திங்கள், 31 ஜனவரி, 2011

என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!


பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.

பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?

ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.

நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை
மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.

கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.

இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.

ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் :(

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!
(Total cargo cost is Dh1,500)

எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல்,இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல்,
பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.

இதுதொடர்பான கருத்துக்களை Gulf News ல் படிக்க "இங்கே" பாருங்க...

பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது அவசியம்.

நன்றி: Gulf News


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக