செவ்வாய், 19 ஜனவரி, 2010

மருந்தெல்லாம் மாறிப்போச்சு!!!

ஆண்டு விடுமுறையில ஊருக்குவந்தா முதல் நாலைஞ்சுநாள் நம்மளைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு. சாப்பாடு, தண்ணீர் வித்தியாசத்தால உடம்புசரியில்லாமப் போறது இப்பல்லாம் வாடிக்கையாயிடுச்சு.

போனவருஷமும் இதையெல்லாம் கடந்து, உறவுக்காரங்க வீடுகளுக்கு விசிட் அடிக்கத்தொடங்கியிருந்தோம்.விருந்து, உபசாரமெல்லாம் கொஞ்சம் அதிகமாகிப்போக, கடைசியில் அஜீரணம்தான் மிஞ்சியது. ஆளாளுக்கு டைஜின் சாப்பிடு, ஜெலுசிலைக் குடி, ஈனோவைக் குடின்னு ஏகப்பட்ட அறிவுரை சொன்னாங்க. "எலுமிச்சம்பழச்சாறில் உப்புப்போட்டுக் குடிக்கலாமே" என்றேன் நான். ஐயே, அதெல்லாம் பாட்டி காலத்து வைத்தியம். பட்டுன்னு பலன் குடுக்காது. இது உடனே கேட்கும்ன்னுசொல்லி, மாத்திரையைக் கையில திணிச்சாங்க.

ஆஹா,இப்பல்லாம் நம்ம ஊர்ல,அறிவுரை மாதிரியே மருந்து மாத்திரையும்ம் தாராளமாய்க் கிடைக்கிதேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்கான சாமான்கள் இருக்கோ இல்லையோ, இப்பல்லாம், எல்லார் வீட்டிலும் அவரவருக்கென்று ஒரு வண்டி மாத்திரை இருக்கிறது. இதை,அவங்க சாப்பிடுறதுமில்லாம அடுத்தவங்களுக்கு ரெக்கமெண்டேஷன் வேற பண்றாங்க...

அதிலும், சின்னக்குழந்தைங்க இருக்கும் வீடுன்னா சொல்லவே வேண்டாம். அலமாரி நிறைய அடுக்கிவச்சிருக்காங்க மருந்துகளை.ஒண்ணு வேலை செய்யலேன்னா இன்னொண்ணுன்னு ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு அதில.

முன்னெல்லாம், சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில, சுக்கு, மிளகு, திப்பிலி,அக்கரா, சித்தரத்தை, ஜாதிக்காய், மாயக்காய்ன்னு மருந்துப் பொருட்கள் உள்ள ஒரு டப்பாவும், அதை உரசிக்கொடுக்க ஒரு உரைகல்லும் கட்டாயம் இருக்கும்.பிள்ளை வளர்ப்பான் என்று சொல்லுகிற வசம்புக்கு இதில் ஸ்பெஷல் இடம் உண்டு. அதை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, உரசி நாக்கில் தேச்சு விடுவாங்க. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பொருமலுக்கும், வாய்வுக் கோளாறுகளுக்கும் வசம்பு அருமருந்துன்னு சொல்லுவாங்க.

வாரத்தில் ரெண்டு நாள்,இந்த மருந்துகளை உரைகல்லில் உரசி, நாக்கில் தடவி விடுவாங்க.சிலர், இந்த மருந்துகளோடு சுத்தமான தங்கத்தையும் கொஞ்சம் உரசிக்கொடுப்பாங்க. பிள்ளை தளதளன்னு தங்கமாட்டம் இருக்குமாம் :)

முன்னெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில, வீட்டில அம்மா, பாட்டின்னு குழந்தைகளைக் கொண்டாட ஆள் இருப்பாங்க. இன்று, அவசர யுகம்... அனுபவமும், அறிவுரை சொல்ல ஆளும் இல்லாத இளம் பெற்றோர்கள். ஒரு பிள்ளை பெற்று வளர்ப்பதற்குள் 'போதும்டா சாமீ' என்று சலிச்சுக்கிறாங்க.மூணு குழந்தைகள் இருக்குன்னு சொன்னா, உங்களுக்கு கோயிலே கட்டலாம்னு அதிசயப்படுறாங்கன்னா பாருங்களேன்...

ஓடியாடி வேலைசெய்தா உடம்புக்கு நல்லது, கூடிவிளையாடினா குழந்தைகளுக்கு நல்லது. ஆனா, ரெண்டுமே இல்ல இப்போ. குனிஞ்சு நிமிர்ந்து வேலைசெய்றதையே மறந்தாச்சு நாம. கூட்டுப்பறவைகளா மாறிட்டாங்க குழந்தைங்க. தொலைக்காட்சியும் கணினியும்தான் வீட்டில் ஓயாமல் உழைக்கிறதாகிப்போச்சு.

வாரம் ஒருமுறை சுக்குக்கஷாயம், மாசத்துக்கொருதடவை வேப்பிலை மருந்து, ஜலதோஷம் வந்தா சுக்குக்காப்பி,வயிற்றுப்பிரச்சனைன்னா, ஓமத்திரவம்ன்னு சின்னச்சின்ன, எளிதாகக்கிடைக்கிற பொருள்களாலேயே சுகப்படுத்திக்கொண்டோம் அந்தக்காலத்தில்.

ஆனா இப்ப,சின்ன விஷயத்துக்கெல்லாம், ஏகப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு, பின்னாடி வரப்போகும் பக்கவிளைவுகளின் தீவிரம் புரியாமலிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. பெரியவர்கள் சொன்னால் கேட்கக்கூடிய பொறுமையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் இன்ஸ்டன்ட் ரெமெடி வேணும். அதுமட்டும்தான் அவங்களுக்கு முக்கியம்.

ஆறேழு தும்மல் போடுறதுக்குள்ள அதிக சக்தியுள்ள ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட்டு, வெளியே வரவேண்டிய நீரை உள்ளேயே அழுத்தி, வயிற்றுப் பாதிப்பு மற்றும் இன்னபிற விஷயங்களையும் இலவச இணைப்பாக வரவழைத்துக்கொள்கிறார்கள்.

கொள்ளை விலைக்கு மருந்தையும் வாங்கி, சொல்லாமலே கூடவரும் பாதிப்புகளையும் அனுபவிப்பதைவிட, சரியான நேரத்தில் தூங்கி, சரியான உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு, அளவான உடற்பயிற்சியோடு அவசியமான ஆரோக்கியமுறைகளைக் கடைப்பிடிச்சா, அநாவசியப் பிரச்சனைகள் பலவற்றை நாம தவிர்க்கலாம்.

அதையும் மீறி, சீரியசான பிரச்சனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கலாம், தவறில்லை. ஆனா, சின்னச்சின்ன விஷயங்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம்கொடுத்து, ஏதேதோ மருந்துகளைச் சாப்பிட்டு எதிர்ப்பு சக்தியைக் கெடுத்துக்கொள்ளாமலிருப்பது ரொம்பரொம்ப முக்கியம்.

***************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக