செவ்வாய், 12 நவம்பர், 2019

ஷாம்பூ, சீயக்காய் இல்லாமல் இயற்கையாகத் தலை அலசும் வழி!




தலை முடியைச் சுத்தம் செய்ய விலை அதிகமான பொருட்கள் தேவையில்லை. வீட்டிலிருக்கும் எளிதான பொருட்களே போதும். மூன்றே பொருட்களால் மின்னும் தலை முடியைப் பெறலாம். 

இயற்கையான இந்த முறையில் தலை அலசும்போது, முடிகளுக்கு மினுமினுப்பும், கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியும் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

இது, நம் முன்னோர் உபயோகித்த முறை மட்டுமல்ல, இன்னமும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறை.

செயற்கையான ஷாம்பூக்களில் கலக்கப்படும் இரசாயனங்கள் வேண்டாம் என்று இயற்கையான, பழங்காலத்து முறையான சீயக்காய் பயன்படுத்துவதுண்டு. ஆனால், சீயக்காயில் தலை அலசும்போது, கண்களில் பட்டால் கண்கள் சிவந்துபோகும். இந்தப் பொடியை நாம் பயன்படுத்தும்போது, அத்தகைய பிரச்சனை வருவதில்லை.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்தக் குளியல் பொடியப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள, கீழுள்ள காணொளியைப் பாருங்கள்.

திங்கள், 4 நவம்பர், 2019

ஆசாரக்கோவை - ஒரு அறிமுகம்



ஆசாரங்கள் எனப்படும் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் பற்றி விவரிக்கும் நூல் ஆசாரக்கோவை. இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்த நூலை எழுதியவர், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் காலம், ஐந்தாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி இந்த நூல் தொகுத்துத் தருகிறது. கோவை என்ற பெயருக்குத் தொகுப்பு என்று பொருள். இந்த நூலில், 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும், வெண்பா எனும் பாடல் வகையைச் சார்ந்தது. வெண்பா என்பது, இறுதி அடி மூன்று சீராகவும் மற்ற அடிகள் நான்கு சீராகவும் அமைந்து வரக்கூடிய பாடல் வகை. 

ஆசாரக்கோவையில், உண்ணும் முறை பற்றிச் சொல்லவே பல பாடல்கள் உள்ளன. எந்த திசை நோக்கி உணவு அருந்த வேண்டும், பெரியோர் இருக்குமிடத்தில் எப்படி உணவருந்த வேண்டும், எந்த உணவை முதலிலும் எதனைக் கடைசியிலும் உண்ணவேண்டும் என்றெல்லாம் பலவிதமான நெறிமுறைகளைப் பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

இது தவிர, உறங்கும் முறை, நீராடும் முறை, காலை எழுந்ததும் என்னென்ன செய்யவேண்டும், நீராட வேண்டிய சமயங்கள் எவையெவை, பழங்கால மக்கள் கடைப்பிடித்த வழக்கங்கள் என்னென்ன, எவையெல்லாம் செய்யத்தகாத காரியங்கள் என்றெல்லாம் பலவிதமான நடைமுறை ஒழுக்கங்கள் பற்றி இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நூலிலுள்ள பாடல்களை ஒவ்வொன்றாக அறிந்துகொள்ள கீழிருக்கும் இணைப்பை பாருங்கள்...

செவ்வாய், 22 அக்டோபர், 2019

பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு



பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலின் முதல்வரி நம்மில் நிறைய பேருக்குத் தெரியும். அதாவது 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' இதனை ஒரு பழமொழி மாதிரி நாம் உபயோகிப்போம். 

ஆனால் இது, ஔவையினுடய ஒரு பாடலின் முதல் வரி. இந்தப் பாடலில் ஔவையார் என்ன சொல்லி இருக்காங்கன்னா, எவையெல்லாம் பிறவிக் குணங்கள், எவையெல்லாம் பழகப் பழக வந்துவிடும் குணங்கள் என்று சொல்லி இருக்காங்க. இது தான் அந்தப் பாடல்...

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

சித்திரமும் கைப்பழக்கம், அதாவது  சித்திரம் வரைவது நம்முடைய கையினால் வரும் பழக்கம். அதாவது வரைய வரைய ஓவியம் பழகிவிடும். தொடர்ந்து வரைய வரைய நம் விரல்கள் வசப்படும். அதனால், அழகான சித்திரம் வரைய முடியும். 

செந்தமிழும் நாப்பழக்கம், செந்தமிழ் அதாவது தமிழில் தொடர்ந்து பேசப் பேச தமிழ் நமக்குப் பழகிவிடும். இது, செந்தமிழுக்கு மட்டுமல்ல, எந்த மொழியாக இருந்தாலும், திரும்பத் திரும்ப நாம் அதனைப் பேசிப் பழகும்போது அதில் நாம் நல்ல புலமை பெற்றுவிடலாம். 

அடுத்ததாக, வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், நாம் சின்ன வயதில் படித்த சில பாடல்கள்கூட ரொம்ப நாளைக்கு நம் மனதில் நிற்கும். காரணம் என்னவென்றால் நாம் அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்து, மனதில் ஓடவிட்டுப் பார்த்திருப்போம். ஒரு விஷயம் மனதில் பதிய வேண்டுமென்றால், அதனைத் திரும்பத் திரும்ப மனதில் நினைத்துப் பார்க்கவேண்டும். அதாவது மனதில் ஓடவிட்டுப் பார்ப்பது. அந்த மாதிரி பழகும்போது, படித்த எதுவும் மறந்து போகாது. 

அடுத்ததாக, நித்தம் நடையும் நடைப்பழக்கம், நித்தம் அதாவது அன்றாடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது. நாம் வாழும் ஒழுக்கம், அல்லது நெறிமுறை, வழக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து வந்தால், எடுத்துக்காட்டாக, காலையில் எழுதல், இன்சொல் பேசுதல் இந்த மாதிரி விஷயங்கள் அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும். 

கடைசியாக, நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம், நட்பு என்பது நாம் பிறருடன் தோழமையுடன் பழகும் குணத்தைக் குறிக்கும். பிறரோடு நாம் பழகும் தன்மை என்பது நம் பிறவிக் குணத்தைப் பொருத்தது.

அடுத்தது, தயை என்னும் இரக்க குணம். இதனைக் கருணை என்றும் சொல்லலாம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் மாதிரி, ஒரு பயிராக இருக்கட்டும், ஒரு உயிரினமாக இருக்கட்டும் அல்லது சக மனிதராக இருக்கட்டும். பிறரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது நம்முடைய மனமும் வருந்தி இரக்கம் கொண்டால், அதுவே தயை. 

கொடை என்ற எண்ணமும் இயற்கையாக வருவது. அனைவராலும்அதனைக் கடைப்பிடிக்க முடியாது.  செயற்கையாக, விளம்பரத்துக்காகக் கொடுக்கும் கொடை என்றைக்கும் பேசப்படாது. இயற்கையாக, தன்னிடத்தில் இருப்பதை, பலனை எதிர்பாராமல் கொடுப்பதே கொடை. அதனால், அதுவும் பிறவிக்குணம் என்கிறார் ஔவை மூதாட்டி.

ஆகவே, நட்பு, தயை, கொடை இந்த மூன்றும் பிறவிக் குணங்கள். மற்றதெல்லாம் நாம் பழகப் பழக வந்துவிடும் என்பது ஔவையின் அருள்மொழி.