யோகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!

இதை யாரும் செய்யலாம்...எப்பவும் செய்யலாம். ஆனா, சுத்திலும் யாரும் இல்லைன்னு உறுதிபண்ணிக்கிட்டுச் செய்யணும். ஏன்னா, உங்களப் பாத்த அதிர்ச்சியில, யாராச்சும்,பயத்தில நடுங்கிப்போகவோ,இல்லைன்னா, உங்களுக்கு புத்தி தடுமாறிப்போச்சுன்னு நினைக்கவோ சான்ஸ் இருக்குது.

முப்பது வயசுக்குமேல ஆயிட்டாலே முகத்தசைகள்ல சுருக்கம், தொய்வு ஏற்பட ஆரம்பிச்சிடும்னு சொல்லுவாங்க. நல்ல ரத்த ஓட்டம் கிடைச்சா இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போடமுடியும்னும் சொல்றாங்க. குறிப்பா, கணினியில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு, கழுத்துக்குமேல போதுமான ரத்தஓட்டம் இல்லாம, கண்களில் சோர்வும், கழுத்தில் வலியும் ஏற்படும். தலைப்பகுதிக்கு ரத்தஓட்டத்தை ஏற்படுத்தும் இந்தப் பயிற்சி, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக இருக்கும்.

இதை சிங்காசனம்ன்னு சொல்லுவாங்க. அதாவது கண்ணை உருட்டி, நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு செய்யும்போது சிங்கம் மாதிரி இருக்குமாம். இந்தப் பயிற்சியைச்  செய்யும்போது, நீங்களே கண்ணாடியைப் பார்த்துக்கிட்டு, சிங்கமாத் தெரியுதா, அசிங்கமாத் தெரியுதான்னு முடிவு பண்ணிக்கிடுங்க :)

இப்ப சிங்காசனத்துக்கு வருவோம்...

வஜ்ராசனத்தில், அதாங்க முட்டிக்கால்போட்டு, மடக்கிய கால்களின்மேல் உட்கார்ந்துக்கோங்க.

கைகளைக் கால்முட்டியின்மேல் வைத்து, நிமிர்ந்து உட்காருங்க.

கண்களை நல்ல அகலமாத் திறங்க.

முடிஞ்ச அளவுக்கு, காற்றை நாசியில் உள்ளிழுத்துக்கோங்க.

சில வினாடிகளுக்கப்புறம், வாயைத் திறந்து, நாக்கை முடிஞ்ச அளவுக்கு வெளியே நீட்டியபடியே வேகமா,காற்றை வெளியே விடுங்க.

உங்களால முடிஞ்சவரைக்கும் அப்படியே இருங்க...விட்டுவிட்டு மூணு தடவை செய்யுங்க.




படத்திலிருப்பதுதான் சிங்கமுத்ரா...கண்களை அகல விரித்து, நாக்கை நீட்டி, முகத்தசைகளுக்குக் கொடுக்கும் பயிற்சி


இந்தப் பயிற்சியில் முகத்தசைகள் அத்தனையும் வேலை செய்வதால் நல்ல ரத்தஓட்டம் ஏற்படுவதோடு, தொண்டைப்பகுதிக்கும்,கண்களுக்கும் கூட ரொம்ப நல்லது.

அடிக்கடி செய்து, உங்களை நீங்களே பயமுறுத்திக்கணும்னு அவசியம் இல்லை. ஒருநாளைக்கு ரெண்டு தடவை போதும்.

இது, முகத்திலிருக்கிற  90 தசைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதன் அவசியம் உணர்ந்தவங்க கட்டாயம் செய்யுங்க. செய்யுமிடத்தில், எதிரே கண்ணாடி இருந்தா ரொம்ப நல்லது. (கண்ணாடிக்கெல்லாம் சேதாரம் வராது ...நம்புங்க )



                                                      *****************

சனி, 18 செப்டம்பர், 2010

அழகாயிருக்க இதெல்லாம் அவசியம்!!!



அழகாயிருக்கணுமென்ற ஆசை அனைவருக்கும் பொதுவானது. சமீபத்தில் ஆரோக்கியவாழ்வு பெண்களும் பெறலாம் என்ற யோகாசனம் பற்றிய நூலைப் படிக்கையில், நூலாசிரியர் டாக்டர் ஹேமா எழுதியிருந்த விஷயங்கள்தான் இவை...மொத்தத்தில் ஒரு யோகியைப்போல் வாழச்சொல்வதாகப்பட்டது எனக்கு. நீங்களும் படிச்சுப் பாருங்க...



பெண்களில் அழகுடன் இருக்க ஆசைப்படாதவர் யார்?

மனதில் ஏற்படும் உற்சாகம்தான் மனதின் அழகை அதிகப்படுத்தி முகத்தில் பிரதிபலிக்கும்.யோகப்பயிற்சியின்மூலம் மனம் அமைதியாகிறது. மிகச்சிறிய விஷயங்களுக்காக மன உளைச்சல்பட்டவர்கள் யோகப்பயிற்சிக்குப்பிறகு, அமைதியோடு நிதானத்துடன் எதையும் அணுகுவார்கள்.சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இயங்குபவர்கள் சாதனை புரிந்து, மன உற்சாகம் பெற்று அகத்தின் அழகு முகத்தில் தெரியவரும்.

மேலும், நமது வலது மூளை தூண்டப்பட்டு,கருணை, அன்பு,பிறர்க்கு உதவும் பாங்கு முதலியன வளரும். வெறுப்பு, கொபம், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.நாம் வாழ்க்கையை நல்லமுறையில் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.மன அமைதிபெற நம் ஆன்றோர்கள் கூறிய சில வழிகள்...

* பிறரைக் குறைகூறாதீர்கள்

*கடவுள் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று உணருங்கள்.

*பொறுப்புக்களிலிருந்து தட்டிக்கழிக்காமல் உறுதியுடன் நிறைவேற்றுங்கள்.

*தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

*யாருடனும் வீண் விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

*எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

*வெற்றியின் மிதப்பில் மிகையாக இருப்பதையும், தோல்வியில் துவளுவதையும் நிறுத்துங்கள்.

*எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பிறர்க்கு முடிந்தமட்டும் உதவுங்கள்.

*பொறுமையாயிருங்கள்.

*திருப்தியுடன் இருங்கள்.

*பிறர் பொருளுக்கு ஆசைப்படவேண்டாம்.

*உலகம் அநித்தியம், மாயை என்பதை உணருங்கள்.

*எதற்கும் வருத்தப்பட்டு, சக்தியை வீணாக்காதீர்கள்.

*பிறர் உங்களுக்குச் செய்த கெடுதலையும், நீங்கள் பிறருக்குச்செய்த நல்லதையும் உடனுக்குடன் மறந்துவிடுங்கள்.

* கடவுளை நம்புங்கள்.

*எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

*நிகழ்காலத்தில் வாழுங்கள்.கடந்தகாலத்தின் நினைவுகளிலும், எதிர்காலத்துக் கனவுகளிலும் மூழ்கிவிடாமல் இருங்கள்.

இவையெல்லாம் யோகப்பயிற்சிமூலம் தானாகவே உங்களைத் தேடிவரும்.உடல்வாகும் உள்ள அழகும் பெற்று வனப்புடன் திகழலாம்.

*****