புதன், 28 செப்டம்பர், 2011

இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???

இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது, பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.

அதிகாலை ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச் செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.

அப்பா வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து, எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும் எட்டிப்பார்த்திருக்கிறான்.

எப்படி ஏறினானென்றும் தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும் சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.

அங்கே, அம்மாவையும் முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்  எட்டாவது மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே ஓடியிருக்கிறாள்.

செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்  தன் வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.

அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை. 

பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????
இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.

புதன், 15 ஜூன், 2011

சொல்லும் கொல்லும்!

படம்: "இணையத்திலிருந்து"


மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி.

"இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை.

அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து  சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும்  பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா கத்த ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள் மகள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது.

இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது.

சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை.

பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி.

மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை.  "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர்.

"நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட,  வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி.

"அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள்.
 'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி.

அதற்குள்,  "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா.

என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை  பரமசிவம்.

 அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம்.

சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை.

ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது.

சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று.

நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு  'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி.

ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை  ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள்.

ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை.

அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.

"அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப்  பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கடைசி சொட்டுக் கண்ணீர்.


வியாழன், 10 மார்ச், 2011

கண்ணோட்டமும் களிமண் உருண்டைகளும்!


கடற்கரையோரமாய்க் காலார நடந்துகொண்டிருந்தான் அந்த மனிதன். நீண்டதூரம் நடந்துசென்றபிறகு, கடலோரத்தில் சில குகைகள் தென்பட்டன அவனுக்கு. அவற்றுள் நுழைந்துபார்த்தான் அவன். அங்கிருந்த குகைகளில் ஒன்றில் ஒரு சிறிய சாக்குப்பை இருந்தது. அதற்குள் நிறையக் களிமண் உருண்டைகள் இருந்தது. யாரோ உருட்டிக் காயவைத்த விளையாட்டு உருண்டைகளைப்போல் தோன்றியது அவனுக்கு.

அந்தச் சாக்குப் பையை கையிலெடுத்துக்கொண்ட அவன் திரும்புகிற வழியில் ஒவ்வொரு உருண்டையாய்க் கடலுக்குள் எறிந்துகொண்டே வந்தான். முக்கால்வாசி உருண்டைகளைக் கடலுக்குள் வீசியபின், எதேச்சையாக அவன் வீசிய ஒரு களிமண் உருண்டை பாறையொன்றில் பட்டு உடைந்தது. உடைந்த களிமண் உருண்டைக்குள்ளிருந்து கண்ணைப்பறிக்கிற வைரக்கல் ஒன்று வெளிப்பட்டது.

'ஆஹா' என வியந்த அவன் மிச்சமிருந்த ஒருசில உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அத்தனைக்குள்ளும் வைரக்கற்கள் இருந்தன. 'ஐயோ மோசம் போனேனே, விலைமதிப்பில்லாத வைரங்கள் பலவற்றை அதன் மதிப்புத்தெரியாமல் கடலில் வீசியெறிந்துவிட்டேனே' என்று வருந்தியபடியே கடல்கரையில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தானாம் அவன்.

மனிதர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி விளக்குவதற்காகச் சொல்லப்படுகிற கதையிது. அநேக சமயங்களில் மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கிறோம். புறத்தோற்றத்தைப் பார்த்துப் பலரை உதாசீனப்படுத்திவிடுகிறோம். புறக்காரணிகளான, பணம், பதவி,அழகு,அந்தஸ்து இவற்றைமட்டும் கவனித்துவிட்டு, எத்தனையோ உறவுகளையும் நட்புகளையும் அலட்சியமாய்க் கடந்துபோய்விடுகிறோம். அவர்களுக்குள்ளும் அளப்பரிய அன்பும் நட்பும், நமக்குப் பயன்படக்கூடிய எத்தனையோ நல்லவிஷயங்களும் இருக்குமென்பதை அறிந்துகொள்ளாமலே போய்விடுகிறோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உயர்ந்த குணம் இருக்கும். மேல்தோற்றத்தில் அது கொஞ்சம் மறைந்துபோயிருக்கலாம். ஆனால், அதைக் கண்டுணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது என்றென்றைக்கும் இன்பத்தைக் கொடுக்கும்.

இது,மின்னஞ்சலில் வந்த கதை. இன்னும் சிலருக்கு உதவுமென்ற நம்பிக்கையோடு இங்கே...

புதன், 9 மார்ச், 2011

அடிக்கடி வீட்டில் பிரச்சனையா?

வசிக்கிற வீடுகளை அழகுபடுத்தவேண்டுமென்கிற ஆவல் மக்களனைவருக்கும் பொதுவான ஒன்று.

பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.


உத்தம லக்ஷணங்களை உடைய பெண்கள் பார்க்க-மாமரங்களும்; நகைக்க-முல்லையும்; பாட-குரக்கத்தியும்; ஆட-புன்னையும்; உதைக்க-அசோகமும்; அணைக்க-மருதோன்றியும்; நட்புற-பாலையும்; நிந்திக்க-பாதிரியும்; சுவைக்க(முத்தமிட)-மகிழமரமும்; நிழல்பட-சண்பகமும் தளிர்த்து, அரும்பிப் பூக்கும்.

இதனை வில்லிபுத்தூராரும்:
ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.
“பொன் கொண்டு இழைத்த” என்று கம்பரால் புகழப்பட்ட இலங்கையில், இராவணன் ஏன் சீதையை அசோகவனத்தில் சிறையிலிட்டான்?

ஏடவிழ் மகிழ் சுவைக்க
வேழிற்பாலை நண்புகூட்ட
பாடல நிந்திக்க
தேம்படி முல்லை நகைக்க
புன்னை ஆட
நீள்குரா அணைக்க
அசோகு உதைத்திட
வாசந்தி பாட மா பார்க்க
வார் சண்பகம் நிழற்பட
தளிர்க்கும்... என்கிறார்.

"அசோகம்' என்பதற்கு சோகத்தை அகற்றுவது என்று பொருளாகும். சோகம் நம்மிடம் எப்பொழுது குடிகொள்ளும்? மனம் பாதித்த நிலையில், மன உளைச்ச லுக்கு உட்பட்டு, உடல் நலிவடைந்து, ஆன்மா அவதிக்கு உள்ளாகும் பொழுது சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது.

இராவணன் தீவிர சிவபக்தன்தான். அவன் கண்மூடி தியானித்து மனமுருக வேண்டி னாலே எம்பெருமான் சிவன் நொடிப் பொழுதில் அவனருகில் தோன்றி, அவனுக்கு அருளாசியை வழங்கும் தன்மையைப் பெற்றவன். அப்பேர்ப்பட்ட இராவணன் மனம் பேதலித்து, சஞ்சலமடைந்து, பகவான் ஸ்ரீராம பிரானின் நாயகியாம் சீதாதேவியின்மீது ஆசை கொண்டு அவளைச் சிறையெடுத்துச் சென்றான்.

இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி சிறை வைக்கப்பட்ட இடம், அடர்ந்து வளர்ந்த அசோக வனமாகும். மணாளனைப் பிரிந்த சீதாபிராட்டியார் சோகமே உருவாகி, எப்பொழுதும் ஸ்ரீராம பிரானையே வேண்டிக் கொண்டிருந்தாள். எப்படியும் எம்பெருமான் வெகுசீக்கிரம் வந்து என்னை மீட்டெடுப்பார் என்று நம்பினாள். மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்த சீதாதேவிக்கு, அந்த வனத்தில் இருந்த அசோக மரங்களே சோகத்தை விரட்ட தைரியம் அளித்தன.

அப்பேர்ப்பட்ட அசோக மரம், ஸ்ரீராம பிரான்- சீதாதேவியின் அருட்பார்வைக்கு உட்பட்டு, இன்று அகிலமெல்லாம் கன்னியரின் மனக்குறையைப் போக்கும் தேவ மருந்தாய் பயன்பட்டு வருகிறது.

மகாவீரர் ஞானம் பெற்றதும், புத்தபிரான் அவதரித்ததும் அசோக மரத்தின் அடியில் தான். "உளுத்த உடலை இறுக்கி, உடலுக்கு வன்மை தரும் மூலிகை அசோகு' என்று தேரையர் என்னும் சித்தர் குறிப்பிட்டுள்ளார். மேன்மையான குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோக மரத்தினை, ஸ்ரீராம பிரான்- சீதாதேவியை மனதால் நினைத்து வலம் வர, சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வில் மேன்மை பெறலாம்.

உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.

காதலுக்கு என்று ஒரு மரம் ,,எது தெரியுமா?ராமாயணத்தில் சீதாபிராட்டியாரை
இலங்கேஸ்வரன் அசோக மரங்கள் சூழ்ந்த வனத்தில் சிறைப்ப்டுத்தினானே அந்த
அசோக மரம் தான் காதலுகென்ற மரம் சம்ஸ்கிருதத்தில் அசோகா என்றால் சோகம்
இல்லாத " என்று அர்த்தம் இரவில் அதிக நறுமணம் வீசும் சிவந்த மஞ்சள் அல்லது
ஆரஞ்சு நிறப்பூக்களைக் கொண்டது இது பர்மா இலங்கை மலேசியா இந்தியாவைப்
பூர்வீகமாகக் கொண்டதாகும் இதை மக்கள் காதலின் சின்னமாகக் கருதி காமதேவனுக்கு
அர்ப்பிக்கிறார்கள் காமதேவன் காதலின் சின்னம் ஆனவன் கோயில் அலங்காரங்களிலும்
பயன் படுத்துகின்றனர் மரங்களின் தேவர்கள் விருக்ஷதேவர்கள் இம் மரத்தைச் சுற்றி
ஆடிப்பாடி களிக்கின்றனராம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இதை அரசமரம் போல்
பூஜிக்கின்றனராம் வழக்கமாக நாம் பூங்காவில் நெடிய மரங்களை அசோக மரம்
என் நினைக்கிறோம் உண்மையில் அவைகள் நெட்டிலிங்க மரங்களே ,இதன்
இலைகள் மாவிலைப்போல் நீளமாகவும் ஆனால் வளைவுகளுடன் காணப்படும் பச்சைநிறபூக்கள்
நட்சத்திரம் போல் பூக்க மேலும் அழகு பெறும் உண்மையான் அசோக மரம் நெட்டி லிங்க
மரம் போல் உயரமாக வளராமல் மற்ற மரங்கள் போல் பரந்து வளர்ந்து சற்று குட்டையான
தோற்றம் தரும் ஆங்கிலத்தில் saraka asoka {caesalpiniacase } என்னும்
இனத்தைச் சேர்ந்தது ,
காதல்ர்கள் காதலிகள் அசோக மரத்தைப் படை எடுங்கள் காதலின் மன்னன் காமதேவனுக்கு
பூக்களை அர்ப்பணியுங்கள். 

வெள்ளி, 4 மார்ச், 2011

என்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை?


அம்மா,இங்க வாங்களேன்...

என்னடா?

இங்க வந்துபாருங்க...

இருடா, வேலையா இருக்கேன்...

சரிம்மா, நீங்க பிஸின்னா உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிவைக்கிறேன். அப்புறமா பாத்துக்கோங்க...

பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றைக்காண்பிக்க வந்தவன் நகர்ந்துபோனான்.

இருடா தம்பி, பிஸியெல்லாம் இல்லை, பத்து நிமிஷவேலைதான் இப்ப வந்துர்றேன்.

பத்து நிமிஷமா?...அப்போ நான் பிசியாயிடுவேனே...

அட, நீங்க பிசியாயிருவீங்களா? எல்லாம் நேரம்தான். சாருக்கு அப்படியென்ன வேலையிருக்குதாம்?

கம்ப்யூட்டர்ல ஆன்லைன் கேம் விளையாடப்போறேம்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆன்லைனில் இருக்காங்க.

நாலுநாள்ல பரிட்சை இருக்கு...அதுக்குப் படிக்காம ஆன்லைன் கேமா?

அம்மா, படிப்புக்குன்னு நேரம் ஒதுக்குறமாதிரி, என்ஜாய் பண்றதுக்கும் நேரம் ஒதுக்கணும்மா. இல்லன்னா, லைஃப் போரடிச்சுப்போயிடும்.

அதுசரி, இந்தத் தலைமுறைக்கு என்ன தெரியுதோ இல்லையோ, பிஸி, என்ஜாய் இந்த ரெண்டு வார்த்தைகளும் நல்லாவே தெரிஞ்சிருக்கு.

சரியாத்தான் தெரிஞ்சுவச்சிருக்கீங்க...அம்மா, உங்க காலத்துலல்லாம் நீங்க பிஸியாவே இருந்ததில்லையா?

இருப்போம்...படிப்பு, விளையாட்டுன்னு. ஆனா, உங்க அளவுக்கு இல்ல...


ஆமா,அப்பல்லாம் கம்ப்யூட்டர் கிடையாதில்ல... ஃபேஸ்புக்,சாட்,வீடியோ கேம்ஸ் இதெல்லாம் இல்லாம உங்களுக்கெல்லாம் எப்படிம்மா டைம்பாஸ் ஆச்சு?

ஏன் ஆகாது? அக்கம்பக்கத்துக் குழந்தைகளோட விதவிதமா விளையாடுவோம். வாரப்புத்தகம், லைப்ரரி புஸ்தகம் வாங்கிவச்சுப் படிப்போம். ஏகப்பட்ட கைவேலைகள் செய்வோம், வீட்டுத்தோட்டம் போடுவோம்...

அதெல்லாம் இருக்கட்டும்...அப்பல்லாம், பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா என்ன பண்ணுவீங்க?

பெரியவங்ககிட்ட இல்லேன்னா டீச்சர்கிட்ட கேப்போம், புத்தகங்களை ரெஃபர் பண்ணித் தெரிஞ்சுக்குவோம்.

ரெண்டே ஆப்ஷன்தானா? கூகிள் ஹெல்ப் இல்லாம நீங்கல்லாம் எப்படித்தான் படிச்சீங்களோ?

அதுசரி, கூகிள் மூலமா,இப்ப நீங்க நிறையத் தெரிஞ்சுக்கிறீங்க. அப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட அளவு தெரிஞ்சுக்கிட்டோம்.

என்னத்தைத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களோ? சின்ன சர்க்கிளுக்குள்ள சர்க்கஸ் பண்ணியிருக்கீங்க...

சரி அதுபோகட்டும்...அப்பல்லாம், டிவி கூடக் கிடையாதுல்லம்மா?

ஆமாடா...டிவியெல்லாம் நான் ஹைஸ்கூல் படிக்கிறப்பதான் ஃபேமஸாச்சு. அப்பவும் தூர்தர்ஷன்,ரூபவாஹினின்னு ரெண்டே ரெண்டு சேனல்தான் உண்டு.

ரெண்டே ரெண்டு சேனலா? இப்ப நாம இருநூறுக்கும் மேல பார்க்கிறோமே...

ஆமா, அப்ப ரெண்டுதான்... அதிலும் சாயங்காலம்தான் தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் சிலநேரம் தெளிவாத் தெரியாது. மாடியில ஏறி, ஆன்டெனாவை அங்கயும் இங்கயும் திருப்பி வைப்போம். அந்த அளவுக்கு சோதிக்கும்.

ஆன்டெனாவா? அப்ப, கேபிள் கனெக்ஷனெல்லாம் கிடையாதா?

ம்ஹூம்... மாடியில ஒரு ஏழெட்டு மீட்டர் உயரத்துல இரும்புக்கம்பியை வச்சு, அதுல கொடைக்கானலுக்கு ஒண்ணு, சிலோனுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆன்டெனா மாட்டியிருப்பாங்க. அதிலிருந்து ஒயரெடுத்து டிவியில குடுக்கணும்.

அடப்பாவமே...

இதென்ன பெரிய பாவம்? வெள்ளிக்கிழமை வந்தா, தூர்தர்ஷன்ல எட்டுமணிக்கு ஆறேழு மொழிகள்ளேருந்து பாடல்கள் போடுவாங்க. அதுல ஒரேயொரு தமிழ்ப்பாட்டு வரும். அதப்பாக்க நாங்கல்லாம் எப்படிக் காத்துக்கிடப்போம் தெரியுமா? சிலநேரம் அதுகூடப் போடமாட்டாங்க. அவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.

ஐயோ பாவம்மா நீங்கல்லாம்... இப்ப நாங்க ஐபாட், வாக்மேன்னு எங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பிடிச்சநேரம் கேக்கிறோம். இந்த சௌகரியம்கூட இல்லாத அந்தக் காலத்தை நீங்க என்னவோ, அப்படி இப்படீன்னு பெருமையாப் பேசுறீங்க.


ஐபாட், வாக்மேன் இல்லாட்டி என்ன? அப்போ,ஆல் இண்டியா ரேடியோவும், இலங்கை வானொலியும் இருந்துச்சில்ல...

அதுல எப்பவும் பாட்டுப் போடுவாங்களா?

எப்பவும் கிடையாது, அதெல்லாம் ஃஎப்.எம் வந்த பிறகுதான்...
சினிமாப்பாட்டு,கர்நாடக இசை, கிராமியப்பாடல்கள், செய்திகள், நாடகம்,வேளாண்மை நிகழ்ச்சிகள், வினாடிவினா இன்னும் ஞாயிற்றுக்கிழமை வந்தா, ஒலிச்சித்திரம்கூடப் போடுவாங்க.

கேலிச்சித்திரம் கேள்விப்பட்டிருக்கேன். ஒலிச்சித்திரமா, அதென்னம்மா?

அதா, ஒரு முழுப்படத்தோட வசனத்தையும் அப்படியே ரேடியோவுல போடுவாங்க.

அப்போ,வசனத்தைமட்டும் கேட்பீங்களா?

ஆமா....படத்தோட கதை தெரிஞ்சிடும்ல.

நல்லாக்கேட்டீங்க கதையை...ஐயோ ஐயோ :)


பாவம்மா நீங்க. நிஜமாவே நாங்கல்லாம் கடவுளுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லணும்மா. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்துல எங்களைப் படைச்சிருக்காரேன்னு.

ஆனா, ஒரே ஒரு கஷ்டம்தான் இப்ப...

என்னடா?

உங்க லெக்சரைக் கேட்ட நேரத்துல, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைன் ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாங்க :)

அடிக் கழுதைய...அதுவும் நல்லதுதான், புத்தகத்தையெடுத்துப் படி...

படிக்கணுமா, அம்மா ஆளவிடுங்க...என்றபடி அங்கிருந்து நழுவினான் அவன்.

******


புதன், 9 பிப்ரவரி, 2011

சிவன் சொத்து!

மண்ணின் மேலும் மதங்களின் மேலும் மக்கள் கொண்டிருக்கும் பற்று மிகவும் சென்சிடிவான ஒன்று. 

குடும்பங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சில கோயில்களே கோர்ட் வரைக்கும் இழுக்கப்படும்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஒரு கோயில் அமைந்திருந்தால்?

 பதினொன்றாம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் அந்தக் கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்திருக்கும் கம்போடிய தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான போரில், இந்தக் கோயில், மேலும் சிதைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.


பிரசாத் பிரியா விஹார், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு இறையாயிருந்தவன் என்பதற்குச் சான்றுரைக்கும் வகையில், கெமர் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவாலயம் இது. அமைந்திருப்பது கம்போடிய, தாய்லாந்து எல்லையில் இருக்கும் டாங்கிரெக் மலையின்மீது. எல்லைச்சாமி மாதிரி இரண்டு நாடுகளுக்கிடையே இருப்பதுதான் இங்கு பிரச்சனையே.

எல்லைக்கு நடுவில், கோயில் எங்கே இருக்குது பாருங்க...


1962 ம் ஆண்டிலேயே இந்தச் சொத்துப் பிரச்சனை தலைதூக்க, பிரச்சனையில் தலையிட்ட பன்னாட்டு நீதிமன்றம், இந்தக் கோயில் கம்போடியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும் ஆசை யாரைவிட்டது? அதனால், இன்றுவரை ஓயவில்லை பிரச்சனை. 

தமிழகத்தில், பழங்காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற்கு, அக்கால மன்னர்கள் ஏராளமான சொத்துக்களை எழுதி வைத்ததாகவும், தற்காலத்தில் அத்தகைய சொத்துக்களெல்லாம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகவும் படித்ததும் கேட்டதும் உண்டு. கிராமங்களில் அப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்கள் சொல்வார்கள், சிவன் சொத்து குலநாசம் என்று. அதாவது சிவனுக்குரிய சொத்தை அபகரித்துப் பயன்படுத்துபவர்களின் குலம் தழைக்காமல் அழிந்துபோகும் என்று. இங்கே ரெண்டு நாட்டுப் பிரச்சனையில் யார் குலத்தைக் குற்றம்சொல்வது?


மன்னர்களின் காலத்தில் மதிப்போடிருந்த ஆன்மீகத் தலங்கள் பல, பிற்கால அரசியல் மாற்றங்களால் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதை நாம் பல நாடுகளில் பார்க்கமுடிகிறது. இந்து மதத்தின் பழம்பெருமைக்குச் சான்றாக நிற்கும் இந்தச் சிவன் சொத்து,  இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு அழிந்துபோகக்கூடாதென்று, உலக இந்துக் கலச்சார அமைப்பு ஒன்று உலகெங்குமிருக்கிற இந்து மக்களின் ஆதரவை வேண்டியிருக்கிறது.

அதை இங்கே பார்க்கலாம்...

மக்களுக்குக் கஷ்டம்ன்னு வந்தா கடவுள்கிட்டபோய் முறையிடலாம். ஆனா, கடவுளுக்கே கஷ்டம்வந்தா எங்கேபோய் முறையிடுவதாம்????

எல்லாம் அவனோட திருவிளையாடல்ன்னு சிவனேன்னு இருக்கவேண்டியதுதான்.

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து.
படங்கள் உபயம்: google

திங்கள், 31 ஜனவரி, 2011

என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!


பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.

பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?

ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.

நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை
மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.

கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.

இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.

ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் :(

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!
(Total cargo cost is Dh1,500)

எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல்,இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல்,
பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.

இதுதொடர்பான கருத்துக்களை Gulf News ல் படிக்க "இங்கே" பாருங்க...

பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது அவசியம்.

நன்றி: Gulf News


புதன், 26 ஜனவரி, 2011

பிடிசாபமும், பி.டி கத்தரிக்காயும்!

வரகரிசிச்சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுர வெனவே புளித்த தயிரும்,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.

வழுதுணங்காய் என்று அன்றைக்கு வாய்நிறைய அழைக்கப்பட்ட நம் கத்தரிக்காயின் ருசி, முற்றும்துறந்த முனிவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. ஊரூராய்ப் பயணித்துக்கொண்டிருந்த நம் ஔவைப்பாட்டியையும் அது அசத்தியதன் சாட்சியே மேலேயிருக்கும் பாடல்.

புல்வேளூரிலுள்ள பூதன் என்பவருடையவீட்டில் உணவருந்திய நம் பாட்டி, அங்கே கிடைத்த வரகரிசிச்சோற்றை, புளித்த தயிர்சேர்த்துப்பிசைந்து, வழுதுணங்காய் வதக்கலுடன் வயிறுநிறையச் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுக்கு ஈடாக உலகத்தையே கொடுக்கலாமென்று மனமுவந்து சொல்லியிருக்கிறாள்.

அங்கே அப்படியென்றால் இது, மனைவியின்மீதுள்ள கோபத்தால், கத்திரிக்காய்க்குச் சாபம் கொடுத்த முனிவரொருவரின் கதை...

 சுற்றியுள்ள கிராமத்து மக்களெல்லாம் சங்கடங்கள் நேரிடுகையில் வந்து அந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றுச்செல்வது வழக்கம். அன்றைக்கும் ஒரு குடியானவன் வந்து தன் குறைகளைச்சொல்லி, அறிவுரைபெற்றுச் செல்கையில் முனிவருக்குத் தன் தோட்டத்தில் விளைந்த சுவையான கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனானாம்.

நீராடச்சென்ற முனிவர் தன் பத்தினியிடம், கத்தரிக்காய்களைக் கறிசமைத்துவை நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச்சென்றாராம். கணவர் சொல்தவறாதவளாக,  அந்தப் பிஞ்சுக்கத்தரிக்காய்களைப் பசுநெய்யில் தாளித்து, உப்பிட்டு வதக்கினாளாம் முனிவரின் மனைவி. வதக்குகிற வாசனையில் வாயூற, ஒரு துண்டை எடுத்துச் சுவைபார்த்தாளாம். அபாரமான ருசியில் ஆசை அதிகமாக, ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சாப்பிட இறுதியில் ஒற்றைத்துண்டுமட்டுமே மிஞ்சியதாம்.அதையும் கணவருக்குக் கொடுக்கவா வேண்டாமா என்று அல்லாடியதாம் அவள் மனசு.

அதற்குள் நீராடச்சென்ற முனிவர் வந்து, உணவு பரிமாறு என்று உத்தரவிட்டாராம். வடித்த சாதத்தை ஒற்றைத்துண்டு கத்திரிக்காய் வதக்கலுடன் கொண்டுவந்து வைத்தாளாம் அவள்.
மிச்சக் கறியை எங்கேயென்றாராம் அவர். மொத்தமும் அவ்வளவுதானென்று அஞ்சியஞ்சிச் சொன்னாளாம் அவள்.

பர்த்தாவுக்குக் கொடுக்கக்கூட மனசில்லாதபடிக்கு, உன்னைத் அள்ளித்தின்னவைத்த அந்தக் கத்திரிக்காயில், இன்றுமுதல் புழுக்கள் குடியேறட்டும் என்று சாபமிட்டாராம் முனிவர். அன்றிலிருந்துதான், கத்தரிக்காய்க்குள் புழுக்கள் குடியேறியதாம்.

அன்றைக்குக் குடியேறிய புழுக்களை, இன்றைக்கு வெளியேற்ற, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் மரபணு மாற்றம்பெற்ற கத்தரிக்காய்கள், அதாவது B.T. Brinjal.

பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis, (B.T) என்ற நுண்ணுயிரியிலிருந்து எடுக்கப்பட்ட, நச்சுத்தன்மையுள்ள டி.என்.ஏ வை கத்தரிச்செடிகளில் உட்செலுத்தி, கத்தரிக்காய்களிலுள்ள பூச்சிகளை அழிக்கமுடியுமென்று கண்டறிந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

செடிகளிலேயே பூச்சிகளைக்கொல்லும் தன்மைவந்துவிடுவதால், விவசாயிகள் கத்தரிச்செடிக்குப் பூச்சிமருந்துகள் அடிக்கவேண்டிய அவசியமில்லை என்பது விஞ்ஞானிகளின் கூற்று. ஆனால், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை உட்கொண்ட எலிகளுக்கு, உடலுறுப்புகளில் பாதிப்பும் உடலியக்கத்தில் பிரச்சனைகளும்கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், உண்ணுகிற உணவு என்று அத்தனையும் மாசுபட்டுப்போயிருக்கிறதென்று இன்றைக்குநாம் அறிந்துகொண்டிருப்பதுபோல, இந்தக் கத்திரிக்காய்கள் பெரிதாய் என்னசெய்துவிடப்போகின்றன என்பதும் கால ஓட்டத்தில் கட்டாயம் தெரியவரும். அதுவரைக்கும், நாமும் கத்தரிக்காய் வதக்கலைக் கவலையில்லாமல் சாப்பிடுவோம்.

                                                 ************




  

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஒன்றொடு இன்னொன்று!

வசு, இந்த ஒருவிஷயத்தைமட்டும் எனக்காகச் செய்யிம்மா...சஷ்டியில இருந்தா அகப்பையில வரும்னு அந்தக் காலத்துலயே சொல்லிவச்சிருக்காங்க.அதனால, சஷ்டியில, ஒரே ஒருநாள்மட்டும் விரதமா இருந்து, நாம திருச்செந்தூருக்குப் போயிட்டுவருவோம். என்னோட நம்பிக்கைக்காக இதுக்குமட்டும் நீ சம்மதிச்சா, நிச்சயம் அந்த முருகன் கருணையால நம்ம வீட்லயும் குழந்தைச்சத்தம் கேக்கும்...திரும்பத்திரும்பச்சொன்ன மாமியாரின் வார்த்தைகள் இளகவைத்தன வசுமதியின் பிடிவாதத்தை.

சரி அத்தை...உங்க விருப்பத்துக்காக நான் வரேன்.சொல்லாம போனோம்னா திட்டுவாங்க...அதனால, சென்னைக்குப் போயிருக்கிற உங்க மகனுக்கு ஒரு ஃபோன் பண்ணிச்சொல்லிட்டு, நாம புறப்படுவோம்னு ஒருவழியா ஒத்துக்கிட்டா வசு. மூன்றுமுறை அழைத்துப்பார்த்தாயிற்று, சரவணனின் கைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அம்மாடி, நீ எங்கூடத்தானே வர்றே, அவன் ஒண்ணும் சொல்லமாட்டான். போற வழியில திரும்பவும் ஃபோன் பண்ணிப்பார்த்து, விஷயத்தை அவங்கிட்ட சொல்லிக்கலாம். நீ குளிச்சிட்டு, வெறும்வயிறாப் புறப்படு...கோயிலுக்குப்போயி, சாமி தரிசனம் பண்ணிட்டு, நாம சாப்பிட்டுக்கலாம் என்று சொன்னபடி வேகவேகமாக் குளிக்கப்புறப்பட்டாள் வசுமதியின் மாமியார். கண்ணைமூடுவதற்குள் எப்படியாவது ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்துவிடவேண்டுமென்ற பரிதவிப்பு அவளுக்கு.

வசுமதிக்கும் சரவணனுக்கும் கல்யாணமாகி மூன்று வருஷம்தான் ஆகியிருந்தது. சரவணனுக்கு வசுமதி தூரத்து சொந்தம்தான். கல்யாணமானபின்னாலும்,வியாபார விஷயமாக மாதத்தில் பாதிநாள் வெளியூருக்குப் போய்விடுவான் சரவணன். வசுமதியும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததால், அவளுக்கும் சரவணனின் தொழில்முறைப் பயணங்கள் அத்தனை பாதிப்பைக்கொடுத்ததில்லை.

அன்றைக்கும் தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் எப்பவும்போல கூட்டமாய்த்தான் இருந்தது. வரிசையாக நான்கு பஸ்போனபிறகு, ஐந்தாவது பஸ்சில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. திருச்செந்தூர் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தரிசனத்துக்கான வரிசை, வாசலைத் தாண்டி வெளியேயும் நீண்டிருந்தது.டிக்கெட் எடுத்துவிட்டு வந்து, வரிசையில் நின்றார்கள் வசுமதியும் அவள் மாமியாரும்.

வரிசை நகராமலே இருந்தது. உள்ளே சாமிக்கு அலங்காரம் ஆயிட்டிருக்கு. திரைபோட்டிருக்காங்க அதனாலதான் நகரலை... என்று ஒருவர் சொல்லிவிட்டுப்போனார். வாசல் முகப்பில், முருகன் வள்ளி தெய்வானையோடும், கூடவே மாலையோடு நிற்கும் யானைகளோடும் காட்சியளித்தார். தரிசனத்துக்காக வரிசையில் நின்றாலும், வசுமதியின் மனசு பள்ளிக்கூடத்தில்தான் இருந்தது. இப்ப கடைசி பீரியட் நடந்துகொண்டிருக்கும் என்று தன் வாட்சைப் பார்த்தபடி நினைத்துக்கொண்டாள் வசுமதி.

அப்போது, 'வீலெ'ன்று ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. கோயில்வாசலின் வலதுபக்கம், காதுகுத்துமிடத்தில், மொட்டைபோட்ட ஒரு சின்னக் குழந்தைக்குக் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். உறவுக்காரர்கள் ஒன்றிரண்டுபேர் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த வசுமதியின் மாமியார்,"நான் நினைச்சமாதிரியே ஒரு வாரிசைக் கொடுத்துட்டா, குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல, இங்கவந்து பிள்ளைக்கு மொட்டையெடுத்துக் காதுகுத்தி வாளிபோட்டு விடுறேன் முருகா" என்று வசுமதிக்குக் கேட்கிறாற்போல, வாய்விட்டு வேண்டிக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா, வசுமதியின் மாமியார்.

காதுகுத்திய குழந்தையை ஒவ்வொருத்தராய் மாற்றி, அழுகையை நிறுத்தப்பார்த்தும் முடியாமல்போக, இந்தா,அப்பா பாரு, அப்பா பாரு... என்று அதன் அப்பாவிடம்கொண்டு காட்டினாள் குழந்தையின் அம்மா. திரும்பி உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையின் அப்பா, எழுந்து, குழந்தையை வாங்கினான். திரும்பிய அவன் முகத்தைப்பார்த்த நிமிஷத்தில், ஆடிப்போனாள் வசுமதி. அதிர்ச்சியில் தன் மாமியாரின் தோளைத்தொட்டு, அங்கே கையை நீட்டிக்காட்டினாள் அவள்.

கைகாட்டியதிசையில், கையில் குழந்தையுடன் தன் மகன் சரவணனைப் பார்த்ததும், கணநேரத்தில் விஷயத்தை கிரகித்துக்கொண்டாள் முத்துலட்சுமியம்மா. ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட்டுக்கொண்டுவர,வரிசையிலிருந்து வெளியேறி அவனருகில் சென்றவள், "அடப்பாவி, நல்லாருப்பியாடா நீ...பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் தெரியாம, இங்கே இன்னொரு வாழ்க்கையா நடத்திக்கிட்டிருக்க? இந்தப் பொண்ணோட பாவம், உன்னைச் சும்மாவாடா விடும்?

வேலைவிஷயமாப் போறேன் போறேன்னு சொல்லி இப்படி வப்பாட்டி வச்சுக்கிட்டு நம்ம வம்சத்துப் பேரையே கெடுத்திட்டியேடா பாவி...என்று வாய்விட்டு அரற்றினாள் முத்துலட்சுமி. சுற்றியிருந்தவர்கள் வசுமதியைப் பரிதாபமாகப் பார்க்க, அதற்குள், அப்பா என்றபடி வந்து, இன்னொரு ஐந்துவயசு மதிக்கத்தக்க குழந்தையொன்று, சரவணனின் கையைப்பிடித்தபடி,சத்தம்போட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை ஏறிட்டது.

அஞ்சு வயசுல அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்குதா? அப்போ, நாந்தான் அவருக்கு ரெண்டாம்தாரமா? ஐயோ, இப்படி ஏமாந்திருக்கேனே... என்று வசுமதிக்குள் உள்ளூர எழுந்தது ஓவென்ற ஒரு அழுகை. கூடவே,பசித்த வயிறும் வேதனையும் சேர்ந்து கண்ணை இருட்டிக்கொண்டுவர, சரிந்துவிழுந்தாள் வசுமதி. அவளை,வரிசையிலிருந்து வெளியே கூட்டிப்போய் உட்காரவைத்து,முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் ஒரு பெண்மணி.

"வருத்தப்படாத தாயி, தன்னோட சபலத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும், சாமிக்கே ரெண்டு சம்சாரம் கட்டிவச்சுப்பார்க்கிற சமூகம் இது...இதையெல்லாம் எதிர்கொண்டு நாமளும் இந்த பூமியில தைரியமா வாழ்ந்துதான் தீரணும்...மனசைத் தளரவிடாதே" என்றபடி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் அந்த அம்மா.

மகனிடம் கத்திப் புலம்பிக்கொண்டிருக்கையில், மயங்கிவிழுந்த வசுமதியைப்பார்த்ததும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் முத்துலட்சுமியம்மா.ஒரு பேரப்பிள்ளையாவது வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தபோது, ஒன்றுக்கு ரெண்டு பேரக்குழந்தைகளைக் கண்முன்னால் பார்த்தபின்னாலும், அதைக் கொண்டாடாமல், தனக்காகக் கண்ணீர்விட்டு அழுத மாமியாரை நினைக்கையில் மனசு இளகியது வசுமதிக்கு.

அப்போது, என்னை ஏமாத்திட்டு, இங்கே இன்னொருத்தியைக் கட்டிவச்சிருக்கியா? பெத்தவுங்களும் இல்ல, உறவுன்னும் யாரும் பெருசா இல்லேன்னு சொல்லி என்னையும் பிள்ளைகளையும் ஏமாத்திட்டு, இத்தனை கள்ளத்தனம் பண்ணியிருக்கியே, நீயெல்லாம் மனுஷனா? உன்னோட சுகத்துக்காகவும் சௌகரியத்துக்காகவும் என்ன வேணும்னாலும் செய்வியா நீ? அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு உன்னோட குடும்பம் நடத்த என்னாலமுடியாது என்றபடி, பிள்ளைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு, தன் தாய் தந்தையுடன் நடந்தாள் சரவணனின் முதல் மனைவி.

இருதலைக்கொள்ளி எறும்பாகத் திகைத்துநின்ற சரவணனைப் பார்த்தாள் வசுமதி.பெண்களென்றால் கிள்ளுக்கீரைகளென்று நினைத்த அவனுக்குத் தனிமையும் நிராகரிப்பும்தான்தான் சரியான தண்டனை என்று எண்ணியது அவள் மனது. இதழ்களில், ஏளனம் நெளிய,கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள். கால்கள் நடுங்கினாலும்,மனசை உறுதியாக்கிக்கொண்டு நிமிர்ந்துநின்றாள். அழுதுகொண்டிருந்த தன் மாமியாரைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கோயிலைவிட்டு வெளியே நடந்தாள்.

சொந்தக்காலில் நின்று அவனுக்கு முன்னால் ஜெயித்துக்காட்டவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது அவளுக்குள். இனிமேல் தான் போகவேண்டிய பாதையை மனதில் தீர்மானித்துக்கொண்டவளாய், திடமாக்கிக்கொண்ட மனதோடும்,தெளிவுடனும் திரும்பிநடந்தாள் வசுமதி. பின்னால், ஆர்ப்பரித்த அலைக்கரங்களுடன் அவளது முடிவை ஆமோதித்தது கடல். 

*******  

திங்கள், 13 டிசம்பர், 2010

அறை எண் ஐம்பத்தாறும் அக்காவின் பாசமும்!


 குழந்தைக்குத் திருச்செந்தூரில் முடியெடுத்துக் காதுகுத்தப்போறதா கதிரேசன் நாலுநாள் முன்னாடியே வந்து அழைச்சிட்டுப் போயிருந்தான். செல்வியும் அவள் கணவன் சண்முகமும் காலையிலேயே திருச்செந்தூருக்கு வந்துட்டாங்க.  மொட்டையடிச்சிட்டு வந்து, காதுகுத்தப் போகும்போது, தன் மகளுக்கு, அக்கா செல்வி வாங்கிட்டு வந்த கம்மலை  வச்சுத்தான் காதுகுத்தணும் என்று சொன்னான் கதிரேசன். செல்விக்கும் சண்முகத்துக்கும் மெத்தச் சந்தோஷமாயிருந்தது.

மதியம் மணி ஐயரில் சாப்பிட்ட கையோடு,  வந்திருந்த உறவுக்காரங்கல்லாம் ஆளாளுக்குக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. ஆளுக்கொரு ஸ்வீட் பாக்கெட் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பிவைத்தான் கதிரேசன். "அக்கா, நீயும் அத்தானும் வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்" என்றான் செல்வியிடம்.

"இல்ல, கதிரேசா... நானும் அத்தானும் இங்கேருந்து அப்டியே பழனிக்குப் புறப்படுறோம். பழனிலேர்ந்து வந்ததும் பஞ்சாமிர்தத்தோட வீட்டுக்கு வாரேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாங்க செல்வியும் சண்முகமும்.

"செல்வி, பழனிக்கு விடிகாலை மூணு மணிக்கு ஒரு பஸ் இருக்கு. அதுல புறப்பட்டா வசதியா இருக்கும்.  அதனால, இங்கயே ஒரு ஹோட்டல்ல தங்கி ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாம்" என்றார் சண்முகம். சரியென்றாள் செல்வி.

கோவிலுக்குப் பக்கத்திலேயே அறைகள் இருந்தது. ஆனா, ஒண்ணொண்ணும் ரொம்ப வித்தியாசமாத் தெரிஞ்சுது. முதலில் இருந்த விடுதிக்குள் நுழைஞ்சாங்க ரெண்டுபேரும்.  ரிசப்ஷனில் இருந்தவனின் தோற்றம், ஏதோ திரைப்படத்தில் பார்த்த ஆதிகால மனிதனை நினைவுபடுத்தியது செல்விக்கு.

பேர் விலாசம் எழுதிக்கொண்டபின், சாவியைக் கையில் கொடுத்து உதவியாளரையும் கூட அனுப்பிவிட, உதவியாள் கதவைத் திறந்து லைட்டைப் போட்டான். அறையின் ஓரத்தில் கட்டிலும், அருகில் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. அறையின் சுவர்களில் ஒன்றிரண்டு ஓவியங்கள். ஒவ்வொன்றும் தன்னையே உறுத்துப் பார்க்கிறமாதிரி இருக்க, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவள். செல்வியின் கண்கள் அறையின் மிச்சப்பகுதியைச் சுற்றிவந்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. ஒரு அடி முன்னே சென்று பார்த்தவள், "ஐயோ பாம்புங்க..." என்று அலறினாள் அவள்.

சுவரோரமாய்ச் சுருண்டிருந்தது அந்தப் பாம்பு. குறைஞ்சது ஆறடியாவது இருக்கும். விடுதி உதவியாளர் குரல்கொடுக்க, ஒன்றிரண்டுபேர் ஓடிவந்து பாம்பை அடித்தார்கள். " வேணாங்க...நமக்கு இந்த ரூம் வேணாங்க..." என்று கணவனின் காதில் பயத்துடன் முணுமுணுத்தாள் செல்வி. "இன்னும் ஆறேழு மணிநேரம் இங்க இருக்கப்போறோம். அதுக்காக இன்னொரு இடம் தேடணுமா? இதெல்லாம் சின்ன  விஷயம்...மறந்துரு" என்றார் சண்முகம்.

அதற்குள் ரிஷப்ஷனில் இருந்தவர் அவர்களை அழைத்து, மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறொரு அறையின் சாவியைக் கொடுக்க, அந்த அறையில் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் உள்ளே நுழைந்தாள் செல்வி. அதற்குள் வீட்டிலிருந்து மகள் மஹாலட்சுமி செல்ஃபோனில் அழைக்க, நடந்ததை மகள்கிட்ட சொன்னாள் செல்வி. அறைக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

செல்வியின் கணவருக்கு ஏற்கெனவே பிளட் பிரஷர் உண்டு. அவர், செல்வி, நான் வெளிய போயி மஹா கிட்ட பேசிட்டு, அப்டியே எனக்கு பிரஷர் மாத்திரையும் வாங்கிட்டு வந்திர்றேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் படுத்தாள் செல்வி.

அறையின் மேற்பரப்பு வித்தியாசமாக இருந்தது ஒரு மரம் விரிந்து நிழலாயிருப்பதுபோல இருந்தது. வரைந்திருக்கிறார்களோ என்று உற்றுப்பார்த்தாள் செல்வி. மரம் அசைகையில் இடைவெளியில் வானம்கூடத் தெரிந்தது. அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. அறையின் விதானம் முழுவதும்,அடர்த்தியான கண்ணாடியென்று. அட, இப்படிக்கூட இருக்குமா? என்று வியப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

பத்து நிமிஷத்தில் வருகிறேனென்ற சண்முகத்தைக் காணவில்லை. அறைக்கு வெளியே போய்ப்பார்க்கலாம் என்று, வெளியேவந்து கொஞ்சநேரம் நின்றாள் அவள். சண்முகம் வரவில்லை. கதவைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று பார்க்கலாமென்று புறப்பட்டாள். அறை வாசலிலிருந்து மூன்றுபக்கமும் பாதை இருந்தது.  வரும்போது, எந்தப் பாதையில் வந்தோமென்று அவளுக்கு நினைவில்லை. ஏதாவது ஒரு பாதையில் போவோமென்று எதிரில் இருந்த பாதையில் போனாள் செல்வி.

வளைவில் மாடிப்படிகள் தெரிந்தது. ஆனால், கைப்பிடிச்சுவர் இல்லை.
அட, இதுகூட புதுமாடலா இருக்குதே என்று வியந்தபடி, இறங்கத்தொடங்கினாள். பிடித்துக்கொள்ள மேலே வலைப்பின்னல்போன்ற அமைப்பு இருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு இறங்கியவளின் பிடி சட்டென்று நழுவியது. படிக்கட்டில் அலறியபடியே வேகமாக உருண்டாள் அவள். பத்துப்பதினைந்துபேர் ஓடிவந்தார்கள். அவர்களில் சண்முகமும் இருந்தார்.

"கொஞ்சநேரம் அறைக்குள்ள இருக்கமுடியலியா உனக்கு..." என்றபடி அவளை எழுப்பிவிட்டார் சண்முகம். படபடப்பில் கண்கள் இருண்டது செல்விக்கு. "சரிசரி, உடம்பெல்லாம் வேர்த்துப்போயிருக்கு இப்படி உக்காரு..." என்றபடி, அருகிலிருந்த  இருக்கையில் உட்காரவைத்தார். அதிலிருந்தும் நழுவி விழப்போனவள் "ஐயோ..." என்றபடி எழுந்து, கணவனின் கையைப் பிடித்தாள்.

என்ன ஆச்சு செல்வி...என்னாச்சு?  என்றபடி அவளின் தோளைத்தொட்டு உலுக்கினார் சண்முகம். "ஒண்ணுமில்லீங்க..." என்றபடி முகத்தைத் துடைத்துவிட்டுச், சுற்றும்முற்றும் பார்த்தாள் செல்வி. தன் வீட்டுக் கட்டிலில்தான் இருக்கிறோம் என்று தெளிவானது அவளுக்கு. "எப்பவும்போல ஏதாவது கனவா?" என்று சலிப்புடன் கேட்டுவிட்டுத், திரும்பிப்படுத்தார் சண்முகம்.

தான் கண்டது கனவுன்னு நம்பவே முடியவில்லை செல்விக்கு.  தம்பி கதிரேசனைப் பார்த்தேனே கனவில்... என்னைக்கூட வீட்டுக்குக் கூப்பிட்டானே அவன்...ஏன் திடீர்ன்னு இப்படியொரு கனவு? அவனை நினைக்கக்கூட இல்லியே...

கதிரேசனுக்கும்  சண்முகத்துக்கும் மனசு கசந்துபோய் ஆறேழு வருஷமாச்சு. திடீர்ன்னு அவன் ஏன் கனவில் வந்தான்? அவனுக்கு ஏதாச்சும் கஷ்டமாயிருக்குமோ?  அம்மாவைக் கூப்பிட்டு விசாரிப்போமா என்று நினனத்தாள் அவள்.  ஆனால், மணி இரவு மூன்று. அம்மாவைக் கூப்பிட்டா நிச்சயம் பயந்து போவாங்க. தன்னுடைய தவிப்பைச் சண்முகத்திடம் கேட்கவும் பயமாயிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை...

மெல்ல அவரின் தோளைத் தொட்டுத் திருப்பியவள் கேட்டாள், "ஏங்க, கனவுல பாம்பு வந்தா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்களே...அது நிஜமா? என்றாள் தயக்கமாய். "அம்மா தாயே, இப்பிடி, என்னைத் தூங்கவிடாம உயிரை எடுத்தேன்னா, நிச்சயம் கெட்டது நடக்கும். மனுஷனை ராத்திரிக்கூடத் தூங்கவிடாம தொணதொணன்னு கேள்வி கேட்டுக்கிட்டு...சத்தமில்லாம படுப்பியா..." என்றபடி, திரும்பிப் படுத்துக்கொண்டார் சண்முகம். 

"இது என்ன கனவு? நல்லதா, கெட்டதா? கெட்டதாயிருந்தா கனவுக்கு ஏதும் பின்விளைவு இருக்குமோ? கடவுளே, கதிரேசனுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது" என்று அவளையுமறியாமல் வேண்டிக்கொண்டது மனசு. சுவர்க்கடிகாரம் மணி நான்கு என்று காட்டியது. கண்களை இறுகமூடினாலும் அந்தக் கனவும் கதிரேசனுமே வந்துவந்துபோக, விட்டத்தைப் பார்த்தபடி கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் செல்வி.

**********

சனி, 11 டிசம்பர், 2010

ஆசையில் விழுந்த அடி!

பேருந்து நிலைய வாசலிலிருந்து தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பினான் குமரேசன். மணி மூணரை...வயிறு பசியில் கூப்பாடு போட்டது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கஸ்தூரி முக்குக்கடைப் பாட்டியிடம் வாங்கிக்கொடுத்த இட்லியும் காரச்சட்னியும் எப்பவோ காணாமல்போயிருந்தது.

மதியம் ரெண்டு மணியாகும்போது, கணேசன் கடையில ரெண்டு வடை வாங்கிச் சாப்பிடலாம்னு நினைச்சப்ப, அடையாமலிருக்கிற ஆட்டோமேல் வாங்கிய கடனும்,கொடுக்காமலிருக்கிற மூணுமாச வாடகையும் நினைவுக்கு வரவே, பசியையை அடக்கிக்கிட்டு சவாரிக்குக் கிளம்பினான் அவன்.

குமரேசனுக்கு மூணு குழந்தைகள். மூணுபேரும் வீட்டுப் பக்கத்திலிருக்கிற ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். குமரேசன் மனைவி கஸ்தூரி, பூ வாங்கிக் கட்டி, பக்கத்துக் காலனியில் தினமும் விற்றுவிட்டுவருவாள். ரெண்டுபேரும் முழுக்கமுழுக்க உழைச்சாலும், முழுசாய்ப் போதாத வருமானம்.

சின்னப்பையனுக்கு உடம்பு சுகமில்லாம போனப்ப வாங்கின கடனுக்கு, தன்னுடைய ஆட்டோவை அடகு வைத்துப் பணம் வாங்கியிருந்தான் அவன். வாங்கின கடனுக்கு அன்றாடம் நூறு ரூவா கட்டணும். அதுபோக வீட்டு வாடகை,  பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு வரவுக்கு மீறிச் செலவுகள்தான் வந்தது. இப்பல்லாம் ஸ்டாண்டிலும் ஆட்டோக்கள் அதிகமாகிவிட்டது. சில நாட்கள் குமரேசனால் தவணைக் காசைக்கூடக் கட்டமுடிவதில்லை.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, ஆட்டோ வருமாய்யா என்ற அந்தக்குரல் அசைத்தது. ராஜாஜி ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு  ஒரு வயசான அம்மாவும், கைக்குழந்தையோட ஒரு பெண்ணும் வந்துநின்னாங்க. ரெண்டுபேர்முகத்திலும் அப்பிக்கிடந்தது சோகம்.

"போலாம்மா..." என்று அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, ஆட்டோவைக் கிளப்பினான் அவன். "என்ன பெரியம்மா, ஆஸ்பத்திரிக்குப் போறீகளே,  உடம்புக்கு சுகமில்லியா? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தான் குமரேசன். "ஆமாய்யா... என் பேரன்...இந்தா, இவளோட புருஷன், சைக்கிள்ல போகையில பாவி அந்த மினிபஸ்ஸுக்காரன் இடிச்சுத் தட்டிவிட்டுட்டான். இப்ப அவன் ஒத்தக்கால் ஒடிஞ்சு, ஆஸ்பத்திரியில கெடக்கான்.

மூணுநாளா ஆஸ்பத்திரியும் வீடுமா அல்லாடிக்கிட்டுக் கெடக்கொம்யா...ஒழைச்சு குடும்பத்தக் காப்பத்தவேண்டிய புள்ள, ஒடம்புக்கு முடியாம கெடக்குது. அந்த மீனாச்சித் தாயிதான் அவன முழுசா சொகமாக்கி, சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்...அந்தப் பொண்ணு இடையில் தடுத்தும் கேக்காம, ஆத்தாமையை அவனிடம் கொட்டியது பாட்டி.

வருத்தப்படாதீங்க பாட்டி...உங்க பேரனுக்கு சீக்கிரமே சரியாயிரும்...பாண்டிகோயிலுக்குப் பதினோருரூவா நேர்ந்து முடிஞ்சுவையிங்க என்று ஆறுதலாய்ப் பேசியவன், அவர்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுட்டு, பெட்ரோல் போடும்போதுதான் பார்த்தான். ஆட்டோவின் பின்னால், சாமான்வைக்கும் இடத்தில், ஒரு துணிப்பை இருந்ததை.

எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே, ஏழெட்டு ஆரஞ்சுப்பழங்களும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் இருந்தது. சின்ன துணிக்கடை பர்ஸ் ஒன்றில் முன்னூத்தம்பது ரூபாயும் இருந்தது. பாட்டியும் அந்தப் பொண்ணும்தான் அதைத் தவறவிட்டிருக்கணும் என்று தோன்றியது அவனுக்கு.

அவங்களப் பாத்தாலும் கஷ்டப்பட்டவங்களாத்தான் தெரிஞ்சிது. ஆனாலும், நம்ம நெலமையைவிட மோசமா இருக்காது என்று நினைத்துக்கொண்டவனாய், பர்சிலிருந்த பணத்தை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, பெட்ரோலுக்குக் காசுகொடுத்துவிட்டுக் கிளம்பினான் .

நூறை கடனுக்குக் கட்டினாலும் மிச்சம் இருநூறுத்தம்பது ரூவா இருக்குது. புள்ளைகளுக்குப் புடிச்ச புரோட்டா சால்னா வாங்கிக் குடுக்கலாம். கஸ்தூரிக்கு பலகாரக் கடையில கொஞ்சம் பூந்தி. அப்புறம், ஆரஞ்சுப்பழம் சின்னவனுக்கு ரொம்பப் பிடிக்கும். மனசு சந்தோஷத்தில் நிறைய, சிம்மக்கல் தாண்டியதும் ஆட்டோவை உள்ரோட்டில் சல்லென்று திருப்பினான். உள்ரோட்டிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு ரிவர்சில் வந்த வண்டியைக் கவனிக்கவில்லை அவன்.

பட்டென்று மூளையில் உறைக்க, அதற்குள் கிட்டத்தில் வந்துவிட்ட மினிலாரியைக் கண்டு, சட்டென்று வண்டியைத் திருப்பினான் அவன். சந்தின் முனையிலிருந்த கரண்ட் கம்பத்தில் முட்டிக்கொண்டு நின்றது ஆட்டோ.

"எழவெடுத்தபயலே, கண்ணப் பொடதியிலயா வச்சிட்டுவந்தே...பட்டப் பகல்லயே தண்ணியப் போட்டுட்டு ஓட்டுறானுகளோ என்னவோ" என்று, கூடக்கொஞ்சம் கெட்ட வார்த்தை போட்டுத் திட்டிவிட்டுப்போனான் லாரிக்காரன். குமரேசனுக்குப் படபடப்பு நிற்கவில்லை.

கூட்டம் கூடிவிட்டது. பக்கத்துப் பெட்டிக்கடைக்காரர் ஒரு சோடாவை ஒடச்சுக் கொடுத்துட்டு, பாத்து வரக்கூடாதாய்யா...ஏதோ, ஏரோப்ளேன் ஓட்டுறமாதிரில்ல விர்ருன்னு வந்து திரும்புற...யாரு செய்த புண்ணியமோ, நீ  நெத்தியில ஒரு வெட்டுக் காயத்தோட  தப்பிச்சிட்டே...ரத்தம் வழியுது பாரு...சட்டுன்னு போயி, ராஜாஜி ஆஸ்பத்திரியில ஒரு கட்டுப் போட்டுட்டு,  அப்புறமா பொழப்பப் பாரு என்று அவர் பங்குக்கு வைதார்.

ஏதோ ஞாபகத்துல, சட்டுன்னு திரும்பிட்டேண்ணே... என்று நடுக்கத்தோடு சொன்னபடி, சோடாவுக்குக் காசெடுத்து நீட்டினான் அவன். காசெல்லாம் வேண்டாம். இனியாவது பத்திரமா ஓட்டிட்டுப்போ என்று பெட்டிக்கடைக்காரர் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆட்டோவை நகர்த்தினான் குமரேசன்.

வண்டியின் முன்னாடி லைட்டும், கண்ணாடியும் உடைந்துபோயிருந்தது. நெற்றியில் அடிபட்டது விண்விணென்று தெரித்தது. திரும்பியபோது பின்னாடியிருந்த துணிப்பை மறுபடியும்  கண்ணில் பட்டது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டாம்னு நினைச்சாலும் விதி அங்க போக வச்சிருச்சே என்று நினைத்தான் அவன்.

முன்னூத்தம்பதுக்கு ஆசைப்பட்டு, இப்ப ஆட்டோவுக்கு ஐநூறுக்குமேல் செலவாகும்னு தோணியது அவனுக்கு. ஆனா, அடிமட்டும் பலமாப் பட்டிருந்தா அந்தப் பாட்டியோட பேரனை மாதிரி, தானும் ஆஸ்பத்திரிப் படுக்கையில் விழுந்திருப்போம் என்ற நினைப்புத் தோன்ற, கால்வரைக்கும் நடுக்கம் ஓடியது குமரேசனுக்கு.

வண்டியை மெதுவாகப் பின்னுக்கு நகர்த்தினான். தூரத்தில் தெரிஞ்ச மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, சட்டைப் பையில் எடுத்துவைத்த முன்னூத்தைம்பது ரூபாய் காசை  மறுபடியும் அந்தப் பர்சில் வைத்துவிட்டு, ஆட்டோவைத் திருப்பினான் குமரேசன். அது  ராஜாஜி ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டது.

*********

செவ்வாய், 7 டிசம்பர், 2010

உள் வீட்டுச் சண்டை


ஏண்டா, வாணி வீட்டுக்குப் போனியா? வாசல்பக்கத்திலிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, பார்வையை உயர்த்திக்கேட்டார்.

ஆஹா, மாட்டிக்கிட்டமோன்னு, மனசு படபடத்தது அகிலுக்கு.

இல்லப்பா...வந்துப்பா...விளையாடும்போது, பந்துபோயி அவங்க பால்கனியில விழுந்துருச்சு. அதான், கொண்டுவந்து குடுங்கன்னு கேக்கப்போனேன்.

அப்போ, பந்தை வாங்கிட்டுப் பேசாம வந்துட்டே...அப்டித்தானே? சந்தேகக் கண்களோடு கொக்கிபோட்டான் சண்முகம், அகிலின் அப்பா.

நானாப் பேசலப்பா...வாணியக்காதான் வந்து பேசிச்சு. அரைப்பரிச்சை எப்படான்னு அவங்கம்மாவுக்குக் கேக்காம மெதுவாக் கேட்டுச்சு...நான் அடுத்த வாரம்னேன். அதுக்கு, பரிட்சைக்குப் படிக்காம பந்து விளையாடுறியாடா நீன்னு கேட்டுட்டு, காதைப் பிடிச்சுத் திருகிட்டே சிரிச்சுச்சு. அதுக்குக்கூட நான் பதிலே சொல்லலப்பா...அப்பாவியாய்ச் சொன்னான் அகில்.

அப்புறம், இந்தப் பச்ச மாங்காகூட, நானாக் கேக்கல. அக்காவாத்தான் ரெண்டு துண்டு குடுத்துச்சு. உச்சுக் கொட்டிக்கொண்டே சொன்னான் அகில்.

அதற்குள், காப்பியுடன் அங்கே வந்தாள் அகிலின் அம்மா.

புள்ளைகிட்ட என்ன புலன் விசாரணை நடக்குது? என்று சந்தேகமாய்ப் பார்க்க, ஒண்ணுமில்ல புனிதா, அரைப் பரிச்சை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டான்...அப்பாவுக்கு, ஆஃபீஸ்ல வேலையிருக்கு. நீயும் அம்மாவும் போயிட்டுவாங்கன்னு சொன்னேன்...என்று சண்முகம் சொல்ல, காப்பாற்றிய அப்பா முகத்தையும், காப்பி ஆற்றிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தபடி, அங்கிருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தான் அகில். மகனின் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் சண்முகம்.

எப்பத்தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திச்சு? என்னவோ பண்ணுங்க" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா. கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம்.   அக்காவைத் தவிர,வேற யாரையும் பாக்கலயாடா நீ? மகனின் கண்களை ஊடுருவினான் அவன்.

அப்பா, அதுவந்து...அதுவந்து...ஆச்சியையும் பாத்தேம்ப்பா...

ஆச்சியைப் பாத்தியா? என்னடா சொன்னாங்க ஆச்சி? உள்பக்கம் பார்த்துவிட்டு, மெதுவாகக் கேட்டான் சண்முகம்.

என் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்துட்டு, கண்ணத் தொடைச்சிக்கிட்டாங்கப்பா. அப்புறம், உங்க அப்பன் எப்பிடியிருக்கான்னு எங்கிட்ட மெள்ளமா கேட்டாங்கப்பா... என்றான் அகில்.

கண்கள் நிறைந்தது சண்முகத்துக்கு. வேறெங்கோ பார்த்தபடி சில நிமிஷங்கள் சண்முகம் பேசாமல் உட்கார்ந்திருக்கவே, அப்பா நான் போகவாப்பா? என்றான் அகில்.

இருப்பா, என்று மகனை இருத்திய சண்முகம், "தம்பி, இன்னும் ஒருதடவை அங்க பந்துபோய் விழுந்திச்சுன்னா, எங்க அப்பாவுக்கு, எப்பவும் அவங்க அம்மா நெனைப்பாவே இருக்காம்னு ஆச்சிகிட்ட சொல்லுப்பா... என்றபடி, வந்த கண்ணீரை மகனிடமிருந்து மறைக்க முயற்சித்தான் அவன்.

அப்பாவின் கவலைக்கு முழுசாக அர்த்தம் புரியலேன்னாலும், ஆச்சியைப் பார்த்தால் அது தீருமென்று விளங்கியது அகிலுக்கு. தன் கையிலிருந்த பந்தை அங்கிருந்தபடியே ஓங்கிஅடித்தான் அவன். தடுப்புச்சுவரைத் தாண்டிப்போய், அடுத்த வீட்டுத் தாழ்வாரத்தில் விழுந்தது அது.

யார்டா அது? வீட்டுக்குள்ள பந்தடிக்கிறது? வெளியே வந்து  குரல் கொடுத்தாங்க ஆச்சி.

அப்பாவைத் தூக்கிவிடச்சொல்லி, அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபடி, 'நாந்தான் ஆச்சி' என்றான் அகில். அந்தப் பக்கமிருந்து பந்தும் பார்வையும் இந்தப்பக்கம் வந்துவிழ, பாசத்தைப் பரிமாறிக்கொண்டன பார்வைகள்.
 
அப்பாவின் முகத்தைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தான் அகில். பரிசாக, மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சண்முகம்.

********

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!

இதை யாரும் செய்யலாம்...எப்பவும் செய்யலாம். ஆனா, சுத்திலும் யாரும் இல்லைன்னு உறுதிபண்ணிக்கிட்டுச் செய்யணும். ஏன்னா, உங்களப் பாத்த அதிர்ச்சியில, யாராச்சும்,பயத்தில நடுங்கிப்போகவோ,இல்லைன்னா, உங்களுக்கு புத்தி தடுமாறிப்போச்சுன்னு நினைக்கவோ சான்ஸ் இருக்குது.

முப்பது வயசுக்குமேல ஆயிட்டாலே முகத்தசைகள்ல சுருக்கம், தொய்வு ஏற்பட ஆரம்பிச்சிடும்னு சொல்லுவாங்க. நல்ல ரத்த ஓட்டம் கிடைச்சா இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போடமுடியும்னும் சொல்றாங்க. குறிப்பா, கணினியில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு, கழுத்துக்குமேல போதுமான ரத்தஓட்டம் இல்லாம, கண்களில் சோர்வும், கழுத்தில் வலியும் ஏற்படும். தலைப்பகுதிக்கு ரத்தஓட்டத்தை ஏற்படுத்தும் இந்தப் பயிற்சி, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக இருக்கும்.

இதை சிங்காசனம்ன்னு சொல்லுவாங்க. அதாவது கண்ணை உருட்டி, நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு செய்யும்போது சிங்கம் மாதிரி இருக்குமாம். இந்தப் பயிற்சியைச்  செய்யும்போது, நீங்களே கண்ணாடியைப் பார்த்துக்கிட்டு, சிங்கமாத் தெரியுதா, அசிங்கமாத் தெரியுதான்னு முடிவு பண்ணிக்கிடுங்க :)

இப்ப சிங்காசனத்துக்கு வருவோம்...

வஜ்ராசனத்தில், அதாங்க முட்டிக்கால்போட்டு, மடக்கிய கால்களின்மேல் உட்கார்ந்துக்கோங்க.

கைகளைக் கால்முட்டியின்மேல் வைத்து, நிமிர்ந்து உட்காருங்க.

கண்களை நல்ல அகலமாத் திறங்க.

முடிஞ்ச அளவுக்கு, காற்றை நாசியில் உள்ளிழுத்துக்கோங்க.

சில வினாடிகளுக்கப்புறம், வாயைத் திறந்து, நாக்கை முடிஞ்ச அளவுக்கு வெளியே நீட்டியபடியே வேகமா,காற்றை வெளியே விடுங்க.

உங்களால முடிஞ்சவரைக்கும் அப்படியே இருங்க...விட்டுவிட்டு மூணு தடவை செய்யுங்க.




படத்திலிருப்பதுதான் சிங்கமுத்ரா...கண்களை அகல விரித்து, நாக்கை நீட்டி, முகத்தசைகளுக்குக் கொடுக்கும் பயிற்சி


இந்தப் பயிற்சியில் முகத்தசைகள் அத்தனையும் வேலை செய்வதால் நல்ல ரத்தஓட்டம் ஏற்படுவதோடு, தொண்டைப்பகுதிக்கும்,கண்களுக்கும் கூட ரொம்ப நல்லது.

அடிக்கடி செய்து, உங்களை நீங்களே பயமுறுத்திக்கணும்னு அவசியம் இல்லை. ஒருநாளைக்கு ரெண்டு தடவை போதும்.

இது, முகத்திலிருக்கிற  90 தசைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதன் அவசியம் உணர்ந்தவங்க கட்டாயம் செய்யுங்க. செய்யுமிடத்தில், எதிரே கண்ணாடி இருந்தா ரொம்ப நல்லது. (கண்ணாடிக்கெல்லாம் சேதாரம் வராது ...நம்புங்க )



                                                      *****************

வெள்ளி, 3 டிசம்பர், 2010

மக்கு மண்டூகம்!

'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறது வெயிலுமுத்து வாத்தியாரின் வழக்கம்.

 அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.  கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச் சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம் வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம் போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.

ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும் பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.

அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச் சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.

வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.

நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத் தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப் போவான்.

ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒரு நாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒரு தடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மா கிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

 தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு, (அதாங்க...மண்டூகம்) 
அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.

அதே மாதிரிதான், நல்லவர்களோட பல காலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்  முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.

அதே மாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத் தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தான்.
 
அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசி வரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.

                                               *********



புதன், 1 டிசம்பர், 2010

கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்ப்பா...


எப்பவும் நியூஸ் பேப்பர் படிச்சிட்டிருக்கிற கணவனிடம் மனைவி : நான் பொண்ணாப் பொறந்ததுக்கு ஒரு நியூஸ்பேப்பரா பொறந்திருக்கலாம். எப்பவும் உங்க கையிலயாவது இருந்திருப்பேன்.

கணவன் :நானும் அப்படித்தான் நினைக்கிறேன். தினமும் ஒண்ணு புதுசாக் கிடைக்குமுல்ல....

                                                                                *****

 மனைவி :- ஏங்க, நம்ம கல்யாண சர்டிஃபிகேட்டையே ரொம்ப நேரமா பாத்துட்டு உக்கார்ந்திருக்கீங்களே, ஏன்?

கணவன் : ஒண்ணுமில்லை...ச்சும்மா...

மனைவி : சும்மா சொல்லுங்க, அந்தநாள் ஞாபகந்தானே?

கணவன் :இல்லே...இதில, எங்கியாவது expiry date போட்டிருக்குதான்னு பாக்குறேன்...

மனைவி : ???????????

                                                                           *****

மருத்துவர் : உங்க கணவருக்கு, இப்ப பூரணமான ஓய்வு தேவை. அதுக்காக தூக்க மாத்திரை எழுதியிருக்கேன்.

மனைவி : இதை அவருக்கு எப்பக் கொடுக்கணும் டாக்டர்?

மருத்துவர் : அவருக்கா, இல்லீங்க...தூக்கமாத்திரை உங்களுக்கு.

மனைவி :?????

                                                                           *****

மனைவி : ஏங்க, உங்களோட கண்ணாடியை மட்டும் கழட்டிட்டீங்கன்னா, நீங்க இருவது வருஷத்துக்கு முன்னால இருந்தமாதிரியேதான் இருக்கீங்க...

கணவன் : ஓ அப்படியா, நான் கண்ணாடியைக் கழட்டினாதான்
நீயும் அப்ப பாத்தமாதிரியே தெரியிற.

                                                                            *****

இறந்ததும் நரகத்துக்குப்போன கணவன், அங்கிருந்த ஒரு காவல் பூதத்திடம் கேட்டானாம் : நான் என் மனைவிக்கு ஒரு ஃபோன் போடணும். அதுக்கு உங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கணும்?

பூதம் : இங்க வந்த பிறகுமா அந்த ஆசை உனக்கு? நரகத்தில இருந்து நரகத்துக்கு ஃப்ரீ தான்...நீ எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கோ.

                                                                             *****

அப்பா : கல்யாணத்துக்குப்பிறகு வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு...அப்பல்லாம், நான் பெரிய பணக்காரனா இருந்தேன்...

மகள் : இப்பமட்டும் என்ன ஆச்சு? நாம நல்லாத்தானே இருக்கோம்?

அப்பா : இப்ப உங்கம்மா பணக்காரியா இருக்கா...நான் அவளுக்குப் பாதுகாவலாத்தானே இருக்கேன் :(

                                                                           *****

மனைவி : ஏங்க, என் மனைவியும் உங்க குழந்தை மாதிரியேதான்னு உங்க நண்பர்கிட்ட சொன்னீங்களாமே? உங்களுக்கு எம்மேல அவ்வளவு பிரியமா?

கணவன் : அந்தக் குழந்தைமாதிரியே, நீயும் கையில கிடைச்சதைவச்சு அடிப்பேன்னு அப்படியேவா அவங்ககிட்ட சொல்லமுடியும்?


பி.கு : இது ஒரு மின்னஞ்சல் பகிர்வு.


செவ்வாய், 23 நவம்பர், 2010

ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...

'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.  அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....

அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.  கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.

ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய்.

இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்  என்பதை.  விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.

மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு  இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.

வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,  வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.

முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.

ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.

அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.

அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.

 சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.

பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.

ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.

இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்  எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.


2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும் பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.

இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.

பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம நிறைய கத்துக்கணும்.

**********


ஞாயிறு, 21 நவம்பர், 2010

நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...

இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்..

இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்...

துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில் (அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு, ஏறிய அந்தப் பெண்,  என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,  நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி.

இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை.

அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :) 

*********


வெள்ளி, 19 நவம்பர், 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின் பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க. 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக் கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப் போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலி தாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அது மட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன். ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப் பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டு முடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச் சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்  குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப் பாட்டியின் பேத்தி போலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறு குழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர் துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? 

********


திங்கள், 8 நவம்பர், 2010

மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...


கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...

முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.

அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.

அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.

அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.


அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)

அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.

அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.
அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,

திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,

வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.

இது எப்படி இருக்கு? இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்து முடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

***********


ஞாயிறு, 24 அக்டோபர், 2010

இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...



கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...


போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா...

கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.

இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.

*******************

நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...

'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.

என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...


*******************

அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...

சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன்.

பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.


******************

சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...

அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன்.

உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.


*********************

என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...

சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன்.

ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.


*******************

தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...
சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.

பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.

கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.


*********************


ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...

என்னது?? தங்கமா....???

உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????

*********************