செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை!

படம்: நன்றி!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். வருவோரும் போவோருமாக உயிர்ப்போடு விளங்கும் தெருக்கள். மதுரை நகரத்தின் நாளங்காடி...

"மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்"

அங்கே, விற்க விற்கக் குறையாமல் பொருட்கள் வந்திறங்கியபடியே இருக்க, விற்பனைக்கு வந்த பொருட்களை இறக்கிவைக்கிற ஓசையும், அவற்றை விலைகொடுத்து அள்ளிச்செல்லுகின்ற மக்கள் கூட்டம் எழுப்பும் ஒலியும் சேர்கையில் ஆற்றுநீர் ஓடிவந்து அலைகடலோடு கலப்பதுபோன்ற  ஆரவாரம் அங்கே.

தெருக்களில், சுவை மிக்க பலகாரக்கடைகள், வட்டத் தட்டுக்களில், கட்டிவைத்த, கொட்டிவைத்த பூக்களை விற்கும் கடைகள், மகரந்தம் போல மென்மையாக வாசனைத் திரவியங்களைப் பொடித்து விற்கும் கடைகள், வெற்றிலை பாக்குக் கடைகள், சங்கு மற்றும் சுட்ட சுண்ணாம்பினை விற்கும் கடைகள் என்று பலவிதமான கடைகள். 

சங்குகளை அறுத்துப் பதமாக்கி அவற்றில் வளையல் செய்கிறவர்களும், ஒளிபொருந்திய வயிரக்கல்லில் துளையிடும் தொழில் செய்பவர்களும், பொன்னை உரசிப்பார்த்து வாங்குகிற பொன் வியாபாரிகளும், செம்பினை எடைபோட்டு வாங்கும் வணிகர்களும், ஆடை விற்பனை செய்பவர்களும், குஞ்சம் கட்டி விற்பவரும், பூக்களும், சந்தனமுமாகிய நறுமணப் பொருட்களை விற்பவர்களும், ஓவியம் வரைபவர்களும், கடலின் கரையில் படியும் கருமணல் படிவுகளைப்போல, தெருவோரங்களில் புடவைகளை விரித்துக்கட்டி நெசவு செய்பவர்களும், ஒருவர் கால் மற்றவர்மேல் படுமளவுக்கு நெருக்கமாக நின்று விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

"பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர"

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர்களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை (பிரியாணி???) விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவையுடைய சோற்றினை வழங்குபவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப்பாகக் காணப்பட்டது அந்த வீதி.

இவை தவிர, இரவு நேர அங்காடிகளில், மரக்கலங்களில் வந்திறங்குகிற பொருட்களை வாங்குவோரும், தாம் கொண்டுவந்த பொருட்களை விலைக்கு விற்றுக் கிடைத்த பொருளுக்கு மதுரை மாநகரில் கிடைக்கிற அழகிய அணிகலன்களை வாங்கிச்செல்லுகிற வெளிநாட்டு வணிகர்களும் சேர, அலை ஓசையும் அவற்றோடு விளையாடும் நீர்ப்பறவைகளின் ஓசையும் இயைந்ததுபோல எங்கும் ஓசை நிறைந்திருந்தது. 

இவையெல்லாம், பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சி காட்டுகிற மதுரையும் அவற்றில் நடக்கிற வியாபாரங்களைப் பற்றிய செய்தியுமாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்திருந்தும், இன்னும் அதே உயிர்ப்புடன் உறங்கா நகரமாக இயங்குகிற மதுரையை நினைக்கையில் மனசு வியக்கத்தான் செய்கிறது. இன்றைக்கு வைகையைக் காணோம், வறட்சியாகிப்போச்சு என்று ஆயிரம்தான் சொன்னாலும் என்றைக்கும் மதுரை மதுரைதான்!!!


-சுந்தரா

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உறங்கா நகரம் மதுரை!

சென்னைக்குச் செல்கிற அந்தத் தனியார் பேருந்து மதுரை ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தத்தில் நின்றது. மணி இரவு 10. எடுத்து வந்திருந்த இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, சாப்பாடு கட்டியிருந்த இலையினையும் காகிதத்தையும் போட்டுவிட்டு வரலாமென்று கீழே இறங்கினேன். பளிச்சென்ற விளக்குகள்,  போவதும் வருவதுமாய் மக்கள் கூட்டம், இரவென்று சொல்லமுடியாதபடி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது மதுரை.

சுற்றிலும் தனியார் பேருந்துகளுக்கான சிறு அலுவலகங்கள், பெட்டிக்கடைகள், பழக்கடைகள், தேநீர்க் கடைகள் தெரிந்ததேயன்றி குப்பைகளைப் போட குப்பைத் தொட்டியொன்றும் கண்ணில் படவில்லை.

சுற்றிலும் பார்த்த என்னிடம் அக்கா, ரெண்டு பத்து ரூவாக்கா வாங்குங்கக்கா என்றபடி அருகில் வந்த செயற்கைப் பூச்சாடி விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம், தம்பி குப்பையைப் போட குப்பைத்தொட்டி எங்கேயிருக்குப்பா? என்றேன். அக்கா, சும்மா இந்த பஸ்ஸுக்கு அடியில போடுங்கக்கா என்று சொல்லிவிட்டு, அக்கா ஒண்ணாச்சும் வாங்குங்கக்கா என்றான். பஸ் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. இருப்பா, ரெண்டாவே குடு என்றேன். இருந்ததிலேயே பளிச்சென்ற நிறத்தில் இரண்டு பூச்சாடிகளை நீட்டினான்.

கொடுத்ததை வாங்கிக்கொண்டு அவனிடம், தம்பி உன் பேரென்னப்பா என்றேன். 'அழகர்க்கா...' என்று சட்டென்று கண்கள் மின்னச் சொன்னவனிடம் 'படிக்கிறியா...' என்றேன். 'ம்ம்...எட்டாப்புப் படிக்கிறேன்க்கா. வீட்ல படிச்சுமுடிச்சிட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்தான் பூ விக்க வருவேன். எனக்கு முன்னாடி என் அண்ணன் வருவான்' என்றான்.

'ஆமா, உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல்?' என்றவுடன், ஒருநிமிடம் யோசித்துவிட்டு 'மீனாச்சி கோயில்க்கா...' என்றான். அதுதவிர என்றவுடன் 'மல்லிப்பூ, இட்லி, ஜிகர்தண்டா, திருமலை நாயக்கர் மஹால்,  திருப்பரங்குன்றம் அப்புறம் அழகர் கோயில்' என்றவனிடம் நீ அடிக்கடி எந்த கோயிலுக்குப் போவே? என்ற கேள்விக்கு, மடப்புரம் காளி கோயில்க்கா. அங்கதான் எங்கம்மா அடிக்கொருக்கா கூட்டிட்டுப் போகும் என்றான். அப்போ, மீனாட்சி அம்மன் கோயில்? என்று கேட்டவுடன், எப்பவாச்சும் போவோம்க்கா என்றான்.

ஆமா, எத்தனை மணிவரைக்கும் பூச்சாடி வியாபாரம் பண்ணுவே என்று கேட்க? இப்ப போயிருவேன்க்கா. இனி நாளைக்கு சாயந்திரம் எட்டுமணிக்கு வருவேன் என்றவனிடம், 'சரி தம்பி படிப்பை மட்டும் விட்டுராதே' என்றதும் சரிங்கக்கா என்று சிரித்தபடி நகர்ந்துபோனான் அவன். சுற்றிலும் அவனைப்போல் நிறைய சிறுவர்கள் பழங்கள், பைகள், தொப்பிகள், பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கூவிக்கூவி விற்கிற சத்தங்கள், புறப்படுகிற பேருந்துகளின் ஒலி, சென்னை, திருச்சி, பேருந்துகளுக்குப் பயணிகளைக் கூப்பிடுகிற நடத்துனர்களின் சத்தம், பக்கத்துப் பரோட்டாக் கடையில் கொத்துப் பரோட்டா போடுகிற சத்தம், இடையிடையே அங்கே திரிகிற மாடுகள் எழுப்புகிற சத்தம் என்று கலவையான சத்தங்கள் நிறைத்திருக்க இரவென்ற எண்ணமே எழவில்லை. உறங்கா நகரம் அந்த நள்ளிரவிலும் உற்சாகமாகவே தெரிந்தது. 

சனி, 22 பிப்ரவரி, 2014

நடந்தாய் வாழி காவேரி!

இப்போதெல்லாம் விடுமுறையில், திருச்சிக்குப் போகவேண்டுமென்று பேச்செடுத்தாலே அங்கே இரண்டு நாள்தான் இருக்கமுடியும். அதுக்கு சரின்னு சொன்னா வரேன் என்று கண்டிப்போடு சொல்லுவார்கள் பிள்ளைகள். அவர்களிடம் என்ன காரணமென்று கேட்டால் சட்டென்று பதில்வரும். அங்கே தண்ணி நல்லாருக்காது.போர் தண்ணியில குளிச்சா தலை சிக்குப்பிடிச்சுப்போகும். சோப்புப் போட்டாக்கூட நுரையே வராது என்று ஆளுக்கொரு குறை சொல்லுவார்கள்.

கேட்கையில் மிகையாகத் தெரிந்தாலும் விடுமுறையான ஜூன் ஜூலையில் அங்கே செல்லும்போது அநேகமாக எப்போதும் அதே நிலைமைதான். குழாயில் வருகிற தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடித்தாலும் நன்றாக இல்லையென்று மினரல் வாட்டருக்கு முக்கால்வாசிப்பேர் மாறிவிட்டதாகச் சொன்னபோது, தென்னக நதிகளில் தலையாய நதியாக நம் தமிழ்ப்புலவன் பாரதி குறிப்பிட்ட காவிரியின் இன்றைய நிலைமை மனதைக் கனக்கவைத்தது உண்மைதான்.

இன்றைக்கு நிலைமை இப்படியென்றாலும், தென்னகத்தின் கங்கையெனுமளவுக்குப் புகழ் பெற்றது காவிரி நதி. தலைக்காவிரியில் பிறந்து வங்காள விரிகுடாவில் வந்து சேருகிற அந்தக் காவிரிப்பெண்ணுக்கு வருகிற வழியெங்கும் வழிபாடு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

 காதோலை,கருகமணி, கருப்பு வளை, இவற்றோடு பூ, பழம் படையலுமாகச் சீர்கொண்டுபோய் ஆடிப்பெருக்கில் அவளை வழிபடும் வழக்கம் காவிரிக்கரைகளில் இன்றும் கண்கூடாகப் பார்க்கிற ஒன்று. ஆடிப்பெருக்கன்று அவளை வழிபட்ட கையோடு புதுமணத் தம்பதிகள் தங்கள் மணநாளில் அணிந்த மாலைகளை அவளிடம் சமர்ப்பிக்கின்ற சடங்கும் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

கவிஞர்கள் பலருக்குக் கருப்பொருளாகவும், காண்பவர் கண்ணுக்குக் தாயாகவும் தென்படுகிற காவிரிக்கு இலக்கியத் தொடர்புகள் ஏராளம். 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில்,

"வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தனைய கடற்காவிரி
புனல் புரந்து பொன் கொழிக்கும்”

காவிரியின் மெல்லிய மணல் பொன்னிறமாகத் திகழ்வதால்தான் அதற்குப் பொன்னியென்றும், வடமொழியில் ஸ்வர்ண நதியென்றும் பெயர் வந்ததோ என வியக்கிறார் பட்டினப்பாலையின் உரையாசிரியரான நச்சினார்க்கினியர்.

ஆடிப்பெருக்கில் கூடி வழிபடப்பெறும் காவிரிப்பெண்ணுக்குத் தான் தமிழ்க் குறுமுனிவன் அகத்தியரின் மனைவியென்ற கர்வமும் உண்டு.
ஆம், குறுமுனி அகத்தியர் கவேர மகரிஷியின்  மகளான லோபமுத்திரையை மணந்துகொண்டு, அவளை ஒரு சமயம் கமண்டலத்தில் நீராக்கித் தன்னுடன் எடுத்துச்செல்ல, அந்தக் கமண்டல நீரைக் கணபதியாகிய விநாயகப்பெருமான் காகமாகி வந்து தட்டிவிட, அந்நீரே காவிரி நதியானதாகப் புராணக்கதையாகச் சொல்லுவார்கள்.

இதே கருத்தையே,

"கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது 
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை" 

காந்தமன் எனும் அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்தவள் காவிரி என்று மணிமேகலை கூறும்.

மணிமேகலையில் காந்தமன் எனப்படுகின்ற அதே கண்டம சோழன் எனும் மன்னன், குறுகிய பகுதியிலேயே பாய்ந்துகொண்டிருந்த காவிரியைக் குடகுமலைப் பாறைகளை உடைத்துச் சோழ நாட்டுக்குள் கொண்டுவந்தானென்றும் கூறப்படுகிறது. அந்தச் சோழ மன்னனின் பெருமுயற்சியால் தானோ என்னவோ மிகக் குறுகிய நதியாகப் பாறை இடைவெளியில் பாய்ந்துகொண்டிருந்த, ஆடுதாண்டும் காவிரி என அழைக்கப்பட்ட காவிரி, சோழ மண்டலத்தில் நுழைந்து அகண்ட காவிரியாகி அதைப் பொன்விளையும் பூமியாகப் பூரிக்கவைத்திருக்கிறது.

இவ்வாறு அன்றைக்குக் கண்டமன் கொண்டு வந்த காவிரிக்குக் கல்லணை கட்டிப் பெருமை பெற்றான் மன்னன் கரிகால் சோழன். அவனை,

"குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே"

மலையெனக் குவித்துவைக்கப்பட்ட நெற்குவியல்கள், மூடைகளில் நிரப்பித் தைக்கப்பட்டும் மிகுந்துபோய் எங்கும் பரந்துகிடக்கின்ற,ஒருவேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையுமளவுக்குக் காவிரியின் நீரால் செழுமைப்படுத்தப்பட்ட, நிலப்பகுதிக்குத் தலைவன் என்று பொருநராற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது. 

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!

வண்டுகள் மொய்க்கும்படியாக மலர்களை ஆடையாகப் போர்த்தி, கரிய கயல்கள் கண்களாகி விழித்து நோக்க, நடைபயிலுகின்ற காவிரியின் அழகைச் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்துப்பாடுகிறார் இளங்கோவடிகள்.

கவிஞர்கள் தன் பங்குக்குக் காவிரியைப் பாட, கல்கி அவர்களின் காவிரி வர்ணனை அதன் மேல் அவருக்கிருந்த காதலைச் சொல்லாமல் சொல்லும். பொன்னியின் செவன் ஒன்பதாவது அத்தியாயத்தில் அவர் காவிரியைப் புகழும் அழகைப் பாருங்கள்...

"குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?
பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப் பெண் யார்தான் இருக்க முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?
கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!" 
என்று காவிரியின் அழகைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார் கல்கி.

இத்தனை புகழ்பெற்ற நம் காவிரிப் பெண், அகத்தியர் என்ற திரைப்படத்தின் பாடலாக கே. டி. சந்தானம் அவர்களது படைப்பில், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கம்பீரமான குரலில் எவ்வாறு நடைபயிலுகிறாள் என்பதையும் கேட்டு மகிழுங்கள்.

இலக்கியத்தில் படிக்கும்போதும், எத்தனையோ பாடல்களில் கேட்கும்போதும் காவிரியை நினைத்து மகிழ்கிற தமிழனின் மனசு, வளருகிற பயிருக்காகவும், வாழ்வாதாரமான குடிநீருக்காகவும் இன்றைக்கு வழக்குப்போட்டு அண்டை மாநிலத்திடம் சண்டைபோடுகிற நிலைமையைப் பார்த்தால் வருந்தத்தான் செய்கிறது.

                                                                            *********

சனி, 15 பிப்ரவரி, 2014

மூதுரைக் கதைகள் - 1 ஆளில்லா மங்கைக்கு அழகு

கல்யாணம் பண்ணி இன்னிக்கி நாப்பத்தெட்டு வருஷமாச்சு. கட்டிக்கிட்டு வந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் தான். பொறந்த இடத்திலயும் பெருசா எதுவும் வசதியாயிருக்கல. கடவுள் புண்ணியத்துல பிள்ளைங்க நாலுபேரும் நல்லாப் படிச்சதால இன்னிக்கி எல்லாக் கஷ்டமும் தீர்ந்துபோச்சு. ஆனா, இதையெல்லாம் பார்க்க அவங்க அப்பாவுக்குத்தான் குடுத்துவைக்காம போச்சு.

அப்பல்லாம், நாலு பிள்ளைங்களும் படிச்ச காலத்துல அவங்க அப்பா ஒரு ஆள் சம்பளம். அதுல, அம்பது ரூவா  ஒதுக்கி பெரியவனுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் புஸ்தகம் வாங்கவும், சின்னவனுக்குக் கிழிஞ்சுபோன பள்ளிக்கூடத்து யூனிஃபாரத்துக்குப் பதிலா புதுசு வாங்கவும்கூட எவ்வளவோ சிரமப்பட்டிருக்கோம். 

ஆனா, இப்பப் பாருங்க,  பிள்ளைங்க  தலையெடுத்த பிறகு, என்ன வேணும்னு நெனச்சாலும், அது அடுத்த நிமிஷமே கிடைக்குது. ஆனா, கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு, காசு செலவழிக்கத் தெரியாம பழகிப்போன இந்தப் பிறவிக்கு, இப்போ அதை அனுபவிக்க நினைச்சாலும் முடியல.

நேத்துப் பாருங்க பேச்சுவாக்குல, "கல்யாணத்தப்போ மாம்பழக் கலருல பச்சைக்கரை போட்ட பட்டுச் சேலை வாங்கணும்னு ஆசைப்பட்டதையும், உனக்கு அறுவதாம் கல்யாணத்துக்கு அந்தக் கலர் சேலை வாங்கிருவோம்னு அவங்கப்பா கிண்டலா சொன்னதையும் சின்னப்பையன் குமார் கிட்ட விளையாட்டா சொல்லிட்டிருந்தேன், கிறுக்குப்பய,  அங்க இங்க அலைஞ்சு, அதே நிறத்துல ஒரு பட்டுச் சேலையக் கொண்டு வந்து சாயங்காலமே கையில குடுக்குறான்.

எனக்கு சட்டுன்னு கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சு கண்ணம்மா. போற வயசுல இதைக் கட்டிக்கிட்டு நான் எங்க போகப்போறேன் வரப்போறேன்?" என்று சொன்ன காந்திமதிப் பாட்டியிடம், "இதெல்லாம் குடுப்பினை காந்திமதி, அன்னிக்கி அத்தனை வறுமையிலயும், பொறுமையே தவமா நீ குடும்பத்தைக் காப்பாத்தினதுக்குக் கிடைச்ச பரிசு. இந்தப் பரிசுக்கு நீ முழுக்க முழுக்க தகுதியானவதான். ஆனா என்ன, கொஞ்சம் காலங்கடந்து ஒனக்குக் கிடைச்சிருக்கு... அவ்வளவுதான்" என்றாள் காந்திமதியின் தோழி கண்ணம்மா பாட்டி.

இப்போ, நீ சொல்லிப் புலம்புற இதே விஷயத்தைப் பத்தி,
நம்ம ஔவையார் அப்பவே மூதுரைப் பாட்டுல எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காங்க தெரியுமா?

"இன்னா விளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா வளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு"


"அதாவது, சுபமான, மங்கல விழாக்காலங்களில் இல்லாமல் மற்றைய காலங்களில் பூக்கிற அழகிய பூக்களையும், துணைவனில்லாத ஒரு இளம் பெண்ணுக்கு அமைந்திருக்கிற அழகையும்போல,  இளமைப் பருவத்தில் வந்து வாட்டுகிற வறுமையும், அனுபவிக்க இயலாத முதுமைப் பிராயத்திலே வந்து சேர்கின்ற இனிமையும் துன்பத்தையே தரும் என்று மூதுரையின் மூன்றாவது பாட்டில் அன்னிக்கே சொல்லியிருக்காங்க..." என்று கண்ணம்மா பாட்டி சொல்ல,

" அடடே...நம்ம மனசு புரிஞ்சாப்பல எவ்வளவு அருமையா அப்பவே சொல்லி வச்சிருக்காங்க பாரு!" என்று ஔவையின் பாடலைக் கேட்டு வியந்து போனாள் காந்திமதிப் பாட்டி.

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஊரார் பிள்ளை



தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவரவர் பிள்ளைகளைப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் ட்யூஷன் நடத்துமிடங்களில் அடைத்துவிட்டு, அம்மாக்கள் டீயும் கையுமாய் டி.வி சீரியல்களில் ஆழ்ந்திருந்த நேரம்...வீட்டுக்கருகிலிருந்த  காந்திசிலைகிட்ட கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள் எட்டுவயசு சிந்துவும் அவள் தம்பி அருணும்.

அம்மா வர நேரமானால், அண்ணாச்சி கடையில் ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டு, நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த இந்திரா ஆன்ட்டி வீட்டில் தொல்லைபண்ணாம உட்கார்ந்திருக்கணுமென்பது ஏற்கெனவே அவர்கள் அம்மா அனு சொல்லிவைத்திருந்த விஷயம். இந்திராவும் அனுவும் ஒரே ஊர்க்காரங்க என்பதோடு ஒரே பள்ளியில் படித்தவர்களும் கூட.

பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, இந்திரா ஆன்ட்டி வீட்டுக் காலிங்பெல்லை மாற்றிமாற்றி அடித்தார்கள் ரெண்டுபேரும். வழக்கத்துக்கு மாறாக, சந்துரு அங்கிள், இந்திரா ஆன்ட்டியின் கணவர்வந்து கதவைத் திறந்தார்.

கையிலிருந்த கண்ணாடி கிளாசில் மிரிண்டாவுடன் நின்ற அவர், "என்ன பசங்களா, உங்க அம்மா இன்னும் வரலியா? என்றார். அம்மாவுக்கு இன்னிக்கு ஓவர்டைம் இருக்குதாம். அவங்க வரவரைக்கும் இங்கயே இருக்கச்சொன்னாங்க அங்கிள்...என்றான் அருண். அதற்குள், "ஆன்ட்டி, குடிக்கத் தண்ணி வேணும்..." என்று உட்புறம் பார்த்துக் குரல்கொடுத்தாள் சிந்து

"ஆன்ட்டி வீட்ல இல்லைடா, கோயிலுக்குப் போயிருக்காங்க...தண்ணிதானே வேணும், நானே கொண்டுவரேன்" என்றபடி உள்ளேபோனார் அங்கிள். ஆன்ட்டி வீட்ல இல்லேன்னதும் சந்தோஷம் கிளம்பியது அருணுக்கு. ஆன்ட்டி பார்க்கிற அறுவையான சீரியல்களைப் பார்க்காமல், ஆதித்யா சேனல் பார்க்கலாமென்று வேகவேகமாக ரிமோட்டைக் கையிலெடுத்தான். "ஆதித்யா வேண்டாண்டா அருண்...அனிமல் ப்ளானட் பார்க்கலாம்" என்றாள் சிந்து அதற்குள், இரண்டு டம்ளர்களில் மிரிண்டாவும் சின்ன பாட்டிலில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார் சந்துரு அங்கிள்.

நீங்க ரெண்டுபேரும் சண்டைபோட்டுக்க வேணாம்..."அருண், நீ பெட்ரூம் டிவியில ஆதித்யா பாரு, நானும் சிந்து குட்டியும் ஹால் டிவியில அனிமல் ப்ளானட் பாக்குறோம்  என்று ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்து உட்காரவைத்தார் அங்கிள். உடனே, மிரிண்டா கிளாசுடன் சந்தோஷமாக அறைக்குள் ஓடினான் அருண் .கையிலிருந்த மிரிண்டாவை ஒரேமூச்சில் குடித்துவிட்டு, படுக்கையில் சரிந்தபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.  கொஞ்ச நேரம் கார்டூன் கதாபாத்திரங்களுடன் கூடக்கூடப் பேசிக்கொண்டிருந்தவன் பத்துநிமிஷத்தில் தூங்கிப்போய்விட்டான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான் சந்துரு.  பிரதோஷ பூஜை முடித்து, பிரசாதத்துடன் உள்ளே நுழைந்தாள் இந்திரா. இன்னிக்கும் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்களா?  வந்து ஒண்ணும் சாப்பிட்டிருக்கமாட்டிங்கல்ல, காபி போட்டுத்தரவா என்று கேட்டபடி ஹாலுக்கு வந்தாள். அதற்குள் சிந்துவும் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தாள். இன்னிக்கும் இந்தப் பசங்க இங்க வந்துதான் லூட்டியடிச்சுதா? என்று எரிச்சலுடன் கேட்டவள் எப்பத்தான் இவங்க அப்பாவும் அம்மாவும் புள்ளைங்க விஷயத்துல கரிசனம் காட்டப்போறாங்களோ என்று கணவனிடம் சொன்னபடி பூஜையறைக்குப் போனாள் இந்திரா.

படுக்கையறையிலும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அங்கே உறங்கிக்கொண்டிருந்த அருணைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் அளவு மீறிப்போய்விட்டது. அழுக்குக் காலோட இதுங்கள சோபாவுலகூட நான் உக்காரவிடமாட்டேன். நீங்க என்னன்னா, படுக்கைல ஏறி அழுக்காக்கவிட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க" என்று இறைந்தவளிடம் "இதுக்குப்போயி கோவப்படுறியே இந்திரா, நம்ம வீட்ல குழந்தைங்க இருந்திருந்தா கட்டில்ல ஏறி விளடமாட்டாங்களா?" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முற்பட, "ஓ... எனக்குக் குழந்தையில்லைன்னு வேற குத்திக் காட்டுறீங்களோ?

காசு காசுன்னு இவங்க அப்பாவும் அம்மாவும் காலநேரம் தெரியாம அலையிறாங்க...அவங்க வரதுக்குள்ள இதுங்க தூங்கிடுது. காலையில, விடிஞ்சும் விடியாமலும் எழுப்பி மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பிடுறாங்க. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தண்ணியைக் குடுங்க, டிவியைப் போடுங்க ன்னு நம்ம உயிரை எடுக்குதுங்க. சொல்லப்போனா இதுங்க அப்பா அம்மா இதுங்ககிட்ட உட்கார்ந்து அஞ்சு நிமிஷமாவது பேசுவாங்களோ என்னவோன்னு கூடத் தெரியலை. ஆனா நாம  இதுங்களோட கேள்விக்கெல்லாம் பதில்சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு..." என்று அவள் எரிச்சலில் படபடக்க,

"நாம தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கோம்னு தைரியம்தான் இந்திரா. அவங்க ரெண்டு பேரும் குறைஞ்ச சம்பளக்காரங்க. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கணும்னா ஓவர்டைம் பாத்தாதான் ஓரளவுக்கு அவங்களுக்குக் கட்டுப்படியாகும் என்ற கணவனிடம், "ஓ, அப்போ அவங்க காசு சம்பாதிக்கிறதுக்காக நான் அவங்க புள்ளைங்களுக்கு ஆயா வேலை பாக்கணுமோ?  என்று அவள் குரலை உயர்த்திக் கூப்பாடு போட,

தெருமுனையில், நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அருணின் அம்மா அனு.  ஓவர்டைமோட சேர்த்து இந்த மாசம் ஒம்பதாயிரம் கிடைச்சிருக்கு. சிந்து கேட்ட வீடியோ கேமும், அருணுக்கு ஒரு சைக்கிளும் இந்த மாசம் கட்டாயம் வாங்கிரணும் என்று மனசுக்குள் நினைத்தபடி, முக்குக் கடை அண்ணாச்சியிடம் குழந்தைகளுக்குப் பிடித்த ரெண்டு மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்டு, ஓட்டமும்நடையுமாக வீட்டை நோக்கி வேகவேகமாய் வந்தவள் இந்திரா வீட்டில் போய்ப் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்காய் அழைப்புமணியை அழுத்துவதற்குள் அங்கே கேட்ட சம்பாஷணை அவளை முகத்திலறைந்தது. ஒருநிமிஷம் செயலற்றுப்போய் நின்றுவிட்டாள் அவள்.

அதே நேரம், இந்திராவிடம் மேலும்மேலும் பேசிச் சண்டையை வளர்க்க விரும்பாத சந்துரு,  "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்னு பழமொழியே சொல்லுவாங்க...இருக்கிற நிலையைப் பார்த்தா இனி நமக்கு அந்த பாக்கியமே இல்லாம போயிடும்போல.." என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி,..."சரி, நான், கடைக்குப்போயி சிகரெட் வாங்கிட்டு வந்துடறேன். நீ கதவைச் சத்திக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.

வாசலில் நின்ற அனுவைப் பார்த்ததும் சட்டென்று அவன் முகம் சங்கடத்தில் வெளிர, அதைக் கண்டுகொள்ளாமல், அப்போதுதான் வந்தவள்போல, கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.  "இந்திராவையும் கூப்பிடுங்க... எங்க வீட்டுக்காரருக்கு அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால நான் இன்னியோட வேலையை விட்டுட்டேன். கூடிய சீக்கிரம் அந்தப்பக்கமாவே வீடு பாத்திட்டுப் போயிரலாம்னு இருக்கோம்" என்றவள், "சிந்தூ, அருண்..." என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தாள். உள்ளிருந்து அவர்களை எழுப்பிக் கூட்டிக்கொண்டுவந்தாள் இந்திரா. அப்பாடா என்ற ஒரு விடுதலை அவள் முகத்தில் தெரிந்தது. "இன்னிக்கும் இங்கயே தூங்கிருச்சுங்களா? தேங்ஸ் இந்திரா..." என்று அவள் முகத்தைப் பார்த்து மெல்லச் சொன்னவள் பிள்ளைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அனு, சொல்வது உண்மையில்லை என்று உள்ளுக்குள் ஏதோ உணர்த்த, மறுகிய மனத்துடன் வெளியிறங்கி நடந்தான் சந்துரு.

சனி, 8 பிப்ரவரி, 2014

பாசக்காரி சிறுகதை



நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தானும் பஸ்ஸுக்குப் பின்னால் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, மூச்சிரைக்க வந்து உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி.

சவத்துப்பய புள்ளைக...ஒத்த ரூவாய்க்குக் கூடவா வழியில்லாமப் போச்சு என்று திட்டியபடி, இடுப்பிலிருந்த துணி மூட்டையைத் தரையில் இறக்கிவைத்துவிட்டு, தன் பரட்டைத் தலைமுடியைத் தூக்கி முடிந்துகொண்டாள்.

அதற்குள் அடுத்தபஸ் வர, அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட எத்தனிக்கையில், சாலையிலிருந்த கல்லில் கால்தடுக்கி, கையிலிருந்த அவளது அழுக்கு மூட்டை விழுந்து சிதறியது. உள்ளிருந்த பழைய பள்ளிக்கூட யூனிஃபார்ம், பச்சைக்கலர் தாவணி, அட்டை கிழிந்துபோன ஐந்தாறு புத்தகங்கள், சட்டையில் குத்துகிற பேட்ஜ், குட்டிக்குட்டியாய்ப் பென்சில்களென்று அத்தனையும் தார்ச்சாலையில் பரவிக்கிடக்க, அதையெல்லாம் வேகமாகப் பொறுக்கியெடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பஸ் போயிருந்தது.

ஐயையோ... என்றபடி, திரும்பி நடந்தாள் அவள். எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்தார் தபால்காரர் சாமிக்கண்ணு. "என்ன, சாமிக்கண்ணு மாமா, வேலைக்கிப் போறியளா?" என்றபடி தன் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்தாள். "வீட்ல அத்தையும் மக்களும் சௌக்கியமா?", என்று அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டு, ஒரு அஞ்சு ரூவா இருந்தாக் குடுங்க மாமா, காப்பித் தண்ணி வாங்கணும் என்று உரிமையுடன் கேட்க, "ஏய், அவனவன் இங்க கஞ்சிக்கே திண்டாடுறான், கிறுக்குக் கழுதைக்குக் காப்பி கேக்குதோ காப்பி" என்றபடி சைக்கிளை வேகமாய் மிதித்துக் கடந்துபோனார் அவர்.

எதிரில், கூட்டமாய் பஸ்சுக்குக் காந்திருந்தவர்களையும் ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு நலம் விசாரித்தபடிக்  காசு கேட்டும், காப்பிக்கான காசு தேறவில்லை அவளுக்கு. நகர்ந்துபோய், அங்கிருந்த கொடிமரத் தூணில் சரிந்து, காலை நீட்டி  உட்கார்ந்தாள். கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதை அவள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. வாய் மட்டும் எதையோ விடாமல் முணுமுணுத்தபடியிருக்க, கை அனிச்சையாய் அசைந்து அசைந்து போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக்கொண்டிருந்தது.

முத்துப்பேச்சிக்கும் அது தான் சொந்த ஊர். பத்தாவது படிக்கும்போது, அவளது மொத்தக் குடும்பமும் படகு விபத்தொன்றில் செத்துப்போக, ஒற்றையாய் உயிர்பிழைத்தவள் அவள். படித்த படிப்பும் பெற்றவர்களோடு போய்விட, ஒட்டுத்திண்ணையுடன்கூடிய ஓட்டுவீடு ஒன்றைத் தவிர வேறெதுவும் சொந்தமில்லாமல் போனது அவளுக்கு. வயிற்றுப் பாட்டுக்காக, பத்துப் பாத்திரம் விளக்கியும், பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்தும் பாடுபட்டவளை விட்டுவைக்கவில்லை விதி.

பள்ளத்துத் தெருவிலிருக்கிற தன் வீட்டுக்கு ஒருநாள், பனங்காட்டு வழியே நடந்துகொண்டிருந்தபோது, முகம்தெரியாத மனித மிருகங்கள் சில ஒன்றுசேர்ந்து அவளைச் சீரழித்துவிட, பித்துப்பிடித்தவளாகிப்போனாள் அவள்.

அதற்குப்பிறகு, இரவு பகலென்ற வித்தியாசங்களெல்லாம் அவளுக்கு மறந்துபோனது. ஆனால், உறவுமுறை சொல்லி அழைப்பது மட்டும் மறந்துபோகவில்லை. அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா என்று ஊர்க்காரர்கள் அத்தனை பேரையும் உறவுசொல்லிக் கூப்பிடுவாள். பதிலுக்கு அவளிடம் பாசமாய்ப் பேசவேண்டிய உறவுகளெல்லாம் முறைத்துக்கொண்டு போனாலும், மூச்சிரைக்கிறவரைக்கும் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் காசு கேட்பாள்.

அவள் துரத்தலுக்குப் பயப்படாதவர்கள்கூட, அவள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவதைக் கேட்க விருப்பமில்லாமல், சில்லறையைக் கொடுத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்து போவதுண்டு.

