புதன், 22 அக்டோபர், 2008

தீபாவளி ஸ்பெஷல் - முந்திரிக்கொத்து

தீபாவளி வந்தாலே பத்துநாளைக்கு முன்பாகவே பட்சணங்கள் செய்து, டப்பாக்களில் சேகரித்துவைக்கத் தொடங்கிவிடுவார்கள்.பக்குவமாய் அரைத்து, சுத்தமாகப் பாகுவைத்து, சுகாதாரமான எண்ணெயில் பொரித்தெடுத்து, அன்பும் ஆரோக்கியமுமாய் செய்யப்பட்ட அன்றைய பலகாரங்களின் சுவை, இன்று கலர்கலராக, ரகம்ரகமாகக் கடைகளில் நாம் வாங்கி உண்ணும் தின்பண்டங்களில் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமே.

சிறுவயதில் அம்மா பலகாரம் செய்துவைத்தாலே அடுக்களையைச் சுற்றி குட்டிப்பூனைகளாட்டம் வளையவந்ததை மறக்கமுடியுமா என்ன? இந்த தீபாவளிக்கு எளிமையான இந்தப் பாரம்பரிய இனிப்பைச் செய்து நீங்களும் உங்க குடும்பத்தை அசத்துங்க :)

சிறுசிறு பயற்றமாவு உருண்டைகளை, இரண்டிரண்டாகவோ அல்லது மூன்றுமூன்றாகவோ மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கும்போது, பார்ப்பதற்கு திராட்சைக்கொத்துபோல் தோன்றுவதால் இதற்கு இந்தப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
ஏலக்காய் - 3
உப்பு - சிறிதளவு
எண்ணெய் -பொரிப்பதற்கு

செய்முறை:

பாசிப்பயற்றை வாசனை வரும்வரை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடி செய்துகொள்ளவேண்டும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, அத்துடன் ஏலக்காய்களைப் பொடிசெய்து போட்டு, லேசாக கரண்டியில் ஒட்டக்கூடிய பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும். பாகில், அரைத்த பயற்றமாவைப் போட்டுக் கிளறி சிறுசிறு எலுமிச்சை வடிவில் உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் சூடு ஆறியதும், மைதாமாவை சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவுக்குக் கரைப்பதைவிட சற்று நீர்க்கவே கரைத்து, அந்தமாவில் இரண்டு அல்லது மூன்று உருண்டைகளாகச் சேர்த்து முக்கியெடுத்து, சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவேண்டும்.

மிகச் சுவையான இந்த இனிப்புப் பலகாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை ஒருவாரம்வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

***********