குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஊரார் பிள்ளை



தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவரவர் பிள்ளைகளைப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் ட்யூஷன் நடத்துமிடங்களில் அடைத்துவிட்டு, அம்மாக்கள் டீயும் கையுமாய் டி.வி சீரியல்களில் ஆழ்ந்திருந்த நேரம்...வீட்டுக்கருகிலிருந்த  காந்திசிலைகிட்ட கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள் எட்டுவயசு சிந்துவும் அவள் தம்பி அருணும்.

அம்மா வர நேரமானால், அண்ணாச்சி கடையில் ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டு, நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த இந்திரா ஆன்ட்டி வீட்டில் தொல்லைபண்ணாம உட்கார்ந்திருக்கணுமென்பது ஏற்கெனவே அவர்கள் அம்மா அனு சொல்லிவைத்திருந்த விஷயம். இந்திராவும் அனுவும் ஒரே ஊர்க்காரங்க என்பதோடு ஒரே பள்ளியில் படித்தவர்களும் கூட.

பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, இந்திரா ஆன்ட்டி வீட்டுக் காலிங்பெல்லை மாற்றிமாற்றி அடித்தார்கள் ரெண்டுபேரும். வழக்கத்துக்கு மாறாக, சந்துரு அங்கிள், இந்திரா ஆன்ட்டியின் கணவர்வந்து கதவைத் திறந்தார்.

கையிலிருந்த கண்ணாடி கிளாசில் மிரிண்டாவுடன் நின்ற அவர், "என்ன பசங்களா, உங்க அம்மா இன்னும் வரலியா? என்றார். அம்மாவுக்கு இன்னிக்கு ஓவர்டைம் இருக்குதாம். அவங்க வரவரைக்கும் இங்கயே இருக்கச்சொன்னாங்க அங்கிள்...என்றான் அருண். அதற்குள், "ஆன்ட்டி, குடிக்கத் தண்ணி வேணும்..." என்று உட்புறம் பார்த்துக் குரல்கொடுத்தாள் சிந்து

"ஆன்ட்டி வீட்ல இல்லைடா, கோயிலுக்குப் போயிருக்காங்க...தண்ணிதானே வேணும், நானே கொண்டுவரேன்" என்றபடி உள்ளேபோனார் அங்கிள். ஆன்ட்டி வீட்ல இல்லேன்னதும் சந்தோஷம் கிளம்பியது அருணுக்கு. ஆன்ட்டி பார்க்கிற அறுவையான சீரியல்களைப் பார்க்காமல், ஆதித்யா சேனல் பார்க்கலாமென்று வேகவேகமாக ரிமோட்டைக் கையிலெடுத்தான். "ஆதித்யா வேண்டாண்டா அருண்...அனிமல் ப்ளானட் பார்க்கலாம்" என்றாள் சிந்து அதற்குள், இரண்டு டம்ளர்களில் மிரிண்டாவும் சின்ன பாட்டிலில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார் சந்துரு அங்கிள்.

நீங்க ரெண்டுபேரும் சண்டைபோட்டுக்க வேணாம்..."அருண், நீ பெட்ரூம் டிவியில ஆதித்யா பாரு, நானும் சிந்து குட்டியும் ஹால் டிவியில அனிமல் ப்ளானட் பாக்குறோம்  என்று ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்து உட்காரவைத்தார் அங்கிள். உடனே, மிரிண்டா கிளாசுடன் சந்தோஷமாக அறைக்குள் ஓடினான் அருண் .கையிலிருந்த மிரிண்டாவை ஒரேமூச்சில் குடித்துவிட்டு, படுக்கையில் சரிந்தபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.  கொஞ்ச நேரம் கார்டூன் கதாபாத்திரங்களுடன் கூடக்கூடப் பேசிக்கொண்டிருந்தவன் பத்துநிமிஷத்தில் தூங்கிப்போய்விட்டான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான் சந்துரு.  பிரதோஷ பூஜை முடித்து, பிரசாதத்துடன் உள்ளே நுழைந்தாள் இந்திரா. இன்னிக்கும் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்களா?  வந்து ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டிங்கல்ல, காபி போட்டுத்தரவா என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சிந்துவும் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தாள். இன்னிக்கும் இந்தப் பசங்க இங்க வந்துதான் லூட்டியடிச்சுதா? என்று எரிச்சலுடன் கேட்டவள் எப்பத்தான் இவங்க அப்பாவும் அம்மாவும் புள்ளைங்க விஷயத்துல கரிசனம் காட்டப்போறாங்களோ என்று கணவனிடம் சொன்னபடி பூஜையறைக்குப் போனாள் இந்திரா.

படுக்கையறையிலும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அங்கே உறங்கிக்கொண்டிருந்த அருணைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் அளவு மீறிப்போய்விட்டது. அழுக்குக் காலோட இதுங்கள சோபாவுலகூட நான் உக்காரவிடமாட்டேன். நீங்க என்னன்னா, படுக்கைல ஏறி அழுக்காக்கவிட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க" என்று இறைந்தவளிடம் "இதுக்குப்போயி கோவப்படுறியே இந்திரா, நம்ம வீட்ல குழந்தைங்க இருந்திருந்தா கட்டில்ல ஏறி விளடமாட்டாங்களா?" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முற்பட, "ஓ... எனக்குக் குழந்தையில்லைன்னு வேற குத்திக் காட்டுறீங்களோ?

