ஞாயிறு, 21 நவம்பர், 2010

நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...

இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்..

இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்...

துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில் (அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு, ஏறிய அந்தப் பெண்,  என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,  நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி.

இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை.

அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :) 

*********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக