வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மதுரை யானை மலை யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில், கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும், முன்னூறு அடி உயரமுமாய் ஒரு யானை அமர்ந்திருப்பதுபோன்ற அருமையான தோற்றத்துடன் மதுரைக்கு அழகு சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது இந்த யானை மலை.


இந்த யானை மலையில் இரண்டு குடைவரைக்கோயில்கள், சமணர் குகைகள், மகாவீரர், கோமதேஷ்வரர் போன்ற சமணத்துறவிகளின் உருவங்கள் மற்றும் சமணத்துறவிகள் படுத்து உறங்கிய கல்லாலான படுக்கைகளும் இங்கே உள்ளதாக அறியமுடிகின்றது. இந்த மலைப்பகுதி முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இயற்கையாகவே மிக மிக அழகாக அமைந்துள்ள இந்த மலையின் அடிவாரத்தில், மக்களுக்கு அருளையும் வழங்கும் விதத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று குன்றுதோறாடும் குமரனுக்குரியது. மற்றொன்று நான்கு வகை யோகங்களை அருளும், யோக நரசிங்கப்பெருமாளுக்கு உரியது. இரண்டுமே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள்.


இதில், முருகனுக்குரிய கோயில், லாடன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. லாட தேசத்திலிருந்து வந்த சித்தர் ஒருவர் அங்கு தங்கியிருந்ததால் லாடன் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் முருகனும் தெய்வானையும் அமர்ந்திருக்கும் தோற்றம் மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது.

யோக நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் கருவறை மட்டும் குடைவரைக் கோயிலாகவும், மூலவரின் உருவம் மிகப் பெரிதாக மலைப்பாறையைச் செதுக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.



கோயிலைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழுள்ள காணொளியில் காணலாம்....