காசு காசுன்னு இவங்க அப்பாவும் அம்மாவும் காலநேரம் தெரியாம அலையிறாங்க...அவங்க வரதுக்குள்ள இதுங்க தூங்கிடுது. காலையில, விடிஞ்சும் விடியாமலும் எழுப்பி மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பிடுறாங்க. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தண்ணியைக் குடுங்க, டிவியைப் போடுங்க ன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க. சொல்லப்போனா இதுங்க அப்பா அம்மா இதுங்ககிட்ட உட்கார்ந்து அஞ்சு நிமிஷமாவது பேசுவாங்களோ என்னவோன்னு கூடத் தெரியலை. ஆனா நாம  இதுங்களோட கேள்விக்கெல்லாம் பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு..." என்று அவள் எரிச்சலில் படபடக்க,

"நாம தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கோம்னு தைரியம்தான் இந்திரா. அவங்க ரெண்டு பேரும் குறைஞ்ச சம்பளக்காரங்க. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கணும்னா ஓவர்டைம் பாத்தாதான் ஓரளவுக்கு அவங்களுக்குக் கட்டுப்படியாகும் என்ற கணவனிடம், "ஓ, அப்போ அவங்க காசு சம்பாதிக்கிறதுக்காக நான் அவங்க புள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கணுமோ?  என்று அவள் குரலை உயர்த்திக் கூப்பாடு போட,

தெருமுனையில், நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அருணின் அம்மா அனு.  ஓவர்டைமோட சேர்த்து இந்த மாசம் ஒம்பதாயிரம் கிடைச்சிருக்கு. சிந்து கேட்ட வீடியோ கேமும், அருணுக்கு ஒரு சைக்கிளும் இந்த மாசம் கட்டாயம் வாங்கிரணும் என்று மனசுக்குள் நினைத்தபடி, முக்குக் கடை அண்ணாச்சியிடம் குழந்தைகளுக்குப் பிடித்த ரெண்டு மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்டு, ஓட்டமும்நடையுமாக வீட்டை நோக்கி வேகவேகமாய் வந்தவள் இந்திரா வீட்டில் போய்ப் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காய் அழைப்புமணியை அழுத்துவதற்குள் அங்கே கேட்ட சம்பாஷணை அவளை முகத்திலறைந்தது. ஒருநிமிஷம் செயலற்றுப்போய் நின்றுவிட்டாள் அவள்.

அதே நேரம், இந்திராவிடம் மேலும்மேலும் பேசிச் சண்டையை வளர்க்க விரும்பாத சந்துரு,  "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு பழமொழியே சொல்லுவாங்க...இருக்கிற நிலையைப் பார்த்தா இனி நமக்கு அந்த பாக்கியமே இல்லாம போயிடும்போல.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி,..."சரி, நான், கடைக்குப்போயி சிகரெட் வாங்கிட்டு வந்துடறேன். நீ கதவைச் சத்திக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.

வாசலில் நின்ற அனுவைப் பார்த்ததும் சட்டென்று அவன் முகம் சங்கடத்தில் வெளிர, அதைக் கண்டுகொள்ளாமல், அப்போதுதான் வந்தவள்போல, கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.  "இந்திராவையும் கூப்பிடுங்க... எங்க வீட்டுக்காரருக்கு அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால நான் இன்னியோட வேலையை விட்டுட்டேன். கூடிய சீக்கிரம் அந்தப்பக்கமாவே வீடு பாத்திட்டுப் போயிரலாம்னு இருக்கோம்" என்றவள், "சிந்தூ, அருண்..." என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். உள்ளிருந்து அவர்களை எழுப்பிக் கூட்டிக்கொண்டுவந்தாள் இந்திரா. அப்பாடா என்ற ஒரு விடுதலை அவள் முகத்தில் தெரிந்தது. "இன்னிக்கும் இங்கயே தூங்கிருச்சுங்களா? தேங்ஸ் இந்திரா..." என்று அவள் முகத்தைப் பார்த்து மெல்லச் சொன்னவள் பிள்ளைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அனு, சொல்வது உண்மையில்லை என்று உள்ளுக்குள் ஏதோ உணர்த்த, மறுகிய மனத்துடன் வெளியிறங்கி நடந்தான் சந்துரு.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

குழந்தைகளைக் குற்றம் சொல்லாதீங்க...

"எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்து வந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.

"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப் பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்ற சேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப் பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.

"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச் சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப் பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.

இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.

அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக் கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக் குழந்தை.

இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு வரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.

பக்கத்து வீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடி வீட்டுக்காரன் ஒரு மாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து, இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.

கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில் செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக் குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?

என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப் போட்டுடுவான், என் கண்ணை விட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.

குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப் பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.

விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக் குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.

வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடி விளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.

மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்த பின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.