செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல் நினைவுகள்!

புத்தாண்டின் பூரிப்பையும் அள்ளிக்கொண்டு பொங்கல் வந்தாச்சு...ஊர்ல இருந்திருந்தா இந்நேரம் உட்காரவே நேரமிருந்திருக்காது. இங்கேயிருப்பதால் சாவகாசமா பதிவே போடமுடியுது :)

பொங்கலன்று, அமீரகத்திலிருந்து,பாதிக் காசில் நம்ம ஊருக்கு போன் பண்ணலாம்ன்னு இங்குள்ள தொலைத்தொடர்புத்துறை (Etisalat)அறிவித்ததைத் தவிர பொங்கலுக்கு வேற ஒண்ணும் ஸ்பெஷலா இல்லை. முன்னெல்லாம், ஊரிலிருக்கும்போது, மார்கழி பிறந்ததுமே பொங்கலுக்கான கோலாகலம் கூடிவிடும்.

வெள்ளையடிக்கிறது,வேண்டாத சாமான்களைக் கழிக்கிறது,பரணிலிருக்கிற பாத்திரங்களையெல்லாம் எடுத்துக் கழுவிக் காயவைக்கிறதுன்னு வேலைக்குப் பஞ்சமே இருக்காது.அத்தோடு பண்டிகைக் காலத்து சுவாரசியமும் கொஞ்சமும் குறையாம இருக்கும். புதுசுபுதுசா கோலம் போடுறதும், கலர்ப்பொடி வாங்குவதும், வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பிவைப்பதுமாக உற்சாகம் களைகட்டும்.

இப்பல்லாம் கேஸ் அடுப்பில், குக்கர் பொங்கல் வச்சாலும், அந்தநாட்களில், களிமண்ணில் பொங்கல் கட்டிசெய்து,காவிப்பட்டை கட்டிய முன் வாசலில் அடுப்புக்கூட்டி, பனை ஓலையை விறகாக்கிப் பொங்கல் வைத்த ஞாபகம் வராமலில்லை.

அடுப்புக் கட்டி செய்யக் களிமண் கொண்டுவந்ததும், கட்டி செய்யிறாங்களோ இல்லையோ, சின்னச்சின்னதா சட்டி பானையும், செப்பு சாமான்களும் செய்து காயவைத்த நினைவுகள் இன்னும் மனசில் காயாமலிருக்கிறது.

ஒதுங்கவைக்கிறேன்னு சாமான்களை உடைச்ச நினைவுகளையும், கழுவி வைக்கிறேன்னு,நிலைக்கண்ணாடியைக் கொண்டுபோய் வாய்க்கால் தண்ணீரில் அமிழ்த்திக் காலிபண்ணிய கதையையும் என்றைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் மிஞ்சும்.

அடுப்படி பிளாஸ்டிக் டப்பாக்களைக் கழுவுறேன்னு சொல்லி,நல்லபுள்ளையா வாங்கிட்டு வாய்க்காலுக்குப்போயி, டப்பாக்களைக் கப்பலாக்கிக் கூட்டாளிகளுடன் போட்டிபோட்டு விளையாடிய நினைவுகளெல்லாம் இப்போதும் மனசில் ஏக்கத்தை வரவழைக்கத்தான்செய்கிறது.

இப்பல்லாம் நம்ம ஊரில்கூட வருஷாவருஷம் வெள்ளையடிக்கிறதும்,வாசலில் காவிப்பட்டைபோட்டு அலங்கரிக்கிறதும், வெளிவாசலில் பொங்கல் வைக்கிறதும் குறைஞ்சிருந்தாலும், தமிழர் திருநாளான பொங்கலின் வருகை எல்லோருக்கும் பூரிப்பைத் தருவதாகத்தான் இருக்கிறது.

மஞ்சளும் மலர்களும் மணம்சேர்க்க, பொங்கலும் கரும்பும் சுவைகூட்ட நாம் எங்கேயிருந்தாலும் பொங்கல் திருநாளின் பெருமைகள் கொஞ்சமும் குறையாமல், வளர்ந்துவரும் சந்ததிக்கும் நம் பழமையான பாரம்பரியத்தை எடுத்துச்சொல்லும் கடமையுணர்வோடு தைத்திருநாளைக் கொண்டாடுவோம்.

மனம்நிறைந்த மகிழ்ச்சியுடன் அத்திருநாளைக் கொண்டாடிட,
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக