ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஒன்றொடு இன்னொன்று!

வசு, இந்த ஒருவிஷயத்தைமட்டும் எனக்காகச் செய்யிம்மா...சஷ்டியில இருந்தா அகப்பையில வரும்னு அந்தக் காலத்துலயே சொல்லிவச்சிருக்காங்க.அதனால, சஷ்டியில, ஒரே ஒருநாள்மட்டும் விரதமா இருந்து, நாம திருச்செந்தூருக்குப் போயிட்டுவருவோம். என்னோட நம்பிக்கைக்காக இதுக்குமட்டும் நீ சம்மதிச்சா, நிச்சயம் அந்த முருகன் கருணையால நம்ம வீட்லயும் குழந்தைச்சத்தம் கேக்கும்...திரும்பத்திரும்பச்சொன்ன மாமியாரின் வார்த்தைகள் இளகவைத்தன வசுமதியின் பிடிவாதத்தை.

சரி அத்தை...உங்க விருப்பத்துக்காக நான் வரேன்.சொல்லாம போனோம்னா திட்டுவாங்க...அதனால, சென்னைக்குப் போயிருக்கிற உங்க மகனுக்கு ஒரு ஃபோன் பண்ணிச்சொல்லிட்டு, நாம புறப்படுவோம்னு ஒருவழியா ஒத்துக்கிட்டா வசு. மூன்றுமுறை அழைத்துப்பார்த்தாயிற்று, சரவணனின் கைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அம்மாடி, நீ எங்கூடத்தானே வர்றே, அவன் ஒண்ணும் சொல்லமாட்டான். போற வழியில திரும்பவும் ஃபோன் பண்ணிப்பார்த்து, விஷயத்தை அவங்கிட்ட சொல்லிக்கலாம். நீ குளிச்சிட்டு, வெறும்வயிறாப் புறப்படு...கோயிலுக்குப்போயி, சாமி தரிசனம் பண்ணிட்டு, நாம சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னபடி வேகவேகமாக் குளிக்கப்புறப்பட்டாள் வசுமதியின் மாமியார். கண்ணைமூடுவதற்குள் எப்படியாவது ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்துவிடவேண்டுமென்ற பரிதவிப்பு அவளுக்கு.

வசுமதிக்கும் சரவணனுக்கும் கல்யாணமாகி மூன்று வருஷம்தான் ஆகியிருந்தது. சரவணனுக்கு வசுமதி தூரத்து சொந்தம்தான். கல்யாணமானபின்னாலும்,வியாபார விஷயமாக மாதத்தில் பாதிநாள் வெளியூருக்குப் போய்விடுவான் சரவணன். வசுமதியும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததால், அவளுக்கும் சரவணனின் தொழில்முறைப் பயணங்கள் அத்தனை பாதிப்பைக்கொடுத்ததில்லை.

அன்றைக்கும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் எப்பவும்போல கூட்டமாய்த்தான் இருந்தது. வரிசையாக நான்கு பஸ்போனபிறகு, ஐந்தாவது பஸ்சில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. திருச்செந்தூர் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தரிசனத்துக்கான வரிசை, வாசலைத் தாண்டி வெளியேயும் நீண்டிருந்தது.டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, வரிசையில் நின்றார்கள் வசுமதியும் அவள் மாமியாரும்.

வரிசை நகராமலே இருந்தது. உள்ளே சாமிக்கு அலங்காரம் ஆயிட்டிருக்கு. திரைபோட்டிருக்காங்க அதனாலதான் நகரலை... என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். வாசல் முகப்பில், முருகன் வள்ளி தெய்வானையோடும், கூடவே மாலையோடு நிற்கும் யானைகளோடும் காட்சியளித்தார். தரிசனத்துக்காக வரிசையில் நின்றாலும், வசுமதியின் மனசு பள்ளிக்கூடத்தில்தான் இருந்தது. இப்ப கடைசி பீரியட் நடந்துகொண்டிருக்கும் என்று தன் வாட்சைப் பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் வசுமதி.

அப்போது, 'வீலெ'ன்று ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. கோயில்வாசலின் வலதுபக்கம், காதுகுத்துமிடத்தில், மொட்டைபோட்ட ஒரு சின்னக் குழந்தைக்குக் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் ஒன்றிரண்டுபேர் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த வசுமதியின் மாமியார்,"நான் நினைச்சமாதிரியே ஒரு வாரிசைக் கொடுத்துட்டா, குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல, இங்கவந்து பிள்ளைக்கு மொட்டையெடுத்துக் காதுகுத்தி வாளிபோட்டு விடுறேன் முருகா" என்று வசுமதிக்குக் கேட்கிறாற்போல, வாய்விட்டு வேண்டிக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா, வசுமதியின் மாமியார்.

காதுகுத்திய குழந்தையை ஒவ்வொருத்தராய் மாற்றி, அழுகையை நிறுத்தப்பார்த்தும் முடியாமல்போக, இந்தா,அப்பா பாரு, அப்பா பாரு... என்று அதன் அப்பாவிடம்கொண்டு காட்டினாள் குழந்தையின் அம்மா. திரும்பி உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையின் அப்பா, எழுந்து, குழந்தையை வாங்கினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்த நிமிஷத்தில், ஆடிப்போனாள் வசுமதி. அதிர்ச்சியில் தன் மாமியாரின் தோளைத்தொட்டு, அங்கே கையை நீட்டிக்காட்டினாள் அவள்.

கைகாட்டியதிசையில், கையில் குழந்தையுடன் தன் மகன் சரவணனைப் பார்த்ததும், கணநேரத்தில் விஷயத்தை கிரகித்துக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா. ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டுவர,வரிசையிலிருந்து வெளியேறி அவனருகில் சென்றவள், "அடப்பாவி, நல்லாருப்பியாடா நீ...பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் தெரியாம, இங்கே இன்னொரு வாழ்க்கையா நடத்திக்கிட்டிருக்க? இந்தப் பொண்ணோட பாவம், உன்னைச் சும்மாவாடா விடும்?

வேலைவிஷயமாப் போறேன் போறேன்னு சொல்லி இப்படி வப்பாட்டி வச்சுக்கிட்டு நம்ம வம்சத்துப் பேரையே கெடுத்திட்டியேடா பாவி...என்று வாய்விட்டு அரற்றினாள் முத்துலட்சுமி. சுற்றியிருந்தவர்கள் வசுமதியைப் பரிதாபமாகப் பார்க்க, அதற்குள், அப்பா என்றபடி வந்து, இன்னொரு ஐந்துவயசு மதிக்கத்தக்க குழந்தையொன்று, சரவணனின் கையைப்பிடித்தபடி,சத்தம்போட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை ஏறிட்டது.

அஞ்சு வயசுல அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்குதா? அப்போ, நாந்தான் அவருக்கு ரெண்டாம்தாரமா? ஐயோ, இப்படி ஏமாந்திருக்கேனே... என்று வசுமதிக்குள் உள்ளூர எழுந்தது ஓவென்ற ஒரு அழுகை. கூடவே,பசித்த வயிறும் வேதனையும் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டுவர, சரிந்துவிழுந்தாள் வசுமதி. அவளை,வரிசையிலிருந்து வெளியே கூட்டிப்போய் உட்காரவைத்து,முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் ஒரு பெண்மணி.

"வருத்தப்படாத தாயி, தன்னோட சபலத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும், சாமிக்கே ரெண்டு சம்சாரம் கட்டிவச்சுப்பார்க்கிற சமூகம் இது...இதையெல்லாம் எதிர்கொண்டு நாமளும் இந்த பூமியில தைரியமா வாழ்ந்துதான் தீரணும்...மனசைத் தளரவிடாதே" என்றபடி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அந்த அம்மா.

மகனிடம் கத்திப் புலம்பிக்கொண்டிருக்கையில், மயங்கிவிழுந்த வசுமதியைப்பார்த்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் முத்துலட்சுமியம்மா.ஒரு பேரப்பிள்ளையாவது வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தபோது, ஒன்றுக்கு ரெண்டு பேரக்குழந்தைகளைக் கண்முன்னால் பார்த்தபின்னாலும், அதைக் கொண்டாடாமல், தனக்காகக் கண்ணீர்விட்டு அழுத மாமியாரை நினைக்கையில் மனசு இளகியது வசுமதிக்கு.

அப்போது, என்னை ஏமாத்திட்டு, இங்கே இன்னொருத்தியைக் கட்டிவச்சிருக்கியா? பெத்தவுங்களும் இல்ல, உறவுன்னும் யாரும் பெருசா இல்லேன்னு சொல்லி என்னையும் பிள்ளைகளையும் ஏமாத்திட்டு, இத்தனை கள்ளத்தனம் பண்ணியிருக்கியே, நீயெல்லாம் மனுஷனா? உன்னோட சுகத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும் என்ன வேணும்னாலும் செய்வியா நீ? அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னாலமுடியாது என்றபடி, பிள்ளைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு, தன் தாய் தந்தையுடன் நடந்தாள் சரவணனின் முதல் மனைவி.

இருதலைக்கொள்ளி எறும்பாகத் திகைத்துநின்ற சரவணனைப் பார்த்தாள் வசுமதி.பெண்களென்றால் கிள்ளுக்கீரைகளென்று நினைத்த அவனுக்குத் தனிமையும் நிராகரிப்பும்தான்தான் சரியான தண்டனை என்று எண்ணியது அவள் மனது. இதழ்களில், ஏளனம் நெளிய,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். கால்கள் நடுங்கினாலும்,மனசை உறுதியாக்கிக்கொண்டு நிமிர்ந்துநின்றாள். அழுதுகொண்டிருந்த தன் மாமியாரைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கோயிலைவிட்டு வெளியே நடந்தாள்.

சொந்தக்காலில் நின்று அவனுக்கு முன்னால் ஜெயித்துக்காட்டவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது அவளுக்குள். இனிமேல் தான் போகவேண்டிய பாதையை மனதில் தீர்மானித்துக்கொண்டவளாய், திடமாக்கிக்கொண்ட மனதோடும்,தெளிவுடனும் திரும்பிநடந்தாள் வசுமதி. பின்னால், ஆர்ப்பரித்த அலைக்கரங்களுடன் அவளது முடிவை ஆமோதித்தது கடல். 

*******  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக