திங்கள், 10 செப்டம்பர், 2018

சங்ககால சமையல்


ஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :-

வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத்துச் சித்திரங்களாக விளங்குகின்றன சங்ககால இலக்கியங்கள்.

படிக்கப்படிக்கப் பெருமிதமும் வியப்பும் தொன்றுமளவுக்கு வாழ்ந்த நம் மூத்த தமிழ்க்குடியின் வாழ்வியல் நெறிகள், வளர்த்த உயிரினங்கள், ஆடிய நடனம், அணிந்த அணிகலன்கள், சூடிய மலர்கள், பாடிய பண், பசித்துப் புசித்த உணவு, ரசித்து விளையாடிய விளையாட்டுக்கள் என்று அவர்கள் வாழ்வின் அத்தனை செய்திகளையும் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைத்திருக்கிற இந்த இலக்கியங்களுக்குள் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்ற அந்நாளைய உணவுகள் பற்றிய செய்திகள் நம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.


இன்றைக்கு, பச்சரிசி, புழுங்கலரிசி, சிவப்பரிசி, பாசுமதி அரிசி என்று நெல்லரிசி வகைக்குள்ளே நிறைவடைந்துவிட்ட நம் தமிழர்கள், முற்காலத்தில், நெல்லரிசியோடு, வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கிலரிசி என்ற பல்வேறு அரிசி வகைகளைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்


பரந்து கிடக்கிற சங்க இலக்கியத்தில் உணவு பற்றிய ஏகப்பட்ட செய்திகள் இருக்குமென்பதால் முதலில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படைப் பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிற அந்நாளைய உணவுப்பழக்கவழக்கங்கள் மட்டும் இங்கே...


முதலில், ஆற்றுப்படை பற்றி,  வள்ளல் ஒருவனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்ற புலவன் வறுமையில் வாடுகிற இன்னொரு புலவனை வழிப்படுத்தி அனுப்புகிற பாடல் வகையே சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படை எனும் துறையாகும்.


பத்துப்பாட்டில்,


1. திருமுருகாற்றுப்படை

2.பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை

எனும் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உண்டு.


அவற்றுள், திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகப்பெருமானின் அருள் பெற்ற ஒரு பக்தன், இன்னொரு பக்தனை இறையருள் பெற ஆற்றுப்படுத்தும் பாடல்களாக அமைந்திருப்பதால் இங்கே உணவு பற்றிய செய்திகளில்லாமல், முருகனுக்குப் படையலிட்ட பொருட்களைப்பற்றிய குறிப்புகள் மட்டுமே காணப்படுகிறது.

மன்னன் வீட்டு விருந்தும் உபசரிப்பும் 


பொருநராற்றுப்படையில் பரிசில் வேண்டிச்சென்ற ஏழையொருவனுக்கு, தணலில் வேகப்பட்ட தந்தூரி வகை உணவைக் கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி காணக்கிடைக்கிறது.


"பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை  
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே..."

அதுவும் எப்பேற்பட்ட உணவு, அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சியை, இரும்புக் கம்பிகளில் குத்தி பக்குவமாகச் சமைத்துப் பரிமாற, அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட்டுவிட்டு, அதன் வெம்மை தாளாமல் வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.

அதுமட்டுமன்றி, வேறுவேறு வடிவங்களில் சமைக்கப்பட்ட பல்வேறு தின்பண்டங்களையும் கொண்டு வந்துகொடுத்து அவற்றை முழவின் இசைக்கு விரலியர் நடனமாட, அதனை ரசித்தவாறே உண்ணவைத்து மகிழ்ச்சிப்படுத்துகிறான் மன்னன்.

அதன் பின்னர், சோறும் உண்ணவேண்டுமென்று அந்த வறியவனை வற்புறுத்தி, முனைமுறியாத முல்லை மொட்டினைப்போன்ற விரலளவு நீளமான அரிசிச் சோற்றை, பலவகை பொரித்த காய்கறிகளோடு பரிமாற, அதனைக் கழுத்துவரை நிரம்புமாறு மன்னனுடன் அமர்ந்து உணவருந்திய மகிழ்ச்சியைப் பகிர்கிறான் புலவன்.
,
மக்களின் உணவுமுறையும் உபசரிப்பும்

விதம்விதமான அரிசிச் சோற்றினை நம் மக்கள் வகைவகையான கறிகளுடன் சமைத்துப் பரிமாறிய விதங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை.

மருத நிலமான ஆமூரில்,


"இருங்காழ் உலக்கை இரும்புமுகந் தேய்த்த

அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு"

இரும்பு உலக்கையால் தீட்டிய வெண்ணெல் சோற்றினை, சமைத்த நண்டுக்கறியுடன் பரிமாறியதையும்,


குறிஞ்சி நிலத்துக் கானவர் வீட்டில்,


"சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்"


சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு உடும்புக் கறிப்  பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த உபசரிப்பையும்,


 பசுக்களைப் பராமரித்து, அவற்றின் பாலையும், மோரையும் விற்றுத் தொழில் செய்யும் கோவலர் குடியிருப்புகளில், 


"இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன

பசுந்திணை மூரல் பாலொடும் பெருகுவீர்"

பசுந்தினை அரிசிச் சோறும் பாலும் சேர்த்த பால்சோற்றினை உண்ணத்தருவார்கள்.


மேலும், முல்லை நிலமக்களின், வைக்கோல் வேயப்பட்ட குடியிருப்புகளில்,


"நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெறுவிர்"


பூளைப்பூவினைப்போன்ற சிறிய வரகரிசிச் சோற்றுடன், வேங்கைப் பூப்போன்ற அவரையின் பருப்பைக் கலந்து பிசைந்த  பருப்புச் சோற்றினைப் படைத்துப் பரிமாறிய பாங்கினையும் காணமுடிகிறது.


இவை மட்டுமன்றி, கூத்தராற்றுப்படை காட்டும் கானகக் குறமகளின் வீட்டில், 

"வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..." 


சமைத்த கடமானின் கொழுப்புமிக்க தசையினையும், பன்றியின் தசையினையும், உடும்பின் கறியோடு, புளியும், பசுமோரும் கலந்து உலையிலேற்றிச் சமைத்த மூங்கிலரிசிச் சோற்றுடன் தருவார்கள் என்று நாம் அறியத்தருகிறார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.


அந்தணர் வீட்டு அடிசில்


பெரும்பாணாற்றுப்படையில், வீடுகளில், நாய், கோழி இவற்றை வளர்க்காமல் கிளிகளை வளர்த்து அவற்றுக்கு வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் அந்தணர் வீடுகளில்,


"வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்" 


கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெய்யில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்று பாணன் கூறுவதாகப் பாடல்கள் உள்ளன.


வறியவன் வீட்டு உணவு


வள்ளலும் வசதி படைத்தவர்களும் விருந்தளித்த விஷயங்கள் மட்டுமல்லாமல், வறியவரின் உணவுமுறையும் இங்கே காணக்கிடைக்கிறது. நல்லியக்கோடன் எனும் வள்ளலொருவனைக் காணச் செல்கின்றான் பாணன். வறியவனான அவன் வீட்டில்,


"ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து 
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் 
அழிபசி வருத்தம்..."

வாட்டுகிற பசித்துன்பத்திலிருந்து தக்களைக் காத்துக்கொள்ள, உப்பில்லாமல் சமைக்கப்பட்ட வேளைக்கீரையை மற்றவர்கள் தங்கள் வறுமையை அறிந்துவிடக்கூடாதென்று அஞ்சி, வாயிலின் கதவடைத்துக்கொண்டு குடும்பத்தோடு உண்ணுகின்ற காட்சியைச் சிறுபாணாற்றுப்படை  சொல்ல,

வறுமையிலே வாழ்ந்தாலும் கூட வந்தவர்க்கு உணவளித்து வாழும் நிலைமையையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்தியம்புகிறது.

"நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் . . ."


எயினர் எயிற்றியர் வாழும் ஈச்ச இலையினால் வேயப்பட்ட குடிசை. சமைப்பதற்கு எதுவுமின்றி, தரிசு நிலத்தைத் தோண்டிக்கிளறிச் சேகரித்துக் கொண்டுவந்த புல்லரிசியைக் குத்தி சுத்தம் செய்து, உப்பு நீர்க் கிணற்றில் ஊறிய நீரை உடைந்த பானையிலிட்டு, உலையிலேற்றிச் சமைத்த சோற்றை, சுட்ட கருவாட்டுடன் பரிமாறும் காட்சியையும் காணமுடிகிறது.


இது வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த நம் தமிழர்களின் பெருமை.


இவ்வாறாக ஆற்றுப்படை நூல்கள் நம் மக்களின் அக்கால உணவுப் பழக்கத்தையும் உயர்ந்த நெறிமுறைகளையும் எடுத்தியம்புகிறது.


                                                                           *****