திங்கள், 4 ஜனவரி, 2010

புர்ஜ் துபாய் கோலாகலம்!

துபாயில் எப்போது,என்ன நடந்தாலும் அது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும்வகையில்தான் அமைகிறது, அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாகயிருந்தாலும் சரி. நேற்றைய கோலாகலம் அதற்கெல்லாம் சிகரம்வைத்தாற்போல இருந்தது என்று சொன்னால் அது கொஞ்சம்கூட மிகையாகாது.

ஆவலுடன் எதிர்பார்த்த அனைவரின் எண்ணத்தையும் பூர்த்திசெய்வதுபோல, உலகின் மிக உயரமான புர்ஜ் துபாய் நேற்று துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களால் மிகவும் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

828 மீட்டர் உயரம், 160 தளங்கள்,1.5 பில்லியன் டாலர்கள் பொருட்செலவில், ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பினால் உண்டாக்கப்பட்ட பூமியின் மிக உயரமான பிரம்மாண்டம் இது.

ஆயிரக்கணக்கான வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு ஐந்துமணிக்கே விழா தொடங்கப்பட்டாலும், இரவு ஏழு மணிக்குமேல்தான் சிறப்பு விருந்தினர்கள் வருகைதர நிகழ்ச்சிகள் களைகட்டத் துவங்கியது.புர்ஜ் துபாயின் விளக்குகளை எரியவைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் மன்னர்.


 


அமீரகத்தின் தேசிய கீதத்துக்கு அழகாக வளைந்து நெளிந்து நடனமாடி மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தின அங்கிருந்த நீரூற்றுகள்.

 


 


அப்புறம், புர்ஜ் துபாய் ஒரு பாலைவன ரோஜாவின் வடிவத்தில் உருவாகி வளர்ந்த கதையை ஒலியும் ஒளியுமாக அங்கே அமைக்கப்பட்டிருந்த திரைகளில் காட்டினார்கள். புர்ஜ் துபாய் உருவான வரலாறைப் பெருமையுடன் பேசினார் மன்னர்.

கதை சொல்லச்சொல்ல நீரும் நெருப்பும் போட்டிபோட்டுக்கொள்ள நீரூற்றுகளும் மின்னும் லேசர் ஒளிஓவியமுமாக, கோலாகலம் தொடங்கியது.

 


 


 


 


 


 



பின்னர், சுற்றிலுமிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு அந்த இடத்தை வாணவேடிக்கைகள் அலங்கரிக்க மக்களின் ஆச்சர்யக் கூச்சலும் கரகோஷமும் விண்ணைப்பிளந்தது.நிஜமாகவே சொற்களுக்குள் அடங்காத அற்புதமான காட்சிகள்.புர்ஜ் துபாயின் அடிமுதல் நுனிவரை ஒளிப்பூக்கள் சிதற, விண்ணை வெளிச்சமாக்கியது வாணவேடிக்கை. கண்ணிமைக்க மறந்தது மக்கள்கூட்டம்.

 


 


 


கண்களை நிறைத்த காட்சிகளால் சொர்க்கம்போலத்தான் தெரிந்தது அந்த இடம்.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக