கட்டிலில் படுத்தார் துரைப்பாண்டி. கோயிலில், வனவாசம் போன பாண்டவர்களைப் பற்றி, வில்லுப்பாட்டுக்காரர் பாடியது ஒலிபெருக்கியில் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு, அடிவயிறு கனத்தது போலிருக்க, எழுந்து வடக்குவீட்டுக்குப் பின்னால், வேலிப்பக்கம் போய்விட்டு வந்தார்.

வடக்குவீடு, புதிதாய்க் கட்டிய மேலவீட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்தது. அது, துரைப்பாண்டியின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு. பத்துக்குப் பதினைந்தில் ஒற்றை அறையும் முற்றத்துத் திண்ணையும் மட்டுமேயுள்ளது.சின்னதாக இருந்தாலும் உத்திரக் கட்டைகளும் முன்வாசல் கதவும் சுத்தத்தேக்கு என்று அப்பா பெருமையாகச் சொல்லுவார். அம்மா இருக்கிற வரைக்கும் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். அப்புறம், இன்னும் கொஞ்சம் வசதிக்காகக் கட்டியதுதான் மேலவீடு. புதுவீடு கட்டியதும் வடக்குவீடு, வயலிலிருந்து வரும் நெல்லையும், தோட்டத்துத் தேங்காய்களையும் சேமித்து வைக்கிற இடமாகிப்போனது. இப்பவும் பெற்றவர்களின் ஞாபகம் வரும்போதெல்லாம் வடக்குவீட்டுத் திண்ணையில்போய் வெறுந்தரையில் கொஞ்சநேரம் படுத்திருப்பார் துரைப்பாண்டி.

பழைய நினைவுகளுடன் பாதையில் நடந்தவர், அப்போதுதான் கவனித்தார். வடக்குவீட்டுத் திண்ணையில் எப்பவும் எரிகிற குண்டு பல்பு அன்றைக்கு ஏனோ எரியவில்லை. அனிச்சையாய் அவரது பார்வை கதவுப்பக்கம்போக, கதவின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் கசிந்தது தெரிந்தது. சந்தேகமாய்ப் பார்த்தார் துரைப்பாண்டி. உள்ள யாரு லைட்டைப் போட்டிருப்பாங்க என்ற கேள்வியுடன், திண்ணைப் படியேறி, கதவில் கைவைத்தார்.

கதவு, உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திக்கென்றிருந்தது அவருக்கு. இந்நேரத்தில் இங்கே யார் வந்திருப்பார்கள்? எவனாவது, திருட வந்திருப்பானோ என்ற சந்தேகத்தோடு, வலப்பக்கத்து ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தார். அதுவும் உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெல்ல வந்து, மீண்டும் கதவு இடைவெளியில் எட்டிப்பார்த்தார் துரைப்பாண்டி.

உள்ளே, அரைக்கை சட்டையும்,கைலியுமாகக் கதவுக்கு முதுகுகாட்டி யாரோ நின்றுகொண்டிருக்க, அவன் கையில் புகைந்துகொண்டிருந்தது சிகரெட். ஒருசில வினாடிகளில், அவன் மிகமெதுவாக, யாருடனோ பேசியபடித் திரும்பினான். திரும்பிய அவன் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார் துரைப்பாண்டி. தேரிக்காட்டு ஏலத் தகறாரில் அவருடன் பகைத்துக்கொண்ட பக்கத்துத்தெரு பால்த்துரையின் மகன் தாமோதரன். அப்பனைப்போலவே இவனும் சண்டை சச்சரவுக்குப் பயப்படாதவன். உள்ளே, அவனுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்களென்று தோன்றியது அவருக்கு.

அவன் எதுக்காக இந்த நேரத்தில் இங்கே வந்தான்? நிச்சயம்,ஏதாவது கெடுதல் செய்வதற்காகத்தானிருக்குமென்று தோன்றியது அவருக்கு. ஒருவேளை, பழைய பகையை மனதில்வைத்து, தன்னை அடித்துப்போட வந்திருப்பானோ? அல்லது, ஊரே கோயிலில் இருக்கும்போது, உள்ளே நுழைந்து, கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருப்பானோ என்று பலவாறாய் எண்ணியபடி, உள்ளே தாளிட்டிருந்த வடக்குவீட்டுக் கதவைச் சத்தமின்றி வெளியில் தாளிட்டார் துரைப்பாண்டி. வில்லுப்பாட்டுச் சத்தத்தில், வெளியில் பூட்டியது அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

மேலவீட்டுப்பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் வாசல்கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. உள்ளறையிலிருந்த அலமாரி மட்டும் திறந்திருந்தது. மற்றபடி என்னவெல்லாம் இல்லையென்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. "பாவிப்பய, பாட்டுச்சத்தத்துல, வீட்டைக் கொள்ளையடிக்கலாம்னு வந்திருக்கிறானென்று நினைத்து ஆத்திரத்துடன் வெளியேவந்தார். மறுபடிபோய், வடக்குவீட்டுக் கதவைப் பூட்டு வைத்துப் பூட்டினார். அந்தச் சத்தம் உள்ளே கேட்டிருக்கவேண்டும். ஒருசில வினாடிகளில், உள்ளிருந்து 'யாரு'ன்னு கேட்டபடியே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர். பின்னால், ஜன்னல் திறக்கிற சத்தம் கேட்டது. எவ்வளவு தைரியமிருந்தா என்னோட வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருப்பானுங்க என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது அவருக்கு. "இருங்கடா, இன்னிக்கு ஊரைக்கூட்டி உங்க திருட்டுத்தனத்தை எல்லாருக்கும் தெரியவச்சிட்டுத்தான் மறுவேலை" என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, காம்பவுண்ட் கேட்டைத் தாண்டித் தெருவில் இறங்கி   நடந்தார்.

கதவு தட்டப்படுவது இப்போது காதில் விழவில்லை. எட்டிநடந்தார் அவர். அதற்குள் குப்பென்று ஒரு வெளிச்சம் வரத் திரும்பிப்பார்த்தார். வடக்கு வீட்டின் ஜன்னல் பக்கத்திலிருந்து, நெருப்பின் ஜுவாலை தெரிந்தது. திக்கென்று அதிர்ந்தார் அவர். வடக்கு வீட்டுக்குள், டிராக்டருக்கு வாங்கிவைத்த டீசல், ஜெனெரேட்டருக்கு வாங்கிவைத்த பெட்ரோல், காலிக் கோணிகளென்று எரிவதற்குத் தோதான ஏகப்பட்டபொருட்கள் இருந்தது நினைவுவந்தது அவருக்கு. விக்கித்து நின்றார். சட்டென்று சமாளித்துக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறக்க எத்தனிக்க, அதற்குள், கெட்டிக்கதவோடு, வடக்குவீடு மொத்தமாகப் பற்றி எரியத் தொடங்கியது.

அடப்பாவமே, அவசரப்பட்டுட்டானே, அவமானத்துக்குப் பயப்பட்டு அவனுக்கே தீ வச்சுக்கிட்டானோ? அவனோட, உள்ளே இன்னும் யாரெல்லாம் இருந்திருப்பார்களோ என்ற கேள்விகளோடு, இப்போ யாரைக்கூப்பிடுவது? எப்படிப்போய்ச் சொல்வது? யாரிடம் சொன்னாலும் நான்தான் பற்றவைத்தேனென்று நினைப்பார்களோ என்று யோசித்து, மொத்தமாய் அதிர்ந்துபோன அவர், சத்தமில்லாமல் அங்கிருந்து வேகவேகமாய் வெளியேறி நடந்தார்.

வழியில் போகும்போதே, கோயிலில் வேட்டுச்சத்தம் கேட்டது. மண்டபத்தில்போய் உட்கார்ந்தார் அவர். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவரை மேலும் அதிரவைக்க, அங்கே, பாண்டவர்களைத் தங்கவைத்த அரக்குவீடு பற்றியெரிந்த கதையைப் பாடிக்கொண்டிருந்தார் பாட்டுக்காரர். அதற்குள், கோயிலில்,நள்ளிரவு பூஜைக்கான மணியொலித்தது. வில்லுப்பாட்டை நிறுத்திவிட்டு, எல்லாரும் பூஜையைப் பார்க்க எழுந்துபோனார்கள்.

பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே, "ஐயோ,துரையண்ணன் வீடு தீப்பிடிச்சு எரியுது"ன்னு யாரோ சத்தமாய்க் குரல்கொடுக்க, மொத்தக் கூட்டமும் கலைந்து ஓடியது. "ஐயையோ..." என்று குரல்கொடுத்தபடி செல்லக்கனி ஓட, அவளுக்குப் பின்னால் துரைப்பாண்டியும் ஒன்றுமறியாதவர்போல ஓடிப்போனார். ஆளாளுக்கு, தோட்டத்துப் பம்புசெட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அணைப்பதற்குள், வடக்குவீடு மொத்தமாய் எரிந்துபோயிருந்தது.

பத்துமூடை நெல்லு, மூணு மூடை கடலை, ஐநூறு அறுநூறு தேங்கா, என் மாமியார் புழங்கின அருமையான தேக்குமர பீரோ அத்தனையும் போச்சே என்று அலறினாள் செல்லக்கனி. அதிர்ந்துபோனவராய் மேலவீட்டுத் திண்ணையில் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார் துரைப்பாண்டி. எரிந்ததை அணைத்துவிட்டு, அவரவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டது ஊர். அழுதுகொண்டிருந்த செல்லக்கனி அப்போதுதான் கவனித்தாள், இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், தன் வயசுப் பெண்பிள்ளைகளோடு உட்கார்ந்து வில்லுப்பாட்டு கேட்கப்போகிறேனென்று சொல்லிப்போன வனஜா, இதுவரைக்கும் வீடு வரவில்லையென்று.

கண்ணைத் துடைத்துக்கொண்டவளுக்கு மனதில் என்னென்னவோ பயம் கிளம்ப, மகளைப் பாத்தீங்களா என்று கணவரிடம் கேட்டாள். அவர் இல்லையென்று தலையசைக்க, மறுபடியும் கோயில் பக்கம் ஓடினாள் அவள். வனஜாவைக் காணவில்லை. அவளுடைய தோழிப்பெண்கள் ஒவ்வொருவர் வீடாய்ப் போய்த்தேடினாள். யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அதிர்ந்துபோனாள் அவள். வீடு பற்றியெறிந்த துயரம் சட்டென்று தொலைந்துபோக,பொட்டப்புள்ளயப்போயி எங்கேன்னு தேடுவேன் என்று தலையைப் பற்றி அழுதபடி வீட்டைநோக்கி நடந்தாள் அவள்.

அதற்குள், ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேசிக்கொண்டார்கள், வனஜாவும் பால்த்துரை மகன் தாமோதரனும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார்களென்று. மகன் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாய்மாலக்காரி, என்ன பொடிபோட்டாளோ என் புள்ளையை மயக்கிக் கூட்டிட்டுப்போயிட்டா... அவ எங்கபோனாலும் வெளங்கமாட்டா. அவ பண்ணின காரியத்துக்குத்தான், வேட்டு நெருப்பால வீட்டை எரிச்சிட்டாரு சாமி என்று, வாசலில்வந்து மண்ணைவாரித் தூற்றிவிட்டுப்போனாள் தாமோதரனின் தாய்.

கேட்டுக்கொண்டிருந்த துரைப்பாண்டி, நெடுமரமாய்ச் சரிந்தார். சட்டென்று வடக்குவீடு பற்றிக்கொண்டதன் மர்மம் விளங்கிப்போனது அவருக்கு. நடந்ததெல்லாம் கேள்விப்பட்டு, ஊரிலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தான் கணேசன். "அந்த கழுத, செத்துப்போச்சுதுன்னு நினைச்சுக்கோங்கப்பா. எங்களுக்கு நீங்க வேணும். நீங்க தைரியமாயிருங்கப்பா"ன்னு கையைப் பிடித்துக்கொண்டு அழுதான் அவன்.

துரைப்பாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. மகள் வனஜாவின்மேல் ஏகப்பட்ட பாசம் அவருக்கு. குலதெய்வம் வனபத்ரகாளியின் பெயரையொட்டி அவரது அம்மா, ஆசையாய்ப் பேத்திக்கு வைத்த பெயர். பக்தியில்லையென்றாலும் அழகாயிருந்ததென்பதால் அந்தப்பெயர் பிடித்துப்போனது அவருக்கு. மகளை வாய்நிறையக் கூப்பிடுவார் அவர்.

அந்த மகள், அப்பாவின் முன்னால் அசிங்கப்பட்டு நிற்க அஞ்சி, அவளையும் அவளோடு சேர்ந்தவனையும் அனலில் பொசுக்கிக்கொண்டாளென்பதை நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது அவருக்கு. உடைத்துச் சொல்லிவிட்டால் ரெண்டு குடும்பத்து நிம்மதியும் போய்விடும் என்பதோடு, செய்யாத கொலைப்பழியையும் சுமக்கவேண்டிவருமோவென்று அச்சமும் தோன்றியது அவருக்கு.

கணவனின் உள்ளத்துத் தவிப்பினை உணராதவளாக, "கவலைப்படாதீங்க...பொம்பளப்புள்ளமேல இம்புட்டுப்பாசம் வைக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். என்னிக்கிருந்தாலும் ஒருநாள், அது கல்யாணம் கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். ஆனா, இன்னிக்கி, நம்மளை அவமானப்படுத்தி அழவச்சிட்டுப் போயிருக்கு. பட்டுத் திருந்தினபிறகு, அந்த ரெண்டு கழுதையும் நம்ம கால்ல வந்து விழத்தான் போகுது. நீங்க கவலைப்படாதீங்க..." என்று அவரது கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள் அவர் மனைவி.

அவள் சொல்லச்சொல்ல, இன்னுங்கொஞ்சம் அழுகைவந்தது அவருக்கு. மகள், ஓடிப்போகவில்லை, ஒரேயடியாய்ப் போய்விட்டாளென்ற உண்மை தெரிந்தால், செல்லக்கனி என்ன ஆவாள் என்று நினைக்க நினைக்க இற்றுப்போனது அவர் மனசு.

மொட்டைக் கட்டிடமாய் நின்றது வடக்குவீடு. அதைப் பார்க்கப்பார்க்க ஆறவில்லை அவருக்கு. எரிந்து கிடந்தவற்றின் மிச்சத்தை மனைவி தடுக்கத்தடுக்க தானே ஒற்றை ஆளாய்ச் சுத்தம் செய்தார் துரைப்பாண்டி. சுற்றி நின்ற சுவரை, மொத்தமாய்த் தட்டிவிட்டு, கெட்டித்தூண்களும், நடுவில் ஒற்றைப் பீடமுமாய் அங்கே ஒரு கோயில் கட்டச்சொன்னார்.

நடப்பது என்னவென்று புரியாமல் நின்ற மனைவியிடம், "இதுவரைக்கும் நடந்ததெல்லாம் குலதெய்வக் குத்தம் கனி...நம்ம சாமி, வனபத்ரகாளியை நெனைச்சு, இனி இங்க நித்தமும் வெளக்கேத்தணும்" என்றார் அவர். சாமியுமாகாது கோயிலுமாகாது என்றிருந்த கணவனின் அந்தத் திடீர் பக்திக்குக் காரணம் புரியாவிட்டாலும், இப்பவாவது புத்தி வந்ததேயென்ற திருப்தியுடன், சம்மதமாய்த் தலையாட்டினாள் செல்லக்கனி.


வெள்ளி, 6 ஜூன், 2014

ஆடி அழைப்பு!

போனவருஷம் ஆனிமாதம் கடைசீ முகூர்த்தத்துல, திருவளர்ச்செல்வி அகிலாவுக்கும் திருவளர்ச்செல்வன் தினகரனுக்கும் கல்யாணம், அதாங்க எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும். கல்யாணமான மூணாவது நாள் மறுவீட்டுக்குப் போயிட்டு அதே நாள் திரும்பி வந்தா, அஞ்சாவது நாள் காலையில அப்பாவும் அம்மாவும் என் புகுந்த வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க. ஓடிப்போயி அம்மாவைக் கட்டிக்கிட்டேன்.

அவங்க வந்த விஷயம் என்னன்னு பாத்தா, "நாளைக்கு ஆடி பிறக்குது சம்பந்தி... முன்னமாதிரி இப்பல்லாம் ஒரு மாசம் பிரிச்சு வைக்கிறது சாத்தியமில்லேன்னாலும் சாஸ்திரத்துக்கு ஒரு வாரமோ இல்ல நாலஞ்சு  நாளாவது பிரிச்சு வைக்கணும்னு எங்கம்மா அபிப்ராயப்படுறாங்க..." என்று அவங்கம்மாவை நடுவில் நிறுத்தி, அப்பா என் மாமனாரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் "அதுக்கென்ன சம்பந்தி...உங்க பொண்ணு, உங்க வீட்டுல இருந்துட்டு வரதுல என்ன தப்பு? அதுவுமில்லாம பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி... அதுக்கெல்லாம் ஒரு காரண காரியம் இருக்கும் என்று ஆமோதித்தார்.

ஆஹா, இதுதானா விஷயம்? ஆனா, நம்ம ஆத்துக்காரர் இதுக்கு அக்செப்ட் பண்ணமாட்டாரேன்னு நினைச்சிக்கிட்டு அவரைப் பாத்தா, அவரும் மாமனார் சொன்னா மறுவார்த்தை கிடையாதுங்கிறமாதிரி  சந்தோஷமாத்தான் தலையாட்டிட்டு இருந்தாரு. "என்னடா இது? அஞ்சே நாளுக்குள்ள மனுஷன் ரங்கமணீ என்ஜாய்னு என்னை விட்டுட்டு சந்தோசமா இருக்க ப்ளான் பண்ணுறாரோன்னு சந்தேகத்தோட பாத்தா, அந்தநேரம் பாத்து அவரும் என்னைப் பார்த்துட்டு, சட்டுன்னு "அச்சச்சோ...நான் எப்படி சமாளிப்பேன்..."என்கிற தோரணையில் முகத்தை மாற்றி வைத்துக்கொண்டார்.

ஆஹா, இந்தக் கூட்டணியை உடைச்சு, ஆடித் தீர்மானத்தைத் தோற்கடிக்கணுமே என்ற திட்டம் மனசில் எழ, என் மாமனார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசியே தீரணும் என்ற திட சித்தம் கொண்ட என் மாமியாரை  எங்கே என்று தேடின என் கண்கள். அத்தை அப்போ தான் குளிச்சுமுடிச்சு குங்குமமும் மஞ்சளுமா வந்து நின்னங்க. "வாங்க அண்ணி, உங்களை இப்படிப் பார்த்தா, அப்படியே சாட்சாத் அம்பாளைப் பாக்கிற மாதிரியே இருக்குன்னு..." எங்க அம்மா சொல்ல, அத்தை அப்படியே 'அவுட்' ஆனது அப்பட்டமாய்த் தெரிஞ்சது. "ஆஹா, அம்மா கவுத்திட்டியே..." என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அத்தை உட்பட அத்தனைபேருமாய்ச் சேர்ந்து ஆடித் தீர்மானத்தைக் கூடி நிறைவேற்றியிருந்தார்கள்.

வேறு வழியில்லை... நாளைக்குப் புறப்பட்டுத்தான் ஆகவேண்டும். என்னதான் சொல்லுங்க, கல்யாணமான உடனே பொண்ணுங்களுக்கு புருஷன் மேல அதீதப் பாசம் வந்துருது. அம்மா வீட்டுக்குப் போகணும்னு ஆசை இருந்தாலும்கூட அங்கயும் அவர் கூட இருந்தால் நல்லாருக்கும்னு தோணுது. 

அடுப்படியில் இருந்த என்கிட்ட இவர், "அம்மு, நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்கோ... நளைக்குக் கிளம்பணும்ல" என்று சொல்ல, மனுஷன் என்னைத் தள்ளிவிடுறதுல எவ்வளவு குறியா இருக்காரு பாரு...ஒருவேளை, நாலஞ்சு நாள்ன்னு சொன்னது இவருக்கு நாலஞ்சு வாரம்னு புரிஞ்சிருச்சோ? என்று மனக்குரல் எச்சரிக்க, "நாலே நாள் தானேங்க... அங்கயே தேவையானதெல்லாம் இருக்கு" என்றேன் நான். 

"ஓ...அப்போ சரி" என்றவரைப் பார்த்தால், இவருக்கு என்னை அணுப்பணுமேன்னு கொஞ்சம் கூட வருத்தம் இருக்கிறமாதிரி தெரியலை...ஒருவேளை அவங்க அப்பா அம்மாவோட கண்டிப்புக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ? என்ற ரீதியில் ஒரு பார்வையை வீச,அதைக் கரெக்டாப் புரிஞ்சுகிட்ட அவர், "நாலஞ்சு நாள்தானேம்மா... உன்னைக் கொண்டு விட்டுட்டு நான் வந்துருவேன். அப்புறம் இடையில ரெண்டே நாள். மூணாவதுநாள் நான் திரும்பவும் கூப்பிட வரப்போறேன். அதுக்கெதுக்குக் கவலைப்படுறே?" என்று அவர் கெஞ்சலாய்ச் சொல்லவும், "சேச்சே, எங்க வீட்டுக்குப் போறதுல எனக்கு என்ன வருத்தம்...உங்களை நினைச்சாத்தான்..."என்று கீழே விழுந்தாலும் மூக்கில மண் ஒட்டாத பாவனையில் சமாளித்தேன். 

மறுநாள், காலையில சாப்பிட்ட கையோடு கிளம்பினோம். பைக்கில ஏறிப் புடவைத் தலைப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவர் தோளையும் பிடித்துக்கொண்டு பிரயாணிக்கையில், மனசுக்குள்ள திக்குதிக்குனு இருந்திச்சு. இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போயிட்டிருக்கக்கூடாதான்னு நினைக்கிறதுக்குள்ள, திடுக்குன்னு அம்மாவீடு வந்திருச்சு. உள்ளபோயி கொஞ்சநேரம் சம்பிரதாயமாப் பேசிட்டிருந்துட்டு, மதியம் விருந்தைச் சாப்பிட்ட கையோடு இவர் கிளம்ப எத்தனிக்க, எனக்குக் கண்ணீர் குளம்கட்ட ஆரம்பித்தது.  தொண்டைக்குள்ள  வேற, என்னவோ அடைச்ச மாதிரி வலிக்குது. ஆனாலும், அதை அடக்கு அடக்குன்னு அடிமனசு சொல்லவே அழுத்தமா முகத்த வச்சுக்கிட்டேன்.

அவர் என்னன்னா போருக்குப் புறப்பட்ட கட்டபொம்மன் ஜக்கம்மா கிட்ட சொன்ன கணக்கா, போயிட்டு வரேன் அம்மு, ரெண்டுநாள்ல வரேன்" என்று சொல்லிட்டுக் கிளம்பினார். நானும் அவரோட வாசல் வரைக்குக் கூடப்போனேன். அழுகை அழுகையா வந்தாலும், அழுகைக்குள் அலட்சியத்தை நுழைத்துச் சிரிக்கிறமாதிரி சிரித்து, "ஆல் த பெஸ்ட்" என்று  அவரைப் பார்த்துச் சொன்னேன். அதை என் முகம் எப்படிப் பிரதிபலிச்சுதோ தெரியலை, "என்ன ஆச்சு உனக்கு? முகமே சரியில்லை...எதுக்கும் டாக்டரைப் பாத்து சைனஸ் இருக்கானு செக் பண்ணிட்டு வந்துரு..." என்று சொல்ல, எனக்கு என் மண்டையைக் கொண்டுபோயி மாடிப் படிக்கட்டுல முட்டிக்கலாம் போல இருந்திச்சு. ஆனாலும், மௌனமாத் தலையாட்டிக்கிட்டேன்.

ஆனாலும் இவருக்கு எவ்வளவு கல் மனசு? ஒருவேளை, இந்த ஆம்பளைங்களோ இப்படித்தானோ? என்று அலுத்துக்கொண்டபடி வீட்டுக்குள் நுழைய, "என்ன அகிலாக்குட்டி, ஒரு மாசம்கூட ஆகல அதுக்குள்ள வீட்டுக்காரனை விட்டுப் பிரியமுடியலை போலிருக்குதே..." என்று பாட்டி  என் வாயைப் பிடுங்க, "அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி, புறப்படும்போதே  கொஞ்சம் தலைவலி என்று சொல்லிவிட்டு அருகில் உட்கார்ந்தேன். 

ம்ம்... நீ சொல்லலேன்னாலும் உன் முகம்தான் முழுசையும் சொல்லுதே... கல்யாணமான கொஞ்சநாள்ல கட்டிக்கிட்டவனைப் பிரியிறது கஷ்டமாத்தான் இருக்கும். அந்தக் காலத்துலல்லாம் ஆடியில பிரிச்சு வைக்கிறதுக்கு ஆளுக்கொரு காரணம் சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரே காரணம்தான். பிரிச்சு வைக்கையில் பிரியம் கூடும். 

அதுமட்டுமில்லாம ஆடிமாசம் அம்மனோட மாசம். ஒரு குடும்பத்தில பொறக்குற ஒவ்வொரு பொண்ணும் அந்த சக்தியோட அம்சம். அவளை ஆடியில அழைச்சு அவளுக்கு சீர்செய்து சந்தோஷப்படுத்துறது அந்தப் பராசக்தியையே சந்தோஷப்படுத்துறது மாதிரி... அதுமட்டுமில்லாம பொண்களை மதிக்கணும்னு வாயால சொல்லி, வார்த்தைகளால எழுதினாமட்டும் பத்தாது, இதமாதிரி வீட்டில இருந்தே சொல்லிக்கொடுக்கணும். 

ஆடிமாசம் பொறந்தா அண்ணன், தம்பிகள் அவங்க கூடப்பிறந்தவளுக்குப் பச்சைப்புடவை குடுக்கணும், மஞ்சள் புடவை குடுக்கணும்னு புரளி பரப்பி விடறாங்களே அதெல்லாம் இந்தமாதிரி விஷயங்களை மனசுல வச்சுத்தான். அதனாலதான் நானும், உங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை ஒண்ணுரெண்டு நாளாவது வந்து இருக்கட்டும்னு அழைச்சிட்டு வரச்சொன்னேன் என்று என் தலையை ஆதுரமாய் வருடியபடி பாட்டி சொல்லிவிட்டு,"சரி கண்ணு...தலை வலிக்குதுன்னு சொன்னேல்ல, நீ போயி கொஞ்சநேரம் படுத்துக்கோ" என்று சொல்ல, எழுந்து அறைக்குள்போய்க் கட்டிலில் விழுந்தேன். 

இப்ப அவர் எங்க போயிருப்பார்? வீட்டுக்குப் போயிருப்பாரா, இல்லே வழியில இருப்பாரா? ஃபோன் போட்டுக் கேட்டுப் பாப்போமா என்ற நினைப்பு வர, "அடங்குடி அகிலா, முதல்ல அவரு பத்திரமா பைக்க ஓட்டிக்கிட்டு வீடுபோய்ச் சேரட்டும் என்று எச்சரித்தது மனக்குரல். அப்படியே கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அதில இருந்த அவரோட ஒவ்வொரு பழைய மெசேஜையும் படிச்சுப் பாத்து மனசு நெகிழ, அதற்குள் கையிலிருந்த ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது. 

நான் எதிர்பார்த்தமாதிரி, அவரே தான்...ஆனாலும் உடனே எடுக்காதே, நாமளும் பிசியாத்தான் இருக்கோம்னு காட்டிக்கவேண்டாமா என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்ல, ஏழெட்டு ரிங் போனதும் எடுத்து, "சொல்லுங்கங்க, வீட்டுக்குப் போயிட்டீங்களா? என்றேன். 

"ம்ம்...வந்துட்டேன் அம்மு. ஆனா, உன்னை அங்கே விட்டுட்டு வரும்போதுகூட எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா, இங்க வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சா, ஒவ்வொரு இடத்துலயும் நீதான் தெரியிற. எனக்கு நம்ம ரூம்க்குள்ள இருக்கவே முடியல தெரியுமா? அழகா விரிச்சிருக்கிற படுக்கை, அடுக்கி வச்சிருக்கிற துணிகள், பளிச்சுன்னு சுத்தமா இருக்கிற மேஜைன்னு எதைப் பாத்தாலும் உன்னோட ஞாபகம்தான் வருது. 

ஏதோ தொண்டைக்குள்ள கல்லைப் போட்டுக்கிட்டமாதிரி, நெஞ்சுக்குள்ள அடைக்குது. நீ என்னன்னா, கூலா, போயிட்டு வாங்க, பெஸ்ட் ஆஃப் லக்னு சொல்லி வழியனுப்புறே. ஆனாலும் பொண்ணுங்க மனசு கல்லுதான் போல... என்று எதிர்முனையில் அவர் புலம்ப, "ஆஹா...நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று கத்தவேண்டும்போலிருந்தது எனக்கு. ஆனாலும், ஒரு ஓரத்துல, இவர் உண்மையாத்தான் சொல்றாரா? என்ற பொண்ணுங்களுக்கே உரிய சந்தேகமும் எழாமல் இல்லை.

சரி சரி, மூணு நாள் தானே, சமாளிச்சுக்கங்க...என்று என் பங்குக்கு அவர் வீசிய ஈட்டியையே திருப்பி எடுத்து வீச, "இல்லம்மா, என்னால முடியாது... என்னதான் அப்பா அம்மா கூட இருந்தாலும் நீ இல்லாதது வீடே வெறுமையாத் தெரியிது. இன்னிக்கி மட்டும் சமாளிச்சுக்கிறேன். நாளைக்குக் காலையில நீ கிளம்பிரு. ஆடியும் போதும் அவங்க சம்பிரதாயமும் போதும்" என்று அவர் சொல்ல, மனசுக்குள் ஒரு இனம்புரியாத கர்வம் எட்டிப்பார்த்தது. அத்தோடு, அவரை நினைக்கப் பாவமாவும் இருந்தது. 

இப்படிப்பட்ட ஒரு தேடலைக் கணவன் மனைவிக்குள் உண்டாக்குவதற்காகத்தான் இதுமாதிரிப் பிரித்துவைக்கிற சம்பிரதாயத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் என்று பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ஒன்றிரண்டு நாளுக்கே இப்படியென்றால் முன்னை மாதிரி ஒருமாசம் பிரித்துவைத்தால், ஐயோ முடியவே முடியாது என்ற எண்ணத்துடன்,"சரி...சரி, அவசரப் படாதீங்க, நாளைக்குக் காலையில ஆஃபீஸ் போனீங்கன்னா நாள் முழுக்க ஓடிப்போயிரும். அப்புறம் நாளை மறுநாள் ஒரேநாள். அதுக்கடுத்தநாள் நீங்களே இங்க வரப்போறீங்க. வரும்போது உங்களுக்காக, உங்களுக்குப் பிடிச்ச ஒரு பரிசோட காத்திருப்பேன், சரியா? என்று நான் சொல்ல, அவர் அது என்னவென்று கேட்டு என்னை நச்சரிக்க, அப்புறம் என்ன, அந்த அஞ்சாறு நாளும் ஏர்டெல்லுக்கு எங்களால் நிறைய்ய வருமானம்!

                         ******

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஊரார் பிள்ளை



தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவரவர் பிள்ளைகளைப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் ட்யூஷன் நடத்துமிடங்களில் அடைத்துவிட்டு, அம்மாக்கள் டீயும் கையுமாய் டி.வி சீரியல்களில் ஆழ்ந்திருந்த நேரம்...வீட்டுக்கருகிலிருந்த  காந்திசிலைகிட்ட கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள் எட்டுவயசு சிந்துவும் அவள் தம்பி அருணும்.

அம்மா வர நேரமானால், அண்ணாச்சி கடையில் ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டு, நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த இந்திரா ஆன்ட்டி வீட்டில் தொல்லைபண்ணாம உட்கார்ந்திருக்கணுமென்பது ஏற்கெனவே அவர்கள் அம்மா அனு சொல்லிவைத்திருந்த விஷயம். இந்திராவும் அனுவும் ஒரே ஊர்க்காரங்க என்பதோடு ஒரே பள்ளியில் படித்தவர்களும் கூட.

பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, இந்திரா ஆன்ட்டி வீட்டுக் காலிங்பெல்லை மாற்றிமாற்றி அடித்தார்கள் ரெண்டுபேரும். வழக்கத்துக்கு மாறாக, சந்துரு அங்கிள், இந்திரா ஆன்ட்டியின் கணவர்வந்து கதவைத் திறந்தார்.

கையிலிருந்த கண்ணாடி கிளாசில் மிரிண்டாவுடன் நின்ற அவர், "என்ன பசங்களா, உங்க அம்மா இன்னும் வரலியா? என்றார். அம்மாவுக்கு இன்னிக்கு ஓவர்டைம் இருக்குதாம். அவங்க வரவரைக்கும் இங்கயே இருக்கச்சொன்னாங்க அங்கிள்...என்றான் அருண். அதற்குள், "ஆன்ட்டி, குடிக்கத் தண்ணி வேணும்..." என்று உட்புறம் பார்த்துக் குரல்கொடுத்தாள் சிந்து

"ஆன்ட்டி வீட்ல இல்லைடா, கோயிலுக்குப் போயிருக்காங்க...தண்ணிதானே வேணும், நானே கொண்டுவரேன்" என்றபடி உள்ளேபோனார் அங்கிள். ஆன்ட்டி வீட்ல இல்லேன்னதும் சந்தோஷம் கிளம்பியது அருணுக்கு. ஆன்ட்டி பார்க்கிற அறுவையான சீரியல்களைப் பார்க்காமல், ஆதித்யா சேனல் பார்க்கலாமென்று வேகவேகமாக ரிமோட்டைக் கையிலெடுத்தான். "ஆதித்யா வேண்டாண்டா அருண்...அனிமல் ப்ளானட் பார்க்கலாம்" என்றாள் சிந்து அதற்குள், இரண்டு டம்ளர்களில் மிரிண்டாவும் சின்ன பாட்டிலில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார் சந்துரு அங்கிள்.

நீங்க ரெண்டுபேரும் சண்டைபோட்டுக்க வேணாம்..."அருண், நீ பெட்ரூம் டிவியில ஆதித்யா பாரு, நானும் சிந்து குட்டியும் ஹால் டிவியில அனிமல் ப்ளானட் பாக்குறோம்  என்று ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்து உட்காரவைத்தார் அங்கிள். உடனே, மிரிண்டா கிளாசுடன் சந்தோஷமாக அறைக்குள் ஓடினான் அருண் .கையிலிருந்த மிரிண்டாவை ஒரேமூச்சில் குடித்துவிட்டு, படுக்கையில் சரிந்தபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.  கொஞ்ச நேரம் கார்டூன் கதாபாத்திரங்களுடன் கூடக்கூடப் பேசிக்கொண்டிருந்தவன் பத்துநிமிஷத்தில் தூங்கிப்போய்விட்டான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான் சந்துரு.  பிரதோஷ பூஜை முடித்து, பிரசாதத்துடன் உள்ளே நுழைந்தாள் இந்திரா. இன்னிக்கும் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்களா?  வந்து ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டிங்கல்ல, காபி போட்டுத்தரவா என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சிந்துவும் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தாள். இன்னிக்கும் இந்தப் பசங்க இங்க வந்துதான் லூட்டியடிச்சுதா? என்று எரிச்சலுடன் கேட்டவள் எப்பத்தான் இவங்க அப்பாவும் அம்மாவும் புள்ளைங்க விஷயத்துல கரிசனம் காட்டப்போறாங்களோ என்று கணவனிடம் சொன்னபடி பூஜையறைக்குப் போனாள் இந்திரா.

படுக்கையறையிலும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அங்கே உறங்கிக்கொண்டிருந்த அருணைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் அளவு மீறிப்போய்விட்டது. அழுக்குக் காலோட இதுங்கள சோபாவுலகூட நான் உக்காரவிடமாட்டேன். நீங்க என்னன்னா, படுக்கைல ஏறி அழுக்காக்கவிட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க" என்று இறைந்தவளிடம் "இதுக்குப்போயி கோவப்படுறியே இந்திரா, நம்ம வீட்ல குழந்தைங்க இருந்திருந்தா கட்டில்ல ஏறி விளடமாட்டாங்களா?" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முற்பட, "ஓ... எனக்குக் குழந்தையில்லைன்னு வேற குத்திக் காட்டுறீங்களோ?

காசு காசுன்னு இவங்க அப்பாவும் அம்மாவும் காலநேரம் தெரியாம அலையிறாங்க...அவங்க வரதுக்குள்ள இதுங்க தூங்கிடுது. காலையில, விடிஞ்சும் விடியாமலும் எழுப்பி மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பிடுறாங்க. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தண்ணியைக் குடுங்க, டிவியைப் போடுங்க ன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க. சொல்லப்போனா இதுங்க அப்பா அம்மா இதுங்ககிட்ட உட்கார்ந்து அஞ்சு நிமிஷமாவது பேசுவாங்களோ என்னவோன்னு கூடத் தெரியலை. ஆனா நாம  இதுங்களோட கேள்விக்கெல்லாம் பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு..." என்று அவள் எரிச்சலில் படபடக்க,

"நாம தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கோம்னு தைரியம்தான் இந்திரா. அவங்க ரெண்டு பேரும் குறைஞ்ச சம்பளக்காரங்க. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கணும்னா ஓவர்டைம் பாத்தாதான் ஓரளவுக்கு அவங்களுக்குக் கட்டுப்படியாகும் என்ற கணவனிடம், "ஓ, அப்போ அவங்க காசு சம்பாதிக்கிறதுக்காக நான் அவங்க புள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கணுமோ?  என்று அவள் குரலை உயர்த்திக் கூப்பாடு போட,

தெருமுனையில், நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அருணின் அம்மா அனு.  ஓவர்டைமோட சேர்த்து இந்த மாசம் ஒம்பதாயிரம் கிடைச்சிருக்கு. சிந்து கேட்ட வீடியோ கேமும், அருணுக்கு ஒரு சைக்கிளும் இந்த மாசம் கட்டாயம் வாங்கிரணும் என்று மனசுக்குள் நினைத்தபடி, முக்குக் கடை அண்ணாச்சியிடம் குழந்தைகளுக்குப் பிடித்த ரெண்டு மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்டு, ஓட்டமும்நடையுமாக வீட்டை நோக்கி வேகவேகமாய் வந்தவள் இந்திரா வீட்டில் போய்ப் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காய் அழைப்புமணியை அழுத்துவதற்குள் அங்கே கேட்ட சம்பாஷணை அவளை முகத்திலறைந்தது. ஒருநிமிஷம் செயலற்றுப்போய் நின்றுவிட்டாள் அவள்.

அதே நேரம், இந்திராவிடம் மேலும்மேலும் பேசிச் சண்டையை வளர்க்க விரும்பாத சந்துரு,  "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு பழமொழியே சொல்லுவாங்க...இருக்கிற நிலையைப் பார்த்தா இனி நமக்கு அந்த பாக்கியமே இல்லாம போயிடும்போல.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி,..."சரி, நான், கடைக்குப்போயி சிகரெட் வாங்கிட்டு வந்துடறேன். நீ கதவைச் சத்திக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.

வாசலில் நின்ற அனுவைப் பார்த்ததும் சட்டென்று அவன் முகம் சங்கடத்தில் வெளிர, அதைக் கண்டுகொள்ளாமல், அப்போதுதான் வந்தவள்போல, கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.  "இந்திராவையும் கூப்பிடுங்க... எங்க வீட்டுக்காரருக்கு அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால நான் இன்னியோட வேலையை விட்டுட்டேன். கூடிய சீக்கிரம் அந்தப்பக்கமாவே வீடு பாத்திட்டுப் போயிரலாம்னு இருக்கோம்" என்றவள், "சிந்தூ, அருண்..." என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். உள்ளிருந்து அவர்களை எழுப்பிக் கூட்டிக்கொண்டுவந்தாள் இந்திரா. அப்பாடா என்ற ஒரு விடுதலை அவள் முகத்தில் தெரிந்தது. "இன்னிக்கும் இங்கயே தூங்கிருச்சுங்களா? தேங்ஸ் இந்திரா..." என்று அவள் முகத்தைப் பார்த்து மெல்லச் சொன்னவள் பிள்ளைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அனு, சொல்வது உண்மையில்லை என்று உள்ளுக்குள் ஏதோ உணர்த்த, மறுகிய மனத்துடன் வெளியிறங்கி நடந்தான் சந்துரு.

சனி, 8 பிப்ரவரி, 2014

பாசக்காரி சிறுகதை



நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.

சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.

அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.

ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.

எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக்  காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி  உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.

முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.

பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.

அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.

அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.

சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை  நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.

பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம்  நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.

அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும்  அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின்  ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.  ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.

சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை.  பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.

இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த  தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.

எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு  சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .

உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.



புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

திங்கள், 7 நவம்பர், 2011

சிக்கிலிங்கிராமம்

திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கணேசனுக்கு விழிப்பு வந்தது. ரயில் நின்ற கையோடு, கடகடவென்று அத்தனைபேரும் இறங்கிப்போய்விட, கம்பார்ட்மெண்ட்டில் அவர்மட்டுமே இருந்தார். கையில் சுருட்டிவைத்திருந்த மஞ்சள் பையைக் கீழே வைத்துவிட்டுத் தலையை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டார். முன்னெல்லாம்,வாரநாட்களில் ஸ்ரீவைகுண்டத்தில் வேலைபார்த்துவிட்டு, வார இறுதியில் ஊருக்கு வரும்போதெல்லாம், வீட்டுக்குப்போகிற ஆசையும் அம்மா கையால் சாப்பிடுகிற ஆவலுமாய் ரயில் நின்ற கையோடு வேகவேகமா இறங்கி நடப்பார் அவர். இப்போது ஊரில் நமக்கென்று யாரிருக்கிறார்கள் என்ற விரக்திவந்து விழிகள் நிறைந்தாலும், ஊர் நினைப்போடு நாமாவது இருக்கிறோமே என்ற எண்ணத்துடன்,மெல்ல எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி நின்றார்.

போவோரும் வருவோருமாகப் பிளாட்பாரம் நெரிசலாக இருந்தது. காலையில் எழுந்ததும், வீட்டில் குடித்த செம்புத்தண்ணீர் வெறும்வயிற்றில் அலைய, எதையாவது கொண்டா கொண்டா என்று இரைச்சலிட்டது வயிறு. ரயில் நிலையத்தின் வாசலில் ஆட்டோவும், டாக்ஸிகளுமாகப் பாதையை மறைத்துக்கொண்டு நின்றன. பெரியவரே, எங்க போகணும்? என்றவாறு பின்னால் வந்த ஆட்டோக்காரரை, பக்கதுலதாம்ப்பா....வண்டியெல்லாம் வேணாமென்று விலக்கிவிட்டு, பக்கவாட்டுப்பாதையில் நடந்தார் கணேசன்.

சாலைக்குமாரசாமி கோயில் வாசலில் செருப்புகளைக்கழற்றிவிட்டு , ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கும்பிட்டுவிட்டு நிமிர்ந்தார் கணேசன். சுற்றிலும் நடைபாதைக்கடைகளில், பழங்கள், காய்கறிகள், பழைய புத்தகங்கள், பாத்திரங்களென்று விற்பனைக்கு எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள் வியாபாரிகள். மெல்ல ரயில்வே லைன்வழியாக நடந்தார். ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே சிக்கிலிங்கிராமத்து வயல்காற்று தொட்டுத் தழுவிக்கொண்டதுபோலிருந்தது அவருக்கு.

இப்போதிருக்கிற தலைமுறைப் பிள்ளைகளிடம் சிக்கிலிங்கிராமம் என்று சொன்னால் நிச்சயமாய் அவர்களுக்குத் தெரியாது. சிக்க நரசய்யன் கிராமம் என்கிற பெயரைப் பழைய தலைமுறை மக்கள் பாசமாய் சிக்கிலிங்கிராமமென்று சொல்ல, இப்போதிருக்கிற மக்கள் அதை சி.என்.வில்லேஜ் என்று நாகரீகமாய்ச் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.

வேகவேகமாய்க் கடந்துபோகிற வாகனங்களைப் பார்த்தபடி தெருவோரமாய் நடந்தார். "ஏடே,கணேசா, எப்டிப்பா இருக்கே...எவ்வளவு நாளாச்சு ஒன்னப்பாத்து. உடம்புக்கெல்லாம் எப்டி, சௌரியம்தான? என்றபடி நரைத்த தாடியும் மீசையுமாகக் கிட்டத்தில் வந்தவரைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை கணேசனுக்கு. "நீங்க..." என்று தயங்கியவரைப்பார்த்து, "பாத்தியா, ஆளையே தெரியல உனக்கு. அதுக்குத்தான் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து போகணும்கிறது என்றவர், மரக்கடை முத்துவேல் மகன், உன் சிநேகிதன் சோமு என்றபடி கையைப்பிடிக்க,"அடடே சோமுவா நீ? என்னய்யா, ஆளேமாறி அடையாளம்தெரியாமபோயிட்ட? என்றவாரு அவரைத் தோளுடன் சேர்த்தணைத்துக்கொண்டார் கணேசன்.

சோமுவுக்கும் கணேசனுக்கும் சிக்லிங்கிராமத்தில் பக்கத்துப்பக்கத்துவீடுதான். எட்டாவதுவரைக்கும் சாஃப்டர் ஸ்கூலில் ஒன்றாகத்தான் படித்தார்கள். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, அப்பா வைத்திருந்த மரக்கடைக்கு வேலைக்குப்போய்விட்டார் சோமு. படித்துமுடித்து பத்தொன்பதாவது வயதிலேயே பள்ளிக்கூட வாத்தியாரானார் கணேசன். சின்னவயசில் சோமுவும் கூட்டாளிகளுமாய்ச் சேர்ந்து பக்கத்துத் தோப்பில் மாம்பழம் திருடிய கதையெல்லாம் நினைவுவந்தது கணேசனுக்கு. நன்றாகக் கனிந்த மாம்பழங்களைப் பறித்து, கல்லில் வைத்து உருட்டியெடுத்து, சின்னதாய்த் துளையிட்டு, உள்ளேயிருக்கிற சாறைக்குடித்துவிட்டு, அதில் காற்றை ஊதிக் கண்ணுக்குப்படுகிறமாதிரி வைத்துவிட்டு வருவார் சோமு. தோட்டத்துக்கு வருகிற தோட்டக்கார மாரிமுத்துத் தாத்தா, அதை எடுத்துப் பார்த்து ஏமாந்துபோய், ஏழெட்டு ஊருக்குக் கேட்கிறமாதிரி அந்தப்பயபுள்ள, இந்தப்பயபுள்ள என்று அப்பாக்களையும் சேர்த்து வைதுவிட்டுப்போவார்.இப்ப நினைத்தாலும் சிரிப்புவந்தது அவருக்கு.

இப்ப அந்த இடத்தில் தோப்புமில்லை மாமரங்களுமில்லை, வரிசையாக வீடுகட்டிப் பெரிய குடியிருப்பாக்கியிருந்தார்கள். அப்புறம், எப்டியிருக்கே சோமு? உன் வீட்டம்மா சௌக்கியமா? மக்களெல்லாம் உன்னை நல்லாப் பாத்துக்கிறாங்களா? போனமுறை வந்தப்ப நீ வெளியூர்ல இருக்கிறதாச் சொன்னாகளே? என்றபடி அவரைப்பார்த்து ஆதுரமாய்க் கேட்டார் கணேசன். பதில் சொல்லாமல், கோயில் பக்கம் பார்வையை ஓட்டினார் சோமு. என் வீட்டுக்காரிக்கு உடம்புக்கு சொகமில்லாம மதுரை ஆஸ்பத்திரியில வச்சிருந்தோம் கணேசா. ரெண்டுமாசம் முன்னால அவளும் மேல போயிட்டா. சாவுக்கு வந்த புள்ளைக, பதினாறு கழிஞ்சதும் அதது வேலைமுடிச்சிருச்சுன்னு ஊருக்குப் போயிட்டாக. இப்ப நா மட்டுந்தான் இருக்கேன். குறுக்குத்துறை முருகனும், சாலைக்குமார சாமியும்தான் சதம்னு நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். நீ எப்படியிருக்கே? உன் வீட்ல எல்லாரும் சௌரியமா? ஏன் ஒத்தையா வந்துருக்கே? கூட யாரையாவது கூட்டிட்டு வரலாம்ல என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் சோமு.

அவுகவுக வேலையப் பாத்துக்கிட்டு எல்லாரும் நல்லாருக்காகடே. எனக்குத்தான் நம்ம ஊரு,சாமி, இன்னும் மக்க மனுஷங்க ஞாபகமெல்லாம் அடிக்கடி வந்துருது. அப்படி வரும்போதெல்லாம் பையன்கிட்ட சொல்லிட்டு, கொஞ்சம் காசையும் வாங்கிக்கிட்டு இங்க வந்துருவேன்.நாள்முழுக்க நம்ம ஊர்த் தண்ணியையும் காத்தையும் நல்லா அனுபவிச்சிட்டு, சாயங்காலத்து ரயில்ல திரும்பிப்போயிருவேன். மாசத்துக்கொருக்கா வந்துட்டுத்தான் இருக்கேன். உன் சம்சாரம் தவறின விஷயம் தெரியாமப்போச்சுது சோமு என்று ஆறுதலாய் அவர் கையைபிடித்துக்கொண்டார் கணேசன்.

அது கிடக்குது விடு.உனக்குத்தான் மாசாமாசம் பென்சன் பணம் வருமுல்ல...அப்புறம் எதுக்கு மகன் கிட்ட கையேந்தணும்? என்றார் சோமு. அதெல்லாம் கையெழுத்துப்போட்டுக் குடுக்கிறதோட சரி சோமு. அவனாப்பாத்து செலவுக்கு ஏதாவது குடுப்பான். சிலசமயம் அதுவுங்கூட மறந்துபோயிரும் அவனுக்கு. ஆனா, என்னதான் நடந்தாலும், மாசத்துக்கொருவாட்டி வந்து நம்ம மண்ணை மிதிக்காம இருக்கிறதில்லை என்றார் கணேசன்.

சொல்லச்சொல்லக் கேக்காம, இங்க அரமனைமாதிரியிருந்த வீட்ட வித்துப்புட்ட. அதுமட்டும் இருந்திருந்தா வந்த காலோடு திரும்பாம நாலுநாள் இங்க தங்கணும்னு தோணியிருக்கும்ல என்றார் சோமு. என்ன பண்றது சோமு, உபயோகமில்லாத பழைய பொருளையெல்லாம் உடனே வித்துப் பணமாக்கிரணும்னு பாக்குதுக இந்த காலத்துப் புள்ளைங்க. என்ன செய்ய? அழுத்திக் கேட்டாக. அதான் வித்துக்குடுத்துட்டேன் என்றார் கணேசன். "ம்ம்...சொத்துசொகம் மட்டுமில்ல, சொந்தத்துலகூட பழசாகி, உபயோகமில்லாமப் போச்சுன்னா உதறத்தான் செய்யிறாங்க" என்றபடி, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சோமு.

அதைவிடு கணேசா, நம்ம கூட்டாளிகள் நாலுபேர்ல, இப்ப நீயும் நானும்தான் இருக்கோம். மத்தவங்கல்லாம் போய்ச் சேர்ந்துட்டாங்க. சரிய்யா...ஒன்னப்பாத்ததுல இன்னிக்கி ரொம்ப சந்தோசம். நான், நம்ம குறுக்குத்துறைவரைக்கும் போறேன். நீயும் கூட வரியா என்றார் கணேசன். இல்ல, கணேசா...நீ போயிட்டு வா.எனக்கு அவ்வளவுதூரம் நடக்கத் தோதுப்படாது. நா இங்க கோயில் திண்ணையிலதான் உக்காந்திருப்பேன் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுத் திரும்பி நடந்தார் கணேசன். அதற்குள், பின்னாலிருந்து கணேசா... என்று மெல்லமாய்க் கேட்டது சோமுவின் குரல். என்னய்யா, என்றபடித் திரும்பினார் கணேசன். அடுத்ததடவை நீ இங்க வரும்போது, நான் இருப்பனோ மாட்டனோ...என் வீட்டுக்காரி போனதுக்கப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிட்டும் நாளாகிப்போச்சுது. இப்ப, உங்கூட சேர்ந்து ஒருபிடி சாப்பிடணும்னு தோணுது கணேசா என்று மெல்லமாய்ச் சொன்னார் சோமு. பக்கென்று தொண்டைக்குழிக்குள் அடைத்தது கணேசனுக்கு.

சிறுவயசில்,சிக்கிலிங்கிராமத்துக்கே செல்லப்பிள்ளை சோமு. எல்லார் கூடவும் நல்லாப் பேசுவான். என்ன வேலை சொன்னாலும் செய்வான். பள்ளிக்கூடத்துக்கு வரும்போது கால்சட்டைப்பைக்குள் நெல்லுப்பொரியும் அச்சுவெல்லமும் அள்ளிப் போட்டுக்கொண்டுவருவான். வழி நெடுக அவன் அள்ளியள்ளித்தர ரெண்டுபேரும் தோளில் கைபோட்டுக்கொண்டே கதைபேசிக்கொண்டு நடப்பார்கள். மரக்கடைக்கு வேலைக்குப்போனபிறகும்கூட, பள்ளிக்கூடம் விடும் நேரத்துக்கு, வாசலில் சைக்கிளில் வந்து நிற்பான். அண்ணாச்சி கடையில் வறுத்தகடலை வாங்கிக்கொடுப்பான். அம்மா செய்ததாகச்சொல்லிக் கொழுக்கட்டை கொண்டுதருவான்.பள்ளிக்கூடத்திலிருந்து, விடாமல் பேசிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டு மறுபடியும் வேலைக்குப்போவான். அவனுக்கா இந்த நிலைமை ஆறவில்லை அவருக்கு.

தோழனின் கையைப்பிடித்து மறுபடியும் சாலைக்குமாரசாமி கோயில்பக்கம் இருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துச்சென்றார் கணேசன். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் என்ன சாப்பிடுறே சோமு? என்றார். ரெண்டு வடையும் ஒரு தோசையும் சொல்லு கணேசா என்றார். தனக்கும் அதையே கொண்டுவரச்சொன்னார். ருசித்துச் சாப்பிட்ட சோமுவைப்பார்த்துக்கொண்டே தானும் சாப்பிட்டார் கணேசன். ஆளுக்கொரு காப்பியும் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியில் வந்ததும், கணேசா, நீ குறுக்குத்துறைக்குப் போயிட்டுவா. எனக்கு மனசும் வயிறும் நெறஞ்சிருக்கு. நா இங்க கோயில் திண்ணையில கொஞ்சநேரம் தூங்குறேன். திரும்பி வரும்போது கட்டாயம் என்னப் பாத்துட்டுத்தான் போகணும் என்றார் சோமு. சரியென்று தலையசைத்துவிட்டுச் சிரித்தபடி நடந்தார் கணேசன்.

குறுக்குத்துறைக்குப்போனதும், படித்துறையில் உட்கார்ந்து, கைநிறைய ஆற்று நீரை அள்ளிக்குடித்தார். சட்டை நனைந்து நெஞ்சு குளிர்ந்தது அவருக்கு. முருகனைக் கும்பிட்டு, மனசிலிருந்த கவலையெல்லாம் முறையிட்டுவிட்டு, பின்பக்கத்து மண்டபத்துக்கு வந்து சரிந்து உட்கார்ந்தார். சின்ன வயசில் அம்மாவுடன் ஆற்றில் குளிக்கவரும்போது,குளித்தபின் அங்கே நின்றுதான் அம்மா உடைமாற்றிக்கொள்ளுவாள். அம்மா உடுப்புமாற்றுகிற வரைக்கும், ஆற்றில் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருப்பார் கணேசன். பைக்குள்ளிருந்து துண்டை எடுத்து விரித்துக்கொண்டு கால்களை நீட்டிப்படுத்தார். அம்மா மடியில் படுத்துக்கொண்ட அதே சுகம் தெரியக் கண்களை மூடிக்கொண்டார். சற்றுநேரம் உறங்கி எழுந்திருக்க, உடம்பும் மனசும் இலேசானதுபோலிருந்தது அவருக்கு. ரயிலுக்கு நேரமாகிவிட்டிருந்தது. சோமுவைப் போய்ப்பார்க்க நேரமில்ல. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நடந்தார். இரவு எட்டரைக்கெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டார்.

மறுநாள், காலையில், வீட்டுத்திண்ணையில் சாய்வுநாற்காலியில் கண்ணைமூடிப் படுத்திருந்தார் கணேசன். தொலைபேசி மணியடித்தது. எடுத்துப்பேசிய அவருடைய மகன் சரவணன்,"அப்பா, சிக்கிலிங்கிராமத்தில, உங்க சினேகிதர் சோமுங்கிறவர் நேத்து இறந்துபோய்ட்டாராம்" என்று சொல்ல, "குடுத்துவச்சவன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணைமூடிக்கொண்டார் கணேசன்.


செவ்வாய், 25 அக்டோபர், 2011

தித்திப்பாய் ஒரு தீபாவளி!


டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திறந்து கடைக்குள் நுழைந்தார் கதிரேசன். காலையிலேயே, தீபாவளிக்கான கடைசிநேர வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. காசை வாங்கிப்போடுவதும் கடன் சொல்லுபவர்களுக்குக் கணக்கெழுதிவைப்பதுமாக விறுவிறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

முதலாளி கதிரேசன் உள்ளே நுழைந்ததும் அவரது கண்களை ஒரேயொரு வினாடி நேரடியாகச் சந்தித்து மீண்டது கருணாகரனின் கண்கள். ஒன்றும் விசேசமில்லை என்று அந்தப் பார்வையிலிருந்து புரிந்துகொண்டார் கதிரேசன். மனசுக்கு சங்கடமாயிருந்தாலும் பிரச்சனையைத் தன்னால் தீர்த்துவிடமுடியுமென்ற தெளிவோடு தானும் கடைப்பையன்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் மூழ்கினார் கதிரேசன்.

பதினோருமணி சுமாருக்குக் கடையில், கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது. தனக்கும் மற்றவர்களுக்கும் தேனீர் வாங்கிவரச்சொல்லிவிட்டு, கணக்கப்பிள்ளையிடம் கல்லாவில் எவ்வளவு தேறும் பாருங்க என்றார் கதிரேசன். சில்லறையும் தாளுமா ரெண்டாயிரத்துக்கிட்ட இருக்கும்ங்க, என்ற கணக்கப்பிள்ளை, "அண்ணாச்சி, நாம வேணும்னா டீச்சர் வீட்டுக்கும், வக்கீலய்யா வீட்டுக்கும் ஒருதடவை ஆளனுப்பிக் கேட்டுப்பாப்பமா?" என்றார்.

"இல்லையில்லை...வேணாம் கணக்கு...அவுக ரெண்டுபேரும் கைக்குக் காசு வந்ததும் தவறாம கொண்டுவந்து குடுக்கிறவங்க. என்ன பிரச்சனையோ, இப்பக் கொஞ்சம் தாமதமாயிருச்சு. நாமளா போய்க் கேட்டா சங்கடப்படுவாக" என்று அவசரமாய்க் கதிரேசன் மறுக்க, "அதுவும் சரிதான்... "என்றபடி அமைதியாகத் தன் கோப்பைத் தேநீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார் கணக்கு கருணாகரன்.

கடையின் மற்ற சம்பளக்காரர்களுக்கெல்லாம் ஒருவாரம் முன்னதாகவே சம்பளம் போட்டுவிட்டார் கதிரேசன். தீபாவளிக்கென்று, புதுக்கம்பெனியொன்றிலிருந்து, முறுக்கு, சீடை, மைசூர்பாகு, சோன்பப்டியென்று நிறைய வாங்கி அடுக்கிவிட்டதால், கையிருப்புக் கரைந்துவிட, கடைசியில், கணக்குப்பிள்ளைக்கும் தன் வீட்டுச் செலவுக்கும் பணம் தட்டுப்பாடாகிப்போனது அவருக்கு. அதற்கு, முக்கியமான ரெண்டு இடத்திலிருந்து வரவேண்டிய பணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கதிரேசன். அந்தப் பணம் மட்டும் கிடைத்திருந்தால் தீபாவளிக்கு முந்தினநாளில் உட்கார்ந்து, காசுக்காக யோசித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்காதே என்ற எண்ணம் ஓடியது அவர் மனதில்.

மதியத்துக்குமேல் வீட்டுக்குத் துணியெடுக்க விடுப்புக்கேட்டிருந்தார் கணக்கு.  அதற்குள், எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேயென்ற தவிப்பு கதிரேசனுக்கு. அவரிடம், "கடையைப் பாத்துக்கங்க கணக்கு, நான் வீடுவரைக்குப் போயிட்டுவந்துர்றேன் என்றார் கதிரேசன். அவரது மனதின் நோக்கம் புரிந்த பதைப்புடன், "அண்ணாச்சி, இப்ப ஒண்ணும் அவசரமில்லை. வருசாவருசம் தீபாவளி வரும். பணம் வரட்டும் நாம பாத்துக்கிடலாம்" என்றார் கணக்குப்பிள்ளை கருணாகரன். அவரைத் திரும்பிப்பார்த்துப் புன்னகைத்த கதிரேசன், காசுக்காகக் கத்திச் சண்டைபோடுகிற வேலையாட்களுக்கு மத்தியில் இத்தனை நல்ல ஊழியர் கிடைத்திருக்கிற சந்தோஷத்துடன்  "இருங்க, நான் இப்ப வந்துர்றேன்..." என்றபடி புறப்பட்டார்.

வீட்டுக்குள் நுழையும்போதே அதிரச வாசனை ஆளைத் தூக்கியது. "அடடா, அதுக்குள்ள சாப்பாட்டு நேரமாயிருச்சா? காலையிலயே, பலகாரம் செய்ய உட்காந்ததால, சமையல் கொஞ்சம் தாமதமாயிருச்சு என்றபடி, கழுவின கையைத் தலைப்பில் துடைத்தபடி அடுப்படியிலிருந்து வெளியில் வந்தாள் கற்பகம்.

கைச்செலவுக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் அவருக்குக் கடைசியாய் உதவுகிற அட்சயபாத்திரம் அவள்தான். "ஒண்ணும் அவசரமில்லம்மா... நீ நிதானமாப் பண்ணு. நான் ஒரு அவசரமான வேலையா வந்தேன்" என்றபடி அமர்ந்தவர், மெல்ல அவளுடைய முகத்தை நிமிர்ந்துபார்த்தார்.

என்ன கேட்டாலும் மறுக்காத மனைவியென்றாலும், அவளை நல்லநாளும் அதுவுமாய் சங்கடப்படுத்தப்போகிறோமேயென்று கதிரேசனின் மனசு மறுகியது. தாலிக்கொடியும் ரெண்டு வளையலும் தவிர, ஒரு ரெட்டைவடச் சங்கிலியுண்டு அவளிடம். விசேச நாட்களில் மட்டும் அந்த ரெட்டைச்சரம் அவள் கழுத்தில் மின்னும். மற்றபடி அநேக நாட்கள் அடகுக்கடையிலோ அல்லது அடுப்படி அலுமினிய டப்பாவிலோதான் இருக்கும்.

கறுப்புக்கு நகை போட்டா கண்ணுக்கு நிறைவா இருக்கும்னு அப்ப அம்மா சொன்னமாதிரி, அந்த ஒத்தை நகையைப்போட்டதும் பட்டுன்னு ஒரு பிரகாசம் கூடிரும் அவ முகத்தில். அந்தப் பிரகாசத்தை நாளைக்குப் பார்க்கமுடியாதேயென்ற தவிப்புடன், கைவிரல்களால் கணக்குப்போட்டபடி குனிந்து உட்கார்ந்திருந்தார் அவர். "என்னங்க, உடம்புக்கு முடியலியா? காலையிலேருந்து கடையில நிறைய வேலையா? சூடா காப்பி போட்டுத்தரவா?" என்றபடி அவருடைய நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள் அவள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..." என்றவர்,  "குடிக்க ஒரு டம்ளர் தண்ணி எடுத்துக்கிட்டு, அதோட, அந்த..." என்று தொடங்கியவர், "சொல்ல மறந்துபோச்சுங்க..." என்றபடி அவள் ஆரம்பிக்கவும்,  முகத்தைப்பார்த்து நிறுத்தினார். "நம்ப டீச்சரம்மா இல்ல, அவங்க வீட்ல, ஊர்லேருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்களாம். அதனால,கடைப்பக்கம்வந்து காசு குடுக்க முடியலன்னு, இப்பத்தான் வந்து ஆறாயிரம் பணமும், அவங்க வீட்ல செஞ்ச அச்சுமுறுக்கும் கொண்டுவந்து கொடுத்துட்டுப்போனாங்க" என்றாள் கற்பகம்.

"அடக் கழுத... இத, நான் வந்ததும் சொல்லியிருந்தா நான் இங்க உக்காந்துகிட்டு, உன்னயும் உன் அழகையும் நினைச்சு மறுகியிருக்கமாட்டேன்ல்ல" என்றபடி கண்கள் மின்னச் சிரித்தார் அவர். கணவனின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டவளாக, "ஓ...நீங்க ரெட்டைவடத்தைத் தட்டிட்டுப்போக வந்தீங்களாக்கும்" என்றபடி சிரித்தவள், "ஒண்ணும் பிரச்சனையில்லை, அதிகமாக் காசு தேவைப்பட்டா அதையும் வேணுன்னா கொண்டுபோங்க" என்றாள்.

"அதெல்லாம் இனி தேவைப்படாது கற்பகம். இப்பவே ஆரம்பிச்சாச்சு நமக்கு தீபாவளி என்றவர், நீ, சாயங்காலம், பிள்ளைகளைக் கூட்டிட்டுப்போயி, அவுங்களுக்குப் பிடிச்ச பட்சணம், பட்டாசு எல்லாம் வாங்கிக்குடு. கடையடைச்சிட்டு வரும்போது நான் எல்லாருக்கும் துணியெடுத்துட்டு வந்துர்றேன்.  இப்போதைக்கு, நீ செஞ்சு வச்சிருக்கிற அதிரசத்துல, கொஞ்சம்  எடுத்துக்குடு என்றபடி, வாசலை நோக்கி நடந்தார் அவர்.

அலைபேசி ஒலித்தது. குரலிலேயே விஷயம் புரிந்தது அவருக்கு. "அண்ணாச்சி, நீங்க புறப்பட்ட பத்தே நிமிஷத்துல வக்கீலய்யா வீட்லருந்து மொத்தப் பணமும் வந்திருச்சு. நீங்கவேற அவசரப்பட்டு வேற எந்த ஏற்பாடும் செஞ்சிடாதீங்க..." என்றார் கணக்கப்பிள்ளை கருணாகரன்.

சந்தோஷம் கணக்கு...இங்கயும் ஒரு வரவு வந்திருக்கு. நான் இப்பவே, இனிப்போட வரேன். இந்த தீபாவளி நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான தீபாவளிதான் என்றபடி, அலைபேசியை அணைத்துவிட்டு, மனைவியின் பக்கம் திரும்பினார் கதிரேசன். கணவனின் சந்தோஷத்தைப்பார்த்து கற்பகத்தின் முகமும் மகிழ்ச்சியில் நிறைய, ரெட்டைவடம் போடாமலே இன்னிக்கி ரெட்டை அழகாயிருக்கே நீ"  என்றபடி மனைவியின் கன்னத்தில் தட்டிவிட்டுக் கடைக்குப் புறப்பட்டார் கதிரேசன்.

புதன், 15 ஜூன், 2011

சொல்லும் கொல்லும்!

படம்: "இணையத்திலிருந்து"


மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.

"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.

அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து  சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும்  பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா கத்த ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள் மகள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.

இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.

சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.

பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.

மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை.  "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.

"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட,  வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி.

"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.
 'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.

அதற்குள்,  "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.

என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை  பரமசிவம்.

 அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.

சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.

ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.

சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று.

நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு  'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.

ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை  ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.

அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.

"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப்  பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கடைசி சொட்டுக் கண்ணீர்.


ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஒன்றொடு இன்னொன்று!

வசு, இந்த ஒருவிஷயத்தைமட்டும் எனக்காகச் செய்யிம்மா...சஷ்டியில இருந்தா அகப்பையில வரும்னு அந்தக் காலத்துலயே சொல்லிவச்சிருக்காங்க.அதனால, சஷ்டியில, ஒரே ஒருநாள்மட்டும் விரதமா இருந்து, நாம திருச்செந்தூருக்குப் போயிட்டுவருவோம். என்னோட நம்பிக்கைக்காக இதுக்குமட்டும் நீ சம்மதிச்சா, நிச்சயம் அந்த முருகன் கருணையால நம்ம வீட்லயும் குழந்தைச்சத்தம் கேக்கும்...திரும்பத்திரும்பச்சொன்ன மாமியாரின் வார்த்தைகள் இளகவைத்தன வசுமதியின் பிடிவாதத்தை.

சரி அத்தை...உங்க விருப்பத்துக்காக நான் வரேன்.சொல்லாம போனோம்னா திட்டுவாங்க...அதனால, சென்னைக்குப் போயிருக்கிற உங்க மகனுக்கு ஒரு ஃபோன் பண்ணிச்சொல்லிட்டு, நாம புறப்படுவோம்னு ஒருவழியா ஒத்துக்கிட்டா வசு. மூன்றுமுறை அழைத்துப்பார்த்தாயிற்று, சரவணனின் கைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அம்மாடி, நீ எங்கூடத்தானே வர்றே, அவன் ஒண்ணும் சொல்லமாட்டான். போற வழியில திரும்பவும் ஃபோன் பண்ணிப்பார்த்து, விஷயத்தை அவங்கிட்ட சொல்லிக்கலாம். நீ குளிச்சிட்டு, வெறும்வயிறாப் புறப்படு...கோயிலுக்குப்போயி, சாமி தரிசனம் பண்ணிட்டு, நாம சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னபடி வேகவேகமாக் குளிக்கப்புறப்பட்டாள் வசுமதியின் மாமியார். கண்ணைமூடுவதற்குள் எப்படியாவது ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்துவிடவேண்டுமென்ற பரிதவிப்பு அவளுக்கு.

வசுமதிக்கும் சரவணனுக்கும் கல்யாணமாகி மூன்று வருஷம்தான் ஆகியிருந்தது. சரவணனுக்கு வசுமதி தூரத்து சொந்தம்தான். கல்யாணமானபின்னாலும்,வியாபார விஷயமாக மாதத்தில் பாதிநாள் வெளியூருக்குப் போய்விடுவான் சரவணன். வசுமதியும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததால், அவளுக்கும் சரவணனின் தொழில்முறைப் பயணங்கள் அத்தனை பாதிப்பைக்கொடுத்ததில்லை.

அன்றைக்கும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் எப்பவும்போல கூட்டமாய்த்தான் இருந்தது. வரிசையாக நான்கு பஸ்போனபிறகு, ஐந்தாவது பஸ்சில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. திருச்செந்தூர் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தரிசனத்துக்கான வரிசை, வாசலைத் தாண்டி வெளியேயும் நீண்டிருந்தது.டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, வரிசையில் நின்றார்கள் வசுமதியும் அவள் மாமியாரும்.

வரிசை நகராமலே இருந்தது. உள்ளே சாமிக்கு அலங்காரம் ஆயிட்டிருக்கு. திரைபோட்டிருக்காங்க அதனாலதான் நகரலை... என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். வாசல் முகப்பில், முருகன் வள்ளி தெய்வானையோடும், கூடவே மாலையோடு நிற்கும் யானைகளோடும் காட்சியளித்தார். தரிசனத்துக்காக வரிசையில் நின்றாலும், வசுமதியின் மனசு பள்ளிக்கூடத்தில்தான் இருந்தது. இப்ப கடைசி பீரியட் நடந்துகொண்டிருக்கும் என்று தன் வாட்சைப் பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் வசுமதி.

அப்போது, 'வீலெ'ன்று ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. கோயில்வாசலின் வலதுபக்கம், காதுகுத்துமிடத்தில், மொட்டைபோட்ட ஒரு சின்னக் குழந்தைக்குக் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் ஒன்றிரண்டுபேர் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த வசுமதியின் மாமியார்,"நான் நினைச்சமாதிரியே ஒரு வாரிசைக் கொடுத்துட்டா, குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல, இங்கவந்து பிள்ளைக்கு மொட்டையெடுத்துக் காதுகுத்தி வாளிபோட்டு விடுறேன் முருகா" என்று வசுமதிக்குக் கேட்கிறாற்போல, வாய்விட்டு வேண்டிக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா, வசுமதியின் மாமியார்.

காதுகுத்திய குழந்தையை ஒவ்வொருத்தராய் மாற்றி, அழுகையை நிறுத்தப்பார்த்தும் முடியாமல்போக, இந்தா,அப்பா பாரு, அப்பா பாரு... என்று அதன் அப்பாவிடம்கொண்டு காட்டினாள் குழந்தையின் அம்மா. திரும்பி உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையின் அப்பா, எழுந்து, குழந்தையை வாங்கினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்த நிமிஷத்தில், ஆடிப்போனாள் வசுமதி. அதிர்ச்சியில் தன் மாமியாரின் தோளைத்தொட்டு, அங்கே கையை நீட்டிக்காட்டினாள் அவள்.

கைகாட்டியதிசையில், கையில் குழந்தையுடன் தன் மகன் சரவணனைப் பார்த்ததும், கணநேரத்தில் விஷயத்தை கிரகித்துக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா. ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டுவர,வரிசையிலிருந்து வெளியேறி அவனருகில் சென்றவள், "அடப்பாவி, நல்லாருப்பியாடா நீ...பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் தெரியாம, இங்கே இன்னொரு வாழ்க்கையா நடத்திக்கிட்டிருக்க? இந்தப் பொண்ணோட பாவம், உன்னைச் சும்மாவாடா விடும்?

வேலைவிஷயமாப் போறேன் போறேன்னு சொல்லி இப்படி வப்பாட்டி வச்சுக்கிட்டு நம்ம வம்சத்துப் பேரையே கெடுத்திட்டியேடா பாவி...என்று வாய்விட்டு அரற்றினாள் முத்துலட்சுமி. சுற்றியிருந்தவர்கள் வசுமதியைப் பரிதாபமாகப் பார்க்க, அதற்குள், அப்பா என்றபடி வந்து, இன்னொரு ஐந்துவயசு மதிக்கத்தக்க குழந்தையொன்று, சரவணனின் கையைப்பிடித்தபடி,சத்தம்போட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை ஏறிட்டது.

அஞ்சு வயசுல அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்குதா? அப்போ, நாந்தான் அவருக்கு ரெண்டாம்தாரமா? ஐயோ, இப்படி ஏமாந்திருக்கேனே... என்று வசுமதிக்குள் உள்ளூர எழுந்தது ஓவென்ற ஒரு அழுகை. கூடவே,பசித்த வயிறும் வேதனையும் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டுவர, சரிந்துவிழுந்தாள் வசுமதி. அவளை,வரிசையிலிருந்து வெளியே கூட்டிப்போய் உட்காரவைத்து,முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் ஒரு பெண்மணி.

"வருத்தப்படாத தாயி, தன்னோட சபலத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும், சாமிக்கே ரெண்டு சம்சாரம் கட்டிவச்சுப்பார்க்கிற சமூகம் இது...இதையெல்லாம் எதிர்கொண்டு நாமளும் இந்த பூமியில தைரியமா வாழ்ந்துதான் தீரணும்...மனசைத் தளரவிடாதே" என்றபடி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அந்த அம்மா.

மகனிடம் கத்திப் புலம்பிக்கொண்டிருக்கையில், மயங்கிவிழுந்த வசுமதியைப்பார்த்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் முத்துலட்சுமியம்மா.ஒரு பேரப்பிள்ளையாவது வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தபோது, ஒன்றுக்கு ரெண்டு பேரக்குழந்தைகளைக் கண்முன்னால் பார்த்தபின்னாலும், அதைக் கொண்டாடாமல், தனக்காகக் கண்ணீர்விட்டு அழுத மாமியாரை நினைக்கையில் மனசு இளகியது வசுமதிக்கு.

அப்போது, என்னை ஏமாத்திட்டு, இங்கே இன்னொருத்தியைக் கட்டிவச்சிருக்கியா? பெத்தவுங்களும் இல்ல, உறவுன்னும் யாரும் பெருசா இல்லேன்னு சொல்லி என்னையும் பிள்ளைகளையும் ஏமாத்திட்டு, இத்தனை கள்ளத்தனம் பண்ணியிருக்கியே, நீயெல்லாம் மனுஷனா? உன்னோட சுகத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும் என்ன வேணும்னாலும் செய்வியா நீ? அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னாலமுடியாது என்றபடி, பிள்ளைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு, தன் தாய் தந்தையுடன் நடந்தாள் சரவணனின் முதல் மனைவி.

இருதலைக்கொள்ளி எறும்பாகத் திகைத்துநின்ற சரவணனைப் பார்த்தாள் வசுமதி.பெண்களென்றால் கிள்ளுக்கீரைகளென்று நினைத்த அவனுக்குத் தனிமையும் நிராகரிப்பும்தான்தான் சரியான தண்டனை என்று எண்ணியது அவள் மனது. இதழ்களில், ஏளனம் நெளிய,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். கால்கள் நடுங்கினாலும்,மனசை உறுதியாக்கிக்கொண்டு நிமிர்ந்துநின்றாள். அழுதுகொண்டிருந்த தன் மாமியாரைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கோயிலைவிட்டு வெளியே நடந்தாள்.

சொந்தக்காலில் நின்று அவனுக்கு முன்னால் ஜெயித்துக்காட்டவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது அவளுக்குள். இனிமேல் தான் போகவேண்டிய பாதையை மனதில் தீர்மானித்துக்கொண்டவளாய், திடமாக்கிக்கொண்ட மனதோடும்,தெளிவுடனும் திரும்பிநடந்தாள் வசுமதி. பின்னால், ஆர்ப்பரித்த அலைக்கரங்களுடன் அவளது முடிவை ஆமோதித்தது கடல். 

*******  

திங்கள், 13 டிசம்பர், 2010

அறை எண் ஐம்பத்தாறும் அக்காவின் பாசமும்!


 குழந்தைக்குத் திருச்செந்தூரில் முடியெடுத்துக் காதுகுத்தப்போறதா கதிரேசன் நாலுநாள் முன்னாடியே வந்து அழைச்சிட்டுப் போயிருந்தான். செல்வியும் அவள் கணவன் சண்முகமும் காலையிலேயே திருச்செந்தூருக்கு வந்துட்டாங்க.  மொட்டையடிச்சிட்டு வந்து, காதுகுத்தப் போகும்போது, தன் மகளுக்கு, அக்கா செல்வி வாங்கிட்டு வந்த கம்மலை  வச்சுத்தான் காதுகுத்தணும் என்று சொன்னான் கதிரேசன். செல்விக்கும் சண்முகத்துக்கும் மெத்தச் சந்தோஷமாயிருந்தது.

மதியம் மணி ஐயரில் சாப்பிட்ட கையோடு,  வந்திருந்த உறவுக்காரங்கல்லாம் ஆளாளுக்குக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. ஆளுக்கொரு ஸ்வீட் பாக்கெட் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பிவைத்தான் கதிரேசன். "அக்கா, நீயும் அத்தானும் வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்" என்றான் செல்வியிடம்.

"இல்ல, கதிரேசா... நானும் அத்தானும் இங்கேருந்து அப்டியே பழனிக்குப் புறப்படுறோம். பழனிலேர்ந்து வந்ததும் பஞ்சாமிர்தத்தோட வீட்டுக்கு வாரேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாங்க செல்வியும் சண்முகமும்.

"செல்வி, பழனிக்கு விடிகாலை மூணு மணிக்கு ஒரு பஸ் இருக்கு. அதுல புறப்பட்டா வசதியா இருக்கும்.  அதனால, இங்கயே ஒரு ஹோட்டல்ல தங்கி ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாம்" என்றார் சண்முகம். சரியென்றாள் செல்வி.

கோவிலுக்குப் பக்கத்திலேயே அறைகள் இருந்தது. ஆனா, ஒண்ணொண்ணும் ரொம்ப வித்தியாசமாத் தெரிஞ்சுது. முதலில் இருந்த விடுதிக்குள் நுழைஞ்சாங்க ரெண்டுபேரும்.  ரிசப்ஷனில் இருந்தவனின் தோற்றம், ஏதோ திரைப்படத்தில் பார்த்த ஆதிகால மனிதனை நினைவுபடுத்தியது செல்விக்கு.

பேர் விலாசம் எழுதிக்கொண்டபின், சாவியைக் கையில் கொடுத்து உதவியாளரையும் கூட அனுப்பிவிட, உதவியாள் கதவைத் திறந்து லைட்டைப் போட்டான். அறையின் ஓரத்தில் கட்டிலும், அருகில் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. அறையின் சுவர்களில் ஒன்றிரண்டு ஓவியங்கள். ஒவ்வொன்றும் தன்னையே உறுத்துப் பார்க்கிறமாதிரி இருக்க, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவள். செல்வியின் கண்கள் அறையின் மிச்சப்பகுதியைச் சுற்றிவந்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. ஒரு அடி முன்னே சென்று பார்த்தவள், "ஐயோ பாம்புங்க..." என்று அலறினாள் அவள்.

சுவரோரமாய்ச் சுருண்டிருந்தது அந்தப் பாம்பு. குறைஞ்சது ஆறடியாவது இருக்கும். விடுதி உதவியாளர் குரல்கொடுக்க, ஒன்றிரண்டுபேர் ஓடிவந்து பாம்பை அடித்தார்கள். " வேணாங்க...நமக்கு இந்த ரூம் வேணாங்க..." என்று கணவனின் காதில் பயத்துடன் முணுமுணுத்தாள் செல்வி. "இன்னும் ஆறேழு மணிநேரம் இங்க இருக்கப்போறோம். அதுக்காக இன்னொரு இடம் தேடணுமா? இதெல்லாம் சின்ன  விஷயம்...மறந்துரு" என்றார் சண்முகம்.

அதற்குள் ரிஷப்ஷனில் இருந்தவர் அவர்களை அழைத்து, மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறொரு அறையின் சாவியைக் கொடுக்க, அந்த அறையில் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் உள்ளே நுழைந்தாள் செல்வி. அதற்குள் வீட்டிலிருந்து மகள் மஹாலட்சுமி செல்ஃபோனில் அழைக்க, நடந்ததை மகள்கிட்ட சொன்னாள் செல்வி. அறைக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

செல்வியின் கணவருக்கு ஏற்கெனவே பிளட் பிரஷர் உண்டு. அவர், செல்வி, நான் வெளிய போயி மஹா கிட்ட பேசிட்டு, அப்டியே எனக்கு பிரஷர் மாத்திரையும் வாங்கிட்டு வந்திர்றேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் படுத்தாள் செல்வி.

அறையின் மேற்பரப்பு வித்தியாசமாக இருந்தது ஒரு மரம் விரிந்து நிழலாயிருப்பதுபோல இருந்தது. வரைந்திருக்கிறார்களோ என்று உற்றுப்பார்த்தாள் செல்வி. மரம் அசைகையில் இடைவெளியில் வானம்கூடத் தெரிந்தது. அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. அறையின் விதானம் முழுவதும்,அடர்த்தியான கண்ணாடியென்று. அட, இப்படிக்கூட இருக்குமா? என்று வியப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

பத்து நிமிஷத்தில் வருகிறேனென்ற சண்முகத்தைக் காணவில்லை. அறைக்கு வெளியே போய்ப்பார்க்கலாம் என்று, வெளியேவந்து கொஞ்சநேரம் நின்றாள் அவள். சண்முகம் வரவில்லை. கதவைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று பார்க்கலாமென்று புறப்பட்டாள். அறை வாசலிலிருந்து மூன்றுபக்கமும் பாதை இருந்தது.  வரும்போது, எந்தப் பாதையில் வந்தோமென்று அவளுக்கு நினைவில்லை. ஏதாவது ஒரு பாதையில் போவோமென்று எதிரில் இருந்த பாதையில் போனாள் செல்வி.

வளைவில் மாடிப்படிகள் தெரிந்தது. ஆனால், கைப்பிடிச்சுவர் இல்லை.
அட, இதுகூட புதுமாடலா இருக்குதே என்று வியந்தபடி, இறங்கத்தொடங்கினாள். பிடித்துக்கொள்ள மேலே வலைப்பின்னல்போன்ற அமைப்பு இருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு இறங்கியவளின் பிடி சட்டென்று நழுவியது. படிக்கட்டில் அலறியபடியே வேகமாக உருண்டாள் அவள். பத்துப்பதினைந்துபேர் ஓடிவந்தார்கள். அவர்களில் சண்முகமும் இருந்தார்.

"கொஞ்சநேரம் அறைக்குள்ள இருக்கமுடியலியா உனக்கு..." என்றபடி அவளை எழுப்பிவிட்டார் சண்முகம். படபடப்பில் கண்கள் இருண்டது செல்விக்கு. "சரிசரி, உடம்பெல்லாம் வேர்த்துப்போயிருக்கு இப்படி உக்காரு..." என்றபடி, அருகிலிருந்த  இருக்கையில் உட்காரவைத்தார். அதிலிருந்தும் நழுவி விழப்போனவள் "ஐயோ..." என்றபடி எழுந்து, கணவனின் கையைப் பிடித்தாள்.

என்ன ஆச்சு செல்வி...என்னாச்சு?  என்றபடி அவளின் தோளைத்தொட்டு உலுக்கினார் சண்முகம். "ஒண்ணுமில்லீங்க..." என்றபடி முகத்தைத் துடைத்துவிட்டுச், சுற்றும்முற்றும் பார்த்தாள் செல்வி. தன் வீட்டுக் கட்டிலில்தான் இருக்கிறோம் என்று தெளிவானது அவளுக்கு. "எப்பவும்போல ஏதாவது கனவா?" என்று சலிப்புடன் கேட்டுவிட்டுத், திரும்பிப்படுத்தார் சண்முகம்.

தான் கண்டது கனவுன்னு நம்பவே முடியவில்லை செல்விக்கு.  தம்பி கதிரேசனைப் பார்த்தேனே கனவில்... என்னைக்கூட வீட்டுக்குக் கூப்பிட்டானே அவன்...ஏன் திடீர்ன்னு இப்படியொரு கனவு? அவனை நினைக்கக்கூட இல்லியே...

கதிரேசனுக்கும்  சண்முகத்துக்கும் மனசு கசந்துபோய் ஆறேழு வருஷமாச்சு. திடீர்ன்னு அவன் ஏன் கனவில் வந்தான்? அவனுக்கு ஏதாச்சும் கஷ்டமாயிருக்குமோ?  அம்மாவைக் கூப்பிட்டு விசாரிப்போமா என்று நினனத்தாள் அவள்.  ஆனால், மணி இரவு மூன்று. அம்மாவைக் கூப்பிட்டா நிச்சயம் பயந்து போவாங்க. தன்னுடைய தவிப்பைச் சண்முகத்திடம் கேட்கவும் பயமாயிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை...

மெல்ல அவரின் தோளைத் தொட்டுத் திருப்பியவள் கேட்டாள், "ஏங்க, கனவுல பாம்பு வந்தா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்களே...அது நிஜமா? என்றாள் தயக்கமாய். "அம்மா தாயே, இப்பிடி, என்னைத் தூங்கவிடாம உயிரை எடுத்தேன்னா, நிச்சயம் கெட்டது நடக்கும். மனுஷனை ராத்திரிக்கூடத் தூங்கவிடாம தொணதொணன்னு கேள்வி கேட்டுக்கிட்டு...சத்தமில்லாம படுப்பியா..." என்றபடி, திரும்பிப் படுத்துக்கொண்டார் சண்முகம். 

"இது என்ன கனவு? நல்லதா, கெட்டதா? கெட்டதாயிருந்தா கனவுக்கு ஏதும் பின்விளைவு இருக்குமோ? கடவுளே, கதிரேசனுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது" என்று அவளையுமறியாமல் வேண்டிக்கொண்டது மனசு. சுவர்க்கடிகாரம் மணி நான்கு என்று காட்டியது. கண்களை இறுகமூடினாலும் அந்தக் கனவும் கதிரேசனுமே வந்துவந்துபோக, விட்டத்தைப் பார்த்தபடி கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் செல்வி.

**********

சனி, 11 டிசம்பர், 2010

ஆசையில் விழுந்த அடி!

பேருந்து நிலைய வாசலிலிருந்து தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பினான் குமரேசன். மணி மூணரை...வயிறு பசியில் கூப்பாடு போட்டது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கஸ்தூரி முக்குக்கடைப் பாட்டியிடம் வாங்கிக்கொடுத்த இட்லியும் காரச்சட்னியும் எப்பவோ காணாமல்போயிருந்தது.

மதியம் ரெண்டு மணியாகும்போது, கணேசன் கடையில ரெண்டு வடை வாங்கிச் சாப்பிடலாம்னு நினைச்சப்ப, அடையாமலிருக்கிற ஆட்டோமேல் வாங்கிய கடனும்,கொடுக்காமலிருக்கிற மூணுமாச வாடகையும் நினைவுக்கு வரவே, பசியையை அடக்கிக்கிட்டு சவாரிக்குக் கிளம்பினான் அவன்.

குமரேசனுக்கு மூணு குழந்தைகள். மூணுபேரும் வீட்டுப் பக்கத்திலிருக்கிற ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். குமரேசன் மனைவி கஸ்தூரி, பூ வாங்கிக் கட்டி, பக்கத்துக் காலனியில் தினமும் விற்றுவிட்டுவருவாள். ரெண்டுபேரும் முழுக்கமுழுக்க உழைச்சாலும், முழுசாய்ப் போதாத வருமானம்.

சின்னப்பையனுக்கு உடம்பு சுகமில்லாம போனப்ப வாங்கின கடனுக்கு, தன்னுடைய ஆட்டோவை அடகு வைத்துப் பணம் வாங்கியிருந்தான் அவன். வாங்கின கடனுக்கு அன்றாடம் நூறு ரூவா கட்டணும். அதுபோக வீட்டு வாடகை,  பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு வரவுக்கு மீறிச் செலவுகள்தான் வந்தது. இப்பல்லாம் ஸ்டாண்டிலும் ஆட்டோக்கள் அதிகமாகிவிட்டது. சில நாட்கள் குமரேசனால் தவணைக் காசைக்கூடக் கட்டமுடிவதில்லை.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, ஆட்டோ வருமாய்யா என்ற அந்தக்குரல் அசைத்தது. ராஜாஜி ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு  ஒரு வயசான அம்மாவும், கைக்குழந்தையோட ஒரு பெண்ணும் வந்துநின்னாங்க. ரெண்டுபேர்முகத்திலும் அப்பிக்கிடந்தது சோகம்.

"போலாம்மா..." என்று அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, ஆட்டோவைக் கிளப்பினான் அவன். "என்ன பெரியம்மா, ஆஸ்பத்திரிக்குப் போறீகளே,  உடம்புக்கு சுகமில்லியா? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தான் குமரேசன். "ஆமாய்யா... என் பேரன்...இந்தா, இவளோட புருஷன், சைக்கிள்ல போகையில பாவி அந்த மினிபஸ்ஸுக்காரன் இடிச்சுத் தட்டிவிட்டுட்டான். இப்ப அவன் ஒத்தக்கால் ஒடிஞ்சு, ஆஸ்பத்திரியில கெடக்கான்.

மூணுநாளா ஆஸ்பத்திரியும் வீடுமா அல்லாடிக்கிட்டுக் கெடக்கொம்யா...ஒழைச்சு குடும்பத்தக் காப்பத்தவேண்டிய புள்ள, ஒடம்புக்கு முடியாம கெடக்குது. அந்த மீனாச்சித் தாயிதான் அவன முழுசா சொகமாக்கி, சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்...அந்தப் பொண்ணு இடையில் தடுத்தும் கேக்காம, ஆத்தாமையை அவனிடம் கொட்டியது பாட்டி.

வருத்தப்படாதீங்க பாட்டி...உங்க பேரனுக்கு சீக்கிரமே சரியாயிரும்...பாண்டிகோயிலுக்குப் பதினோருரூவா நேர்ந்து முடிஞ்சுவையிங்க என்று ஆறுதலாய்ப் பேசியவன், அவர்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுட்டு, பெட்ரோல் போடும்போதுதான் பார்த்தான். ஆட்டோவின் பின்னால், சாமான்வைக்கும் இடத்தில், ஒரு துணிப்பை இருந்ததை.

எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே, ஏழெட்டு ஆரஞ்சுப்பழங்களும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் இருந்தது. சின்ன துணிக்கடை பர்ஸ் ஒன்றில் முன்னூத்தம்பது ரூபாயும் இருந்தது. பாட்டியும் அந்தப் பொண்ணும்தான் அதைத் தவறவிட்டிருக்கணும் என்று தோன்றியது அவனுக்கு.

அவங்களப் பாத்தாலும் கஷ்டப்பட்டவங்களாத்தான் தெரிஞ்சிது. ஆனாலும், நம்ம நெலமையைவிட மோசமா இருக்காது என்று நினைத்துக்கொண்டவனாய், பர்சிலிருந்த பணத்தை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, பெட்ரோலுக்குக் காசுகொடுத்துவிட்டுக் கிளம்பினான் .

நூறை கடனுக்குக் கட்டினாலும் மிச்சம் இருநூறுத்தம்பது ரூவா இருக்குது. புள்ளைகளுக்குப் புடிச்ச புரோட்டா சால்னா வாங்கிக் குடுக்கலாம். கஸ்தூரிக்கு பலகாரக் கடையில கொஞ்சம் பூந்தி. அப்புறம், ஆரஞ்சுப்பழம் சின்னவனுக்கு ரொம்பப் பிடிக்கும். மனசு சந்தோஷத்தில் நிறைய, சிம்மக்கல் தாண்டியதும் ஆட்டோவை உள்ரோட்டில் சல்லென்று திருப்பினான். உள்ரோட்டிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு ரிவர்சில் வந்த வண்டியைக் கவனிக்கவில்லை அவன்.

பட்டென்று மூளையில் உறைக்க, அதற்குள் கிட்டத்தில் வந்துவிட்ட மினிலாரியைக் கண்டு, சட்டென்று வண்டியைத் திருப்பினான் அவன். சந்தின் முனையிலிருந்த கரண்ட் கம்பத்தில் முட்டிக்கொண்டு நின்றது ஆட்டோ.

"எழவெடுத்தபயலே, கண்ணப் பொடதியிலயா வச்சிட்டுவந்தே...பட்டப் பகல்லயே தண்ணியப் போட்டுட்டு ஓட்டுறானுகளோ என்னவோ" என்று, கூடக்கொஞ்சம் கெட்ட வார்த்தை போட்டுத் திட்டிவிட்டுப்போனான் லாரிக்காரன். குமரேசனுக்குப் படபடப்பு நிற்கவில்லை.

கூட்டம் கூடிவிட்டது. பக்கத்துப் பெட்டிக்கடைக்காரர் ஒரு சோடாவை ஒடச்சுக் கொடுத்துட்டு, பாத்து வரக்கூடாதாய்யா...ஏதோ, ஏரோப்ளேன் ஓட்டுறமாதிரில்ல விர்ருன்னு வந்து திரும்புற...யாரு செய்த புண்ணியமோ, நீ  நெத்தியில ஒரு வெட்டுக் காயத்தோட  தப்பிச்சிட்டே...ரத்தம் வழியுது பாரு...சட்டுன்னு போயி, ராஜாஜி ஆஸ்பத்திரியில ஒரு கட்டுப் போட்டுட்டு,  அப்புறமா பொழப்பப் பாரு என்று அவர் பங்குக்கு வைதார்.

ஏதோ ஞாபகத்துல, சட்டுன்னு திரும்பிட்டேண்ணே... என்று நடுக்கத்தோடு சொன்னபடி, சோடாவுக்குக் காசெடுத்து நீட்டினான் அவன். காசெல்லாம் வேண்டாம். இனியாவது பத்திரமா ஓட்டிட்டுப்போ என்று பெட்டிக்கடைக்காரர் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆட்டோவை நகர்த்தினான் குமரேசன்.

வண்டியின் முன்னாடி லைட்டும், கண்ணாடியும் உடைந்துபோயிருந்தது. நெற்றியில் அடிபட்டது விண்விணென்று தெரித்தது. திரும்பியபோது பின்னாடியிருந்த துணிப்பை மறுபடியும்  கண்ணில் பட்டது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டாம்னு நினைச்சாலும் விதி அங்க போக வச்சிருச்சே என்று நினைத்தான் அவன்.

முன்னூத்தம்பதுக்கு ஆசைப்பட்டு, இப்ப ஆட்டோவுக்கு ஐநூறுக்குமேல் செலவாகும்னு தோணியது அவனுக்கு. ஆனா, அடிமட்டும் பலமாப் பட்டிருந்தா அந்தப் பாட்டியோட பேரனை மாதிரி, தானும் ஆஸ்பத்திரிப் படுக்கையில் விழுந்திருப்போம் என்ற நினைப்புத் தோன்ற, கால்வரைக்கும் நடுக்கம் ஓடியது குமரேசனுக்கு.

வண்டியை மெதுவாகப் பின்னுக்கு நகர்த்தினான். தூரத்தில் தெரிஞ்ச மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, சட்டைப் பையில் எடுத்துவைத்த முன்னூத்தைம்பது ரூபாய் காசை  மறுபடியும் அந்தப் பர்சில் வைத்துவிட்டு, ஆட்டோவைத் திருப்பினான் குமரேசன். அது  ராஜாஜி ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டது.

*********

சனி, 23 அக்டோபர், 2010

அசைகிற சொத்தும் அசையாத சொத்தும்!


அசையிற சொத்து, அசையாத சொத்து எல்லாத்திலயும் பொம்பளப் புள்ளைக்கும் சரிசமமா பங்கிருக்கு... அதப் பிரிச்சுக்குடுங்கன்னு, உங்க அக்கா வீட்டுக்காரர் வந்து கேட்டுட்டுப் போயிருக்காரு...அதனாலதான் உங்க ரெண்டுபேரையும் வரச்சொன்னேம்ப்பா...டவுனிலிருந்து வந்து நின்ன மகன்களிடம் விஷயத்தை விளக்கிச்சொன்னாள் தங்கம்மா பாட்டி.

அசையாத சொத்துன்னு எங்கிட்ட இந்த பத்துக்குப் பத்து ஓட்டுவீடும், ஒழுகுற அடுப்படியும்தான் இருக்கு...நா இருக்கிறவரைக்கும் அத உங்க யாருக்கும் குடுக்கப்போறதில்ல...என்ன யாரு கடேசிவரைக்கும் வச்சிப் பாத்துக்கிறீகளோ அவுகளுக்கு அதக் குடுக்கலாம்னு இருக்கேன். அது போக,அசையிற சொத்துன்னு இருக்கிற அஞ்சாறை இப்பப் பகுந்து குடுக்கிறேன்... யாரும் மொகஞ்சுளிக்கக்கூடாது அதான் முக்கியம்...

அம்மா சொல்லச்சொல்ல ஆர்வம் பெருகியது தங்கம்மாப் பாட்டியின் பிள்ளைகளுக்கு. களையெடுத்து, நாத்து நட்டு, கிடுகு முடைஞ்சு, கூடைபின்னி, வேப்பமுத்துப் பொறுக்கி, அதை வித்துக்காசாக்கி, இப்படி, எப்பாடுபட்டாவது
சிறுவாடு சேக்கிறதில் அம்மா கில்லாடி. அப்பப்ப, சேத்துவச்ச காசில பெருசா ஒரு டொகை இருக்கும் என்று மனசில் நினைச்சபடி, அம்மாவின் மொகத்த ஆர்வமாப் பாத்தா ஒரே மக அன்னம்.

ஏதோ இதுவரைக்கும், பாலை வித்தும், முட்டைகளை வித்தும், அப்பப்ப ஆட்டை வித்தும், விருந்து விசேஷம், மருந்து மாத்திரையின்னு பொழைப்ப நடத்திட்டேன். இனிமே அதெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு, எல்லாத்தையும் உங்ககிட்ட, பிரிச்சுக் குடுக்கப்போறேன்.

நம்ம செம்மறி ஆட்டையும், ரெண்டு குட்டியையும், அத்தோட நா வளத்த நாட்டுக்கோழி பனிரெண்டையும் அன்னம் எடுத்துக்கட்டும். வெள்ளாட்டையும் மூணு குட்டியையும் குமரேசன் வச்சிக்கட்டும். பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் பால்த்தொரைக்குக் குடுக்கிறேன். இனிமே, என்ன யாரு வச்சிப்பாத்துக்கிறதுன்னு பேசி முடிவுபண்ணின பிற்பாடு, மத்தவிஷயங்கள முடிவு பண்ணிக்கிடலாம்...என்று, பாட்டி சொல்லிமுடிக்கவும், வள்ளுன்னு விழுந்தா அன்னம்.

ஆம்புளப் புள்ளன்னா அதுக்குத் தனிப் பவுசுதான்...என்னன்னாலும் பொட்டச்சிதானன்னு ஆட்டையும் கோழியையும் குடுத்து கைகழுவி உட்டுட்ட...எம்புருஷன்கிட்டபோய்ச்சொன்னா, இம்புட்டுத்தானா உன்னோட பொறந்தவீட்டுப் பவுசுன்னு சிரிப்பாச்சிரிப்பாரு...இதெல்லாம் நீங்களே வச்சிக்கங்க...ஒண்ணும் வேணாம் எனக்குன்னு, கண்ணக் கசக்கிக்கிட்டு ஒட்டுத்திண்ணையிலபோயி உக்காந்தா அன்னம்.

ஏதோ, அடிச்சுப்புடிச்சுக் கேட்டீகளேன்னு, இருக்கிறதையெல்லாம் உங்க மூணுவேருக்கும் பங்கு வச்சுக்குடுத்துட்டேன். என்னோட சக்திக்கு இதுவே பெருசுதான். இதுக்கும் சடைஞ்சுகிட்டா நான் எங்கதான் போறது? என்று மககிட்ட கேட்டுட்டு, பெத்ததுலேருந்து, ஒத்தயா நின்னு,உங்களப் பாத்துப்பாத்து வளத்த என்ன யாரு வச்சிப் பாக்கப்போறீங்கன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் யாருமே பதிலே சொல்லல...

யாருக்குமே என்ன வச்சுப் பாத்துக்க விருப்பமில்ல...இல்லயாய்யா? என்றபடி ரெண்டு மகன்களையும் ஏறிட்டுப் பாத்தா தங்கம்மாப் பாட்டி. சந்தையிலபோயி யாவாரியக் கூட்டிட்டுவந்து, மாட்டையும் ஆட்டையும் விலை பேசணும் என்று பேசிக்கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாங்க.

இல்லம்மா, நாங்களே பட்டணத்துல ஒண்டுக்குடித்தனத்துல இருக்கோம்... உன்னயும் அங்க கூட்டிட்டுப்போயி, வச்சிப் பாத்துக்க வசதிப்படாது. எங்களால முடிஞ்சது இருநூறோ முன்னூறோ மாசாமாசம் உனக்கு
அனுப்பிவச்சிர்றோம். நீ இங்கயே இருந்துக்க...தங்கச்சி ஒன்னப் பாத்துக்கிரட்டும். இந்த வீட்ட வேணும்னாலும் நீ அவளுக்கே குடுத்துரு...என்று, ஆளவிட்டாப்போதும் என்ற தோரணையில் அவசரமாச் சொன்னான்  குமரேசன். அண்ணனுக்கு ஒத்து ஊதிவிட்டு, அவனுடன் சேர்ந்துகொண்டான் கதிரேசன்.

கண்ணக் கசக்கிக்கிட்டிருந்த அன்னத்துக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருச்சு. அண்ணே, அம்மா இன்னும் நடையும் உடையுமாத்தான இருக்கு. அதனால, இந்த வீட்லயே இருக்கட்டும். நீங்க ரெண்டுபேரும், மாசாமாசம் ஆளுக்கு ஐநூறா அனுப்பிவச்சிருங்க. நா தினமும் வந்து அம்மாவப் பாத்துக்கிடுதேன், என்றபடி ஆட்டையும் கோழிகளையையும் பிடிச்சிக்கிட்டு, உள்ளூரில் தனக்கு இன்னொரு வீடும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில், அடுத்த தெருவிலிருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப்போனாள் அன்னம்.

அசையிற சொத்தான ஆடு மாட்டுக்குக் குடுத்த மதிப்பைக்கூட, தன் பிள்ளைகள் தனக்குக் குடுக்கலியேன்னு நினைத்து மருகியபடி, இருட்டியது கூடத் தெரியாம ஓட்டுவீட்டுத் திண்ணையில் ஒடுங்கிக் கிடந்த தங்கம்மா பாட்டி, மனசுகேக்காம, விறுவிறுன்னு எழுந்துபோயி வெளக்கேத்திவச்சிட்டு,  நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்...புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்னு நெனைச்சுக்கிட்டு, தேவாரப் புத்தகத்த எடுத்துவச்சு, வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தாள். 

                                           *********************

திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா நமக்கு...அப்பா அவங்களுக்கு!



மகனோடயும் பேரன்களோடயும் ஃபிரான்ஸுக்குப் போறியாமே...பிள்ளைங்க, பேரன்னு வந்துட்டா, பொம்பளைகளுக்குப் புருஷனெல்லாம் ரெண்டாம்பட்சமாயிடுது...எங்கிட்ட நீ ஒரு வார்த்தைகூடக் கேட்கல பாத்தியா ... அடுப்படியிலிருந்த மனைவியிடம் அடிக்குரலில் கேட்டார் பழனிச்சாமி.

அவரை மெள்ள நிமிர்ந்துபார்த்த அவரோட மனைவி ராஜம்மா, "பள்ளிக்கூடத்து வாத்தியாராயிருந்து ரிட்டையர்டும் ஆயாச்சு...நமக்கும் கல்யாணமாகி நாப்பது வருஷம் ஆகப்போகுது.  ஆனா,இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க...பேரன் சொன்னதை அப்படியே நம்பிட்டு எங்கிட்ட வந்து கேள்வி கேக்கிறீங்க...சரி, விபரம் என்னன்னு எப்படியும் இன்னிக்குள்ள உங்களுக்குப் புரிஞ்சிரும்... அதுக்குள்ள, மாடியில மழைத்தண்ணி இறங்காம அடைச்சி நிக்குதுன்னு நெனைக்கிறேன். அதைக்கொஞ்சம் பாருங்க..." என்றபடி மிச்சப் பாத்திரங்களையும் மடமடவென்று விளக்கிப்போட்டாள் அவர் மனைவி.

கேள்விகள் மனசில் கனத்திருக்க, மெதுவாய் மாடிப்படியேறி மனைவி சொன்ன வேலையைக் கவனிக்கப்போனார் பழனிச்சாமி. மாடியில், மகனின் அறைக்குள்ளிருந்து அதட்டலாய்க் கேட்டது மருமகளின் குரல்.

"அப்போ, இப்பவே, எனக்கு வீட்டுவேலைக்கு ஒரு ஆளைப் பாருங்க... உங்க பையனையும் பாத்துக்கிட்டு, சமையல், வீட்டுவேலைன்னு அல்லாடமுடியாது எனக்கு"

"மெள்ளப் பேசு சுசி...வேலைக்கு ஆள் கூட்டிப்போறது ஒண்ணும் சாதாரண விஷயமில்ல...விசா செலவு, மாசச்சம்பளம், அவங்களுக்கான மத்த செலவுகள்னு ஏகப்பட்ட செலவாயிரும்... அதுக்கு, எங்கம்மா சொன்ன மாதிரியே அப்பாவையும் சேர்த்துக் கூடக் கூட்டிட்டுப்போயிரலாம்" குரலை இறக்கிப்பேசினான் குமரவேலு, வாத்தியாரின் மகன்.

"ஓ...அவங்க ரெண்டு பேரும் வந்தா மட்டும் செலவு ஆகாதா? அதுலயும் உங்கப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அடிக்கடி ஆஸ்துமா அட்டாக் வேற... ஃபிரான்ஸில இருக்கிற குளிருக்கு, அவருக்கு மருத்துவம் பாக்கிறதுலயே நம்ம காசெல்லாம் காலியாயிரும்" 'சுள்'ளென்று விழுந்தாள் மருமகள்.

ஆனா, அப்பாவை விட்டுட்டு வரமாட்டேன்னு அம்மா திட்டவட்டமா சொல்லிட்டாங்களே...அப்ப என்னதான் பண்றது?

உங்க தங்கச்சியும் இதே ஊர்லதானே இருக்காங்க...சொத்துல மட்டும் மகளுக்கும் பங்கு உண்டுன்னு சொல்றாங்கல்ல, அதேமாதிரி, சுமையையும் அவங்க கொஞ்சம் பகிர்ந்துக்கட்டுமே...ஒரு ரெண்டுவருஷத்துக்கு,அவங்க உங்கப்பாவைப் பார்த்துக்கட்டும். நீங்க, உங்கம்மாவை எப்படியாவது பேசி சரிக்கட்டிக் கூப்பிட்டுவரப்பாருங்க...

"அம்மாவைப்பத்தி உனக்குத்தெரியாது சுசி...அவங்க எப்படியும் அப்பாவை விட்டுட்டு வரமாட்டாங்க. பிள்ளையையும் பார்த்துகிட்டு வேலையையும் கவனிக்கக் கஷ்டம்னா, பிள்ளைகள் வளர்ற வரைக்கும் உன் மனைவியையும் குழந்தைகளையும் இங்க விட்டுட்டுப் போ"ன்னு சொல்றாங்க அவங்க...

என்னது? நானும் பிள்ளைகளும் இங்க தனியா இருக்கணுமா?

தனியா இல்ல சுசி...அப்பா அம்மாகூடத்தான்...

அப்போ, நீங்களும் உங்கம்மா சொன்னதைக்கேட்டு எங்களை இங்க கழட்டி விட்டுட்டுப்போகலாம்னு நினைக்கிறீங்க...இல்லே?

ஐயோ, இல்ல சுசி... அம்மா சொன்னதைத்தான் நான் சொல்றேன்...

ஆனாலும் உங்கம்மாவுக்கு இந்த புத்தி கூடாதுங்க. உங்களை அங்க தனியா அனுப்பிட்டு, நானும் புள்ளைங்களும் இவங்களோட தொணதொணப்பைக் கேட்டுக்கிட்டு, இங்க இருக்கணுமோ? நல்லாத்தான் திட்டம்போடுறாங்க, நம்ம ரெண்டுபேரையும் பிரிக்கிறதுக்கு.

பெரிய வார்த்தையெல்லாம் பேசாத சுசி...நீ என்ன சொல்றியோ, அதையே தான் அம்மாவும் சொல்றாங்க...அப்பாவைத் தனியா விட்டுட்டு அவங்களால நம்மகூட வந்து இருக்கமுடியாதுன்னு...

ஓஹோ, அவங்களும் நாமளும் ஒண்ணா? வயசான காலத்துல பெத்தவங்க, பிள்ளைங்களுக்கு ஆதரவா அரவணைச்சுப் போகணுமே தவிர, அவங்கவங்க சௌகரியத்தைப் பாக்கக்கூடாது. ஆனாலும் உங்கம்மா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது" என்று உணர்ச்சிவசப்பட்டாள் மருமகள்.

அப்ப, ஒண்ணு பண்ணலாம் சுசி... நீ வேணும்னா, உங்கம்மாவைக் கூப்பிட்டுப்பாரேன். அவங்களும் இங்கே தனியாத்தானே இருக்காங்க...என்றான் குமரவேலு.

எங்கம்மாவை எப்படிக் கூப்பிடமுடியும்? அவங்களுக்கு மகளிர் மன்றம், அதுஇதுன்னு ஆயிரம் வேலை...அதுமட்டுமில்லாம, அங்க இங்கன்னு நாலு இடத்துக்குப் போய்வந்து இருக்கிற அவங்க எப்படி அங்கவந்து நாலுசுவத்துக்குள்ள நம்மளோட அடைஞ்சு கிடக்கமுடியும்? அதெல்லாம் முடியாது என்று அவசரமாய் மறுதலித்தாள் சுமி.

அப்போ என்னதான் பண்ணட்டும் நான்? என்னோட சம்பளத்துல வேலைக்கு ஆள்கூட்டிட்டுப்போறதெல்லாம் சாத்தியமில்ல...நீ வேணும்னா அம்மா சொன்னமாதிரி கொஞ்சநாள் இங்க இருக்கிறியா?...பக்குவமாய் ஊசியை இறக்கினான் குமரவேலு.

ஐயோ, ஆள விடுங்க சாமி, நானே அங்க பிள்ளையையும் பாத்துக்கிட்டு, வீட்டையும் பாத்துத்தொலைக்கிறேன்...யாரோட உதவியும், உபகாரமும் நமக்கு வேண்டாம் என்றபடி, கதவை அடித்துச் சாத்திவிட்டு ஆத்திரத்துடன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் மருமகள்.

மனதிலிருந்த கேள்விகளின் கனம்குறைய, மாடியிலிருந்து இறங்கத்தொடங்கினார் பழனிச்சாமி வாத்தியார்.

ராஜம்மா, மாடியில அடைச்சிருந்த கசடெல்லாம் மழைத்தண்ணியோட கீழ இறங்கிடுச்சு...இனிமே எந்தப் பிரச்சனையும் இல்ல...என்றவர், தனக்குக் காரியம் ஆகணும்னா இந்தகாலத்துப் பிள்ளைகள் எவ்வளவு சுயநலமா இருக்குதுங்க என்று தனக்குள் வியந்தபடி மனைவியைப் பார்த்தார். அவர் கண்களில் எப்போதையும்விடச் சற்று அதிகமாகவே கனிவு தென்பட்டது. 

***********


சனி, 4 செப்டம்பர், 2010

வாழாமல் வந்த வரலச்சுமி!


கழுவின பாத்திரத்தை அடுப்படியில கவுத்தி வச்சிட்டு கடுங்காப்பியைக் கையில் வாங்கிக்கிட்டு கிணத்தடியில போய் உங்காந்தாங்க லச்சுமி சித்தி.

காப்பியக் குடிச்சிட்டு, உளுந்தக் கழுவி கிரைண்டர்ல போடு. அப்டியே ராத்திரி சாப்பாட்டுக்கு ரசம் வச்சி தொவையலரைச்சிரு. பாத்துக்கிட்டிருந்த சீரியல்ல இருந்து கண்ணை நகர்த்தாம கவுரியத்தை சொன்னதும், கிணத்தடியிலிருந்து எந்திரிச்சி உளுந்துக் கிண்ணத்தை எடுத்துக்கிட்டு மறுபடியும் வெளிய போனாங்க லச்சுமி சித்தி. கால்ப்பக்கம் கிழிஞ்சிருந்த சேலையில் கால்தடுக்க, தூக்கிச் சொருகிக்கிட்டு, உக்காந்து உளுந்தைக் கழுவ ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல கிரைண்டர் ஓட ஆரம்பிச்சிது.

கைகள் அனிச்சையாய் வேலை செய்தாலும் சித்தியின் கண்கள் மட்டும் எப்பவும் வெறுமையாய் வேறெதையோ வெறித்துக்கொண்டிருக்கும். சின்ன வயசில் அத்தனை பேரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு, ஜான்சிராணி என்ற செல்லப் பெயரோடு வளையவந்த சித்தி, இன்றைக்கு வேலைக்காரியைவிடக் கேவலமாய்ப்போனது கொடுமையிலும் கொடுமை.

ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டே பிள்ளைகள்தான் பார்வதி ஆச்சிக்கு. சித்திக்குக் கல்யாணம் பேசினப்ப ஆச்சிக்கு அதில் அத்தனை இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு,பக்கத்து ஊர்தான்னாலும்,  உத்யோகம் வடக்கே நாக்பூர்ல ரயில்வே வேலைனு சொன்னாங்க. அத்தனை தூரம் மகளை அனுப்பணுமான்னு தயங்கினாங்க ஆச்சி. ஆனா, நான் வாக்குக் குடுத்துட்டேன்னு சொல்லி, ஆச்சி வாயை அடைச்சிட்டாங்க தாத்தா.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பார்த்ததோட சரி. பொண்ணு வீட்டுக்காரங்க யாரும் மாப்பிள்ளையப் பாக்கல. ஆனா, மாப்பிள்ளைப் பையன் நல்ல நிறமாயிருப்பான்னு சொல்லிக்கிட்டாங்க. நாலு நாள்ல நாக்பூர்லயிருந்து மாப்பிள்ளையோட போட்டோ வந்துது. சித்தியையும் பாப்பு ஸ்டூடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, பளிச்சுன்னு தெரியிறமாதிரி படம் எடுத்து, மாப்பிள்ளை வீட்ல கொண்டுபோய் குடுத்துட்டு வந்தாங்க தாத்தா.

முகூர்த்தத்தன்னிக்குதான் மாப்பிள்ளை வந்தார். காலைல ஆறுலேருந்து ஏழரைக்குள் கல்யாணம். ஏழு மணியாகியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரல. ஏழே காலுக்கு வந்து அரக்கப்பரக்கத் தாலிகட்டி முடிச்சாங்க. அவங்களுக்குள்ளயே ஏதோ கசமுசன்னு பேசிக்கிட்டாங்க. மாப்பிள்ளை நல்ல நிறம், சித்தி நிறம் குறைச்சல்னாலும் சிரிச்ச முகமா லட்சணமா இருப்பாங்க. மணமேடையில் மாப்பிள்ளை ஒரு தடவைகூட பொண்ணு பக்கம் திரும்பவே இல்ல. முகத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற மாதிரியே இருந்தாரு.

மறுவீட்டுக்குப் போகும்போது சித்தி ஒரே அழுகை. எல்லாம் பழகிட்டா சரியாயிடும்னு பக்குவம் சொல்லி அனுப்பி வச்சாங்க பெரியவங்க. ஆனா, கல்யாணத்துக்கு மறுநாளே, வேலை இருக்குதுன்னு சொல்லி நாக்பூர் கிளம்பிப் போயிட்டாராம் மாப்பிள்ளை. சித்திக்கிட்ட பேசக்கூட இல்லையாம்னு பின்னால பேசிக்கிட்டாங்க. வந்துருவான் வந்துருவான்னு மாமனாரும் மாமியாரும் சொல்ல, மூணு வருஷம் அங்கேயே இருந்தாங்க சித்தி. ஆனா, போன மாப்பிள்ளை வரவே இல்ல.

நாலாவது வருஷம் அவருக்கும் இன்னொரு பொண்ணுக்கும் கல்யாணம்ஆகி, ரெண்டு வயசில் பிள்ளையும் இருப்பதாகக் கடிதம் வர, அதைக் கேட்ட அதிர்ச்சியில், சோறு வடிக்கும்போது பாத்திரத்தைத் தவறவிட்டு, கை காலெல்லாம் தீப்பட்ட கொப்புளத்தோட ஆச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க சித்தி.

செல்லமா வளத்த பொண்ணு வாழாம வந்து நின்ன சோகத்தில் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாங்க ஆச்சியும் தாத்தாவும். ஆனா, எல்லாச் சோகத்தையும் உள்ளயே பூட்டிவச்சு உருக்குலைந்துபோன சித்தி, இன்னிக்கு தம்பி வீட்டுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரி.

வரலட்சுமியா வாழப்போனவங்க வாழாவெட்டியா வந்ததைக்கண்டு பலர் மனசு வருத்தப்பட்டாலும், சின்ன வயசில கொஞ்ச ஆட்டமா ஆடுனா, அதான் இன்னைக்கி அனுபவிக்கிறா என்று அழுக்கு வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் பெண்களில் சிலர்.

செவ்வாய், 11 மே, 2010

நான் அம்முவின் அம்மா



அம்மாவாயிருக்குறது ஒண்ணும் சுலபமில்லீங்க...அதுக மூணையும் நா விட்டுட்டு வந்தப்ப, பெரியவனுக்குப் பத்து வயசிருக்கும். ஆறு வயசிலயும் ரெண்டு வயசிலயுமா அடுத்த ரெண்டும் பொண்ணுக. சின்னது அம்மு, என்ன விட்டு எப்பிடி இருக்கப்போகுதோன்னுதான் தவிச்சுப்போனேன். ஆனா, ஏதோ அடியும் மிதியும்பட்டு அதுவா வளந்திருச்சு.

அவுகப்பாவும் புள்ளைங்க மேல பாசமில்லாதவுக கிடையாது. நல்லாத்தான் பாசமாயிருப்பாக. ஆனா, நா விட்டுட்டு வந்தப்புறம்தான் முழுசா மாறி்ப்போயிருக்காக. எனக்குப் பிறகு என் தங்கச்சியக் கல்யாணம் கெட்டிக்கிட்டவுக, அவளுக்கு ரெண்டு புள்ளைங்க பிறந்ததும், என்னோட புள்ளைகளுக்கு மாற்றாந்தகப்பன் மாதிரி மாறிப்போனதுதான் வினையாகிப்போச்சு.

நா இருந்தப்ப, புள்ளைகளோட விளையாட்டு சைக்கிள்கள நிறுத்த நாங்க கட்டுன முடுக்கு அறைதான், இப்ப என்னோட மூணு புள்ளைகளுக்கும் இருப்பிடமாயிருச்சுன்னு சொன்னாக. மனசு தாங்கல. மத்த ரெண்டும் பரவாயில்ல, சித்திக்காரி சொல்லக்கேட்டு, அவளுக்குப் பணிவிடைசெய்து பொழைக்கப் பழகிடுச்சுங்க. கடைக்குட்டி மட்டும்தான் சித்திகாரிகிட்டயும், அப்பா கிட்டயும் அடி வாங்கிச் சாகுதுன்னு தெரிஞ்சதும் அடக்கமுடியல எனக்கு.

அன்னிக்கிப் பாருங்க, தென்னை மரத்தில கட்டிவச்சு சாத்துசாத்துன்னு சாத்தியிருக்காக. சின்னப்புள்ள, அரிசி மூட்டையில ஏறி வெளயாடுனப்போ, கடைக்கு வாங்கின எண்ணெய்க்குள்ள அரிசியக் கொட்டிவிட்டிருச்சாம். ராத்திரிபூரா வீட்டுக்குள்ள கூப்பிடாம, வெறும் வயிறா வெளியவே கட்டிவச்சிருக்காக. பாக்கப்பாக்கத் தாங்கல எனக்கு.

சின்னதுல, அம்மு அம்முன்னு எப்பவும் எங்கிட்டயே வச்சிருப்பேன். அதுவும் அம்மா அம்மான்னு சுத்திவரும். அதோட நிலமையப் பாத்தீகளா? இப்பல்லாம் வீட்ல வேல பாக்கிறதுக்காக அதுங்கள ஸ்கூலுக்குக்கூட அனுப்புறதில்ல. என்னோட ஆசைமகன் இப்ப அவுகளோட கடைக்கு சம்பளமில்லாத வேலக்காரன். நா மட்டும் இருந்திருந்தா, அதுக்கு அவன் இப்ப சின்னமுதலாளி.

கடக்குட்டி அம்முவுக்கும் வயசு பதினாறாயிருச்சு. அப்பப்போ பின்னாடி வீட்டுக்குப் அவ போறது தெரியுது. அங்க வாடகைக்கு இருக்கிறவுக ரொம்ப நல்லமாதிரின்னு தோணுது. அம்முவோட கஷ்டத்தைப் பாத்துட்டு அவளுக்கு அனுசரணையா இருக்காக போல. அவுகளும் ஒருநாள் வீட்டைக் காலிபண்ண, அம்முவும் அன்னிக்கே வீட்டைவிட்டுப் போயிட்டா போல. ஒண்ணு தொலஞ்சிதுன்னு கண்டுங்காணாம இருந்துட்டாக அம்முவோட அப்பாவும் அவரைக் கட்டிக்கிட்ட எந்தங்கச்சியும்.

அனுசரணையா இருந்த அந்த பின் வீட்டுக்காரவுக, அம்முவைக் கொஞ்ச நாள் கழிச்சு அவுங்க மகனுக்கே  கட்டிவச்சிட்டாகளாம். அம்மு அதுக்கப்புறம் கொஞ்சநாள் சந்தோஷமாத்தான் இருந்திருக்கா. ரெண்டு புள்ளைக அவளுக்கு. அவ கட்டிக்கிட்ட அந்த கிறிஸ்தவப் பையனுக்கும் ஆயுசு கெட்டியில்லாம இருந்திருக்கு. நாலே வருஷத்துல அம்முவையும் ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு செத்துப்போயிட்டான்.

அம்மு அதுக்கப்புறம், ஒரு பாதிரியார் வீட்டுல வீட்டுவேல செஞ்சுகிட்டே, அவங்க நடத்துற பள்ளிக்கூடத்துல புள்ளைகளைப் படிக்கவச்சிருக்கா. அம்முவ மாதிரி இல்லாம அவுக ரெண்டுபேருக்கும் நல்ல படிப்பு அமைஞ்சிருச்சு. ரெண்டு பிள்ளைகளும் நல்லாப் படிச்சிருச்சுக.
அம்மாவ நல்லபடியாப் பாத்துக்கணும்னு ஒரு உத்வேகம் அதுங்களுக்கு. படிப்பு முடிஞ்சதும் அந்தப் பாதிரியார் நல்ல பையன் ஒருத்தனுக்கு அம்முவோட மகளைக் கட்டிவச்சாரு. அம்முவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

அன்னிக்கி, மகளும் மருமகனும் விருந்துக்கு வாராங்கன்னு அம்முவுக்கு ஒரே பரபரப்பு. சாமான் லிஸ்ட மகன்கிட்ட கொடுத்து வாங்கியாரச் சொல்லிட்டு, பம்பு ஸ்டவ்வப் பத்தவைச்சா. அடுப்பு வேகமா எரியட்டும்னு காத்து அடிச்சுக்கிட்டிருந்தா. மக வரப்போற சந்தோஷத்துல நிறையவே வேகமா எரியவிட்டா.

'டம்'முன்னு பெருஞ்சத்தம். சேலையில பிடிச்சு கொஞ்சங்கொஞ்சமா அம்முவ விழுங்கிச்சு நெருப்பு. கடைக்குப்போன மகன் வந்து பாக்கிறான். கரிக்கட்டையா கிடக்கா அம்மு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறாக. கூடவே நானும்போறேன். போதும், இத்தன கஷ்டப்பட்டது போதும். அம்மாகிட்ட வந்திரு அம்மு. அனத்திக்கிட்டே இருக்கேன் நான்.

டாக்டர் வந்து பாத்துட்டு கைய விரிச்சிட்டார். அம்முவோட மகன், அம்மாவப் பாக்க முடியாம வெளிய நின்னு அழுதுகிட்டிருக்கான். மகனைப் பாக்கணும்னு சைகை காட்டுனா அம்மு. அவன் கிட்ட வந்து பார்த்ததுதான் தாமதம். பட்டுன்னு நின்னுருச்சு மூச்சு. விருந்துக்கு வரதா சொன்ன மகளும் மருமகனும் அழுதுகிட்டே ஓடியாராங்க.

ரெண்டு கைகளையும் விரிச்சுகிட்டு, வா அம்மு, வா... அம்மாகிட்ட வந்துட்ட, இனி உன்ன நான் பாத்துக்கிறேன்னு வாரி அணைக்கிறேன். ஆனா, "ஐயோ, உன்ன மாதிரியே நானும் என் மக்கள தவிக்கவிட்டுட்டு வந்துட்டனே" ன்னு அப்ப நான் அழுதமாதிரியே 'ஓ'ன்னு அழுதுகிட்டிருக்கா அம்மு.

***********