வியாழன், 10 மார்ச், 2011

கண்ணோட்டமும் களிமண் உருண்டைகளும்!


கடற்கரையோரமாய்க் காலார நடந்துகொண்டிருந்தான் அந்த மனிதன். நீண்டதூரம் நடந்துசென்றபிறகு, கடலோரத்தில் சில குகைகள் தென்பட்டன அவனுக்கு. அவற்றுள் நுழைந்துபார்த்தான் அவன். அங்கிருந்த குகைகளில் ஒன்றில் ஒரு சிறிய சாக்குப்பை இருந்தது. அதற்குள் நிறையக் களிமண் உருண்டைகள் இருந்தது. யாரோ உருட்டிக் காயவைத்த விளையாட்டு உருண்டைகளைப்போல் தோன்றியது அவனுக்கு.

அந்தச் சாக்குப் பையை கையிலெடுத்துக்கொண்ட அவன் திரும்புகிற வழியில் ஒவ்வொரு உருண்டையாய்க் கடலுக்குள் எறிந்துகொண்டே வந்தான். முக்கால்வாசி உருண்டைகளைக் கடலுக்குள் வீசியபின், எதேச்சையாக அவன் வீசிய ஒரு களிமண் உருண்டை பாறையொன்றில் பட்டு உடைந்தது. உடைந்த களிமண் உருண்டைக்குள்ளிருந்து கண்ணைப்பறிக்கிற வைரக்கல் ஒன்று வெளிப்பட்டது.

'ஆஹா' என வியந்த அவன் மிச்சமிருந்த ஒருசில உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அத்தனைக்குள்ளும் வைரக்கற்கள் இருந்தன. 'ஐயோ மோசம் போனேனே, விலைமதிப்பில்லாத வைரங்கள் பலவற்றை அதன் மதிப்புத்தெரியாமல் கடலில் வீசியெறிந்துவிட்டேனே' என்று வருந்தியபடியே கடல்கரையில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தானாம் அவன்.

மனிதர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி விளக்குவதற்காகச் சொல்லப்படுகிற கதையிது. அநேக சமயங்களில் மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கிறோம். புறத்தோற்றத்தைப் பார்த்துப் பலரை உதாசீனப்படுத்திவிடுகிறோம். புறக்காரணிகளான, பணம், பதவி,அழகு,அந்தஸ்து இவற்றைமட்டும் கவனித்துவிட்டு, எத்தனையோ உறவுகளையும் நட்புகளையும் அலட்சியமாய்க் கடந்துபோய்விடுகிறோம். அவர்களுக்குள்ளும் அளப்பரிய அன்பும் நட்பும், நமக்குப் பயன்படக்கூடிய எத்தனையோ நல்லவிஷயங்களும் இருக்குமென்பதை அறிந்துகொள்ளாமலே போய்விடுகிறோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உயர்ந்த குணம் இருக்கும். மேல்தோற்றத்தில் அது கொஞ்சம் மறைந்துபோயிருக்கலாம். ஆனால், அதைக் கண்டுணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது என்றென்றைக்கும் இன்பத்தைக் கொடுக்கும்.

இது,மின்னஞ்சலில் வந்த கதை. இன்னும் சிலருக்கு உதவுமென்ற நம்பிக்கையோடு இங்கே...

புதன், 9 மார்ச், 2011

அடிக்கடி வீட்டில் பிரச்சனையா?

வசிக்கிற வீடுகளை அழகுபடுத்தவேண்டுமென்கிற ஆவல் மக்களனைவருக்கும் பொதுவான ஒன்று.

பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.


உத்தம லக்ஷணங்களை உடைய பெண்கள் பார்க்க-மாமரங்களும்; நகைக்க-முல்லையும்; பாட-குரக்கத்தியும்; ஆட-புன்னையும்; உதைக்க-அசோகமும்; அணைக்க-மருதோன்றியும்; நட்புற-பாலையும்; நிந்திக்க-பாதிரியும்; சுவைக்க(முத்தமிட)-மகிழமரமும்; நிழல்பட-சண்பகமும் தளிர்த்து, அரும்பிப் பூக்கும்.

இதனை வில்லிபுத்தூராரும்:
ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.
“பொன் கொண்டு இழைத்த” என்று கம்பரால் புகழப்பட்ட இலங்கையில், இராவணன் ஏன் சீதையை அசோகவனத்தில் சிறையிலிட்டான்?

ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.

"அசோகம்' என்பதற்கு சோகத்தை அகற்றுவது என்று பொருளாகும். சோகம் நம்மிடம் எப்பொழுது குடிகொள்ளும்? மனம் பாதித்த நிலையில், மன உளைச்ச லுக்கு உட்பட்டு, உடல் நலிவடைந்து, ஆன்மா அவதிக்கு உள்ளாகும் பொழுது சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது.

இராவணன் தீவிர சிவபக்தன்தான். அவன் கண்மூடி தியானித்து மனமுருக வேண்டி னாலே எம்பெருமான் சிவன் நொடிப் பொழுதில் அவனருகில் தோன்றி, அவனுக்கு அருளாசியை வழங்கும் தன்மையைப் பெற்றவன். அப்பேர்ப்பட்ட இராவணன் மனம் பேதலித்து, சஞ்சலமடைந்து, பகவான் ஸ்ரீராம பிரானின் நாயகியாம் சீதாதேவியின்மீது ஆசை கொண்டு அவளைச் சிறையெடுத்துச் சென்றான்.

இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி சிறை வைக்கப்பட்ட இடம், அடர்ந்து வளர்ந்த அசோக வனமாகும். மணாளனைப் பிரிந்த சீதாபிராட்டியார் சோகமே உருவாகி, எப்பொழுதும் ஸ்ரீராம பிரானையே வேண்டிக் கொண்டிருந்தாள். எப்படியும் எம்பெருமான் வெகுசீக்கிரம் வந்து என்னை மீட்டெடுப்பார் என்று நம்பினாள். மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்த சீதாதேவிக்கு, அந்த வனத்தில் இருந்த அசோக மரங்களே சோகத்தை விரட்ட தைரியம் அளித்தன.

அப்பேர்ப்பட்ட அசோக மரம், ஸ்ரீராம பிரான்- சீதாதேவியின் அருட்பார்வைக்கு உட்பட்டு, இன்று அகிலமெல்லாம் கன்னியரின் மனக்குறையைப் போக்கும் தேவ மருந்தாய் பயன்பட்டு வருகிறது.

மகாவீரர் ஞானம் பெற்றதும், புத்தபிரான் அவதரித்ததும் அசோக மரத்தின் அடியில் தான். "உளுத்த உடலை இறுக்கி, உடலுக்கு வன்மை தரும் மூலிகை அசோகு' என்று தேரையர் என்னும் சித்தர் குறிப்பிட்டுள்ளார். மேன்மையான குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோக மரத்தினை, ஸ்ரீராம பிரான்- சீதாதேவியை மனதால் நினைத்து வலம் வர, சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வில் மேன்மை பெறலாம்.

உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.

காதலுக்கு என்று ஒரு மரம் ,,எது தெரியுமா?ராமாயணத்தில் சீதாபிராட்டியாரை
இலங்கேஸ்வரன் அசோக மரங்கள் சூழ்ந்த வனத்தில் சிறைப்ப்டுத்தினானே அந்த
அசோக மரம் தான் காதலுகென்ற மரம் சம்ஸ்கிருதத்தில் அசோகா என்றால் சோகம்
இல்லாத " என்று அர்த்தம் இரவில் அதிக நறுமணம் வீசும் சிவந்த மஞ்சள் அல்லது
ஆரஞ்சு நிறப்பூக்களைக் கொண்டது இது பர்மா இலங்கை மலேசியா இந்தியாவைப்
பூர்வீகமாகக் கொண்டதாகும் இதை மக்கள் காதலின் சின்னமாகக் கருதி காமதேவனுக்கு
அர்ப்பிக்கிறார்கள் காமதேவன் காதலின் சின்னம் ஆனவன் கோயில் அலங்காரங்களிலும்
பயன் படுத்துகின்றனர் மரங்களின் தேவர்கள் விருக்ஷதேவர்கள் இம் மரத்தைச் சுற்றி
ஆடிப்பாடி களிக்கின்றனராம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இதை அரசமரம் போல்
பூஜிக்கின்றனராம் வழக்கமாக நாம் பூங்காவில் நெடிய மரங்களை அசோக மரம்
என் நினைக்கிறோம் உண்மையில் அவைகள் நெட்டிலிங்க மரங்களே ,இதன்
இலைகள் மாவிலைப்போல் நீளமாகவும் ஆனால் வளைவுகளுடன் காணப்படும் பச்சைநிறபூக்கள்
நட்சத்திரம் போல் பூக்க மேலும் அழகு பெறும் உண்மையான் அசோக மரம் நெட்டி லிங்க
மரம் போல் உயரமாக வளராமல் மற்ற மரங்கள் போல் பரந்து வளர்ந்து சற்று குட்டையான
தோற்றம் தரும் ஆங்கிலத்தில் saraka asoka {caesalpiniacase } என்னும்
இனத்தைச் சேர்ந்தது ,
காதல்ர்கள் காதலிகள் அசோக மரத்தைப் படை எடுங்கள் காதலின் மன்னன் காமதேவனுக்கு
பூக்களை அர்ப்பணியுங்கள். 

வெள்ளி, 4 மார்ச், 2011

என்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை?


அம்மா,இங்க வாங்களேன்...

என்னடா?

இங்க வந்துபாருங்க...

இருடா, வேலையா இருக்கேன்...

சரிம்மா, நீங்க பிஸின்னா உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிவைக்கிறேன். அப்புறமா பாத்துக்கோங்க...

பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றைக்காண்பிக்க வந்தவன் நகர்ந்துபோனான்.

இருடா தம்பி, பிஸியெல்லாம் இல்லை, பத்து நிமிஷவேலைதான் இப்ப வந்துர்றேன்.

பத்து நிமிஷமா?...அப்போ நான் பிசியாயிடுவேனே...

அட, நீங்க பிசியாயிருவீங்களா? எல்லாம் நேரம்தான். சாருக்கு அப்படியென்ன வேலையிருக்குதாம்?

கம்ப்யூட்டர்ல ஆன்லைன் கேம் விளையாடப்போறேம்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆன்லைனில் இருக்காங்க.

நாலுநாள்ல பரிட்சை இருக்கு...அதுக்குப் படிக்காம ஆன்லைன் கேமா?

அம்மா, படிப்புக்குன்னு நேரம் ஒதுக்குறமாதிரி, என்ஜாய் பண்றதுக்கும் நேரம் ஒதுக்கணும்மா. இல்லன்னா, லைஃப் போரடிச்சுப்போயிடும்.

அதுசரி, இந்தத் தலைமுறைக்கு என்ன தெரியுதோ இல்லையோ, பிஸி, என்ஜாய் இந்த ரெண்டு வார்த்தைகளும் நல்லாவே தெரிஞ்சிருக்கு.

சரியாத்தான் தெரிஞ்சுவச்சிருக்கீங்க...அம்மா, உங்க காலத்துலல்லாம் நீங்க பிஸியாவே இருந்ததில்லையா?

இருப்போம்...படிப்பு, விளையாட்டுன்னு. ஆனா, உங்க அளவுக்கு இல்ல...


ஆமா,அப்பல்லாம் கம்ப்யூட்டர் கிடையாதில்ல... ஃபேஸ்புக்,சாட்,வீடியோ கேம்ஸ் இதெல்லாம் இல்லாம உங்களுக்கெல்லாம் எப்படிம்மா டைம்பாஸ் ஆச்சு?

ஏன் ஆகாது? அக்கம்பக்கத்துக் குழந்தைகளோட விதவிதமா விளையாடுவோம். வாரப்புத்தகம், லைப்ரரி புஸ்தகம் வாங்கிவச்சுப் படிப்போம். ஏகப்பட்ட கைவேலைகள் செய்வோம், வீட்டுத்தோட்டம் போடுவோம்...

அதெல்லாம் இருக்கட்டும்...அப்பல்லாம், பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா என்ன பண்ணுவீங்க?

பெரியவங்ககிட்ட இல்லேன்னா டீச்சர்கிட்ட கேப்போம், புத்தகங்களை ரெஃபர் பண்ணித் தெரிஞ்சுக்குவோம்.

ரெண்டே ஆப்ஷன்தானா? கூகிள் ஹெல்ப் இல்லாம நீங்கல்லாம் எப்படித்தான் படிச்சீங்களோ?

அதுசரி, கூகிள் மூலமா,இப்ப நீங்க நிறையத் தெரிஞ்சுக்கிறீங்க. அப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட அளவு தெரிஞ்சுக்கிட்டோம்.

என்னத்தைத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களோ? சின்ன சர்க்கிளுக்குள்ள சர்க்கஸ் பண்ணியிருக்கீங்க...

சரி அதுபோகட்டும்...அப்பல்லாம், டிவி கூடக் கிடையாதுல்லம்மா?

ஆமாடா...டிவியெல்லாம் நான் ஹைஸ்கூல் படிக்கிறப்பதான் ஃபேமஸாச்சு. அப்பவும் தூர்தர்ஷன்,ரூபவாஹினின்னு ரெண்டே ரெண்டு சேனல்தான் உண்டு.

ரெண்டே ரெண்டு சேனலா? இப்ப நாம இருநூறுக்கும் மேல பார்க்கிறோமே...

ஆமா, அப்ப ரெண்டுதான்... அதிலும் சாயங்காலம்தான் தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் சிலநேரம் தெளிவாத் தெரியாது. மாடியில ஏறி, ஆன்டெனாவை அங்கயும் இங்கயும் திருப்பி வைப்போம். அந்த அளவுக்கு சோதிக்கும்.

ஆன்டெனாவா? அப்ப, கேபிள் கனெக்ஷனெல்லாம் கிடையாதா?

ம்ஹூம்... மாடியில ஒரு ஏழெட்டு மீட்டர் உயரத்துல இரும்புக்கம்பியை வச்சு, அதுல கொடைக்கானலுக்கு ஒண்ணு, சிலோனுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆன்டெனா மாட்டியிருப்பாங்க. அதிலிருந்து ஒயரெடுத்து டிவியில குடுக்கணும்.

அடப்பாவமே...

இதென்ன பெரிய பாவம்? வெள்ளிக்கிழமை வந்தா, தூர்தர்ஷன்ல எட்டுமணிக்கு ஆறேழு மொழிகள்ளேருந்து பாடல்கள் போடுவாங்க. அதுல ஒரேயொரு தமிழ்ப்பாட்டு வரும். அதப்பாக்க நாங்கல்லாம் எப்படிக் காத்துக்கிடப்போம் தெரியுமா? சிலநேரம் அதுகூடப் போடமாட்டாங்க. அவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.

ஐயோ பாவம்மா நீங்கல்லாம்... இப்ப நாங்க ஐபாட், வாக்மேன்னு எங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பிடிச்சநேரம் கேக்கிறோம். இந்த சௌகரியம்கூட இல்லாத அந்தக் காலத்தை நீங்க என்னவோ, அப்படி இப்படீன்னு பெருமையாப் பேசுறீங்க.


ஐபாட், வாக்மேன் இல்லாட்டி என்ன? அப்போ,ஆல் இண்டியா ரேடியோவும், இலங்கை வானொலியும் இருந்துச்சில்ல...

அதுல எப்பவும் பாட்டுப் போடுவாங்களா?

எப்பவும் கிடையாது, அதெல்லாம் ஃஎப்.எம் வந்த பிறகுதான்...
சினிமாப்பாட்டு,கர்நாடக இசை, கிராமியப்பாடல்கள், செய்திகள், நாடகம்,வேளாண்மை நிகழ்ச்சிகள், வினாடிவினா இன்னும் ஞாயிற்றுக்கிழமை வந்தா, ஒலிச்சித்திரம்கூடப் போடுவாங்க.

கேலிச்சித்திரம் கேள்விப்பட்டிருக்கேன். ஒலிச்சித்திரமா, அதென்னம்மா?

அதா, ஒரு முழுப்படத்தோட வசனத்தையும் அப்படியே ரேடியோவுல போடுவாங்க.

அப்போ,வசனத்தைமட்டும் கேட்பீங்களா?

ஆமா....படத்தோட கதை தெரிஞ்சிடும்ல.

நல்லாக்கேட்டீங்க கதையை...ஐயோ ஐயோ :)


பாவம்மா நீங்க. நிஜமாவே நாங்கல்லாம் கடவுளுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லணும்மா. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்துல எங்களைப் படைச்சிருக்காரேன்னு.

ஆனா, ஒரே ஒரு கஷ்டம்தான் இப்ப...

என்னடா?

உங்க லெக்சரைக் கேட்ட நேரத்துல, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைன் ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாங்க :)

அடிக் கழுதைய...அதுவும் நல்லதுதான், புத்தகத்தையெடுத்துப் படி...

படிக்கணுமா, அம்மா ஆளவிடுங்க...என்றபடி அங்கிருந்து நழுவினான் அவன்.

******