வெள்ளி, 18 செப்டம்பர், 2009

துபாய் மால் (The Dubai Mall) தொடர்ச்சி - புதிய படங்களுடன்

ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்,

"இந்தப்பதிவில்" துபாய் மால் (The Dubai Mall)

பற்றிச் சொல்லியாச்சு.

இன்னும் சில புதிய பகுதிகளைப் பற்றி படங்களுடன் மீண்டும்...

துபாய் மால் ஆரம்பித்த புதிதில் சென்றபோது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்நடமாட்டம் இருந்தது. நேற்று மறுபடியும் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது, சும்மா சொல்லக்கூடாது...நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பைவிடக் கடைகளும் அதிகமாக, கூட்டமும் அதிகமாகத்தான் இருந்தது.
ரமதான் விடுமுறையும் ஆரம்பமாகியிருப்பதால் கடைகளெல்லாம் விதவிதமான விளம்பரங்களோடு களைகட்டியிருந்தன.





கடைகளைத் தவிர்த்து காட்சிக்கு விருந்தாகும் விஷயங்களும் நிறைய இருக்கத்தான் செய்யுது. பரந்து விரிந்த இடவசதி. நேர்த்தியான அலங்காரங்கள்,ஆங்காங்கே உட்கார அழகிய இருக்கைகள்,உணவுக்கூடத்தருகே குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி என்று எல்லாமே அழகாக அமைத்திருக்கிறார்கள்.



சுத்தமாய் மின்னும் தரைப்பரப்பும் இத்தனை இடவசதியும் இருந்தா நம்ம ஊரில் கட்டுச்சோறு கொண்டுவந்து குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொல்லிச் சிரித்தார் ஒருவர் :)

இதோ,இரைச்சலுடன் ஜொலிக்கிற நீரருவி, குதிக்கும் மனிதச் சிற்பங்களுடன்...








மையப்பகுதியில் மின்னும் நட்சத்திர அலங்காரம்...






நிறம் மாறும் தரைப்பகுதி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



 


நிஜமோ என எண்ணவைத்த மலர்க் குவியல்கள்...


 


 


இந்தமுறையும் எல்லாத் தளங்களையும் முழுவதுமாய்ப் பார்க்கமுடியவில்லை. சென்றமுறை பார்க்காமல்விட்ட பகுதிகளை மட்டுமே பார்த்தோம். ஆனாலும் அதுக்கே நாலுமணி நேரம் ஆகிப்போச்சு.ஏன்னா, மாலின் (mall)பரப்பளவு அத்தனை பெரியது. இன்னும் பார்க்காமல் விட்ட பகுதிகளெல்லாம் இனிவரும் அடுத்தபதிவில்...

***********

சனி, 12 செப்டம்பர், 2009

துபாய் மெட்ரோ (Dubai Metro)

இந்த ஊர் (துபாய்)ராஜாவுக்கு புதுமையும் பிரம்மாண்டமுமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பொருளாதார நெருக்கடி, வெளியேறும் மக்கள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை துபாய் சந்தித்தாலும், சொன்ன மாதிரியே 9/9/2009 இரவு 9 மணி 9 நிமிடத்தில் துபாயின் கனவு ரயில் முதலில் அரசகுடும்பத்தினரை மட்டும் சுமந்துகொண்டு புறப்பட்டது. மறுநாள் காலைமுதல், பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது துபாய் மெட்ரோ சேவை.

கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ நிலையங்கள் முழுக்கக் கூட்டமோ கூட்டம். இதுவரை ரயிலில்லாத ஊரில், புதிதாக ரயிலைப் பார்த்த சந்தோஷம். காரில் வந்து, காரை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ரயிலில் ஏறிச் சென்றுவிட்டுத் திரும்பும் உற்சாக மக்கள்கூட்டம். இந்த ரயில், ஓட்டுனர் இல்லாத, முழுக்கமுழுக்க கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பதால் எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம். அதே ஆர்வத்துடன்தான் புறப்பட்டோம் நாங்களும்.

முதல் கட்டமாக இப்போது பத்து ரயில் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. முதல் நாளில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 67,000 என்றும், இரண்டாம் நாள் வெள்ளியன்று அரைநாள் மட்டுமே இயக்கப்பட்டதால் அன்று பயணித்தவர்கள் 47,000 என்றும் அறிவித்துள்ளனர்.

நாங்கள் போகும்போது,இரவு நேரமானதால் விளக்கொளியில் மின்னியது மெட்ரோ ஸ்டேஷன்.



இதோ, ரயில்நிலையத்தின் உட்புற வேலைப்பாடுகளை,வியப்போடு பார்க்கும் மக்கள்...




உதவிக்கென்று ஊழியர்கள் பலர்...




நாங்கள் ஸ்டேஷனை அடைவதற்குச் சற்றுமுன்தான், ரயிலின் எமர்ஜென்சி வாயிலின் ((emergency exit) பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியதால் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரயிலில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்ய கோல்ட் கார்ட், சில்வர் கார்ட், ப்ளூ கார்ட், ரெட் கார்ட் என வித்தியாசமான வசதிகளுடன் கூடிய நுழைவு அட்டைகள் விற்பனையாகிறது. நமக்கேற்ற ஒன்றினைத் தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் அதை அங்குள்ள தானியங்கிக் கருவியில் காட்டியதும் நமக்கான பாதை திறந்து உள்ளே அனுமதிக்கிறது.




மேலே சென்று ரயில் வந்துநிற்கும் இடத்தினை அடைந்தோம். கண்ணாடியால் முழுவதும் மூடப்பட்டுள்ளது ரயில் வந்துநிற்கும் பகுதி. ரயில் வந்து நின்றதும் அந்தப்பகுதியின் வாயில்கள் திறந்துகொள்கிறது.



ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் வந்தவாறே இருக்க நாங்களும் ஒன்றில் ஏறினோம். ஏறியதும் ஒரு ஆப்பிரிக்கப் பெண் ஊழியர் வந்து, யாரும் வாசல் பட்டனை அழுத்திவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்துவிட்டுப்போக, தொடங்கியது ரயில் பயணம்.

ரயிலில் கோல்ட் கார்ட் கஸ்டமர்களுக்கு அதாவது 
வி ஐ பி க்களுக்கான முதல் வகுப்புப் பெட்டி ஒன்று, அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கான பெட்டி, அதனையடுத்து நான்கு பொதுப் பெட்டிகள், ஆக மொத்தம் ஆறு. எந்தப்பெட்டியில் ஏறினாலும் கடைசிவரை சென்றுவரலாம்.

உள்ளேயும் வெளியேயும் முழுக்கமுழுக்க நீலநிற வேலைப்பாடுகளுடன்
அழகாகவே இருந்தது ரயில்.

இது ரயிலின் நுழைவாயிலில்...







உயரத்தில் போகும் ரயிலிலிருந்து துபாயின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களைப் பார்த்தவாறே செல்வது சுவாரசியமாகத்தான் இருந்தது.ரயில்முழுக்க வயர்லெஸ் இணைய இணைப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால் ஆளாளுக்கு அவர்களுடைய செல்ஃபோனைச் சோதித்தவாறே இருந்தனார்.



இறுதி ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய ரயிலில் புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்தோம். ரயிலில் வந்து பஸ்சில் வேறு இடத்துக்குச் செல்லவேண்டியவர்களுக்கு வசதியாக, நிலையத்திற்குள்ளேயே தொலைக்காட்சித் திரையில் அறிவிப்பு வருகிறது. பஸ் வர எவ்வளவு நேரமாகும் என்று அறிந்துகொண்டு நிலையத்தைவிட்டு வெளியில் சென்றால்போதும்.



இதோ, இருளில் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக விரைகிறது துபாய் ரயில்...


**********

வியாழன், 10 செப்டம்பர், 2009

கறிவேப்பிலைத் துவையல்




தேவையான பொருட்கள்:-


கறிவேப்பிலை - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பூண்டு - 1 பல்

புளி - பாக்கு அளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:-

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இரண்டையும் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.

அதனுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து, கறிவேப்பிலை முறுகலாகும்வரை வறுக்கவும்.

வறுத்தவற்றை ஆறவிடவும்.

