புதன், 9 டிசம்பர், 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!



மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால், இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. 

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல, அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே, பாதிக்கப்பட்டவர்களைவிட உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும் பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கி வந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி, ஓடி ஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர் வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. 

அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி, என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

                                                              ******

வியாழன், 10 செப்டம்பர், 2015

மூதுரைக் கதைகள் - 2 புலி கிடந்த புதர்



மாலை மணி ஐந்து முப்பது. அலுவலகம் காலியாய்த் தெரிந்தது. இருந்த ஒன்றிரண்டுபேரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"சண்முகம் சார், உங்களுக்கு காப்பி, டீ ஏதாச்சும் வாங்கியாரவா?" என்றபடி அவரது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார் பியூன் மாணிக்கம். "வேண்டாம் மாணிக்கம் கொஞ்ச நேரம் கழிச்சு டிபனே வாங்கிட்டு வந்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. நான், இன்னிக்கி நைட் ஷிஃப்டும் முடிச்சுதான் வீட்டுக்குப் போகணும்" என்றபடி ஃபைலில் பார்வையைப் புதைத்துக்கொண்டார் சண்முகம்.

"அப்போ, காலாற நடந்துபோயி டீ சாப்டுட்டு வந்து உக்காரலாமே சார்...காலைல வந்ததுலே இருந்து ஃபைலே கதின்னு இருக்கீங்களே...மத்தியானம் கூட வெளியே போகல...உடம்பு கிடம்பு சரியில்லயா சார்?" என்று அக்கறையுடன் அவர் முகத்தைப் பார்த்தார் மாணிக்கம். மாணிக்கத்துக்கும் அவருக்கும் அலுவலக இடைவெளிகளை மீறிய நல்ல நட்பு உண்டு.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், "நீ போயி வேலையைப் பாரு மாணிக்கம்" என்றபடி, அலைபேசியை எடுத்து அரிசிக்கடை செட்டியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவந்து அமர்ந்தார். காதுகளில் காலையில் மனைவி பரமு சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

"வக்கத்த வாத்தியாரும் வேண்டாம், போக்கத்த போலீசும் வேண்டாம்னு சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு இந்த ஆக்கங்கெட்ட ஆபீசருக்குக் கட்டிவச்சார் எங்க அப்பா. இங்க என்ன வாழுது? ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கிற மாதிரியா இருக்கு? ஆசைஆசையா வாங்கின நகைய அடகு வச்சுத்தான் பிள்ளையைப் படிக்கவைக்கவேண்டியிருக்கு. 

நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது...வீட்டுக்கு வரும்போது என்னோட வளையலோட வரணும். இல்லேன்னா..." என்றவாறு அவள் அடுப்படிக்குள் நுழையவும் இவர் ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். காலையில் காப்பி கொடுக்கையில் ஆரம்பித்த அர்ச்சனை அதுவரைக்கும் ஓயவில்லை.

மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஏகப்பட்ட செலவாகிவிட்டது அவருக்கு. சேமிப்பெல்லாம் கரைந்துபோக, இறுதியில், போனவருஷம் தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த வளையலை வங்கியில் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

அடுத்த வாரம் வருகிற அண்ணன் மகனின் பிறந்த நாளுக்கு அந்த வளையல் இல்லாமல் போகமுடியாது என்ற பிடிவாதம் வேறு. அவரவருக்கு இருக்கிற பிரச்சனையில், உன்னோட கையில் கிடக்கிற வளையல் புதுசா பழசா என்று யாரும் பார்க்கப்போவதில்லை" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார். பரமு கேட்பதாயில்லை. 

அரிசிக்கடை செட்டியாரிடம் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார். நாளைதான் கிடைக்கும். அதற்குள் வீட்டுக்குப்போய் இன்னும் கொஞ்சம் வாய்ப்பரப்பு வாங்கிக்கொள்ள விருப்பமில்லை சண்முகத்துக்கு.

சண்முகத்தைப்போலப் பலரும் இல்லற வாழ்க்கையில் சங்கடப்படுவது தெரிந்துதான் அன்றைக்கே ஔவை மூதாட்டி, சுடுசொல் பேசுகிற இல்லாள் அமைந்த வீடு, புலி பதுங்கிக்கிடக்கும் புதருக்கு சமமானது என்று அழுத்திச் சொல்லியிருக்கிறாள்.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்".