சுத்தமாய்க் கையில் காசு கிடைக்கவில்லையென்றால், முக்குக்கடைக் குமரேசன் கடையில் அக்கவுண்ட் உண்டு அவளுக்கு. கடை வாசலில்போய், "சித்தப்பா..." என்றபடி சிரித்துக்கொண்டு நிற்பாள். அவரும், கடை வாசலிலிருந்து அவளை  நகர்த்துகிற மும்முரத்தில், காப்பியையும் ரொட்டியையும் வேலையாளிடம் கொடுத்து, வேகமாய்க் கொடுத்தனுப்பச் சொல்லுவார். ரொட்டியும் காப்பியும் தவிர, தட்டு நிறையப் பலகாரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளமாட்டாள்.

பதிலாகச் சில சமயம், காசென்று கையில் என்ன கிடைத்தாலும், கொண்டுபோய் காப்பிக்கடைக் குமரேசனிடம்  நீட்டுவாள். அவரும் அதைப் பேசாமல் வாங்கிக்கொள்ளுவார். வாங்காமல் போனால் உறவுமுறையோடு வசவுமுறையையும் அவள் வாயிலிருந்து வந்து விழும்.

அவளைப் பற்றி, ஊருக்குள் யாருக்கும்  அக்கறையில்லையென்றாலும், அவள் எப்போதாவது சோறு தின்பாளா என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் காப்பிக் கடைக் குமரேசன் மனசில் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

நாலு நாளாய் அடைமழையடித்து அன்றைக்குத்தான் வானம் வெளிச்சத்தைப் பார்த்திருந்தது. மழைநேரமென்பதால் காப்பி, டீ வியாபாரத்துக்குக் குறைவில்லாமல்தான் இருந்தது. சட்டென்றுதான் முத்துப்பேச்சியின்  ஞாபகம் வந்தது குமரேசனுக்கு.  ஐந்தாறு நாளாய் அவள் கடைப்பக்கம் வரவில்லையென்று தோன்றவே, கடைப் பையனிடம் விசாரித்தார். அவனும் பார்க்கவில்லையென்று பதில் சொன்னான்.

சரக்கெடுக்க சந்தைப்பக்கம் போகையில், பஸ் ஸ்டாண்ட் திண்ணைகளில் தேடினார். அங்கும் அவள் தென்படவில்லை.  பள்ளத்துத் தெரு வீடும் பஸ்டாண்டுமே கதியென்று இருப்பவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தபடியிருக்க, அவரையுமறியாமல் அவரது சைக்கிள் அவளது ஓட்டு வீடிருந்த தெருப்பக்கம் போனது.

இறங்கிப்போய்ப் பார்க்கத் தோன்றாமல் ஏதோ உணர்வு பின்னுக்கு இழுக்க, ஐந்தாறு வீடு தள்ளியிருந்த  தனலச்சுமியிடம் விசாரித்தார். "தெரியலண்ணே, முந்தாநாளு ராத்திரி பெய்த மழையில அவ இருந்த வீடு சரிஞ்சுபோச்சு. அவ இப்ப, எந்த வீட்டுத் திண்ணையில ஏச்சுபேச்சு வாங்கிக்கிட்டுக் கெடக்காளோ என்றபடி, காலிக்குடத்தை எடுத்தபடி வெளிக்கிளம்பினாள் தனலச்சுமி.

எதற்கும் பார்ப்போமே என்று, இடிந்துகிடந்த அவளது ஓட்டு வீட்டுப்பக்கம் போனார் குமரேசன். திண்ணையில் அவளுடைய அழுக்குத்துணி மூட்டை அடைமழையில் நனைந்து கிடந்தது. உள்ளே இறங்கிச் சரிந்திருந்த ஓட்டுக் குவியலுக்குள் எட்டிப்பார்த்தார். ஒன்றும் தென்படவில்லை அவருக்கு. திரும்பி நாலைந்து அடிவைத்தபோது, "காப்பி குடு  சித்தப்பா...காலெல்லாம் வலிக்குது..." என்று ஈனஸ்வரத்தில் கேட்டது அவளது குரல் .

உடம்பெல்லாம் அதிரத் திரும்பினார் அவர். ஓட்டுக் குவியலுக்குள் மறுபடியும் அவளைத் தேடியது அவரது பார்வை. உடைந்த வீட்டின் ஒருபக்கத்து மண்சுவர் அவள் இடுப்புக்குக் கீழே விழுந்து நசுக்கியிருக்க, அங்கே, ஓடுகளுக்கிடையே ஒடுங்கிக்கிடந்தாள் அவள். அழுத்துகிற சுவருக்கும் அடைமழைக்கும் நடுவே சிக்கி உரக்கக் குரல்கொடுக்கக்கூடமுடியாமல் துவண்டுபோயிருந்தாள் முத்துப்பேச்சி. எப்போதும்போல, அவளது ஒற்றைக் கை மட்டும் ஓடுகளுக்கு வெளியே நீண்டபடி, தன்னிச்சையாக எதையோ யாசித்தபடி அசைந்துகொண்டிருந்தது.



புதன், 5 பிப்ரவரி, 2014

மண்ணும் மனசும்


மத்தியானம் போச்சுது கரண்டு, இன்னமும் வரல... பெருசா ஏதாவது பிரச்சனையாயிருக்குமோ? வந்ததும் சாப்பிடலாம்னு பாத்தா, இன்னும் வரக்காணமே... மனசிலோடிய கேள்விகளோடு, வாசல்நடையில் தலையைவச்சுப் படுத்திச்சு அன்னம்மா பாட்டி.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு மதியம் பொங்கின சோறும்,மீன் குழம்பும் பாத்திரத்தில் இருந்தது. சின்னவயசில, முள்ளையெல்லாம் எடுத்துட்டு, மீனைப்போட்டு பிசைஞ்சு குடுத்தா அள்ளிஅள்ளி ஆசையாச் சாப்பிடுவான் பாட்டியின் மகன் குமரேசன். இப்ப கடல்கடந்து தள்ளிப்போய் இருக்கிறதால தன் கையால மகனுக்கு ஆசையாச் சமைச்சுப்போடக்கூடமுடியல, என்று நினைக்கையிலேயே கண்ணீர் வந்திச்சு பாட்டிக்கு. குமரேசன், சோமசுந்தரம் தாத்தாவுக்கும் அன்னம்மா பாட்டிக்கும் பிறந்த ஒரே மகன். பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரமெல்லாம் மகனைப் பக்கத்திலேயே வச்சிருக்கும் பாட்டி.

வெளியே ஆள்நடமாட்டமே தெரியல.தெருவில் நாயெல்லாம் சேர்ந்து, உச்சஸ்தாயியில் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க,  "நாயோட கண்ணுக்குத்தான் பேய், பிசாசெல்லாம் தெரியுமாம்ன்னு, யாரோ கூடப்படிக்கிற பையன் சொன்னதைக் கேட்டுட்டு, இரவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டாலே ஓடிவந்து அம்மாவின் முந்தானைச் சேலைக்குள் புதைந்துகொள்ளும் குமரேசனின் ஞாபகம் வந்தது பாட்டிக்கு. மகனை தைரியப்படுத்த, "காக்கக் காக்க கனகவேல் காக்க..." ன்னு சொல்லிக்கொடுத்தது நினைவுக்குவர, தானும் அந்த வரிகளை மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டது. வயசானாலும்கூட, இந்த பயம்மட்டும் போகமாட்டேங்குது என்று நினைக்கையில் தனக்குத் தானே சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

சோமசுந்தரம் தாத்தா உசுரோட இருந்தப்போ, கருக்கல்ல, கொல்லையில கட்டின மாடு சத்தம் போட்டாக்கூட, "கொஞ்சம் எந்திரிச்சு என்னோட வாங்களேன்..." என்று துணைக்கு அவரை எழுப்பும் பாட்டி.  இப்போ தாத்தாவும் இல்லை, தான் பெற்ற மகனும் கூட இல்லை. ஆனாலும் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கையையும், மகனின் இளவயது நினைவுளையும் சுமந்திருக்கும் இந்த வீட்டையும் ஊரையும் விட்டுப்போக விருப்பமில்லாமல், பயத்தோடு தனிமையையும் தாங்கிக் கிடக்குது பாட்டி.

முன்னெல்லாம், மழைவிட்ட ராத்திரி நேரங்களில், சில்வண்டுச் சத்தமும், மழைத்தவளைகளின் முணுமுணுப்பும் சேர, முற்றத்தில் காடாவிளக்கை வச்சுக்கிட்டு, பாட்டியின் மகன் குமரேசனும், அவன் வயசுப் பிள்ளைகளும், வட்டமா இருந்து பாட்டிகிட்ட கதைகேட்டதும், கொலகொலயா முந்திரிக்கா விளையாடியதும் நினைவுக்கு வர, கடல்கடந்து வசிக்கிற மகனையும் மருமகளையும், பேரன் பேத்தியையும் நினைத்துக் கண்ணீர் பெருகியது அன்னம்மா பாட்டிக்கு.

வருஷத்துக்குப் பதினஞ்சு நாள், வசந்தம்போல் வந்து போவாங்க பாட்டியோட பேரப்பிள்ளைங்க. அதுவும் அங்கே இங்கேன்னு சுத்திப்பார்க்கிறதிலயும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வர்றதிலயேயும் முக்கால்வாசி கழிஞ்சுபோகும். பாட்டியோட வீட்டுல அஞ்சாறு நாள் இருக்கிறதுக்குள்ள "பொழுதேபோகல பாட்டி..." என்று அலுத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அப்புறம் மறுபடியும் அடுத்த வருஷம். ஒவ்வொரு தடவையும் "நீ எங்களோடு வந்துடு பாட்டி''ன்னு பேரப்பிள்பிள்ளைகள் எவ்வளவோ கூப்பிட்டாலும் மண்ணையும் மனுஷங்களையும் விட்டுட்டுப்போக மனசுதான் ஒத்துக்கல பாட்டிக்கு.

நினைப்புகளில் முங்கிப்போக, நேரம் போனதே தெரியல. கழுத்துப்பக்கமெல்லாம் வியர்வையில் கசகசக்க, முந்தானையால் துடைச்சிக்கிட்டு, மணியைப் பார்க்க எழுந்துபோச்சு அன்னம்மா பாட்டி.

வாசல் பக்கம் பேச்சுச்சத்தம் கேட்டுது. இன்னிக்கி ராத்திரிக்குக் கரண்டு வராதாம். மழையில மரம்விழுந்து வயரு அறுந்துபோச்சாம்...பக்கத்துவீட்டு சிவந்தியின் புருஷன் சைக்கிளை நிறுத்திவிட்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மதியம் போனது,  இனிமே இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுபோச்சு. எப்பவும், ஒத்தையாப் படுக்கிறதுக்கு அந்த விடி பல்பைப் போட்டுட்டுப் படுத்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும் பாட்டிக்கு. விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் மாட்டிய  தாத்தாவின் படத்தைப் பாத்துகிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். மெழுகுவத்தியைப் பொருத்திவச்சுட்டுப் படுக்கவும் பயமாயிருக்கவே, சிம்னி விளக்கில் எண்ணெய ஊத்தி சின்னதா எரியவச்சுட்டு, கையிலெடுத்த மெழுகுவத்தியைக்கொண்டு கடிகாரத்தில் மணியைப் பார்த்தது பாட்டி.

மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. வயிறு பசிச்சுது, ஆனா, சாப்பிட மனம்வரல. ஆறிப்போன சோத்துல, அரைச்செம்புத்தண்ணியை ஊத்திட்டு, மீதித்தண்ணியை 'மடக் மடக்'குன்னு குடிச்சிட்டு, தனிமையோட வேதனையைத் தண்ணியாலயா கழுவமுடியும்? என்று தனக்குத்தானே நினைத்தபடி பெருமூச்சுவிட்டுது பாட்டி.

தூரத்தில் எங்கோ கேட்ட கோட்டானின் சத்தத்தில் உடல் நடுங்கியது பாட்டிக்கு. விசிறியை வீசி மெழுகுவர்த்தியை அணைச்சிட்டு, விட்ட இடத்தைத் தொட்ட நினைவுகளோடு கட்டிலில் படுத்த பாட்டி,  முட்டிவந்த கண்ணீரை முந்தானையில் துடைச்சிட்டு, "எங்கயிருந்தாலும் என் புள்ளைக நல்லாருக்கட்டும் கடவுளே..."என்றபடி கண்களை இறுகமூடிக்கிருச்சு.

சனி, 1 பிப்ரவரி, 2014

கூட்டாஞ்சோறும் குழந்தைப் பருவமும்




"ஏய், எத்தனை நாளைக்கிதான் ஒளிஞ்சு புடிச்சு, ஏழாங்கல்லு, பல்லாங்குழி, தாயம்னு விளையாடுறது? வேற ஏதாச்சும் வித்தியாசமா செய்யலாம்ப்பா... நாளைக்கு நாமெல்லாஞ் சேர்ந்து கூட்டாஞ்சோறாக்கலாமா?" சலிப்பில் வாடியிருந்த முகங்களில் சந்தோஷ மழை தெளிக்கும் மேகம்போலத் தன் கருத்தைச்சொன்னாள் செல்வி.

பட்டென்று அந்த இடத்தை ஒரு உற்சாகம் சூழ்ந்துகொண்டது. "ஏய், யாராரு என்னென்ன கொண்டுவரணும்னு இப்பவே பேசிக்கிட்டாத்தான் நாளைக்குள்ள எல்லாத்தையும் சேக்கமுடியும். ஏல செல்வி, நான் காப்படி அரிசி" என்று ஆரம்பித்து வைத்தாள் கன்னியம்மா.

"காப்படியரிசி யாருக்குப்போதும்? அரப்படியாச்சும் வேணும். அதனால நான் காப்படி எடுத்துட்டு வாரேன்" என்றாள் குமுதா.

"எங்கம்மா பருப்பு டப்பாவ எங்க வச்சிருக்குன்னு எனக்குத் தெரியும். அதனால, நான் பருப்பு" என்றாள் கோமதி. "உப்பு, புளி,மொளகா என்னோட பங்கு" என்றாள் மாலதி.

ஆமா, கூட்டாஞ்சோறுக்கு வேறென்ன வேணும்? என்று அப்பாவியாய் லச்சுமி கேக்க, அத்தனை சாமானையும் எதுல போட்டுப் பொங்குறது? அதுக்கு சட்டிப்பானை வேணும் என்று சண்முகவடிவு சொல்ல, "அப்ப சட்டியும் பானையும் நாங்கொண்டுவாரேன்" என்ற லச்சுமியிடம், அப்ப கரண்டியென்ன உங்க பாட்டி கொண்டுவருவாகளா? அதையும் நீயே எடுத்துட்டு வந்துரு என்றாள் வடிவு. 'களுக்'கென்று சிரித்தபடியே சரியென்று தலையாட்டினாள் லச்சுமி.

அதற்குள், பொம்பிளப்பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறாக்கப்போகிற விஷயம் பயலுகளுக்கும் தெரிந்துபோக, "ஏய், எங்களையுஞ் சேத்துக்கோங்கப்பா..." என்று ரெண்டொருத்தர் வந்து நிக்க, "அப்ப சரி. ஏலேய் ஆறுமுகம், நீ உங்க தோட்டத்லேருந்து வெறகு எடுத்துட்டு வந்துரு. மாணிக்கம் நீ எல்லாருஞ் சாப்டுறதுக்கு எலையறுத்துட்டு வந்துரு" என்றாள் அவைத் தலைவியாயிருந்து ஆரம்பித்துவைத்த செல்வி.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டிருந்த எட்வின், "எப்பவுமே இந்தப் பொம்புளப்புள்ளைகளுக்கு புத்தி கம்மிதான்" என்று சொல்ல "ஏலேய்ய்ய்ய்ய்...." என்று மொத்தப் பிள்ளைகள் கூட்டமும் எகிற, "பின்ன என்ன? காய்கறியே இல்லாம கூட்டாஞ்சோறாக்கப் போறீகளா?" என்று சிரித்தான் எட்வின். "அட ஆமால்ல..."என்று அசடு வழிந்த பிள்ளைகளிடம், "சரி, என்னோட பங்குக்கு நான் கத்திரிக்காயும், தக்காளியும் கொண்டுவாரேன்" என்றான் எட்வின்.

"ஏல எட்வினு, நீ புத்திசாலிதான்..." என்று சிரித்த குமார், "நா உருளக்கிழங்கு கொண்டாறேன். வேறெதாச்சும் வேணுமாப்பா?" என்றான். "கூட ரெண்டு வெங்காயமும் பச்சமொளகாயும் கொண்டாந்துரு" என்று லச்சுமி சொல்ல சரியென்று தலையாட்டினான் குமார்.

"முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்களே..." என்று நக்கலாகச் சிரித்த பாண்டியிடம் "என்னடா அது?" என்று அப்பாவியாய்க் கேட்டாள் வடிவு. "காயெல்லாம் வெட்டுறதுக்குக் கத்திய விட்டுட்டீங்களே..." என்று பாண்டி சிரிக்க, "அதெல்லாம் ஒன்ன மாதிரி ரவுடிப் பையனுக்குத்தான் தோணும்" என்று குமுதா அவனை வாற, "சரிசரி...நீ வரும்போது சின்னதா ஒரு கத்தியெடுத்துட்டுவா...மறந்தாப்புல அருவாளத் தூக்கிட்டு வந்துறாத..."என்று அவனைப் பார்த்து சிரித்தாள் செல்வி.

அடுத்தநாள், அடுப்புக்குக் கல்லைக் கூட்டி, நெருப்புப் பெட்டி கொண்டுவர, ஆரம்பமானது கூட்டாஞ்சோறுப் படலம். "ஏய், யாருமே தண்ணியெடுத்துட்டு வரலேல்ல? ஏலேய், நீங்கபோயி பம்புசெட்டுல தண்ணி புடிச்சிட்டுவாங்க" என்று செல்வி சொல்ல, "ஏய், அதெல்லாம் பொம்புளப்புள்ளைகளோட வேல..." என்று மறுதலித்தான் மாணிக்கம்.

"ஏலேய், இங்க பார்டா, வெளையாட்டுன்னு வந்துட்டா ஆம்பள பொம்பளன்னு வித்தியாசம் பாக்கக்கூடாது ஆமா..." என்று வடிவு சொல்ல, "சரி மொதல்லயே இப்டி பக்குவமாச் சொல்லியிருக்கலாம்ல..." என்று பானையை வாங்கிக்கொண்டு புறப்பட்ட பயல்களிடம், "பானை நெறய தண்ணி வேணும், எங்கியும் போட்டு ஒடைக்காம பத்திரமா கொண்டுவாங்கடா... அப்றம், எங்க அம்மா வையும்" என்று எச்சரித்தாள் லச்சுமி.

"சரி தாயி, உன் பானைக்கு நான் காவல்" என்று பாண்டி சொல்ல, பம்புசெட்டுக்குப் புறப்பட்டார்கள் ஆண்பிள்ளைகள். பானை நிறைய வந்த தண்ணீரில் பருப்பையும் அரிசியையும் கொட்டி, ஓலைக்குமேல் உட்காந்து ஒவ்வொரு காயாக நறுக்கிப்போட்டாள் கன்னியம்மா. அரிசியும் பருப்பும் கொதிக்கையில், அத்தனை பேருஞ் சேர்ந்து ஆரவாரம் செய்ய, உப்பு, புளியைக் கரைத்து ஊற்றிய லட்சுமிக்கு ஒரே சந்தோஷம், நாமளும் சமையல் செய்றோம்ல்ல என்று.

"ஏய், வெந்துருச்சான்னு பாருப்பா...வாசத்தைப் பாக்கும்போது, இப்பவே பசிக்குது" என்றான் பாண்டி.  "பொறுடா, சாப்பாட்டுராமா, உங்க வீட்டுக் கத்திய வச்சு எலைய நறுக்கி வையி" என்று அவனுக்கொரு வேலை கொடுத்தாள் செல்வி.

பத்து நிமிஷத்தில் கூட்டாஞ்சோறு தயாராயிருச்சு. மத்தியில் உட்கார்ந்தபடி எல்லாருக்கும் எடுத்தெடுத்து இலையில் வைத்தாள் வடிவு. உப்பிருக்கா உரைப்பிருக்கா என்று உணரத் தோன்றாமல், சிரிப்பும் பேச்சுமாக விறுவிறுவென்று உள்ளே போனது சாப்பாடு. சோற்றுப் பாத்திரம் காலியாக, அங்கே அத்தனை முகங்களிலும் நிரம்பி வழிந்தது பொய்க்கலப்பில்லாத உண்மையான உற்சாகம்.

                                                                *********

பின்குறிப்பு: பிள்ளைப்பருவத்தில் விளையாடிய விளையாட்டுக்களும், இது போன்ற இனிய நிகழ்வுகளும் என்றைக்கும் மனதில் இளமையாய் நிலைத்திருக்கக்கூடியவை. இதையெல்லாம் இழந்து,  கணினியும், கைபேசியும், தொலைக்காட்சியுமே கதியென்று வளருகிற இந்தக் காலத்துக் குழந்தைகளை நினைக்கையில், மனதில் வருத்தம்தான் மேலிடுகிறது.