ஆறியபின்,தேங்காய்த்துருவல்,தேவையான உப்பு, புளி,பூண்டு இவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

இந்தத் துவையல் சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி இவற்றுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

உளுத்தம்பருப்பு தோலுள்ளதாகவும் இருக்கலாம். சுவை நன்றாகவே இருக்கும்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க (7)

வியாசரின் வரலாறும் குருவம்ச விருத்தியும்

அஸ்தினாபுரத்து மன்னன் சாந்தனுவின் மனைவியான மீனவப்பெண் சத்தியவதி, தன் திருமணத்திற்குமுன் ஒருநாள், தந்தைக்குப் பதிலாகத் தான் யமுனை நதியில் படகோட்டிக்கொண்டிருந்த வேளையில்,வசிஷ்ட முனியின் வழித்தோன்றலான பராசர முனிவர் அங்கு வந்தார். மீனவப்பெண்ணவளின் அழகில் மயங்கிய அவர் அவளை விரும்பி,அவளோடு கூடிவாழ, அவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கரிய நிறமாயிருந்ததால் அக்குழந்தைக்கு கிருஷ்ணன் என்றும், யமுனை நதியின் இடையில் அமைந்த தீவினில் பிறந்ததால் துவிபாயனன் என்றும் அம்மகனுக்குப் பெயரிட்டனர்.(துவீபம் என்றால் தீவு என்று அர்த்தமாகும். உதாரணமாக,சிங்களத்வீபம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?)

சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த, புத்திரர் இருவரும் சந்ததியின்றி இறந்துபோக, பராசரர் மூலம் தனக்குப் பிறந்த தன் மூத்த மகனான வியாசமுனிவரிடம் சென்று குருவம்சம் தழைக்க வழிசெய்யுமாறு கூறினாள் அன்னை சத்தியவதி.

அன்னையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வியாசமுனிவரும், விசித்திரவீரியனின் மனைவியரான அம்பிகா, அம்பாலிகாவைத் தன்னிடம் அனுப்பிவைக்குமாறும் தன்னுடைய யோக சக்தியினால் தான் அவர்களுக்கு புத்திரபாக்கியம் தருவதாகவும் கூறினார்.

மகனின் பதிலில் மகிழ்ந்த அன்னை சத்தியவதி முதலில் அம்பிகாவை வியாசரிடம் அனுப்பி வைத்தாள். வியாசரின் உருவத் தோற்றத்தைக் கண்டு அஞ்சியதாலும், கூச்ச உணர்வினாலும் வியாசரின் அருகில் வந்ததும் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அம்பிகா. அதனால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறக்க அதற்கு திருதராஷ்டிரன் எனப் பெயரிட்டனர்.

பார்வையற்ற குழந்தை பின்னாளில் அரியணை ஏற இயலாது என்று எண்ணிய சத்தியவதி, தம் இரண்டாவது மருமகளான அம்பாலிகாவை முன்னதாகவே எச்சரிக்கை செய்து, வியாசரின் யோகத்துக்கு ஒத்துழைக்குமாறு கூறி அனுப்பிவைத்தாள். ஆனால், அச்சத்தின் காரணமாய் அவளும் முகம் வெளுத்துப்போக, அவளுக்கு பாண்டு எனும் பெயருடைய உடல் வெளுத்த,சோகையுற்ற பிள்ளை பிறந்தது. இந்தக் குழந்தையும் சத்தியவதிக்கு திருப்தியளிக்காததால் மீண்டும் மகன் வியாசரைச் சென்று வேண்டினாள்.

அன்னையின் வேண்டுதலை ஏற்று, வியாசமுனிவரும் மருமகள் இருவரில் ஒருத்தியை மீண்டும் அனுப்பிவைக்குமாறு சத்தியவதியிடம்கூற, இந்தமுறை, அம்பிகாவும் அம்பாலிகாவும் சேர்ந்து, அவர்களுடைய பணிப்பெண் ஒருத்தியை அலங்கரித்து வியாசரிடம் அனுப்பி வைத்தனர். அச்சமோ, பயமோ இன்றி வியாசரின் யோகமுறைக்கு உடன்பட்ட அப்பணிப்பெண்ணுக்கு, அறிவும் ஆரோக்கியமுமான ஆண் குழந்தை பிறந்தது. அவரே பின்னாளில் விதுரர் என அழைக்கப்பட்டார்.

ஆக, வாரிசின்றிப்போன குருவம்சம் வியாசரின் மூலமாக வாரிசை அடைந்தது.