மூதுரையின் இருபத்தோராவது பாடலில், மனைவி நல்லவளாக அமைகிற குடும்பத்தில், இல்லாதது எதுவுமே இல்லை. அங்கே எல்லாச் சிறப்புகளும் நிறைந்திருக்கும். அவளே, சுடுசொல்லால் தகிக்கிறவளாக அமைந்துவிட்டால், அந்த வீடு புலி பதுங்கிக் கிடக்கிற புதரைப்போல அச்சத்தைத் தருவதாக அமைந்துவிடும் என்று அழகாகச் சொல்லுகிறாள் ஔவைப்பாட்டி.

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டா நல்லதுதானே?


                                                    **************











சனி, 5 செப்டம்பர், 2015

பாரதியின் கண்ணன்


அவன் என்றைக்கு வந்தான், எப்போது என்னில் கலந்தான், எந்தத் தருணத்தில் என்னைத் தன்னுடையதாக்கினான் எதுவும் புரியவில்லை...ஆனால், அவன் இதயப் பரப்பெல்லாம் வியாபித்து விளையாடுகின்றான். என்ன நினைத்தாலும் கண்ணில் தெரிகிறான்...என் வழிகளில் கரம்பிடித்து வழிப்படுத்திச் சிரிக்கிறான்.


இவனை என்னென்று விளிப்பேன்? யாரென்று நினைப்பேன்? எதுவும் புரியாமல் தவிக்கிற மனசு அவனை எல்லாமாகப் பார்த்து மகிழ்கிறது. இப்படித்தான் வியந்திருக்கிறான் பாரதி.

கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய்,
மாணவனாய், சற்குருவாய், சின்னக்குழந்தையாய், காதலனாய்,
காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய்க் கண்டு வியக்கிறான் அவன். காதலியாகிற கண்ணன் கண்ணம்மாவாகியிருக்கிறான் அவன் கவிதைகளில்.


எத்தனை காதல் அவனுக்குக் கண்னனிடத்தில்! சொல்லத்தெரியாத பிள்ளையெனத் தவிக்கிற அவன் மனது, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று உருகிப்போகிறது. அனைத்தும் அவனென்ற அன்பினில் கட்டுண்டு அகமகிழ்ந்து நிற்கிறது.

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான் - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

அவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான். 

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதைநாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.

காதல்மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான்கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுஅவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான்.


அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.


காதல், மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான், கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுமனசு.

எண்ணும்  பொழுதிலெல்லாம் -அவன்கை 
           இட்ட விடத்தினிலே 
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் 
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் - அவன்தான் 
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்கனே 
            கண்ணின் முன் நின்றதடீ!

பலவிதமான பிரச்சனைகளின் மத்தியிலும், பற்றுக்கோடாய் ஒரு நம்பிக்கையிருந்தால், மனிதனின் மனது அந்தத் தளைகளில் கட்டுப்படாமல் உயர உயர உற்சாகமாய்ப் பறக்கும். கற்பனைச் சிறகுகொண்டு காற்றிலே மிதக்கும். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் என்கிற உறுதி வரும். பற்றுக்கோடாய்ப் பராசக்தியும்கரம் பற்றி வழிநடத்தக் கண்ணனும் பாரதிக்குக் கிடைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் அடிமைத்தளையிலும் ஆனந்த சுதந்திரத்தைக் கண்ணில் கண்டான். 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே"

என்று சிங்கநாதம் எழுப்புகிறான். சோர்ந்து கிடந்த அடிமை மனங்களுக்கு உற்சாகமூட்டுகிறான். மேலும்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்".

என்று தன் கற்பனைச் சிறகுவீசிக் கனவு காண்கிறான். இது ஒரு கவிஞனுக்கே உரித்தான உணர்வு. அவனால் மட்டுமே அப்போதைய நினைவுகளிலிருந்து அப்பால் விலகி, ஒரு அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கமுடியும். அவனும் சஞ்சரித்தான். அழகான ஒரு உலகம் அவன் கண்ணில் விரிந்தது. அடிமைத் தளைகள் நீங்கிய ஒரு ஆனந்த உலகம். கண்ணனின் கரங்களைப் பற்றியபடி கனவுகளோடு மரித்துப் புத்துலகம் போனான் அந்தக் கவிஞன். தன்னை  மகாகவியாய் மக்கள் மனதில் நிறுத்திப்போனான். கண்ணனின் காதல், அவன் வரிகளில் காலங்காலமாய் நிலைத்திருக்கும். காதல் மனங்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

வியாழன், 1 ஜனவரி, 2015

பாவம் பிள்ளைகள்!



ஞாயிற்றுக்கிழமை...காலை எட்டுமணி...

என்னங்க, இங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்களேன்... என்றாள் என் தர்மபத்தினி. 

என்னடா இது அதிசயம்? இன்னிக்கி அவ வாய்ஸ்ல ஒரு மென்மை தெரியுதேன்னு படிச்சிக்கிட்டிருந்த பேப்பரை பட்டுன்னு மூடி வச்சுட்டு பக்கத்துல போயி நின்னேன்.

"ஆமா, இது யாருன்னு தெரியிதா?" என்றாள், டேபிளின் மேல் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த என் மகளைக் காட்டி.

என்னம்மா, இது? நம்ம புள்ளையப் பாத்து இப்பிடிக் கேக்குறே...

"ஆமா, புள்ளைய எதுக்கு இப்பவே எழுப்பி உக்கார வச்சிருக்கே... அது உக்காந்துகிட்டே தூங்குது பாரு... முன்னெல்லாம் ஞாயித்துக்கிழமைல நாம ரெண்டுபேருமே கூட மத்தியானம் வரைக்கும் தூங்கியிருக்கோம்..." என்றேன் பெருமூச்சுடன்.

"அதெல்லாம் அந்தக்காலம்... நீங்க நடக்கிற கதைக்கு வாங்க..." என்றாள்.

"அந்தக்காலம் இல்லம்மா... இப்பத்தான்  ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தின காலம்..." என்ற என்னை அவள் உறுத்துப் பார்க்க, "சரி... உனக்கு அது கடந்த காலம்... என்னைப் பொருத்தவரைக்கும் அது ஒரு பொற்காலம்... விடு... இப்ப என்னை எதுக்குக் கூப்ட்டே?" என்றேன்.

"உங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு வாரம் ஆகுது ஞாபகம் இருக்கா?" என்றாள். 

"ஏன்மா இல்லாம? பார்ட்டி ஹால் புக் பண்ணி, கேக் வெட்டி, விருந்து வச்சு,  வந்தவங்களுக்கெல்லம் கிஃப்ட் குடுத்து, ஒரு சின்னத் திருவிழா மாதிரி செலிபரேட் பண்ணோமே... காசு எத்தனை ஆயிரம் செலவாச்சு... அதுகூட மறக்குமா என்ன?"

"ஓ... சந்தடி சாக்குல செலவுக்கணக்குக் காட்டுறீங்களோ?" என்று கண்ணை உருட்டி  என்னைப் பார்த்து அவள் கடுப்படிக்க, "இல்லம்மா... இயல்பாச் சொன்னேன்..." என்று அசடு வழிந்தேன்.

"சரி, ரெண்டு வயசாச்சு...பொறந்தநாள் கொண்டாடியாச்சு. இனிமே, அடுத்தது என்னன்னு ஏதாவது யோசிச்சீங்களா? " என்றாள். 

"அடுத்து என்ன? ரெண்டு வயசு தானே... இருவத்திரண்டு இல்லையே... என்னத்துக்கு இப்படி காலங்காத்தால டென்ஷன் பண்றா?" என்று மனசுக்குள் எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

ஓ...ஒருவேளை, அடுத்து இவளுக்குப் பொறந்தநாள் வருதோ??? கடவுளே பொறந்தநாள் கொண்டாடியே நான் 
போண்டியாயிடுவேன் போலயே...என்று நினைத்து என் பிபி எகிறத்தொடங்க, அதற்குள் சட்டென்று நினைவுக்கு வந்தது. 

இப்பத்தானே நவம்பர்ல, டொமினொஸ் பீசா, அதோட கேக், ஆரெம்கேவில பட்டுப்புடவை, அதுக்கு மேட்சா ஒரு ஜோடி கம்மல்னு, ரெண்டு மாசத்துக்கு முன்னால பிறந்தநாள் கொண்டாடி இருவத்தஞ்சாயிரம் செலவு வச்சா... அப்போ, அவ பொறந்தநாள் இல்லை என்று மனசை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அதற்குள், "நீங்கல்லாம் படிச்சவர் தானே...?" என்று எதிர்பார்க்காத இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. 

"என்னம்மா இப்பிடிக் கேட்டுட்டே? என்னோட படிப்பையும் வேலையையும் பாத்துத்தானே உங்கப்பா உன்னை எனக்குக் கட்டிவச்சார்" என்று நான் பெருமிதமாய் எதிர்க்கேள்வியை எழுப்பினேன்.

"ஹூக்கும்...பெரிய்ய படிப்பு...ஒத்தப் பிள்ளைய வச்சுக்கிட்டு அடுத்து என்ன செய்யணும்ன்னு கேட்டா, ஏதோ என்ட்ரன்ஸ் எக்சாம்ல எக்குத்தப்பா கேள்வி கேட்ட மாதிரி முழிக்கிறீங்க... என்னத்தைப் படிச்சித் தொலைச்சீங்களோ..." என்று அவள் எகிற, 

என்னது, ஒத்தப் பிள்ளையா... ஓ... ஒருவேளை, அவ அப்டி வராளோ? இன்னொரு குழந்தை வேணும்னு நம்ம வாயால சொல்லணும்னு எதிர்பார்க்கிறாபோல... என்று நினைத்து உள்ளம் துள்ள, அடச்சே... உண்மையிலேயே நான் சரியான மக்குதான்... "செல்லம், இப்பத்தான்டா புரியுது எனக்கு... நம்ம அனுக்குட்டிக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேணும்னு தானே நீ நினைக்கிறே?" என்று நான் வாயெல்லாம் பல்லாகிக் கேட்டேன்.

"ஓஹ்ஹோ... அப்படியொரு எண்ணம் வேற இருக்கா உங்களுக்கு? இருக்கிற ஒரு குழந்தைக்கே அடுத்து என்ன பண்ணனும்னு அறிவு இல்ல, இன்னொரு குழந்தை வேற கேக்குதோ?" என்று சின்னப் பத்திரகாளியாய் அவள் சீற,

"ஐயோ... அப்போ அதுவுமில்லையா? நான் அம்பேல்... என்னன்னு நீயே சொல்லிரு தாயி..." என்று நான் அலுத்துப்போய் சரண்டராக, கண்ணுக்கு முன்னால் ஒரு காகிதத்தை நீட்டினாள். 

"லிட்டில் பட்ஸ் ப்ளே ஸ்கூல்" என்று பெரிய எழுத்தில் அதன் தலைப்பைப் பார்த்ததும் புரிந்தது, இதற்குத்தான் இத்தனை களேபரம் என்று. "ஏம்மா, ரெண்டு வயசுக்குள்ள ஸ்கூல்ல சேர்க்கணுமா? நானெல்லாம் நாலு வயசிலதான் ஸ்கூலுக்குப் போனேன்... நீயெல்லாம் கிராமத்துல அதைவிட லேட்டாக்கூட சேர்ந்திருப்பே, அப்டித்தானே?" என்று அவளைக் கேட்டேன் 

"நீங்க படிச்சுக்கிழிச்ச பவிசு தான் அன்றாடம் கிழியுதே... இன்னும் எதுக்கு அதையே பேசிட்டிருக்கீங்க? என்றவள், இந்த ஸ்கூல்ல, அடுத்த வருஷ அட்மிஷனுக்கு இப்ப ரிசர்வேஷன் நடக்குதாம். அதுக்கு இன்னிக்கு அப்ளிக்கேஷன் தராங்களாம். போன வருஷம் ரெண்டே மணி நேரத்துல அப்ளிக்கேஷனெல்லாம் தீர்ந்து போயிருச்சாம். என்னோட ஃப்ரெண்டோட  பையன், வத்சனுக்கு சரியாப் பேசக்கூடத் தெரியாது. அந்த ஸ்கூல்ல சேர்த்த பிறகு இப்ப என்னாமாப் பேசறான் தெரியுமா?" என்றாள். 

 "சரிம்மா, அந்தப் பையனுக்கு பேசத்தெரியலை... அப்பாவும் அம்மாவும் வேலைக்கு வேற போறாங்க... கூட இருந்து பேச யாருமில்லே... ஆயாகிட்ட விடவும் அவங்களுக்கு விருப்பமில்லே. அதனால அங்கே அனுப்பியிருக்காங்க. 

நம்ம பொண்ணுக்குத்தான் வீட்ல நீ கூட இருக்கியே... அவளும் இப்பவே கிளிமாதிரி அழகா, சமயத்துல உன்னை மாதிரியும் சூப்பரா பேசறா...அவளுக்கு எதுக்கு ப்ளே ஸ்கூல்லாம்...? இன்னும் குறைஞ்சது ஒரு வருஷமாவது போகட்டும். அப்புறமா நேரடியா ஸ்கூலுக்கு அனுப்பலாம்" என்றேன்.

என்னைப் பார்த்து எரித்துவிடுபவள்போல முறைத்தவள்,  "சாரதாவோட குழந்தை மூணு வயசுலய உலக மேப்ல உள்ள அத்தனை நாடுகளையும் அதோட தலைநகரங்களையும் புட்டுப்புட்டு வைக்குது. ஜூலி அவ கொழந்தையை ஐ ஏ எஸ் ஆக்கணும்னு இப்பவே ஜெனரல் நாலட்ஜ் கோச்சிங் அனுப்பிட்டிருக்கா. நர்மதாவோட பையன் அபாக்கஸ் ட்ரெயினிங் போறான். நம்ம பொண்ணு மட்டும் இன்னும் எதையுமே கத்துக்காம மக்கு மாதிரி வளரணுமா என்ன?"

இல்லம்மா...நீ புரிஞ்சுக்காம பேசுறே. இப்படி ரெண்டே வயசுல பள்ளிக்கூடத்துக்குத் தள்ளிவிடறதாலயோ, சின்ன வயசுலயே தலைநகரங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதாலயோ, திருக்குறளைத் தலைப்பாடமா ஒப்பிக்கிறதாலயோ அறிவு வளர்ந்துடாது. குழந்தைகளுக்கு இயல்பா எந்த விஷயத்துல ஆர்வம் இருக்குன்னு படிப்படியா தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி நாம சப்போர்ட் பண்ணி வழிநடத்தினாலே போதும்.

இப்பல்லாம் தினசரி செய்திகளைப் பார்த்தாலே புரியும் உனக்கு. படிப்பு விஷயத்துல அப்பா அம்மாவோட அதீத வற்புறுத்தல், பள்ளிக்கூடத்துல சந்திக்கிற படிப்பு சம்பந்தமான பிரச்சனைகள் தாங்காம நிறையக் குழந்தைகள்  சின்ன வயசிலயே தற்கொலை வரைக்கும் போயிடறாங்க. பள்ளிக்கூடப் படிப்பும் அதுல வாங்குற மதிப்பெண்களுமே முக்கியம்ங்கற நம்ம மனநிலை மாறணும். படிப்பு விஷயத்துல பிள்ளைகளை அடக்கியாளணும், அவங்களை நாம விரும்பின துறைல உக்காரவச்சிடணும்னு நினைக்கக்கூடாது"

நின்று, நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவள், சில வினாடிகள் மௌனமாய் என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். அப்பாடா, ஒருவழியா நாம சொன்னதை உணர்ந்து ஒத்துக்கிட்டா போலிருக்குது.  நம்ம பிள்ளையை 'ப்ளே ஸ்கூல்'ல இருந்து காப்பத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன், மகளின் அருகே போய் அவளைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டேன்.

அதற்குள் உள்ளேயிருந்து திரும்பி வந்தவள், "இந்தக் கவர்ல ப்ரெட் சாண்ட்விச் இருக்கு. சட்டுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டுப்போயி, பத்து மணிக்கு ஸ்கூலோட ஆஃபீஸ் திறந்ததும் அப்ளிக்கேஷனை வாங்குங்க..." என்றாள்

"ஜானு, நான் இன்னும் குளிக்கக்கூட இல்லம்மா. அதுக்குள்ள என்ன அவசரம்...குளிச்சிட்டுக் கிளம்புறேன்..." என்றவனிடம்

"குளிச்சு, அலங்கரிச்சு, ஆடி அசைஞ்சு போயி, அப்ளிக்கேஷன் முடிஞ்சுபோச்சுன்னு வாங்காம மட்டும் வந்தீங்கன்னா அப்புறம்... " என்று அவள் வாக்கியத்தை உக்கிரமாக உச்சரித்து முடிப்பதற்குள் நான் வாசல் கேட்டில் இருந்தேன். என்னுடைய ஞாயிற்றுக்கிழமை ப்ரேக்ஃபாஸ்ட்  என் கையில் இருந்தது.