சனி, 24 அக்டோபர், 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்) யாரை, யாரு, எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும் புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு. என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு. ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்) எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அது மாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப் பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து, பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு, மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம், அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு, நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக் கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு என்ற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில் (பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க... நன்றி :)

*******

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாசல்படி வாஸ்துவும், விளையாடும் கிரகங்களும்



"எம் புள்ளைக்குப் பொறுப்பில்லையா? என்ன பேச்சுப் பேசுற நீ?"

நீ நேத்து வந்தவ...அவனை வளர்த்து, ஆளாக்கி,படிக்க வச்சு,கல்யாணமும் கட்டிவச்ச
எங்களுக்குத்தெரியாதா அவனைப்பத்தி?

ஏதோ அவனைப் புடிச்ச கெட்ட நேரம்...ஏழரைச் சனி அவனை இப்படி ஆட்டிவைக்குது...அதோட நீ வந்து சேர்ந்த நேரம் வேற...தனக்குன்னு புள்ள குட்டின்னு வந்தா எல்லாம் தானா திருந்திடுவான். நீ அதுக்கான வழியைப்பாரு"

என்று ஆக்ரோஷமாகத் தன் மருமகளை அடக்கினாள் மாமியார் கமலம்மாள்.மனைவியின் கத்தலுக்கு மறுமொழி பேசாமல் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார் சண்முகம், கமலத்தின் கணவர்.

தெளிவாகப் புரிந்தது பூரணிக்கு... தன் கணவனின் செயல்களையெல்லாம் தன் மாமியார் நியாயப்படுத்துவதால்தான், அவன் தான் செய்வதைத் தவறென்று உணராமலே இருக்கிறான் என்று புரிந்ததால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள் அவள்.


அன்றைக்கு, காலையில் அவள் எழுந்து அறையைவிட்டு வெளியில்வந்தபோது, முன்வாசலில் மேஸ்திரியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் மாமியார்.

"என்னாச்சு மாமா?" என்று மாமனாரிடம் மெதுவாகக் கேட்டாள் பூரணி.

அவர், வாசல்ப் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு, மகனுக்காக ஏதோ வாஸ்து ஜோசியர்கிட்ட போனாளாம் உங்க அத்தை. அவர்,வாஸ்துப்படி,தலைவாசலுக்கு எதிரா பின்பக்கம் கதவு,ஜன்னல் இருந்தா அந்த வீட்ல காசு விரயமாகும்னு சொன்னாராம்.சும்மாவே ஆடுவா உங்க அத்தை... இதுபோதாதா அவளுக்கு, ஆளைக் கூப்பிட்டு வாசலையும் சன்னலையும் அடைக்கச்சொல்லிட்டிருக்கா...என்று மெதுவாகச் சொன்னார் அவர்.

ஆனா, இனிமே வீட்டுக் குப்பையை வெளியில்போடக்கூட வீட்டைச் சுத்திச்சுத்தி வெளியே போகணுமே...அதுவுமில்லாம வீட்டுக்குள்ள வெளிச்சமும் இருக்காது,காற்றோட்டமும் இருக்காதே என்றாள் பூரணி.

சரிதாம்மா...ஆனா, வாசலையும் ஜன்னலையும் அடைச்சிட்டா ஊதாரி மகன் உருப்பட்டுடுவான்னு நம்பிக்கை அவளுக்கு...இதில,நாம எது சொன்னாலும் எடுபடாது இப்போ என்று சொல்லிவிட்டு அகன்றார் அவர்.

கையில் காப்பியுடன் கிணற்றுத்தொட்டியில் உட்கார்ந்து பறவைகளின் குரலைக்கேட்கும் சுகம் இனிக் கிடைக்காது என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் பூரணி.அவளுக்கு மிகவும் பிடித்தமான,பின்வாசல் முல்லைக்கொடியும்,கிணற்றுத்தொட்டியும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு .

இடத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த வாரத்தில் வந்து வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப்போனார் மேஸ்திரி.

ஏதேதோ யோசித்தவாறே தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் பூரணி.

அன்று, காலையில் எழுந்து, தனக்கும் கணவனுக்குமாகக் காப்பியைக் கலந்தவள்,கணவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் குடிக்காமல் சென்று படுக்கையில் சரிந்தாள்.

என்னாச்சு பூரணி? ஏன் திரும்பவும் வந்து படுத்துட்டே? என்றான் மகேஷ்.

"தலை சுத்துதுங்க" என்று சொல்லிவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தாள் அவள்.

மகன் விஷயத்தைச் சொல்ல, மருமகளை வந்து எட்டிப்பார்த்தாள் கமலம்மாள்.

" எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம் என்று அம்மா சொல்ல, நீ மெதுவா குளிச்சுட்டு ரெடியாகு பூரணி...நான் ஆட்டோவுக்குச் சொல்லிட்டு வரேன் என்று புறப்பட்டான் மகேஷ்.

"நாள் அதிகமா ஆகலேங்கிறதால,இப்ப எதுவும் தெளிவாசொல்லமுடியல கமலாம்மா... இன்னும் ஒருவாரம் போகட்டும்.டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம். அதுவரைக்கும் இந்த மாத்திரையை வாங்கிக்குடுங்க" என்று சொல்லிச் சீட்டை நீட்டினாள் குடும்ப டாக்டர்.

"பாத்து வீட்டுக்குக் கூட்டிப்போம்மா" எனக்கு வேலையிருக்கு என்றுசொல்லிவிட்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்த நண்பனுடன் பைக்கில் புறப்பட்டான் மகேஷ். அங்கேயிங்கேன்னு சுத்திட்டு அர்த்தராத்திரியில வராம, நேரத்தோட வீட்டுக்கு வாப்பா என்றாள் கமலம்.தலையசைத்துவிட்டுச் சென்றான் மகேஷ்.

வீட்டுக்கு வந்தபோது, வாசலில் மேஸ்திரி கடப்பாறை மண்வெட்டியுடன் ஆட்கள் சகிதமாக வேலைக்கு வந்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த ரெண்டே நிமிஷத்தில் வயிற்றைப்பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள் பூரணி. பதறிப்போனாள் கமலம். ஓடிச்சென்று அளுடைய சிநேகிதியான அடுத்தவீட்டு மாமியை அழைத்து வந்தாள்.

வீட்டுக்குள் ஏதோ பதட்டம் என்றவுடன் வேலையைத் தொடங்காமல் தயங்கி நின்றார்கள் பணியாட்கள்.

என்னாச்சு கமலா? ஏன் இவால்லாம் வாசல்ல எமகிங்கராள் மாதிரி கடப்பாறையும் கம்புமா நிக்கறா என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் மாமி.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டவளாய், குமட்டறதுன்னு காலையில ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டாய். உடம்பு சூட்டோட வாயுவும் சேர்ந்து வயத்தை வலிக்கிறதுன்னு நினைக்கிறேன் என்று சொன்னவளாய்,

கமலா நீபோய் இவளுக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டா என்றுவிட்டு, பூரணியின் மாமனாரிடம் கேட்டு வேலையாட்கள் வந்த காரணத்தையும் தெரிந்துகொண்டாள்.

பாலைக் குடிச்சிட்டு, அடிவயித்தில விளக்கெண்ணெய் தடவிக்கிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு பூரணி.அப்புறமும் வலியிருந்தா ஆஸ்பத்திரிக்குப்போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கமலாவை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னாள் ஜானகி மாமி.

கமலா,எங்காத்து மாமாவைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய் என்றாள்.

திடீரென்று வந்த கேள்வியால் திகைத்த கமலம்," அவருக்கென்ன ஜானகி, அவருண்டு அவரோட வேலையுண்டுன்னு இருக்கார். உன்னையும் பிளைங்களையும் நல்லா வச்சிருக்கார்.ரொம்ப சிக்கனம்னு நீதான் குறைபட்டுக்குவே" என்றாள் கமலம்.

நம்ப ரெண்டுபேரோட வீடும் அடுத்தடுத்து ஒரேமாதிரி கட்டியதுதானே...வாஸ்து அமைப்பெல்லாம் ஒண்ணுபோலத்தானே இருக்குது. அப்ப எங்காத்துக்காரர் கஞ்சனாகவும், உன் பிள்ளை செலவாளியாவும் இருக்காங்கன்னா அதுக்கு வாஸ்து எப்படிப் பொறுப்பாகும்?

கிழக்குத்திசை வாசலும், மேற்குத்திசையில் பின்வாசலும் ஏகப்பட்ட ஜன்னல்களுமாய் எத்தனை அம்சமா கட்டியிருக்காங்க, அதைப்போய் மூடணும்ன்னு ஆளைக் கூட்டிவந்திருக்கியே என்றாள் மாமி.

படிக்கிற காலத்திலேயிருந்து மகன் கேட்கிறப்பல்லாம் காசைக்கொடுத்து நீ அவனை செலவாளியா வளத்துட்டே. சொந்தமா பிசினஸ் வச்சிக்கொடுத்து,போதாக்குறைக்கு சொந்தத்திலேயே ஒரு பொண்ணையும் கொண்டுவந்து கட்டி வச்சிட்டே. அவனுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாமப் போயிடுத்து. இனிமே, கொடுக்கிற கையைக் கொஞ்சம் சுருக்கிப்பார்...அவன் தன்னால சரியாயிடுவான். சம்பாதிச்சுட்டு வர்றதைவச்சு அவங்களோட செலவுகளைச் செய்யச்சொல். அவன் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா, எந்தக் கிரகமும் எதிர்க்க நிக்காது என்று சொல்லிச் சிரித்தாள் மாமி.

கமலம், மாமியின் வார்த்தைகளை ஆமோதித்ததுதான் தாமதம், வாசலில் சென்று வந்தவர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டு வேலைசெய்யவேண்டாமென்று அனுப்பிவைத்தார் சண்முகம். எங்கே புழக்கடை வாசலில், பூவாசக் காற்றோடு புத்தகம் படிக்கும் சந்தோஷம் கெட்டுப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு.

வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தாற்போலிருந்தது பூரணிக்கு.எழுந்து அமர்ந்தவள் ஜன்னல் வழியாகப் பின்பக்கம் பார்த்தாள்.மரக்கிளையில்,கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுக்குக் கொஞ்சிக்கொஞ்சி இரைகொடுத்துக்கொண்டிருந்தது குருவியொன்று.

உட்புறம் திரும்பினாள்... அங்கே,உரக்கப்பேசிக்கொண்டிருந்த மாமி அவள் கண்களுக்கு சாமியாகத் தெரிந்தாள்.

*********

சனி, 10 அக்டோபர், 2009

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 1 கப்

முட்டை - 1

எள் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு - ஒரு சிட்டிகை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.

************