வெள்ளி, 3 டிசம்பர், 2010

மக்கு மண்டூகம்!

'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறது வெயிலுமுத்து வாத்தியாரின் வழக்கம்.

 அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.  கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச் சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம் வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம் போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.

ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும் பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.

அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச் சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.

வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.

நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத் தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்தி பண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப் போவான்.

ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒரு நாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒரு தடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மா கிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

 தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு, (அதாங்க...மண்டூகம்) 
அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.

அதே மாதிரிதான், நல்லவர்களோட பல காலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்  முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.

அதே மாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத் தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தான்.
 
அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசி வரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.

                                               *********



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக