திங்கள், 24 மார்ச், 2014

சோறென்று சொன்னால் கேவலமா?

சில வருடங்களுக்குமுன், பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்த என் மகள், அம்மா, 'late' என்கிற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னம்மா? என்றாள். தாமதம், அல்லது காலம் தாழ்த்தி என்று பொருள் கொள்ளலாமென்று செய்துகொண்டிருந்த வேலைகளுக்கிடையே சொல்லிவிட்டு மறந்துபோனேன். 

மறுநாள், பத்திரிகையில் நினைவு அஞ்சலியில் இருந்த ஒருத்தரைப் பார்த்து இவர் ''காலதாமதமான தாத்தாவா அம்மா?'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. "அட, ட்யூப்லைட்  அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க? என்றாள். 

முந்தினநாள் அவள் கேட்டது கல்யாணப்பத்திரிகையொன்றில் மணமகனின் தந்தை பெயருக்கு முன்னாலிருந்த 'லேட்' என்ற சொல்லைப் பார்த்து என்பது அப்புறம்தான் தெரிந்தது. "அட, அதைக் கேக்கிறியா? அந்த இடங்களில் 'லேட்' என்கிற வார்த்தை 'காலமான, இறந்துபோன' என்ற பொருளில் 'மங்கலமான' வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பயன்பாட்டை அப்படியே பற்றிக்கொள்வதில் நம் மக்களுக்கு அலாதி ஈடுபாடு உண்டு. அப்படி வந்ததுதான் இதுவும்..." என்று விளக்கிச்சொன்னேன். 

இறந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் late மாதிரியே 'லேட்' என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான நேரடித் தமிழ் வார்த்தைகளும் பேச்சுவழக்கில் இறந்துபோனதாகத்தான் தோன்றியது எனக்கு. 
காலந்தாழ்த்தி, தாமதமாக எனும் வார்த்தைகள் உரைநடையில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதோடு சரி. மற்றபடி, பல்லில்லாத பாட்டி முதல் பள்ளிக்கூடம் போகாத குழந்தை வரை எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது என்பதெல்லாம் மறந்துபோய் , 'லேட்டாயிருச்சு' என்று சொல்வதே லேட்டஸ்ட் ஃபாஷனாகி விட்டது. 

அப்டின்னா, இறந்தவர் என்பதைக் குறிப்பிடத் தமிழில் வார்த்தைகளே இல்லையா? என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை? இருக்குதே... 'மறைந்த, காலமான, இறைவனடி சேர்ந்த' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றேன்.'' அப்போ, இருக்கிற எத்தனையோ வார்த்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்த வார்த்தைகளைப் பிடிச்சு வச்சிருக்கோம் என்று சொல்லிச் சிரித்தாள் அவள். 

அவள் சிரிக்கையில், இந்த ஒருவார்த்தைக்கு மட்டுமா இந்த நிலைமை என்று நினைத்து எனக்கு மனசு வலித்தது, காலமாகிப்போன இன்னும் பல தமிழ் வார்த்தைகளை நினைத்து.

'late' மாதிரியே மிகச் சாதாரணமாகப் புழங்கப்படுகிற இன்னொரு வார்த்தை 'rice' செந்தமிழ்ச் சொல்லான சோறு என்பதைச் சொல்லவே சங்கடப்படுகிறது நம் நாகரீகத் தமிழ் மக்கள்கூட்டம். நினைக்கவே கஷ்டமாயிருக்கிற விஷயம் என்னன்னா, "சோழநாடு சோறுடைத்து" என்று பாடப்பட்ட பகுதியில்கூட "meals ready" போர்டுகளும், 'ரைஸ் வைக்கட்டுமா?' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா?' என்ற கேள்விகளையும்தான் கேட்கமுடிகிறதே தவிர "இன்னுங் கொஞ்சம் சோறு போட்டுக்கோ..." என்று சொல்கிற வழக்கம் அனேகமாக மறைந்துவருகிறது. மொத்தத்தில், சோறும் "late சோறு" ஆகிவிட்டதென்று தோன்றுகிறது.


ஆங்கிலத்தில், ரைஸ் (rice) என்றால் அரிசி. வெறும் வேகாத அரிசி. Cooked rice, Steamed rice என்றால் அது வேகவைத்துச் சமைக்கப்பட்ட சோறு. இதை விட்டு, எல்லாமே ரைஸ் ஆகிப்போனது இன்று. வெந்ததுக்கும் வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நம் தமிழ்மக்கள் என்று நினைக்கையில் வருத்தம்தான் வருகிறது. இனி, யாராவது ரைஸ் போடவா என்று கேட்டால், அவர்களிடம் எங்கே அரிசி போடணும், எங்கே சோறு போடணும் என்று கேள்வி கேட்டுக் கொஞ்சம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்று ஆத்திரம்தான் வருகிறது.

ஆனால், மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கொடுக்கிற விஷயம், தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோறு என்கிற சொல் இன்னும் மறக்காமல் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால், அதுவும் இந்தத் தலைமுறை தாண்டினால் இருக்குமா என்பது சந்தேகம்தான். 

அம்மா அப்பா என்று சொல்வதையே அகற்றி, மம்மி டாடியாக்கிவிட்ட தமிழகத்துக்கு, அவர்களுடைய முக்கிய உணவான சோற்றின் பெயர் மறந்துபோனதோ மறைந்து போவதோ ஒண்ணும் பெரிய விஷயமாயிருக்காது.

சனி, 8 மார்ச், 2014

பெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்!

இலக்கியத்திலும் சரி, இறைவழிபாட்டிலும் சரி, நம் நாட்டில் பெண்மைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு மிகப் பெருமையுடையது. 

முறமெடுத்துப் புலிவிரட்டியதும்தந்தையுடன்கூட என் சின்னஞ்சிறு புதல்வனும் போரில்வீரமரணமுற்றான். இதுவல்லவோ எமக்குக் கிடைத்த வெற்றி என்று  போர்க்களத்திலே பூரித்ததும் ம் தமிழ்குடிப் பெண்டிர்தான்.

"எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை"

அத்தகைய பெண்களின் வீரத்தைக் கண்டு கூற்றுவனும் நாணினானென்று புறநானூறு பாராட்டும்.


இறைவழிபாட்டில், அன்னை பராசக்தியே அகிலமனைத்துக்கும் காரணியென்று அவளை வழிபடுதலும்,  அவள் அம்சமான சக்தியாகவே பெண்ணைப் போற்றுதலும் பரவலாகக் காணப்படுகிற பழக்கம். 

அன்பே சிவமாகி ஆட்கொள்ளுகிற சிவபெருமானும் தன் இடப்பாகத்தை இறைவிக்குக் கொடுத்தவன்.  அவனை,

"மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே"

என்று திருஞானசம்பந்தரும்

"ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் மிவனென்ன
அருமையாக வுரைசெய்ய வமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்"

என்று திருநாவுக்கரசரும் போற்றிப் பாடியிருக்க,

அப்பேற்பட்ட இறைவனின் இயக்கத்திற்கும்கூட, இறைவியின் துணை அவசியம் என்று ஆதிசங்கரர் அவரது சௌந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். வரது சௌந்தர்யலஹரிப் பாடலொன்றின் தமிழாக்கத்தில்,

"திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால் 
தேவி நீ அன்புடன் ஒன்றித் 
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும் 
இறைவனே இழந்திடும் என்னில் 
கங்கைவார் சடையன் அயன்திருமாலும்
கைதொழுதேந்தியே போற்றும் 
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் 
நின் பாதமே தொழுவதும் எளிதோ?” 

என்று  பாடிப் பரவுகிறார்.

மனித உடலின் இடப்பாகம் இதயத்தைக் கொண்டது. உடலின் அத்தனை பகுதிக்கும் ரத்தத்தையும் பிராணவாயுவையும் செலுத்தி மனிதனைச் சக்தியுடன் நடமாட வைப்பது இதயத்தின் வேலை. அத்தகைய இடப்பக்கத்தைத் தனக்களித்த இறைவனையும் இயங்கவைப்பது இறைவியின் வேலையென்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

அத்துடன், பெண்ணைப் பராசக்தியாகப் போற்றிப் பெருமைப் படுத்தியதில் நம் எட்டையபுரத்து கவிஞன் இன்னும் சிறந்தவன்.                

தன்னுடைய புதுமைப்பெண் என் பாடலில்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்

என்று, இப்பூவுலகில் பெண்களாகப் பிறப்போரெல்லாம் அன்னை சிவசக்தியே என்று அடித்துச் சொல்லுகிறார் அழகாக.

அத்தகைய பெண்மைக்கு இன்னும் சிறப்புச்செய்யும் விதமாக,

"வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!"

என்றும்,

"மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!"

என்றும் கண்ணம்மா எனும் தன் கனவுப்பெண்ணிடம் தான் சரணடைந்ததாகப் போற்றிப் பாடுகிறார் பாரதி.

இப்படிப்பட்ட பெண்மை, தாயாய், தாதியாய், தங்கையாய், தமக்கையாய், தாரமாய், தோழியாய் எத்தனையோ வடிவில்  ஒவ்வொருவர் வாழ்வையும் அன்றாடம் புதுப்பிக்கிறது, புத்தொளி ஊட்டுகிறது. அத்தகைய மாண்புடைய பெண்டிர் 
அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

- சுந்தரா

ஞாயிறு, 2 மார்ச், 2014

காதல் தமிழ்

ஒரு குடும்பக் காட்சி...வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் கணவனை எண்ணிக் கலங்குகிறாள் ஒரு கிராமத்துப்பெண்.

"கல்யாணம் கழிஞ்ச இருபதாவது நாள் வேலைக்காக வெளிநாட்டுக்குப் போனாங்க. ரெண்டு வருஷத்துக்கப்புறம் ஒருமாசம் லீவுல வந்தாங்க. வந்தநாள் தொடங்கி இன்னிக்கி இருவத்தாறு நாள் ஆச்சு. இன்னும் ரெண்டு மூணு நாள்ல திரும்பவும் பிரயாணம். இடையிலஇவங்க வர நாளைக் கணக்குவச்சிஅக்கா பொண்ணுக்குக் கல்யாணம்தம்பி மகனுக்குக் காதுகுத்து,இன்னும் எங்க அத்தை வேண்டிக்கிட்ட கோயிலுக்கெல்லாம் வழிபாடுபிரயாணம்இன்னும் விருந்து விசேஷமுன்னு போனதுல அவுகளோட உக்காந்து பேச எனக்கு ஒருமணி நேரம் சேர்ந்தாப்பல கிடைக்கல.

இதுலஇனி அவுக கிளம்புறதுக்கு முன்னாடி பண்டம் பலகாரம் செய்யவும்சேகரிச்சுக் குடுக்கவேண்டிய மருந்துமசாலாப்பொடியெல்லாம் தயார் பண்ணவும் ரெண்டு நாளும் போயிரும். நேத்து மெதுவா, "ஏங்கஇன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போகக்கூடாதா...ன்னு கேட்டா, "கிறுக்குக் கழுதமுட்டாத்தனமாப் பேசாத...இப்பவே நாலு காசு சம்பாதிச்சாத்தானே நாளைக்கு கௌரவமா வாழமுடியும். அதனால, வேலைதான் முக்கியம்"னு எனக்கு உபதேசம் பண்றாக.

"இருக்கட்டும்...இங்க ஒருத்தி நம்மளையே உசிரா நெனைச்சிக்கிட்டு இருக்காளேன்னு கொஞ்சமும் கரிசனமோபிரியமோ இல்லாம அவுக வேலைதான் முக்கியம்னா அவங்க பத்திரமாப் போயிட்டுவரட்டும். பைத்தியக்காரி எம்மேலயும்என் மனசு மேலயும் அக்கறையே இல்லாத அவங்க அறிவாளின்னாஅவுகளையே நினைச்சிட்டு இருக்கிற நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்..." என்று அழுகை முட்டிக்கொண்டுவரஅதை அடக்கத் தவிக்கிறாள் அன்னலட்சுமி.

இன்றைக்கு நாம் பார்க்கிற அன்னலட்சுமிக்கும், அன்றைய குறுந்தொகைத் தலைவிக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே பாருங்கள்...

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து    
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,    
உரவோர் உரவோர் ஆக!   
மடவம் ஆகமடந்தைநாமே!

"பொருள்தான் முக்கியமென்று அருளும் அன்பும் இன்றி என்னைப் பிரிந்து செல்லும் என் தலைவன் அறிவுடையவன் என்றால் அவனைப் பிரியமுடியாமல் தவிக்கிற நான் அறிவிலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று தலைவனின் பிரிவுபற்றி அறிவுறுத்துகிற தோழியிடம் புலம்புகிறாள் நம் சங்க காலத் தலைவி.
இது கோப்பெருஞ்சோழன் இயற்றிய குறுந்தொகைப் பாடல் காட்சி.

காலம் மாறியிருக்கலாம்,காட்சிகள் மாறியிருக்கலாம்,வாழ்க்கையும் வசதிகளும் மாறியிருக்கலாம். ஆனால்,காதலும் அன்பும் காலங்காலமாய் என்றைக்கும் அதேபோலத்தான் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இன்றைக்கும் மனிதனை மனிதனாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இது இன்னோர் குடும்பக் காட்சி.

பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் தலைவன். கண்கள் நீரணியக் கலங்கித் தவிக்கிற தலைவியைக் காணப் பொறுக்கவில்லை தோழிக்கு. தலைவியாகிய உன்னை இவ்வாறு தவிக்க விட்டுவிட்டுஇத்தனை காலம் பிரிந்திருத்தல் பொறுப்புள்ள தலைவனுக்கு அழகோஎன்று அவனைப் பழித்துரைக்கிறாள் தோழி. அதைக்கேட்ட தலைவி முன்னிலும் வருத்தமுற்று அழுகிறாள்.  "பொருள்தேடிப் பிரிந்து சென்ற என் தலைவனின் பிரிவைக்கூட கண்ணீருடன் நான் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால்நீ உன் வாயால் தலைவனைப் பழித்துரைக்கிற வார்த்தைகள்தான் என்னை மிகவும் வருத்தமுறச் செய்கின்றன" என்று.

"நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங்காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே."

இமைகளைச் சுடும்படி கண்ணீர் பெருகிவரப் பிரிவினால் தவிப்பதைக் காட்டிலும்தோழியின் பழித்துரைக்கும் சொற்கள் ரொம்பவே வதைக்கின்றன தலைவியை!

இப்போதும், பட்டிக்காட்டுப்பெண்ணோ, பட்டினத்து யுவதியோ, தன்னுடைய கணவனை அவனுடைய தாயோ தந்தையோஅல்லது அவனது உடன்பிறந்தவர்களோ திட்டினால் கூட அதைத் தாங்கிக்கொள்வது ஒரு மனைவிக்குக் கஷ்டம்தான். அவனுக்காகத் தான் பரிந்துபேசி அவர்களிடம்  அவப்பெயர் சம்பாதித்தாலும் அவள் அதற்காக வருந்துவதில்லை. அவளுக்கு அவள் கணவன் முக்கியம். தன் கணவனைத் தான் என்னசொல்லியும் பழிக்கலாம்ஆனால்,அதேசமயம் அடுத்தவர் யாரேனும் பழித்துச் சொல்லிவிட்டால், அவளுக்கு அழுகையோ ஆங்காரமோ அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு வந்துவிடுகிறது. காலங்கள் கடந்துகலாச்சாரம் நவீனப்பட்டும்கூட இந்தக் குணமும் இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. ஆக மொத்தத்தில்எல்லாம் காதல் செய்கிற வேலை...

- சுந்தரா