திங்கள், 14 செப்டம்பர், 2020

திரிபலா சூரணத்தின் பலன்கள் & உண்ணும் முறை



திரிபலா சூரணம், இதனைத் தாய் மருந்து என்று சொல்வார்கள். அதாவது, தாய்க்கு நிகராக, ஒரு மனிதனைப் பாதுகாக்கக் கூடியது என்று அதற்குப் பொருள். 

திரிபலா சூரணம் என்பது மூன்று பழங்கள் அல்லது மூன்று காய்கள் சேர்ந்த ஒரு பொடி. இந்தப் பொடியில், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று காய்கள் அல்லது பழங்கள் சேர்ந்திருக்கின்றன. உணவு செரிப்பதற்கும், வயிறு சுத்தமாகவும் உதவி செய்யக்கூடிய ஒரு அருமையான மருந்து திரிபலா சூரணம் என்று சொல்லுவார்கள்.

மனிதனுடைய உள் உறுப்புகள் சரிவர வேலை செய்யும் போது, மனிதனுடைய முகம் தெளிவாக இருக்கும். இந்தத் திரிபலா சூரணத்தின் முக்கியமான பலன் என்னவென்றால், இது வயிற்றைச் சுத்தபடுத்தி, உடம்பு சரிவர இயங்க உதவி செய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகிவிடும்.

அதனால், முகப்பரு மற்றும் பல தோல் நோய்கள் போன்றவை இந்தத் திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நீங்கிவிடும். இந்தத் திரிபலா சூரணம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது.

திரிபலா சூரணத்தை, நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு திரிபலா சூரணம் ஒரு சிறந்த தீர்வு. இரவில் இந்த திரிபலா சூரணத்தை வென்னீருடன் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் தீர்ந்துவிடும்.

இந்தத் திரிபலா சூரணத்தில் கலந்திருக்கின்ற  நெல்லிக்கனியை உயிரை வளர்க்கும் அமிர்தம் என்று சொல்லுவார்கள். அதனால்தான், அவ்வளவு சிறந்த நெல்லிக்கனியை, அதியமான் அவ்வை எனும் தமிழ்ப் புலவருக்கு கொடுத்ததாகச் சொல்லுவார்கள். 

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது. அடுத்ததாக, திரிபலா சூரணத்தில் கலந்திருக்கும் இன்னொரு பொருள் கடுக்காய். இந்தக் கடுக்காயும் தாய்க்கு நிகராக நோயைத் தீர்க்கக் கூடியது என்று சொல்வார்கள். இந்தக் கடுக்காயில் விதை நஞ்சு. அதனால், அதன் தோலை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதனால், விதையை நீக்கிவிட்டுத் தோலைப் பொடி செய்து அதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இந்த கடுக்காயைக் குழந்தைகளுக்கு மருந்தாகக் கல்லில் உரசிக் கொடுப்பார்கள். 

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு 

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 

விருத்தனும் பாலனாமே" 

என்கிறது ஒரு பழம்பாடல். 

காலையில் இஞ்சியும், கடும்பகல் சுக்கும், மாலையில் கடுக்காயும் சாப்பிட்டால், முதியவர்கள் கூட இளமையாகிவிடுவார்கள் என்பது இதன் பொருள். இந்தக் கடுக்காய்ப்பொடியைத் தனியாக வாங்கியும் பயமன்படுத்தலாம்.

அடுத்ததாக, தான்றிக்காய். தான்றிக்காய் துவர்ப்பு சுவை உடையது. இது, நுரையீரல் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. இதன் பிஞ்சுகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மூன்று காய்களையும் காயவைத்துத் தயாரிக்கும் பொடிதான் திரிபலா சூரணம். 

இந்தத் திரிபலா சூரணத்தை, தினமும் எந்த அளவு சாப்பிடலாம் என்ற கேள்வி எழலாம். பொதுவாக, திரிபலா சூரணத்தை ஒரு வெருகடி அளவு சாப்பிடவேண்டும் என்பார்கள். வெருகடி என்பதற்கு,  பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் ஆகிய மூன்று விரல்களால் ஒரு பொடியை எடுத்தால் எந்த அளவு வருமோ அதுதான் வெருகடி அளவு.

வெருகடி அளவு பொடியை, இரவில் சுடு தண்ணீர் அல்லது தேனில் குழைத்துச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை இரவில் எடுத்துக்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது. 

இந்தத் திரிபலா சூரணம், பொடியாக மட்டுமன்றி, திரிபலா மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. திரிபலா சூரணம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, வீட்டிலேயே அவற்றைப் பொடி செய்தும் நாம் பயன்படுத்தலாம்.

இந்தத் திரிபலா சூரணப் பொடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்று பிரச்சினைகளைத் தீர்க்கவும், நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கும் ரொம்பவே உதவக்கூடியது. இதனை, நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். 

திரிபலா சூரணம் பற்றியும், அதனை, எப்படி வாங்கலாமென்றும் மேலும் தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.

நலமுடன் வாழ்வோம்!

******

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

நூறு அடி நடை - மருத்துவக் குறிப்பு | நடத்தல் நன்று!

நடப்பது நல்லதென்பது நம் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவழியும் என்றெல்லாம் கணக்கிட்டு அன்றாடம் நடைப் பயிற்சி செய்வதை நம்மில் பலர் வழக்கமாக்கியிருக்கிறோம்.

ஆனால், உண்ட உணவைச் செரிக்கவைக்கும் நடையைப் பற்றிய, ஒரு நல்ல மருத்துவக்குறிப்பு ஒரு பழந்தமிழ் நூலிலே உள்ளது. அதைப் படித்து, நாமும் நடை பழகினால் நல்ல முறையில் உண்ட உணவு செரித்துவிடும்.

இந்தப் பாடல், அங்காதிபாதம் எனும் அருமையான சித்த மருத்துவ நூலில் இடம்பெற்றிருக்கிறது.



இந்த நூலில், உணவு முறைகள் பற்றியும் உண்ணவேண்டிய முறைகள் பற்றியும், இன்னும் பலப்பல மருத்துவ முறைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. 100 அடி நடை பற்றிய அந்தப் பாடலை முதலில் பார்க்கலாம்.

தேன் நிறந்த மலர்களைச் சூடிய பெண்ணே, மனம் நிறைய உணவு உண்டபின், நூறு அடிகள் நடக்காவிட்டால், உணவு செமிக்காமல் வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகும். நூறு அடிகளைக் காட்டிலும் அதிகம் நடந்தால், வாய்வு உண்டாகும். நடக்காமல், ஓடினால் மரணமேகூட உண்டாகும். அவ்வாறின்றி, இதமாகப் படுத்திருந்தால் நோய்கள் அதிகரிக்கும் என்கிறது இந்தப் பாடல்.

அதனால், உணவு உண்டபின், நூறு அடிகள் மெதுவாக நடப்பது உடம்புக்கு நல்லது. எல்லா நேரமும் இயலாவிட்டாலும், இரவு உணவுக்குப் பின் மட்டுமாவது இதனைக் கடைப்பிடிக்கலாம்.

******


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மதுரை யானை மலை யோகநரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில், கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும், முன்னூறு அடி உயரமுமாய் ஒரு யானை அமர்ந்திருப்பதுபோன்ற அருமையான தோற்றத்துடன் மதுரைக்கு அழகு சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது இந்த யானை மலை.


இந்த யானை மலையில் இரண்டு குடைவரைக்கோயில்கள், சமணர் குகைகள், மகாவீரர், கோமதேஷ்வரர் போன்ற சமணத்துறவிகளின் உருவங்கள் மற்றும் சமணத்துறவிகள் படுத்து உறங்கிய கல்லாலான படுக்கைகளும் இங்கே உள்ளதாக அறியமுடிகின்றது. இந்த மலைப்பகுதி முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இயற்கையாகவே மிக மிக அழகாக அமைந்துள்ள இந்த மலையின் அடிவாரத்தில், மக்களுக்கு அருளையும் வழங்கும் விதத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று குன்றுதோறாடும் குமரனுக்குரியது. மற்றொன்று நான்கு வகை யோகங்களை அருளும், யோக நரசிங்கப்பெருமாளுக்கு உரியது. இரண்டுமே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள்.


இதில், முருகனுக்குரிய கோயில், லாடன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. லாட தேசத்திலிருந்து வந்த சித்தர் ஒருவர் அங்கு தங்கியிருந்ததால் லாடன் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் முருகனும் தெய்வானையும் அமர்ந்திருக்கும் தோற்றம் மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது.

யோக நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் கருவறை மட்டும் குடைவரைக் கோயிலாகவும், மூலவரின் உருவம் மிகப் பெரிதாக மலைப்பாறையைச் செதுக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.



கோயிலைப் பற்றிய விரிவான தகவல்களைக் கீழுள்ள காணொளியில் காணலாம்....

புதன், 15 ஏப்ரல், 2020

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்





அம்மை நோய் மற்றும் தோல் நோய்களுக்கும், நோய்கள் பரவும் காலத்தில் நோய் எதிர்ப்பிற்கும் வேப்பிலையைப் பயன்படுத்துவது நம் மக்களின் பாரம்பரிய வழக்கம். 

வீட்டு முற்றத்திலும், வீதியோரங்களிலும், கோயில்கள், பள்ளிகள் மற்றும் மைதானங்களிலும் வேப்ப மரங்கள் பெருமளவில் வளர்ப்பதை நாம் வழக்கமாகப் பார்த்திருப்போம்.

வேப்ப மரத்துக் காற்று வியாதிகளை விரட்டும் என்று வாய்வழியாகச் சொல்லப்படுவதும் வழிவழியாக நம்பப்படுவதும் நம் சமூகத்தில் வழக்கம்.

வேப்பிலையைப் பறித்து உடம்புக்கும் தலைக்கும் தேய்க்கப் பயன்படுத்துவதும், அரைத்துக் குடிப்பதும் தொன்றுதொட்டு கிராமத்து மக்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்களாகும். தற்காலத்தில் வேப்பிலை கிடைக்காத பகுதிகளில் நாம் இருந்தாலும், கடைகளில் கிடைக்கும் வேப்பிலைப் பொடி அல்லது வேப்பிலை மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நோய் பரவும் காலங்களில், பொதுவாக,  விஷக்காய்ச்சல்கள் மற்றும் அம்மை பரவும் சமயங்களில், எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காக முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டி வைத்தியமான, விஷக்குறுணி எனும் சிறப்பான மருந்து தயாரிக்கும் செய்முறையையும் கீழுள்ள காணொளியில் காணலாம்.

வேம்பின் மருத்துவ குணங்களையும், அதன் 10 சிறப்பான பயன்களையும் பற்றிக் கீழுள்ள 👇👇👇 காணொளியில் காணலாம்.

திங்கள், 2 மார்ச், 2020

தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம்




வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். 

இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் சார்ந்திருந்த திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் எனும் தாங்க முடியாத வயிற்று வலி உண்டாகிறது. 

சைவ சமையத்தைச் சார்ந்த அவருடைய தமக்கையார் திலகவதியாரின் வேண்டுகோளின்படி, திருவதிகை வீரட்டானேசுவரராகிய சிவனிடம் வந்து, தம்முடைய வலியை, வேதனையை முறையிட்டு, பதிகம் எனும் பத்துப் பாடல்களை மனமுருகிப் பாடி, தம் வயிற்று நோயிலிருந்து விடுபட்டார் தருமசேனர். அதன் பின் தருமசேனராயிருந்த அவர் திருநாவுக்கரசரானார்.

அந்தப் பத்துப் பாடல்களில், முதலாவது பாடலே கூற்றாயினவாறு விலக்ககலீர் எனும் இப்பாடல். மனமுருகி முறையிட்ட பாடல், மருந்தாகி வேதனைகளைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை.

பாடலுக்கான முழுமையான விளக்கம், கீழுள்ள காணொளியில் உண்டு 👇👇👇