புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2014

மூதுரைக் கதைகள் - 1 ஆளில்லா மங்கைக்கு அழகு

கல்யாணம் பண்ணி இன்னிக்கி நாப்பத்தெட்டு வருஷமாச்சு. கட்டிக்கிட்டு வந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் தான். பொறந்த இடத்திலயும் பெருசா எதுவும் வசதியாயிருக்கல. கடவுள் புண்ணியத்துல பிள்ளைங்க நாலுபேரும் நல்லாப் படிச்சதால இன்னிக்கி எல்லாக் கஷ்டமும் தீர்ந்துபோச்சு. ஆனா, இதையெல்லாம் பார்க்க அவங்க அப்பாவுக்குத்தான் குடுத்துவைக்காம போச்சு.

அப்பல்லாம், நாலு பிள்ளைங்களும் படிச்ச காலத்துல அவங்க அப்பா ஒரு ஆள் சம்பளம். அதுல, அம்பது ரூவா  ஒதுக்கி பெரியவனுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் புஸ்தகம் வாங்கவும், சின்னவனுக்குக் கிழிஞ்சுபோன பள்ளிக்கூடத்து யூனிஃபாரத்துக்குப் பதிலா புதுசு வாங்கவும்கூட எவ்வளவோ சிரமப்பட்டிருக்கோம். 

ஆனா, இப்பப் பாருங்க,  பிள்ளைங்க  தலையெடுத்த பிறகு, என்ன வேணும்னு நெனச்சாலும், அது அடுத்த நிமிஷமே கிடைக்குது. ஆனா, கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு, காசு செலவழிக்கத் தெரியாம பழகிப்போன இந்தப் பிறவிக்கு, இப்போ அதை அனுபவிக்க நினைச்சாலும் முடியல.

நேத்துப் பாருங்க பேச்சுவாக்குல, "கல்யாணத்தப்போ மாம்பழக் கலருல பச்சைக்கரை போட்ட பட்டுச் சேலை வாங்கணும்னு ஆசைப்பட்டதையும், உனக்கு அறுவதாம் கல்யாணத்துக்கு அந்தக் கலர் சேலை வாங்கிருவோம்னு அவங்கப்பா கிண்டலா சொன்னதையும் சின்னப்பையன் குமார் கிட்ட விளையாட்டா சொல்லிட்டிருந்தேன், கிறுக்குப்பய,  அங்க இங்க அலைஞ்சு, அதே நிறத்துல ஒரு பட்டுச் சேலையக் கொண்டு வந்து சாயங்காலமே கையில குடுக்குறான்.

எனக்கு சட்டுன்னு கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சு கண்ணம்மா. போற வயசுல இதைக் கட்டிக்கிட்டு நான் எங்க போகப்போறேன் வரப்போறேன்?" என்று சொன்ன காந்திமதிப் பாட்டியிடம், "இதெல்லாம் குடுப்பினை காந்திமதி, அன்னிக்கி அத்தனை வறுமையிலயும், பொறுமையே தவமா நீ குடும்பத்தைக் காப்பாத்தினதுக்குக் கிடைச்ச பரிசு. இந்தப் பரிசுக்கு நீ முழுக்க முழுக்க தகுதியானவதான். ஆனா என்ன, கொஞ்சம் காலங்கடந்து ஒனக்குக் கிடைச்சிருக்கு... அவ்வளவுதான்" என்றாள் காந்திமதியின் தோழி கண்ணம்மா பாட்டி.

இப்போ, நீ சொல்லிப் புலம்புற இதே விஷயத்தைப் பத்தி,
நம்ம ஔவையார் அப்பவே மூதுரைப் பாட்டுல எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காங்க தெரியுமா?

"இன்னா விளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா வளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு"


"அதாவது, சுபமான, மங்கல விழாக்காலங்களில் இல்லாமல் மற்றைய காலங்களில் பூக்கிற அழகிய பூக்களையும், துணைவனில்லாத ஒரு இளம் பெண்ணுக்கு அமைந்திருக்கிற அழகையும்போல,  இளமைப் பருவத்தில் வந்து வாட்டுகிற வறுமையும், அனுபவிக்க இயலாத முதுமைப் பிராயத்திலே வந்து சேர்கின்ற இனிமையும் துன்பத்தையே தரும் என்று மூதுரையின் மூன்றாவது பாட்டில் அன்னிக்கே சொல்லியிருக்காங்க..." என்று கண்ணம்மா பாட்டி சொல்ல,

" அடடே...நம்ம மனசு புரிஞ்சாப்பல எவ்வளவு அருமையா அப்பவே சொல்லி வச்சிருக்காங்க பாரு!" என்று ஔவையின் பாடலைக் கேட்டு வியந்து போனாள் காந்திமதிப் பாட்டி.

புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சில அழகான பழமொழிகள்!


அநேகப் பழமொழிகள் அழகாக இருந்தாலும், அழகைப்பற்றிமட்டும் சொல்லக்கூடிய சில பழமொழிகள் இவை...

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

* அழகு, அடைத்த கதவுகளையும் திறக்கும்.

* அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.

* அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகளோ கசப்பு.

* அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்.

* அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.

* அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.

* அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.

* அழகும், மணமுமுள்ள பூக்கள் சாலையோரத்தில் வாழாது.


                                                        ******

வெள்ளி, 28 மே, 2010

தும்மலும் தீர்க்காயுசும்!


அச்சு அச்சுன்னு அடுக்கடுக்கா தும்மல் போடுவாங்க கோமதியக்கா. "அட,அபசகுனம் புடிச்சவ, தும்மிட்டாளா...இனி போன காரியம் வெளங்கினமாதிரிதான்..." என்று.
வாசல்புறத்திலிருந்து வெறுப்போடு முனங்குவாங்க அவங்க மாமியார். அக்காவுக்கு கண்ணீர் கோர்த்துக்கொள்ளும் உடனே.

வந்தா நிறுத்தமுடியாது, வருமுன்னாலும் தடுக்கமுடியாது என்ற வகையில் இந்தத் தும்மலுக்கு முக்கிய இடமுண்டு. இதிலயும், ரெட்டைத்தும்மல் போட்டா ரொம்ப நல்லதுன்னு அடுத்த தும்மலை ஆர்வமா எதிர்பார்க்கவும் செய்வாங்க சிலர்.

கல்யாணமோ, வைபவமோ ஏதாவது நடக்கும்போது யாரும் தும்மல் தும்மிடக்கூடாதுன்னு, தும்மல் வந்தா, மூக்கைத் தேச்சுவிடு. தும்மல்போட்டுராதன்னு எப்பவும் எல்லாருக்கும் எச்சரிக்கை குடுப்பாங்க எங்க பெரியம்மா.

ஆனா, தும்மல் என்பது நாம, உடலுக்கு ஒவ்வாத பொருட்களைச் சுவாசிக்க நேர்ந்தால் அதைக் கண்டுபிடித்து உடனே வெளியேற்றும் அருமையான டெக்னிக் என்பது மருத்துவம் தெரிஞ்சவங்க சொல்ற விஷயம். சிலர் அதிகாலையில அடுக்கடுக்கா தும்மல்போடுவாங்க. உறக்கத்தின்போது உடலில்சேர்ந்த தேவையற்ற நீரை அதிகாலையில் உடம்பு வெளியேற்றும் முயற்சியே அதுவாகும். இது நல்ல உடம்புக்கான அறிகுறிதான் என்றும் சொல்லுவாங்க சிலர்.

சின்னக்குழந்தைங்க தும்மும்போது "நூறு" ன்னு சொல்லி, நூறு வயசு வாழணும் என்று குறிப்பாக வாழ்த்துவாங்க எங்க பக்கத்துப் பெரியவங்க. தும்முகிற அந்த வினாடியில் இதயம் நின்று மறுபடியும் இயங்கத் தொடங்குமாம். அதனால்தான் அந்த வாழ்த்து. தான் பெற்ற பிள்ளைகள் பேரன் பேத்தியெடுத்திருந்தாலும், அந்தப் பிள்ளைகள் தும்மும்போதும் பெற்றதாய் உட்காந்து, நூறுன்னு வாழ்த்துவதைப்பார்க்க மனசு நெகிழத்தான்செய்யும்.

இங்கேயும் ஒரு தும்மல் காட்சி...வள்ளுவரின் வார்த்தைகளில் எப்படி அழகாகியிருக்குதுன்னு பாருங்க.

"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தலைவன் தும்முகிறான். உடனே அவனை வாழ்த்துகிறாள் தலைவி. ஆனால், வாழ்த்திய அடுத்த நிமிடமே, நான் இங்கே அருகிலிருக்கும்போது,வேறு யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு ஊடல்கொண்டு அழத்தொடங்குகிறாள் அவள்.

அடுத்து ஒரு சமயம், அவள் அழுதுவிடுவாளோ என்ற எண்ணத்தில், வந்த தும்மலை அடக்குகிறான் அவன். ஆனால் அவளோ, "உனக்கு வேண்டியவர்கள் நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாதென்று வந்த தும்மலை அடக்குகிறாயோ?" என்று வருந்தி அழுகிறாள்.

"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

ரெண்டே ரெண்டு வரிகளில் ரெண்டுபேரோட மன உணர்வுகள் எவ்வளவு அழகா வெளிப்பட்டிருக்கு பாருங்க. இதுமாதிரி இன்னும் பல உணர்வுகளை வள்ளுவர் வார்த்தைகள்ல படிக்கணும்னா, காமத்துப்பால் புலவி நுணுக்கம் பகுதியில் படிக்கலாம்.

*********

திங்கள், 22 மார்ச், 2010

தண்ணீரின்றித் தவிக்கிற தெய்வங்கள்!

 


களத்துமேட்டுல ஊரே கூடிக்கிடந்தது. பூசாரியும் பண்ணையாரும் பக்கத்துலபக்கத்துல உட்கார்ந்து மும்முரமா ஏதோ பேசிக்கிடிருந்தாங்க. வெடிச்சுக்கிடந்த வயல்காடும், குடிக்கத் தண்ணியில்லாம வறண்டுபோன கிணறுகளும்தான் மொத்த மக்களும் பேசிக்கிற விஷயமாயிருந்திச்சு. பட்டுப்போன பனைகளும், மொட்டைமொட்டையாய் மரங்களும் மக்களோடு சேர்ந்து மழைவேண்டி நின்றுகொண்டிருந்தன.

மாரியம்மன் கோயில்ல மழைக்காக ஒரு பூசை போடலாம்னு மனசு ஒத்து முடிவுபண்ணினாங்க பெரியவுங்க. காய்ஞ்சு கிடந்த குளத்தில் கிரிக்கெட் விளையாடுற பிள்ளைகள்மட்டும் மழையெல்லாம் வேண்டாம்னு மனசுக்குள் வேண்டிக்கிட்டிருந்தாங்க. வைகாசி மூணாம் வாரம் மாரியம்மனுக்குப் பொங்கல் வச்சு பூசை நடத்த ஏற்பாடாயிருச்சு.

வயசுப்பொண்ணுகளும் வயசானவுகளும் பொங்கல் வைக்கிற அன்னிக்கி, குளிக்க மொழுக,கோயிலுக்குக் கொண்டுபோக எங்கேருந்து தண்ணி எடுக்குறதுன்னு இப்பவே கவலையோட பேசிக்கிட்டிருந்தாங்க. அம்மனுக்கு அபிசேகம் பண்ண அஞ்சாறு குடமாவது தண்ணி வேணும். அதையும் சேர்த்துக்கங்கம்மான்னு சந்தடியில் நுழைந்தார் கோயில் பூசாரி.

மொத்தத்தில எல்லாரும் மழை வேண்டி மாரியம்மனுக்குப் பூசை செய்ய முழுமனசோடு தயாரானாங்க.

அப்ப, கூட்டத்தைக் கிழிச்சுக்கிட்டு "ஏய்ய்ய்ய்..."ன்னு ஒரு அலறல் சத்தம். என்னன்னு பார்த்தா, வடக்குக்கரைக் கோயில் சாமியாடி, ரெண்டு கையாலயும் தலையப் புடிச்சிக்கிட்டு ஆடத்தொடங்கிட்டாரு.

"எல்லாருமாச் சேந்து என்ன மறந்திட்டீங்களேடா...தண்ணி வேணுமுன்னா தாயை நினக்கிறீங்க. ஆனா, என்ன நினைக்கணும்னு யாருக்குமே தோணலியா? கறுத்த கிடாவெட்டி, கலயத்துல கள்ளுவச்சு என்ன நெனைச்சுக் கும்புட்டுருந்தா நடக்குமாடா இப்பிடி?

என்னோட கோவத்தாலதான் இந்த ஊரே இப்பிடி பொட்டல் காடாக்கியிருச்சு. இன்னும் என்னை கவனிக்கலேன்னா இந்த ஊரே இல்லாம போயிடும். சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்..." என்று சொன்னபடி சுழன்று நிலத்தில் விழுந்தார் அவர். விழுந்த அவர் வாய் தண்ணி, தண்ணின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிது.

"ஏய் யாராவது தண்ணி கொண்டு வாங்கப்பா" என்று ஆளாளுக்கு திரும்பி்ப் பார்த்துச் சொன்னபடி விழுந்த சாமியாடியை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க. யாரும் தண்ணி கொண்டுவந்து கொடுத்தபாடில்லை. ஆக்ரோஷமாகக் கத்தியதில் அநியாயத்துக்கு வறண்டுபோயிருந்த தொண்டையோடு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமியாடியவர்.

இன்னும் என்ன நடக்குமென்று வேடிக்கை பார்க்கும் ஆசையில் அவருக்குப் பின்னால் நடந்தது தண்ணீருக்காக வந்த கூட்டம். வானத்தில், ஆங்காங்கே தென்பட்ட ஒற்றைஒற்றை மேகங்களும்கூட சாமிக்கும் மக்களுக்குமான சண்டையில் சிக்கிக்கவேண்டாமேன்னு வேகவேகமாய்க் கலைய ஆரம்பித்தன.

**********