சனி, 24 அக்டோபர், 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்) யாரை, யாரு, எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும் புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு. என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு. ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்) எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அது மாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப் பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து, பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு, மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம், அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு, நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக் கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு என்ற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில் (பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க... நன்றி :)

*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக