ஞாயிறு, 24 அக்டோபர், 2010

இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...



கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...


போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா...

கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.

இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.

*******************

நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...

'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.

என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...


*******************

அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...

சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன்.

பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.


******************

சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...

அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன்.

உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.


*********************

என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...

சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன்.

ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.


*******************

தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...
சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.

பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.

கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.


*********************


ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...

என்னது?? தங்கமா....???

உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????

*********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக