சனி, 22 மே, 2010

ஹர்ஷினியின் கடைசி வார்த்தைகள்



"At the airport and blah =_= Only thing to look forward to is the rain'"

விமானத்தில் ஏறுமுன் கடைசியாக,தன்னுடைய அலைபேசிவாயிலாக ட்விட்டரில் ஹர்ஷினி பதிவு செய்த வார்த்தைகள் இதுதான். மழையை எதிர்பார்த்து மங்களூருக்குப்போன பதினெட்டு வயதுப் பூ, நெருப்பில் கருகிப்போனது கண்ணீர்க்கதை.

ஹர்ஷினி பூஞ்சா...என் மகளுடைய பள்ளியில் சென்ற வருடம் படித்து முடித்த பெண். சிலுசிலுவென்று அந்தப் பெண்ணின் பேச்சும்கூட மழை மாதிரிதான் இருக்கும் என்றுசொல்லி மறுகுகிறாள் என் மகள். அப்பா அம்மாவுடன் உறவினரின் கல்யாணத்துக்கு ஊர்வந்த குடும்பம் மொத்தமாக அழிந்துபோயிருக்கிறது.

இதேமாதிரி என் மகனின் பள்ளியில் படித்து, தற்போது ப்ளஸ் 2 முடித்து, நம் ஊரில் கம்ப்யூட்டர் படிப்புக்காக வந்த அக்ஷய் போலார், தன் அம்மாவுடனும் பாட்டியுடனும் அதே விமானத்தில் பயணித்து இறந்துபோயிருக்கிறான். எங்கே திரும்பினாலும் குழந்தைகள் பெரியவர்களென்று எல்லோரிடமும் இதே பேச்சுதான்.

ஆண்டு விடுமுறைக்குப்போக ஆவலாயிருந்தவர்கள் மனதிலெல்லாம் மருட்சி நிறைந்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்யப்போகிறோமோ என்று.

கடைசியாக நண்பரொருவர் சொன்ன வார்த்தைகள் மனதைத் தைத்தது.கொத்துக்கொத்தாக இறந்துபோனவர்கள் பலர், இங்கே இருந்தபோதும் உறவுகளுக்காக உழைத்தார்கள், இப்போது செத்தும் பல லட்சங்களாக அவர்களின் பாக்கெட்டை நிறைக்கப்போகிறார்கள். பணமிருக்கும்வரைக்கும், உறவுகளின் மனதில் 
அவர்களின் நினைவிருக்குமென்று.

******


செவ்வாய், 11 மே, 2010

நான் அம்முவின் அம்மா



அம்மாவாயிருக்குறது ஒண்ணும் சுலபமில்லீங்க...அதுக மூணையும் நா விட்டுட்டு வந்தப்ப, பெரியவனுக்குப் பத்து வயசிருக்கும். ஆறு வயசிலயும் ரெண்டு வயசிலயுமா அடுத்த ரெண்டும் பொண்ணுக. சின்னது அம்மு, என்ன விட்டு எப்பிடி இருக்கப்போகுதோன்னுதான் தவிச்சுப்போனேன். ஆனா, ஏதோ அடியும் மிதியும்பட்டு அதுவா வளந்திருச்சு.

அவுகப்பாவும் புள்ளைங்க மேல பாசமில்லாதவுக கிடையாது. நல்லாத்தான் பாசமாயிருப்பாக. ஆனா, நா விட்டுட்டு வந்தப்புறம்தான் முழுசா மாறி்ப்போயிருக்காக. எனக்குப் பிறகு என் தங்கச்சியக் கல்யாணம் கெட்டிக்கிட்டவுக, அவளுக்கு ரெண்டு புள்ளைங்க பிறந்ததும், என்னோட புள்ளைகளுக்கு மாற்றாந்தகப்பன் மாதிரி மாறிப்போனதுதான் வினையாகிப்போச்சு.

நா இருந்தப்ப, புள்ளைகளோட விளையாட்டு சைக்கிள்கள நிறுத்த நாங்க கட்டுன முடுக்கு அறைதான், இப்ப என்னோட மூணு புள்ளைகளுக்கும் இருப்பிடமாயிருச்சுன்னு சொன்னாக. மனசு தாங்கல. மத்த ரெண்டும் பரவாயில்ல, சித்திக்காரி சொல்லக்கேட்டு, அவளுக்குப் பணிவிடைசெய்து பொழைக்கப் பழகிடுச்சுங்க. கடைக்குட்டி மட்டும்தான் சித்திகாரிகிட்டயும், அப்பா கிட்டயும் அடி வாங்கிச் சாகுதுன்னு தெரிஞ்சதும் அடக்கமுடியல எனக்கு.

அன்னிக்கிப் பாருங்க, தென்னை மரத்தில கட்டிவச்சு சாத்துசாத்துன்னு சாத்தியிருக்காக. சின்னப்புள்ள, அரிசி மூட்டையில ஏறி வெளயாடுனப்போ, கடைக்கு வாங்கின எண்ணெய்க்குள்ள அரிசியக் கொட்டிவிட்டிருச்சாம். ராத்திரிபூரா வீட்டுக்குள்ள கூப்பிடாம, வெறும் வயிறா வெளியவே கட்டிவச்சிருக்காக. பாக்கப்பாக்கத் தாங்கல எனக்கு.

சின்னதுல, அம்மு அம்முன்னு எப்பவும் எங்கிட்டயே வச்சிருப்பேன். அதுவும் அம்மா அம்மான்னு சுத்திவரும். அதோட நிலமையப் பாத்தீகளா? இப்பல்லாம் வீட்ல வேல பாக்கிறதுக்காக அதுங்கள ஸ்கூலுக்குக்கூட அனுப்புறதில்ல. என்னோட ஆசைமகன் இப்ப அவுகளோட கடைக்கு சம்பளமில்லாத வேலக்காரன். நா மட்டும் இருந்திருந்தா, அதுக்கு அவன் இப்ப சின்னமுதலாளி.

கடக்குட்டி அம்முவுக்கும் வயசு பதினாறாயிருச்சு. அப்பப்போ பின்னாடி வீட்டுக்குப் அவ போறது தெரியுது. அங்க வாடகைக்கு இருக்கிறவுக ரொம்ப நல்லமாதிரின்னு தோணுது. அம்முவோட கஷ்டத்தைப் பாத்துட்டு அவளுக்கு அனுசரணையா இருக்காக போல. அவுகளும் ஒருநாள் வீட்டைக் காலிபண்ண, அம்முவும் அன்னிக்கே வீட்டைவிட்டுப் போயிட்டா போல. ஒண்ணு தொலஞ்சிதுன்னு கண்டுங்காணாம இருந்துட்டாக அம்முவோட அப்பாவும் அவரைக் கட்டிக்கிட்ட எந்தங்கச்சியும்.

அனுசரணையா இருந்த அந்த பின் வீட்டுக்காரவுக, அம்முவைக் கொஞ்ச நாள் கழிச்சு அவுங்க மகனுக்கே  கட்டிவச்சிட்டாகளாம். அம்மு அதுக்கப்புறம் கொஞ்சநாள் சந்தோஷமாத்தான் இருந்திருக்கா. ரெண்டு புள்ளைக அவளுக்கு. அவ கட்டிக்கிட்ட அந்த கிறிஸ்தவப் பையனுக்கும் ஆயுசு கெட்டியில்லாம இருந்திருக்கு. நாலே வருஷத்துல அம்முவையும் ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு செத்துப்போயிட்டான்.

அம்மு அதுக்கப்புறம், ஒரு பாதிரியார் வீட்டுல வீட்டுவேல செஞ்சுகிட்டே, அவங்க நடத்துற பள்ளிக்கூடத்துல புள்ளைகளைப் படிக்கவச்சிருக்கா. அம்முவ மாதிரி இல்லாம அவுக ரெண்டுபேருக்கும் நல்ல படிப்பு அமைஞ்சிருச்சு. ரெண்டு பிள்ளைகளும் நல்லாப் படிச்சிருச்சுக.
அம்மாவ நல்லபடியாப் பாத்துக்கணும்னு ஒரு உத்வேகம் அதுங்களுக்கு. படிப்பு முடிஞ்சதும் அந்தப் பாதிரியார் நல்ல பையன் ஒருத்தனுக்கு அம்முவோட மகளைக் கட்டிவச்சாரு. அம்முவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

அன்னிக்கி, மகளும் மருமகனும் விருந்துக்கு வாராங்கன்னு அம்முவுக்கு ஒரே பரபரப்பு. சாமான் லிஸ்ட மகன்கிட்ட கொடுத்து வாங்கியாரச் சொல்லிட்டு, பம்பு ஸ்டவ்வப் பத்தவைச்சா. அடுப்பு வேகமா எரியட்டும்னு காத்து அடிச்சுக்கிட்டிருந்தா. மக வரப்போற சந்தோஷத்துல நிறையவே வேகமா எரியவிட்டா.

'டம்'முன்னு பெருஞ்சத்தம். சேலையில பிடிச்சு கொஞ்சங்கொஞ்சமா அம்முவ விழுங்கிச்சு நெருப்பு. கடைக்குப்போன மகன் வந்து பாக்கிறான். கரிக்கட்டையா கிடக்கா அம்மு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறாக. கூடவே நானும்போறேன். போதும், இத்தன கஷ்டப்பட்டது போதும். அம்மாகிட்ட வந்திரு அம்மு. அனத்திக்கிட்டே இருக்கேன் நான்.

டாக்டர் வந்து பாத்துட்டு கைய விரிச்சிட்டார். அம்முவோட மகன், அம்மாவப் பாக்க முடியாம வெளிய நின்னு அழுதுகிட்டிருக்கான். மகனைப் பாக்கணும்னு சைகை காட்டுனா அம்மு. அவன் கிட்ட வந்து பார்த்ததுதான் தாமதம். பட்டுன்னு நின்னுருச்சு மூச்சு. விருந்துக்கு வரதா சொன்ன மகளும் மருமகனும் அழுதுகிட்டே ஓடியாராங்க.

ரெண்டு கைகளையும் விரிச்சுகிட்டு, வா அம்மு, வா... அம்மாகிட்ட வந்துட்ட, இனி உன்ன நான் பாத்துக்கிறேன்னு வாரி அணைக்கிறேன். ஆனா, "ஐயோ, உன்ன மாதிரியே நானும் என் மக்கள தவிக்கவிட்டுட்டு வந்துட்டனே" ன்னு அப்ப நான் அழுதமாதிரியே 'ஓ'ன்னு அழுதுகிட்டிருக்கா அம்மு.

***********

திங்கள், 22 மார்ச், 2010

தண்ணீரின்றித் தவிக்கிற தெய்வங்கள்!

 


களத்துமேட்டுல ஊரே கூடிக்கிடந்தது. பூசாரியும் பண்ணையாரும் பக்கத்துலபக்கத்துல உட்கார்ந்து மும்முரமா ஏதோ பேசிக்கிடிருந்தாங்க. வெடிச்சுக்கிடந்த வயல்காடும், குடிக்கத் தண்ணியில்லாம வறண்டுபோன கிணறுகளும்தான் மொத்த மக்களும் பேசிக்கிற விஷயமாயிருந்திச்சு. பட்டுப்போன பனைகளும், மொட்டைமொட்டையாய் மரங்களும் மக்களோடு சேர்ந்து மழைவேண்டி நின்றுகொண்டிருந்தன.

மாரியம்மன் கோயில்ல மழைக்காக ஒரு பூசை போடலாம்னு மனசு ஒத்து முடிவுபண்ணினாங்க பெரியவுங்க. காய்ஞ்சு கிடந்த குளத்தில் கிரிக்கெட் விளையாடுற பிள்ளைகள்மட்டும் மழையெல்லாம் வேண்டாம்னு மனசுக்குள் வேண்டிக்கிட்டிருந்தாங்க. வைகாசி மூணாம் வாரம் மாரியம்மனுக்குப் பொங்கல் வச்சு பூசை நடத்த ஏற்பாடாயிருச்சு.

வயசுப்பொண்ணுகளும் வயசானவுகளும் பொங்கல் வைக்கிற அன்னிக்கி, குளிக்க மொழுக,கோயிலுக்குக் கொண்டுபோக எங்கேருந்து தண்ணி எடுக்குறதுன்னு இப்பவே கவலையோட பேசிக்கிட்டிருந்தாங்க. அம்மனுக்கு அபிசேகம் பண்ண அஞ்சாறு குடமாவது தண்ணி வேணும். அதையும் சேர்த்துக்கங்கம்மான்னு சந்தடியில் நுழைந்தார் கோயில் பூசாரி.

மொத்தத்தில எல்லாரும் மழை வேண்டி மாரியம்மனுக்குப் பூசை செய்ய முழுமனசோடு தயாரானாங்க.

அப்ப, கூட்டத்தைக் கிழிச்சுக்கிட்டு "ஏய்ய்ய்ய்..."ன்னு ஒரு அலறல் சத்தம். என்னன்னு பார்த்தா, வடக்குக்கரைக் கோயில் சாமியாடி, ரெண்டு கையாலயும் தலையப் புடிச்சிக்கிட்டு ஆடத்தொடங்கிட்டாரு.

"எல்லாருமாச் சேந்து என்ன மறந்திட்டீங்களேடா...தண்ணி வேணுமுன்னா தாயை நினக்கிறீங்க. ஆனா, என்ன நினைக்கணும்னு யாருக்குமே தோணலியா? கறுத்த கிடாவெட்டி, கலயத்துல கள்ளுவச்சு என்ன நெனைச்சுக் கும்புட்டுருந்தா நடக்குமாடா இப்பிடி?

என்னோட கோவத்தாலதான் இந்த ஊரே இப்பிடி பொட்டல் காடாக்கியிருச்சு. இன்னும் என்னை கவனிக்கலேன்னா இந்த ஊரே இல்லாம போயிடும். சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்..." என்று சொன்னபடி சுழன்று நிலத்தில் விழுந்தார் அவர். விழுந்த அவர் வாய் தண்ணி, தண்ணின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிது.

"ஏய் யாராவது தண்ணி கொண்டு வாங்கப்பா" என்று ஆளாளுக்கு திரும்பி்ப் பார்த்துச் சொன்னபடி விழுந்த சாமியாடியை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க. யாரும் தண்ணி கொண்டுவந்து கொடுத்தபாடில்லை. ஆக்ரோஷமாகக் கத்தியதில் அநியாயத்துக்கு வறண்டுபோயிருந்த தொண்டையோடு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமியாடியவர்.

இன்னும் என்ன நடக்குமென்று வேடிக்கை பார்க்கும் ஆசையில் அவருக்குப் பின்னால் நடந்தது தண்ணீருக்காக வந்த கூட்டம். வானத்தில், ஆங்காங்கே தென்பட்ட ஒற்றைஒற்றை மேகங்களும்கூட சாமிக்கும் மக்களுக்குமான சண்டையில் சிக்கிக்கவேண்டாமேன்னு வேகவேகமாய்க் கலைய ஆரம்பித்தன.

**********

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என்னோட மகனுக்கும் இந்த வயசுதான் இருக்கும்...!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை... 

பார்க் பெஞ்சுகளில் அமர்ந்து பொருளாதாரத்தை அலசுபவர்களும், கருமமே கண்ணாக நடைப்பயிற்சி செய்பவர்களும், குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு, குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டிருக்கும் பெற்றவர்களுமாக நிறைந்திருந்தது பூங்கா.

சுற்றிச்சுற்றிவந்து கீழே கிடக்கிற குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தம்செய்துகொண்டிருந்தார் சீருடை அணிந்த பணியாளர் ஒருத்தர்.பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளைகள் தமிழில் பேசியதைக் கவனித்திருப்பார்போலிருக்கிறது. பக்கத்தில் வந்து, 'நம்ம ஊராம்மா...' என்றார். திரும்பிப்பார்த்துத் தலையசைத்தேன். எனக்கு விழுப்புரம் பக்கம்... நீங்க எங்கேம்மா? என்றார். எனக்கு திருச்செந்தூர் பக்கம் என்றேன்.அதற்குள்,முந்திக்கொண்டு என்மகன், திருச்சி என்றான்.

அம்மாவுக்குத் திருச்செந்தூர், உனக்குத் திருச்சியா என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் அவர். 'ஆமாங்க, அவன் பிறந்த ஊரை அவனோட ஊர்ன்னு சொல்றான்' என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், பின்னாலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம். ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் ஒரு சின்னப்பையன். பக்கத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் வேகமாய்ப்போய் அந்தக் குழந்தையிடம் ஹிந்தியில்,உங்க அம்மா எங்கே என்று கேட்டார். அந்தச் சிறுவனுக்கு விளங்கவில்லை. தனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டுப்பார்த்தார். அதற்கும் பதில்சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தான் பையன். 'இறக்கிவிட்டா புள்ள தனியா எங்கேயாவது போயிடக்கூடாதுல்ல...' என்று என்னிடம் சொல்லிவிட்டு,சுற்றுமுற்றும் பார்த்தார் அவர்.

அதற்குள் எங்கிருந்தோ வந்துவிட்ட அந்தப்பையனின் அம்மா, அழுதுகொண்டிருந்த மகனையும்,அருகில் நின்ற அந்த சீருடைப் பணியாளரையும் பார்த்துவிட்டு,மகனிடம் ஏதோ கேட்டாள். என்ன சொன்னானோ அந்தப்பையன், காச்சுமூச்சென்று அரபியில் கத்தத்தொடங்கினாள் அந்தப்பெண். அதிர்ந்துபோன அந்த மனிதர் அரபியில் அந்தப்பெண்ணிடம் சொல்லி விளங்கவைக்கமுயற்சித்தார். அவர் சொல்வதைக் காதில்கூட வாங்காமல் குழந்தையை இறக்கி இழுத்துக்கொண்டுபோய்விட்டாள் அந்தப்பையனின் அம்மா.

திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அதற்குள்,சமாளித்துக்கொண்ட அவர், 'புள்ளையப் பாத்துக்காம இவுங்க உட்டுட்டுப் போயிடறாங்க. நாம என்னன்னு கேட்டா அதுக்கும் கத்துறாங்க...இங்க வேலைக்கு வந்து இதுமாதிரி நிறைய பாத்தாச்சும்மா' என்றவர் பெருமூச்சு விட்டபடி, 'எம்புள்ளைக்கும் இந்த வயசுதான் இருக்கும்...பொறந்தப்ப பார்த்தது. இப்ப, ஊர்ல ஒண்ணாவது படிக்கிறான்...' குரல் கம்மச் சொல்லிவிட்டு, சுத்தம் செய்கிற வேலையைத் தொடர்ந்தார் அவர். எனக்குப் பேச்சு வரவில்லை.

குடும்பக் கஷ்டம், கூடப்பிறந்தவங்களின் கல்யாணம், பிள்ளைங்களோட படிப்பு,பெத்தவங்களோட மருத்துவச்செலவுன்னு ஏதாவதொரு தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்க, இதுபோல மக்களின் வாழ்க்கை இந்தப் பாலைவனத்தில் பாசத்துக்கு ஏங்கியவாறே பலவருடங்களைக் கடத்தவைக்கிறது. ஆனால், உறவுகளைத் தேடி ஏங்கிப்போய், இவர்கள் ஊருக்கு வரும்போது, இவர்களைப் பணங்காய்ச்சி மரங்களாக மட்டுமே பார்க்கிற நம் சமூகத்தை நினைக்கையில், என்னையுமறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

மருந்தெல்லாம் மாறிப்போச்சு!!!

ஆண்டு விடுமுறையில ஊருக்குவந்தா முதல் நாலைஞ்சுநாள் நம்மளைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு. சாப்பாடு, தண்ணீர் வித்தியாசத்தால உடம்புசரியில்லாமப் போறது இப்பல்லாம் வாடிக்கையாயிடுச்சு.

போனவருஷமும் இதையெல்லாம் கடந்து, உறவுக்காரங்க வீடுகளுக்கு விசிட் அடிக்கத்தொடங்கியிருந்தோம்.விருந்து, உபசாரமெல்லாம் கொஞ்சம் அதிகமாகிப்போக, கடைசியில் அஜீரணம்தான் மிஞ்சியது. ஆளாளுக்கு டைஜின் சாப்பிடு, ஜெலுசிலைக் குடி, ஈனோவைக் குடின்னு ஏகப்பட்ட அறிவுரை சொன்னாங்க. "எலுமிச்சம்பழச்சாறில் உப்புப்போட்டுக் குடிக்கலாமே" என்றேன் நான். ஐயே, அதெல்லாம் பாட்டி காலத்து வைத்தியம். பட்டுன்னு பலன் குடுக்காது. இது உடனே கேட்கும்ன்னுசொல்லி, மாத்திரையைக் கையில திணிச்சாங்க.

ஆஹா,இப்பல்லாம் நம்ம ஊர்ல,அறிவுரை மாதிரியே மருந்து மாத்திரையும்ம் தாராளமாய்க் கிடைக்கிதேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்கான சாமான்கள் இருக்கோ இல்லையோ, இப்பல்லாம், எல்லார் வீட்டிலும் அவரவருக்கென்று ஒரு வண்டி மாத்திரை இருக்கிறது. இதை,அவங்க சாப்பிடுறதுமில்லாம அடுத்தவங்களுக்கு ரெக்கமெண்டேஷன் வேற பண்றாங்க...

அதிலும், சின்னக்குழந்தைங்க இருக்கும் வீடுன்னா சொல்லவே வேண்டாம். அலமாரி நிறைய அடுக்கிவச்சிருக்காங்க மருந்துகளை.ஒண்ணு வேலை செய்யலேன்னா இன்னொண்ணுன்னு ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு அதில.

முன்னெல்லாம், சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில, சுக்கு, மிளகு, திப்பிலி,அக்கரா, சித்தரத்தை, ஜாதிக்காய், மாயக்காய்ன்னு மருந்துப் பொருட்கள் உள்ள ஒரு டப்பாவும், அதை உரசிக்கொடுக்க ஒரு உரைகல்லும் கட்டாயம் இருக்கும்.பிள்ளை வளர்ப்பான் என்று சொல்லுகிற வசம்புக்கு இதில் ஸ்பெஷல் இடம் உண்டு. அதை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, உரசி நாக்கில் தேச்சு விடுவாங்க. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பொருமலுக்கும், வாய்வுக் கோளாறுகளுக்கும் வசம்பு அருமருந்துன்னு சொல்லுவாங்க.

வாரத்தில் ரெண்டு நாள்,இந்த மருந்துகளை உரைகல்லில் உரசி, நாக்கில் தடவி விடுவாங்க.சிலர், இந்த மருந்துகளோடு சுத்தமான தங்கத்தையும் கொஞ்சம் உரசிக்கொடுப்பாங்க. பிள்ளை தளதளன்னு தங்கமாட்டம் இருக்குமாம் :)

முன்னெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில, வீட்டில அம்மா, பாட்டின்னு குழந்தைகளைக் கொண்டாட ஆள் இருப்பாங்க. இன்று, அவசர யுகம்... அனுபவமும், அறிவுரை சொல்ல ஆளும் இல்லாத இளம் பெற்றோர்கள். ஒரு பிள்ளை பெற்று வளர்ப்பதற்குள் 'போதும்டா சாமீ' என்று சலிச்சுக்கிறாங்க.மூணு குழந்தைகள் இருக்குன்னு சொன்னா, உங்களுக்கு கோயிலே கட்டலாம்னு அதிசயப்படுறாங்கன்னா பாருங்களேன்...

ஓடியாடி வேலைசெய்தா உடம்புக்கு நல்லது, கூடிவிளையாடினா குழந்தைகளுக்கு நல்லது. ஆனா, ரெண்டுமே இல்ல இப்போ. குனிஞ்சு நிமிர்ந்து வேலைசெய்றதையே மறந்தாச்சு நாம. கூட்டுப்பறவைகளா மாறிட்டாங்க குழந்தைங்க. தொலைக்காட்சியும் கணினியும்தான் வீட்டில் ஓயாமல் உழைக்கிறதாகிப்போச்சு.

வாரம் ஒருமுறை சுக்குக்கஷாயம், மாசத்துக்கொருதடவை வேப்பிலை மருந்து, ஜலதோஷம் வந்தா சுக்குக்காப்பி,வயிற்றுப்பிரச்சனைன்னா, ஓமத்திரவம்ன்னு சின்னச்சின்ன, எளிதாகக்கிடைக்கிற பொருள்களாலேயே சுகப்படுத்திக்கொண்டோம் அந்தக்காலத்தில்.

ஆனா இப்ப,சின்ன விஷயத்துக்கெல்லாம், ஏகப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு, பின்னாடி வரப்போகும் பக்கவிளைவுகளின் தீவிரம் புரியாமலிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. பெரியவர்கள் சொன்னால் கேட்கக்கூடிய பொறுமையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் இன்ஸ்டன்ட் ரெமெடி வேணும். அதுமட்டும்தான் அவங்களுக்கு முக்கியம்.

ஆறேழு தும்மல் போடுறதுக்குள்ள அதிக சக்தியுள்ள ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட்டு, வெளியே வரவேண்டிய நீரை உள்ளேயே அழுத்தி, வயிற்றுப் பாதிப்பு மற்றும் இன்னபிற விஷயங்களையும் இலவச இணைப்பாக வரவழைத்துக்கொள்கிறார்கள்.

கொள்ளை விலைக்கு மருந்தையும் வாங்கி, சொல்லாமலே கூடவரும் பாதிப்புகளையும் அனுபவிப்பதைவிட, சரியான நேரத்தில் தூங்கி, சரியான உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு, அளவான உடற்பயிற்சியோடு அவசியமான ஆரோக்கியமுறைகளைக் கடைப்பிடிச்சா, அநாவசியப் பிரச்சனைகள் பலவற்றை நாம தவிர்க்கலாம்.

அதையும் மீறி, சீரியசான பிரச்சனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கலாம், தவறில்லை. ஆனா, சின்னச்சின்ன விஷயங்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம்கொடுத்து, ஏதேதோ மருந்துகளைச் சாப்பிட்டு எதிர்ப்பு சக்தியைக் கெடுத்துக்கொள்ளாமலிருப்பது ரொம்பரொம்ப முக்கியம்.

***************

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கலிகாலப் புகையும், கம்பராமாயணத்தில் புகையும்!

நெருப்பில்லாம புகையாதுன்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க...அன்றைக்கு, ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக வெளிப்பட்ட அடர்த்தியான புகை,அதைக் கண்காணித்துக் கத்திய ஃபயர் அலாரம், ரெண்டுமாகச் சேர்ந்து அந்தப் பன்னிரண்டுமாடிக் கட்டிடத்திலிருந்த பலகுடும்பங்களைக் பதற்றமடையச்செய்துவிட்டது.காரணம் ரெண்டு முட்டையும் ரெண்டுபேரின் அவசரமும்.

வேலைக்குப்போகிற அவசரத்தில் தனக்கும் கணவருக்குமாக ரெண்டு முட்டையை வேக வைத்த அந்த பெண்,அலுவலக வாகனம் வந்துவிட்டதால் அவசரத்தில் முட்டையை மறந்துபோய் வீட்டைப்பூட்டிக்கொண்டு போய்விட,தண்ணீர் முழுக்க வற்றிப்போய்
பொறாமைக்காரனின் மனசுபோல,புகையாய்ப் புகைய ஆரம்பித்திருக்கிறது சட்டியிலிருந்த முட்டைகள். அதைக்கண்டு,எறும்பு கடித்த சிறுபிள்ளையாய் வீறிட்டிருக்கிறது அங்கேயிருந்த புகையைக் கண்காணிக்கும் கருவி.

அப்புறம் பூட்டிய வீட்டின் கதவு, வீட்டுக்காரர்களின் அனுமதியுடன் உடைக்கப்பட்டு, புகைக்கான காரணம் புரிந்துகொள்ளப்பட்டு, பதற்றம் தணிக்கப்பட்டது தனிக்கதை.

புகை, தற்போது உலக மக்களுக்கு கிலியைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகிவிட்டது. சுற்றுகிற பூமியைச் சூடாக்கி, துருவப்பகுதிகளில் பனியை உருகவைக்கும் பற்பல வேதிப்பொருட்களின் வெளிப்பாடான இந்தப் புகை இன்று எல்லா நாட்டினருக்கும் எமனாகத்தான் தெரிகிறது.

நல்லதும் கெட்டதுமாக எல்லா இடத்திலும் புகை, மனித வாழ்க்கையில் கலந்துதான் காணப்படுகிறது.பூஜையறையிலிருந்து புறப்படும் தூப,தீபப்புகையிலிருந்து,விரல் நுனியில் புகையும் புகையிலைப் புகையும்,வழியெல்லாம் வெளியாகும் வாகனப்புகையும்,ரசாயனத் தன்மையுள்ள தொழிற்சாலைகளின் புகையுமாக வானவெளியெல்லாம் விஷமாகிப்போய்விட்டது இன்று.

போகிப்பண்டிகையன்று, சென்னை நகரமே புகைமூடிப்போவதாகப் பலவருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் போகியன்று வாகனங்களின் பழைய டயர்களை எரிப்பவர்கள்மேல் வழக்குப்பதிவுசெய்யுமாறு, காவல்துறை இணை ஆணையர் உத்தரவிட,
69 பேர் பிடிபட்டதாக செய்திகள் சொல்லுகிறது.

இதெல்லாம் இப்படியிருக்க, இராமாயண காலத்திலும் ஊர்கள் பல்வேறுவகைப் புகைகளினால் சூழப்பட்டிருந்ததை பாலகாண்டம் நாட்டுப்படலப் பாடலொன்று அழகாகச் சொல்லுகிறது.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,

நகல்இன் ஆலை நறும்புகை, நான்மறை

புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,

முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.

வீடுகளில் வாசனைக்காக எரிக்கப்படும் அகில் கட்டைகளின் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் கரும்புச்சாற்றைக் காய்ச்சும்போது எழுகின்ற புகையும், நான்கு மறைகளும் ஓதப்படும் வேள்விகளில் எழும் ஹோமப்புகையுமாக ஊரைச் சூழ்ந்து, மேகங்களைப் போல் படர்ந்து வானின் எல்லாப் பரப்பிலும் வியாபித்து நின்றதாகக் காட்டுகிறான் கம்பன்.

சாலையில் புகைவிடும் வாகனங்கள் இல்லையென்றாலும் ஆலைகளின் புகை அந்தக்காலம்தொட்டு இருந்துவந்திருக்கிறது.

ஆக, பகையாகிப் பலருக்கும் தொல்லை கொடுக்கின்ற புகை, இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கும்கூட மக்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்தபடி,இடைவிடாமல் புகைந்துகொண்டேதான் இருந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளமுடிகிறது.

******

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல் நினைவுகள்!

புத்தாண்டின் பூரிப்பையும் அள்ளிக்கொண்டு பொங்கல் வந்தாச்சு...ஊர்ல இருந்திருந்தா இந்நேரம் உட்காரவே நேரமிருந்திருக்காது. இங்கேயிருப்பதால் சாவகாசமா பதிவே போடமுடியுது :)

பொங்கலன்று, அமீரகத்திலிருந்து,பாதிக் காசில் நம்ம ஊருக்கு போன் பண்ணலாம்ன்னு இங்குள்ள தொலைத்தொடர்புத்துறை (Etisalat)அறிவித்ததைத் தவிர பொங்கலுக்கு வேற ஒண்ணும் ஸ்பெஷலா இல்லை. முன்னெல்லாம், ஊரிலிருக்கும்போது, மார்கழி பிறந்ததுமே பொங்கலுக்கான கோலாகலம் கூடிவிடும்.

வெள்ளையடிக்கிறது,வேண்டாத சாமான்களைக் கழிக்கிறது,பரணிலிருக்கிற பாத்திரங்களையெல்லாம் எடுத்துக் கழுவிக் காயவைக்கிறதுன்னு வேலைக்குப் பஞ்சமே இருக்காது.அத்தோடு பண்டிகைக் காலத்து சுவாரசியமும் கொஞ்சமும் குறையாம இருக்கும். புதுசுபுதுசா கோலம் போடுறதும், கலர்ப்பொடி வாங்குவதும், வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பிவைப்பதுமாக உற்சாகம் களைகட்டும்.

இப்பல்லாம் கேஸ் அடுப்பில், குக்கர் பொங்கல் வச்சாலும், அந்தநாட்களில், களிமண்ணில் பொங்கல் கட்டிசெய்து,காவிப்பட்டை கட்டிய முன் வாசலில் அடுப்புக்கூட்டி, பனை ஓலையை விறகாக்கிப் பொங்கல் வைத்த ஞாபகம் வராமலில்லை.

அடுப்புக் கட்டி செய்யக் களிமண் கொண்டுவந்ததும், கட்டி செய்யிறாங்களோ இல்லையோ, சின்னச்சின்னதா சட்டி பானையும், செப்பு சாமான்களும் செய்து காயவைத்த நினைவுகள் இன்னும் மனசில் காயாமலிருக்கிறது.

ஒதுங்கவைக்கிறேன்னு சாமான்களை உடைச்ச நினைவுகளையும், கழுவி வைக்கிறேன்னு,நிலைக்கண்ணாடியைக் கொண்டுபோய் வாய்க்கால் தண்ணீரில் அமிழ்த்திக் காலிபண்ணிய கதையையும் என்றைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் மிஞ்சும்.

அடுப்படி பிளாஸ்டிக் டப்பாக்களைக் கழுவுறேன்னு சொல்லி,நல்லபுள்ளையா வாங்கிட்டு வாய்க்காலுக்குப்போயி, டப்பாக்களைக் கப்பலாக்கிக் கூட்டாளிகளுடன் போட்டிபோட்டு விளையாடிய நினைவுகளெல்லாம் இப்போதும் மனசில் ஏக்கத்தை வரவழைக்கத்தான்செய்கிறது.

இப்பல்லாம் நம்ம ஊரில்கூட வருஷாவருஷம் வெள்ளையடிக்கிறதும்,வாசலில் காவிப்பட்டைபோட்டு அலங்கரிக்கிறதும், வெளிவாசலில் பொங்கல் வைக்கிறதும் குறைஞ்சிருந்தாலும், தமிழர் திருநாளான பொங்கலின் வருகை எல்லோருக்கும் பூரிப்பைத் தருவதாகத்தான் இருக்கிறது.

மஞ்சளும் மலர்களும் மணம்சேர்க்க, பொங்கலும் கரும்பும் சுவைகூட்ட நாம் எங்கேயிருந்தாலும் பொங்கல் திருநாளின் பெருமைகள் கொஞ்சமும் குறையாமல், வளர்ந்துவரும் சந்ததிக்கும் நம் பழமையான பாரம்பரியத்தை எடுத்துச்சொல்லும் கடமையுணர்வோடு தைத்திருநாளைக் கொண்டாடுவோம்.

மனம்நிறைந்த மகிழ்ச்சியுடன் அத்திருநாளைக் கொண்டாடிட,
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

********

திங்கள், 4 ஜனவரி, 2010

புர்ஜ் துபாய் கோலாகலம்!

துபாயில் எப்போது,என்ன நடந்தாலும் அது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும்வகையில்தான் அமைகிறது, அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாகயிருந்தாலும் சரி. நேற்றைய கோலாகலம் அதற்கெல்லாம் சிகரம்வைத்தாற்போல இருந்தது என்று சொன்னால் அது கொஞ்சம்கூட மிகையாகாது.

ஆவலுடன் எதிர்பார்த்த அனைவரின் எண்ணத்தையும் பூர்த்திசெய்வதுபோல, உலகின் மிக உயரமான புர்ஜ் துபாய் நேற்று துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களால் மிகவும் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

828 மீட்டர் உயரம், 160 தளங்கள்,1.5 பில்லியன் டாலர்கள் பொருட்செலவில், ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பினால் உண்டாக்கப்பட்ட பூமியின் மிக உயரமான பிரம்மாண்டம் இது.

ஆயிரக்கணக்கான வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு ஐந்துமணிக்கே விழா தொடங்கப்பட்டாலும், இரவு ஏழு மணிக்குமேல்தான் சிறப்பு விருந்தினர்கள் வருகைதர நிகழ்ச்சிகள் களைகட்டத் துவங்கியது.புர்ஜ் துபாயின் விளக்குகளை எரியவைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் மன்னர்.


 


அமீரகத்தின் தேசிய கீதத்துக்கு அழகாக வளைந்து நெளிந்து நடனமாடி மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தின அங்கிருந்த நீரூற்றுகள்.

 


 


அப்புறம், புர்ஜ் துபாய் ஒரு பாலைவன ரோஜாவின் வடிவத்தில் உருவாகி வளர்ந்த கதையை ஒலியும் ஒளியுமாக அங்கே அமைக்கப்பட்டிருந்த திரைகளில் காட்டினார்கள். புர்ஜ் துபாய் உருவான வரலாறைப் பெருமையுடன் பேசினார் மன்னர்.

கதை சொல்லச்சொல்ல நீரும் நெருப்பும் போட்டிபோட்டுக்கொள்ள நீரூற்றுகளும் மின்னும் லேசர் ஒளிஓவியமுமாக, கோலாகலம் தொடங்கியது.

 


 


 


 


 


 



பின்னர், சுற்றிலுமிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு அந்த இடத்தை வாணவேடிக்கைகள் அலங்கரிக்க மக்களின் ஆச்சர்யக் கூச்சலும் கரகோஷமும் விண்ணைப்பிளந்தது.நிஜமாகவே சொற்களுக்குள் அடங்காத அற்புதமான காட்சிகள்.புர்ஜ் துபாயின் அடிமுதல் நுனிவரை ஒளிப்பூக்கள் சிதற, விண்ணை வெளிச்சமாக்கியது வாணவேடிக்கை. கண்ணிமைக்க மறந்தது மக்கள்கூட்டம்.

 


 


 


கண்களை நிறைத்த காட்சிகளால் சொர்க்கம்போலத்தான் தெரிந்தது அந்த இடம்.

*********

வியாழன், 24 டிசம்பர், 2009

அழகான அல் அயின்

செயற்கையாக எவ்வளவுதான் அழகுபடுத்தினாலும், இயற்கைக்கு இருக்கும் சிறப்பு என்றும் அதிகம்தான். கண்ணுக்கெட்டியதூரம்வரை சுற்றிலும் தெரியும் கட்டிடக்காடுகளிலிருந்து விடுபட்டு இயற்கையின் குளிர்ச்சியை அனுபவிக்க சமயம் கிடைக்கும்போதெல்லாம் கட்டுச்சோறும் களைகட்டும் நண்பர் பட்டாளமுமாகக் கிளம்பிவிடுவது அமீரகத்து மக்களுக்கு வாடிக்கையான விஷயம்.

அமீரகத்தைப்பொறுத்தவரை குறிப்பிட்டுச்சொல்லும்படியாக சில இடங்களே இயற்கையின் அழகினை இன்னும் தங்களிடம் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன.அவற்றில் இந்த
அல் அயினும் (Al ain)ஒன்று. துபாயில் உள்ள ஹத்தா (Hatta)என்னும் மலைப்பகுதியைப்பற்றி இங்கே இருக்கும் பதிவில் பார்க்கலாம்.

துபாயிலிருந்து சாலை வழியாக கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர்கள். இருபுறமும் அலையலையாய் விரியும் அழகிய பாலை மணல்வெளி. பாலைவன நாட்டில் நாளைக் கழிக்கும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரக்கூடிய பசுஞ்சோலை நகரம் அல் அய்ன். ஈச்சமரங்களும் மற்ற பயிர்வகைகளும் இங்கு அதிகமாக வளர்க்கப்படுகிறது. இங்கே அழகான பாலைவனச் சோலைகள் நிறைய உண்டு.

தலைநகரம் அபுதாபியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அல் அய்ன், ஐக்கிய அரபுக்குடியரசின் முதல் ஆட்சியாளரான ஷேக் செய்யத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பிறந்த ஊர். இங்கு அமைந்திருக்கும் ஜெபல் ஹஃபீத் எனப்படும் மலைப்பகுதி இந்நகருக்குப் பெருமைசேர்க்கும் இன்னொரு விஷயமாகும்.ஐக்கிய அரபுக்குடியரசில் இருக்கும் மிக உயர்ந்த மலை இது.

மஞ்சள் நிற மலையைப் பாருங்க...

 


மலை மட்டுமல்லாமல் அழகிய பூங்காக்கள்,மிருகக்காட்சி சாலை,க்ரீன் முபாசரா (green Mubazzara)எனும் பசுமைப்பகுதி, அங்கு காணப்படும் வெந்நீர் ஊற்று, மற்றும் பாரம்பரியச் சின்னங்களுடைய தொல்பொருள்கூடம் போன்றவை இங்கே பார்வையாளர்களை அதிகம் கவரக்கூடிய அம்சங்களாகும். சில படங்களாய்ப் பார்த்தால் இவையெல்லாம் பாலைவன நாட்டில் எடுக்கப்பட்டதா என்ற ஐயம்கூட எழலாம். அந்த அளவுக்குப் பசுமை தென்படுகிறது இங்கே.




 


 


 



 


 


 

புதன், 9 டிசம்பர், 2009

என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்?

பள்ளி செல்லும் காலத்திலிருந்தே இதுமாதிரி, நிறைய பயமுறுத்தல்களைப் பார்த்தாகிவிட்டது. "இன்னும் நாலே வருஷத்தில் நாமெல்லாம் அழிஞ்சுபோயிருவோம்.  நமக்கெல்லாம் முதுமையே வராமல் முடிவு வந்துடும்" என்றெல்லாம் பிள்ளைப்பருவத்தில் பேசித்திரிந்திருக்கிறோம்.

அதுபோல இப்போது இன்னுமொரு பயமுறுத்தல் 21/12 /2012 என்ற இலக்கில் மீண்டும் தொடங்கி மக்களை அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது, அதிலும் அதிகமாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பிள்ளைகளை.

நம்ம நாட்காட்டியில் நாளைக்கு என்ன கிழமையென்று தெரியாதவர்கள்கூட இப்போது மாயர்களின் நாட்காட்டியைப்பற்றி மாய்ந்துமாய்ந்து பேசுவது ஆச்சர்யம்தான்.

மாயர்கள், கிமு வில் தோன்றி, கி பி பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து, தென்னமெரிக்காவில் குறிப்பாகச் சொல்லப்போனால் குவாதிமாலா பகுதியில் வாழ்ந்த, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்த மனித இனமென்று சொல்கிறார்கள். இவர்கள் வேறுயாருமல்ல, தென்னகத்துத் தமிழினம்தான் என்றுகூட எங்கோ படித்ததாக நினைவு.

திடீரென்று இவர்களுடைய நாட்காட்டிக்கு என்ன ஆனதென்று உங்களுக்குக் கேள்வி எழலாம். மேலே சொல்லப்பட்ட மாயர்களின் நாட்காட்டி, கி.பி. 2012-ல் முடிவடைவது தான் இதற்கெல்லாம் காரணம்.

மாற்றங்கள் பலவற்றைப் பார்த்துப்பார்த்தே பழகிப்போனது நம் மனித இனம். மேடுகள் பள்ளமாகவும், வீடுகள் மணல்மேடுகளாகவும், ஆறு ஊராகவும், ஊரே ஆறாகவும், கடல்கரை குடியிருப்பாகவும், குடியிருப்புக்கள் கடலுக்குள்ளும் கால ஓட்டத்தில் மாறிப்போன கதையைக் கண்டும் கேட்டும் வளர்ந்திருக்கிறோம்.

ஆற்றில் வருகிற நீரெல்லாம் மணலெடுத்த பள்ளத்தில் நிரம்பிவிட, நீருக்குள் இருந்த பகுதியெல்லாம் இன்று மண்மேடாகி மரங்கள் மண்டிக்கிடப்பதை ஆற்றில்மணல் அள்ளும் பகுதியிலிருப்பவர்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள்.

அதுபோல,சின்ன வயசிலிருந்தே எங்க ஊர்ப்பக்கம் முதுமொழிமாதிரி ஒன்று சொல்வார்கள். "திருச்செந்தூர் அழிய, துவாரகாபுரி  தெரிய..." என்று. ஒருபுறம் பள்ளமாக மறுபுறம் உயரத்துக்கு வரும் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டியது. தென்கோடியிலிருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் போகும்போது நாட்டின் மேற்குக்கோடியிலிருக்கும் கடல்கொண்ட துவாரகை மீண்டும் வெளியே தென்படும் என்பது முன்னோர் கணக்கு.

இன்றைய நிலைமையில் உலக வெப்பமயமாதலை, வருமென்று சொல்கிற பேரழிவோடு சம்பந்தப்படுத்தி மக்கள் கொஞ்சம் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். கடலோர நகரங்கள் தங்கள் பரப்பளவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மைதான்.வந்துபோன சுனாமி இந்த அழிவிற்கான எச்சரிக்கை மணியை அடித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

வரும்காலத்திலும் இதுபோன்ற பெரும் சுனாமிகளையும், புதையவைக்கும் பூகம்பங்களையும், சுழன்றழிக்கும் சூறாவளிகளையும் உலகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

5125 வருடங்களைக் கொண்ட மாயர்களின் நாட்காட்டி வரும் 21/12/ 2012 அன்றுடன் முடிவுறுகிறது என்கிறார்கள். அந்தக் கணக்குப்படி, அந்த நாளுக்குப்பின் பூமிப்பந்துக்கு ஏதேனும் பேரழிவு நேரலாமென்ற அச்சமே மனிதர்களை ஆட்டிப்படைப்பதோடு, "2012" என்ற பெயரில் படமாகவும் வந்து இன்னும் பயமுறுத்தத்தொடங்கியுள்ளது.

இருக்கிற நாட்களை உற்சாகமாய்க் கழிக்கவிடாமல் மக்களைக் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்வதே இவர்களுக்கு வழக்கமாய்ப்போய்விட்டது. படத்தைப் பார்க்கலாம், படமெடுத்தவரின் கற்பனையை ரசிக்கலாம்...ஆனா, அதையே நினைச்சு பயந்துகிட்டிருந்தா அடுத்துவரும் நாளெல்லாம் அர்த்தமில்லாமல்போய்விடும்.

அதனால, இதில் நாம புத்தியோடு சிந்திச்சுப் புரிஞ்சுக்கவேண்டியது என்னன்னா, படம் பார்ப்பவருக்கு பயம் சேரும், படமெடுத்தவருக்குப் பணம் சேரும் என்ற எளிதான கணக்கைத்தான்.

சொல்லிக்கொண்டிருக்கிற கெடுவுக்கு இன்னுமிருப்பது கிட்டத்தட்ட 1105 நாட்கள்தான். அப்போது பார்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று. அதுவரைக்கும் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுட்டு, முடிஞ்சவரைக்கும் இயற்கையை சேதப்படுத்தாம, அவரவர் கடமையை ஒழுங்கா செய்துட்டு வருவோம்.

அதுக்கப்புறம் இந்த 2012 ஆம் வருடத்தில் என்ன நடந்துதுன்னு அடுத்த
2013 ல் விவரமா மீண்டும் பேசுவோம்!

******

சனி, 28 நவம்பர், 2009

சம்பளம்!

"எங்கிட்ட காசு கிடையாது...சம்பளம் வந்தாத்தான் சாப்பாட்டுக்கே அரிசி வாங்கமுடியும். தயவு செஞ்சு என்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியயும் கெடுக்காதீங்க. எரிச்சலுடன் சொல்லிவிட்டு, தானும் தன் மகனும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போனாள் பூமதி.

"அடேங்கப்பா, காசு கேட்டா, ராசா மவளுக்கு எவ்ளோ கோவம் வருது... புருஷங்காரன் கஷ்டம்னுசொல்லி காசுகேட்டா பொண்டாட்டிக்காரி தலைய அடகு வச்சாவது குடுக்கணும்டி...அத விட்டுட்டு அம்மாளுக்கு சந்தோஷம் போச்சாம்...நிம்மதிபோச்சாம்.... என்னத்தக் கொண்டுவாறாள்களோ இல்லையோ அப்பன் வீட்லருந்து இந்த திமிர மட்டும் மறக்காம கொண்டுவந்திர்றாளுக.."

உள்ளே போன போதை உசுப்பேத்திவிட்டிருக்க, உரக்கக் கத்திக்கொண்டிருந்தான் அழகேசன். பதில்சொல்லாமல் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள் பூமதி.

பூமதிக்கு உள்ளூரிலிருக்கும் தனியார் பள்ளியில் ஆயா உத்தியோகம். தன் ஐந்து வயது மகன் செந்திலையும் தான் வேலைசெய்யும் அந்தப் பள்ளியிலேயே சேர்த்திருந்தாள்.

திடீரென்று, "டேய் மவனே, அந்த நோட்டை இங்க கொண்டாடா..."

என்று குரல்கொடுத்தான் அழகேசன்.

 அப்பனோட கத்தலையும் அம்மாவின் பதிலையும்,மௌனமாக உள்வாங்கியபடி, எழுதுவதுமாதிரி உட்கார்ந்திருந்த மகன் செந்தில், ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, எழுந்துவந்து நோட்டை அப்பாவிடம் கொடுத்தான்.

அவன் கொடுத்த நோட்டில் "நிம்மதி, நிம்மதி" என்று தன் போதையில் நடுங்கும் விரல்களால் கோழி கிறுக்கியதுமாதிரி எழுதிவிட்டு,

"இந்தாடி, நீ கேட்ட நிம்மதி...தலைக்குமாட்டுல வச்சுட்டுத் தூங்கு"

என்று சொல்லி, ஏளனமாய்ச் சிரித்தபடி நோட்டை அவளிடம் விட்டெறிந்தான் அவன். கோபம் பெருகினாலும் அதைக் காட்ட இது தகுந்த சமயம் இல்லையென நினைத்தவளாக, அதை மனதிற்குள் அழுத்திக்கொண்டாள் பூமதி.  அழுத்தப்பட்ட ஆத்திரம் கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது.

சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவள், நோட்டை எடுத்து மகனின் பைக்கட்டில் வைத்துவிட்டு, மகனைக் கூட்டிக்கொண்டுபோய் பாயில் படுக்கவைத்துவிட்டுத் தானும் படுத்துக்கொண்டாள்.

.............................................

மறுநாள் மாலை... பள்ளிக்கூடத்தைவிட்டு பூமதி மகனுடன் வெளியே வந்தபோது, வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் அழகேசன்.

" பூவு, சம்பளம் வாங்கியிருப்பேல்ல, பணத்தைக்குடு...அடிக்குரலில் கேட்டான் அவன்.

பதில் பேசாமல், பையிலிருந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, மகனைக் கையில் பிடித்தபடி வேகமாக நடந்தாள் அவள்.

என்னடி, கவர் மெலிஞ்சுபோயிருக்கு என்று குரல்கொடுத்தபடி, கவரைப் பிரித்தான் அழகேசன். அதற்குள், அவன் கேள்வி எட்டாத தூரத்துக்குச் சென்றிருந்தாள் அவள்.

கவருக்குள் எட்டாக மடித்த காகிதம் இருந்தது. "காசை எதுக்கு காகிதத்தில் மடிச்சுவச்சிருக்கா,கழுத..." என்று நினைத்தபடி காகிதத்தைப் பிரித்தான் அவன்....

உள்ளே "சம்பளம்" என்ற வார்த்தை தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. திகைத்தவனாக, பேப்பரைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். அங்கேயும் அதே வார்த்தை அவனைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

***********

சனி, 21 நவம்பர், 2009

சுலபமான தக்காளிக் குழம்பு



கடைக்குப்போய் காய்கறி வாங்க நேரமில்லையா? வீட்ல தக்காளி, வெங்காயம் மட்டும்தான் இருக்கா? இருக்கிறதை வச்சு எளிதாகச் செய்யக்கூடிய குழம்பு இதோ...

தேவையான பொருட்கள் 

தக்காளி -கால் கிலோ
மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி -1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் (நறுக்கியது) -1
தேங்காய்துருவல் -1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் -1 குழி கரண்டி
நறுக்கிய வெங்காயம்- 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

*வெங்காயத்தை உரித்து நறுக்கி தேங்காய், சீரகத்துடன் அரைத்துக்கொள்ளவும்.

*புளியைக் கரைத்து வடிகட்டவும்.

*வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தை இட்டு சிவந்தவுடன் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*தக்காளி வதங்கியதும் அதனுடன் புளிக்கரைசல், அரைத்த கலவை மற்றும் பொடிகள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடியிட்டுக் கொதிக்கவிடவும்.

*பின் மூடியை நீக்கி உப்பு சரிபார்த்துவிட்டு, மேலும் இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

சுலபமான தக்காளிக் குழம்பு தயார்.

இதனை, தாளித்த துவரம்பருப்புக் கூட்டுடனோ, முட்டை பொரியலுடனோ, இல்லை அப்பளத்துடனோ சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

நாசமத்துப்போற மக்கா....நல்ல தமிழ் பேசுங்க!

அம்மா, இன்னிக்கு என்ன டே?

வியாழக்கிழமை...

அப்டின்னா?

வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி வருமே அது...

time-table எடுத்துவைக்கணும்...சரியாச் சொல்லும்மா...

வெள்ளிக்கிழமைன்னா friday..அப்ப, இன்னிக்கு thursday,வியாழக்கிழமை...

thursday ன்னு முதல்லயே தெளிவாச் சொல்லவேண்டியதுதானே?

முகத்தைக் கோணலாக்கிச் சொல்கிறது வாண்டு...

"நீங்க இங்கேயிருந்துகிட்டு, வீட்டில தமிழ்லதான் பேசணும்னு எங்ககிட்ட சொல்றமாதிரி, தமிழ்நாட்டுல போய் சொல்லிப்பாருங்க...அப்புறம் என்னதான் பாஸ்போர்ட்டைக் காட்டினாக்கூட நீங்க துபாய்லதான் இருக்கிறீங்கன்னு நம்பமாட்டாங்க யாரும்..." பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்னாலும், நிஜம் சுடத்தான் செய்தது.

"வங்கிக்குப் போகணும், தானி ஒண்ணு கூட்டிக்கொண்டுவா" ன்னு சொன்னா, தமிழ்நாட்டுக்காரங்களே ஏதோ கீழ்ப்பாக்கத்து உருப்படியோன்னு சந்தேகமாத்தான் பார்ப்பாங்க.

அடுக்குப்பானையும் குதிருமா அழகா செம்மண் காவிபூசி, திண்ணையும் தூணுமா இருந்த கிராமத்துவீடுகளும், மாமம்மா பேசிய அழகு தமிழும்கூட இன்று மாறித்தான் போய்விட்டது.டவுண்பஸ்,லேட்டு,லெட்டர்,ஸ்டேஷன்,ஸ்பீக்கர்செட்டுன்னு அடுக்கடுக்கா ஆங்கிலம்தான் அவசரத்துக்கு வாய்ல வருது எல்லாருக்கும். 

குதிருன்னு சொன்னதும் நம்ம ஊர்ப் பழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்திருக்குமே... இடம் பொருள் அறியாமல் ஏதாவது உளறிக்கொட்டும்போது, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே"ங்கிற மாதிரி இப்படியா பேசுறதுன்னு கடிஞ்சுக்குவாங்க அந்தக்காலத்துப் பெரியவங்க.

குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டத்தின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.

குதிரிலில் சேமித்த நெல்லை எடுத்து,பெரிய பெரிய குத்துப்போணிகளில்,புழுங்க வச்சு, தட்டடியில கொட்டி, வரிவரியா கிண்டிக் காயவச்சு, பறவைகள் கொத்தாமலிருக்க பிள்ளைகளைக் காவல் வைக்க,

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு,

மழ வருது மழ வருது நெல்லள்ளுங்க,
முக்காப்படி அரிசிபோட்டு முறுக்கு சுடுங்க,
தஞ்சாவூரு மாமனுக்குக் கொஞ்சம் குடுங்க,
சும்மா வார மாமனுக்குச் சூடுபோடுங்க!

என்று கூடிப்பாடிக் குதூகலித்ததாக, மாமம்மா கதை சொல்ல, விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்ததுண்டு. மாமனின் அம்மா மாமம்மா, அம்மாவுடன் பிறந்த சகோதரன் அம்மாமன். எத்தனை அருமையான உறவுப் பெயர்களை மறந்துவிட்டோம்?

வெள்ளென எழுந்திருச்சி, செம்பு நெறைய நீத்துப்பாவத்தைக் குடிச்சிட்டு, வயலுக்குப்போயி, வேர்க்க விறுவிறுக்க கமலையில தண்ணியெறச்சு, வயலுக்குப் பாய்ச்சிட்டு, வீட்டுக்கு வந்து, கும்பா நிறைய பழைய சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட அந்தக்கால மக்களின் உடலுரம் எங்கே, நாமெல்லாம் எங்கே!

வெள்ளென என்ற வார்த்தையை, விடியலில், அதிகாலையில் என்ற பொருளில் இன்னும் உபயோகிப்பார்கள். நீராகாரத்தை நீத்துப்பாவம் என்று சொல்லுவதை நெல்லை மாவட்ட முதியவர்களிடம் இன்னும் கேட்கலாம். கமலை என்பது மாடுகளை வைத்துக் கிணறுகளில் நீரிறைக்கும் முறை.

கும்பா, வட்டில் இரண்டும் அந்தக் காலத்து உணவு உண்ணும் பாத்திரங்களின் பெயர்களாம். கும்பா என்பது கிட்டத்தட்ட நம் சந்தனக் கிண்ணம் போலப் பெரியதாக இருக்குமாம்.நீருடன் உண்ணும் பழையசாதம் போன்றவற்றை உண்ண ஏற்றதாக இருக்குமாம். வட்டில் என்பது, தட்டுப்போல இன்னும் கொஞ்சம் உயரமான விளிம்புடன் வேலைப்பாடுகளுடன் கூடியதாய் இருக்குமென்று கூறக்கேட்டிருக்கிறேன்.

வைக்கப்படப்புல வாழக்கா பழுக்கவச்சு, கொச்சக் கயித்தில மட்டைவச்சு ஊஞ்சல்கட்டி, கருக்கலானதுகூடத் தெரியாம கூட்டாளிகளோட விளையாடிட்டு வீட்டுக்கு வந்தா, அம்மா சட்டகப்பையை அடுப்பில வச்சு, சூடுவைப்பேனென்று சுத்திவர, ஆச்சியோட மடியில் அடைக்கலம் புகுந்து...நம் தமிழ்க் குடும்பங்களில்தான் நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்...

வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...

கடைசியா, தலைப்புக்கு வருவோம்...

அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டு, நல்ல தமிழை எல்லாரும் பேசிடுவோம்.

(இது ஒரு மீள்பதிவு)

******

குறுக்குத்துறையும் குருவித்துறையும்

என்னைக் கவர்ந்த ரெண்டு துறைகள் எதுன்னா, கட்டாயம் சொல்லுவேன் ஒண்ணு குறுக்குத்துறை இன்னொண்ணு குருவித்துறைன்னு( அறிவியல், தொழில்நுட்பம்னு ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்திருந்தா ஏமாற்றம்தான் :))காரணம் என்னன்னா,சொல்லப்போற ரெண்டுமே ஆற்றங்கரையில் அமைந்த ரெண்டு ஊர்களைப் பற்றிய விஷயங்கள்...

சொந்த மண்ணுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு பாசம் குறுக்குத்துறையில. சிலநூறு அடிகளுக்கு அப்பாலிருக்கும் சிக்கநரசய்யன் கிராமம் எந்தையின் சொந்த ஊர். வீட்டில பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்ட கதையையெல்லாம் அத்தனை சுவாரசியமாய்ச் சொல்லுவாங்க என் அப்பா.

இதோ, ஆற்றங்கரையில் அழகிய கோயில்...



கோயிலின் பின்னாலிருந்து எடுக்கப்பட்ட கோபுரத்தோற்றம்...



அருகில், அரசமரத்தடிப் பிள்ளையார் கோயில்...




தன்னுடைய சிறுவயதில், ஆற்றங்கரைப் பாறைக்கருகில் தான் காசு சேர்த்துப் புதைத்துவைத்த கதையை என் அப்பா சொல்ல, ஆசையாய் என் பிள்ளைகள் அங்கே தோண்டிப்பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

காசுதோண்டிவைத்த பாறையும், தூரத்தெரியும் ரயில் பாலமும்...(படத்தை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் ரயில் பாலமெல்லாம் தெரியும்)



நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், செந்தூர்க் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சிலாரூபமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதனால், திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் இங்கே அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.

கோயிலின் முகப்பிலிருந்து...



மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தியது.படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்த கிராமம்,மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலிருக்கும் குருவித்துறை. பசுமைக்குள் புதைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமம்.சின்னச்சின்ன வீடுகள், கோயில்கள், தென்னைமரச் சோலைகளென்று வைகைக்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் அது.

வைகையாற்றின் கரையில் வல்லவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார் வெங்கடேசப் பெருமான்.குரு பகவான் தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால், இந்த இடம் குருவின் துறையெனப் பெயர்பெற்று, பின் மருவி குருவித்துறையாகி, அயன் குருவித்துறையென்று என்று தற்போது அழைக்கப்படுகிறது.

குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய மகன் கசனை மீட்டு தந்தாராம். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் புகழ்பெற்ற குருஸ்தலமாகத் திகழ்கிறது.இந்த ஆலயம் ஊர்க்கோடியில் அமைந்திருந்தாலும் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இதோ, வல்லபப் பெருமாள் ஆலயம்...(படம் தினமலர்.காமில் வெளியானது)


இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே பாருங்க.

நன்றி: தினமலர்.

மதுரையிலிருந்து அரசுப் பேருந்துகள் அடிக்கடி குருவித்துறைக்கு வந்து செல்கின்றன. கிராமத்திற்குள் போகும்போது கனகம்பீரமாகக் காட்சியளித்தது பெத்தண்ண சாமி கோயில். கிராமத்து மக்களின் காவல் தெய்வம் அவர். ஊர் மத்தியில் மையமாக அமைந்திருக்கிறது,
பத்திரகாளியம்மன் கோயில். சித்திரை மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பாய்த் திருவிழா நடக்கிறது.

விவசாயம், பால் உற்பத்தி, மற்றும் தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு முக்கியமான தொழில்களாகத் தெரிகிறது.

இதோ, பத்திரகாளியம்மன் ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செல்லப் பிள்ளையார்...



சிவனின் ஓவியம் வரைந்திருப்பது ஆலயச்சுவரில் தான். மறுபுறத்து ஓவியத்தில் மகிஷனை வதைத்த மாகாளி...



இதோ,பெத்தண்ண சாமி கோயில்...



கம்பீரமாகக் குதிரையில்...



குருவித்துறையை விட்டுப் புறப்படுகையில் இருட்டிவிட்டது. தூரத்து மலையில் நெருப்பு ஓவியமாகப் புகையுடன் தெரிந்தது காட்டுத்தீ. வழியில் கண்ட,கண்ணுக்கழகான காட்சிகள் மனதை நிறைத்திருந்தது.

சனி, 24 அக்டோபர், 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்) யாரை, யாரு, எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும் புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு. என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு. ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்) எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அது மாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப் பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து, பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு, மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம், அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க. முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு, நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக் கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு என்ற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில் (பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க... நன்றி :)

*******

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாசல்படி வாஸ்துவும், விளையாடும் கிரகங்களும்



"எம் புள்ளைக்குப் பொறுப்பில்லையா? என்ன பேச்சுப் பேசுற நீ?"

நீ நேத்து வந்தவ...அவனை வளர்த்து, ஆளாக்கி,படிக்க வச்சு,கல்யாணமும் கட்டிவச்ச
எங்களுக்குத்தெரியாதா அவனைப்பத்தி?

ஏதோ அவனைப் புடிச்ச கெட்ட நேரம்...ஏழரைச் சனி அவனை இப்படி ஆட்டிவைக்குது...அதோட நீ வந்து சேர்ந்த நேரம் வேற...தனக்குன்னு புள்ள குட்டின்னு வந்தா எல்லாம் தானா திருந்திடுவான். நீ அதுக்கான வழியைப்பாரு"

என்று ஆக்ரோஷமாகத் தன் மருமகளை அடக்கினாள் மாமியார் கமலம்மாள்.மனைவியின் கத்தலுக்கு மறுமொழி பேசாமல் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார் சண்முகம், கமலத்தின் கணவர்.

தெளிவாகப் புரிந்தது பூரணிக்கு... தன் கணவனின் செயல்களையெல்லாம் தன் மாமியார் நியாயப்படுத்துவதால்தான், அவன் தான் செய்வதைத் தவறென்று உணராமலே இருக்கிறான் என்று புரிந்ததால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள் அவள்.


அன்றைக்கு, காலையில் அவள் எழுந்து அறையைவிட்டு வெளியில்வந்தபோது, முன்வாசலில் மேஸ்திரியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் மாமியார்.

"என்னாச்சு மாமா?" என்று மாமனாரிடம் மெதுவாகக் கேட்டாள் பூரணி.

அவர், வாசல்ப் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு, மகனுக்காக ஏதோ வாஸ்து ஜோசியர்கிட்ட போனாளாம் உங்க அத்தை. அவர்,வாஸ்துப்படி,தலைவாசலுக்கு எதிரா பின்பக்கம் கதவு,ஜன்னல் இருந்தா அந்த வீட்ல காசு விரயமாகும்னு சொன்னாராம்.சும்மாவே ஆடுவா உங்க அத்தை... இதுபோதாதா அவளுக்கு, ஆளைக் கூப்பிட்டு வாசலையும் சன்னலையும் அடைக்கச்சொல்லிட்டிருக்கா...என்று மெதுவாகச் சொன்னார் அவர்.

ஆனா, இனிமே வீட்டுக் குப்பையை வெளியில்போடக்கூட வீட்டைச் சுத்திச்சுத்தி வெளியே போகணுமே...அதுவுமில்லாம வீட்டுக்குள்ள வெளிச்சமும் இருக்காது,காற்றோட்டமும் இருக்காதே என்றாள் பூரணி.

சரிதாம்மா...ஆனா, வாசலையும் ஜன்னலையும் அடைச்சிட்டா ஊதாரி மகன் உருப்பட்டுடுவான்னு நம்பிக்கை அவளுக்கு...இதில,நாம எது சொன்னாலும் எடுபடாது இப்போ என்று சொல்லிவிட்டு அகன்றார் அவர்.

கையில் காப்பியுடன் கிணற்றுத்தொட்டியில் உட்கார்ந்து பறவைகளின் குரலைக்கேட்கும் சுகம் இனிக் கிடைக்காது என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் பூரணி.அவளுக்கு மிகவும் பிடித்தமான,பின்வாசல் முல்லைக்கொடியும்,கிணற்றுத்தொட்டியும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு .

இடத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த வாரத்தில் வந்து வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப்போனார் மேஸ்திரி.

ஏதேதோ யோசித்தவாறே தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் பூரணி.

அன்று, காலையில் எழுந்து, தனக்கும் கணவனுக்குமாகக் காப்பியைக் கலந்தவள்,கணவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் குடிக்காமல் சென்று படுக்கையில் சரிந்தாள்.

என்னாச்சு பூரணி? ஏன் திரும்பவும் வந்து படுத்துட்டே? என்றான் மகேஷ்.

"தலை சுத்துதுங்க" என்று சொல்லிவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தாள் அவள்.

மகன் விஷயத்தைச் சொல்ல, மருமகளை வந்து எட்டிப்பார்த்தாள் கமலம்மாள்.

" எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம் என்று அம்மா சொல்ல, நீ மெதுவா குளிச்சுட்டு ரெடியாகு பூரணி...நான் ஆட்டோவுக்குச் சொல்லிட்டு வரேன் என்று புறப்பட்டான் மகேஷ்.

"நாள் அதிகமா ஆகலேங்கிறதால,இப்ப எதுவும் தெளிவாசொல்லமுடியல கமலாம்மா... இன்னும் ஒருவாரம் போகட்டும்.டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம். அதுவரைக்கும் இந்த மாத்திரையை வாங்கிக்குடுங்க" என்று சொல்லிச் சீட்டை நீட்டினாள் குடும்ப டாக்டர்.

"பாத்து வீட்டுக்குக் கூட்டிப்போம்மா" எனக்கு வேலையிருக்கு என்றுசொல்லிவிட்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்த நண்பனுடன் பைக்கில் புறப்பட்டான் மகேஷ். அங்கேயிங்கேன்னு சுத்திட்டு அர்த்தராத்திரியில வராம, நேரத்தோட வீட்டுக்கு வாப்பா என்றாள் கமலம்.தலையசைத்துவிட்டுச் சென்றான் மகேஷ்.

வீட்டுக்கு வந்தபோது, வாசலில் மேஸ்திரி கடப்பாறை மண்வெட்டியுடன் ஆட்கள் சகிதமாக வேலைக்கு வந்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த ரெண்டே நிமிஷத்தில் வயிற்றைப்பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள் பூரணி. பதறிப்போனாள் கமலம். ஓடிச்சென்று அளுடைய சிநேகிதியான அடுத்தவீட்டு மாமியை அழைத்து வந்தாள்.

வீட்டுக்குள் ஏதோ பதட்டம் என்றவுடன் வேலையைத் தொடங்காமல் தயங்கி நின்றார்கள் பணியாட்கள்.

என்னாச்சு கமலா? ஏன் இவால்லாம் வாசல்ல எமகிங்கராள் மாதிரி கடப்பாறையும் கம்புமா நிக்கறா என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் மாமி.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டவளாய், குமட்டறதுன்னு காலையில ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டாய். உடம்பு சூட்டோட வாயுவும் சேர்ந்து வயத்தை வலிக்கிறதுன்னு நினைக்கிறேன் என்று சொன்னவளாய்,

கமலா நீபோய் இவளுக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டா என்றுவிட்டு, பூரணியின் மாமனாரிடம் கேட்டு வேலையாட்கள் வந்த காரணத்தையும் தெரிந்துகொண்டாள்.

பாலைக் குடிச்சிட்டு, அடிவயித்தில விளக்கெண்ணெய் தடவிக்கிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு பூரணி.அப்புறமும் வலியிருந்தா ஆஸ்பத்திரிக்குப்போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கமலாவை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னாள் ஜானகி மாமி.

கமலா,எங்காத்து மாமாவைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய் என்றாள்.

திடீரென்று வந்த கேள்வியால் திகைத்த கமலம்," அவருக்கென்ன ஜானகி, அவருண்டு அவரோட வேலையுண்டுன்னு இருக்கார். உன்னையும் பிளைங்களையும் நல்லா வச்சிருக்கார்.ரொம்ப சிக்கனம்னு நீதான் குறைபட்டுக்குவே" என்றாள் கமலம்.

நம்ப ரெண்டுபேரோட வீடும் அடுத்தடுத்து ஒரேமாதிரி கட்டியதுதானே...வாஸ்து அமைப்பெல்லாம் ஒண்ணுபோலத்தானே இருக்குது. அப்ப எங்காத்துக்காரர் கஞ்சனாகவும், உன் பிள்ளை செலவாளியாவும் இருக்காங்கன்னா அதுக்கு வாஸ்து எப்படிப் பொறுப்பாகும்?

கிழக்குத்திசை வாசலும், மேற்குத்திசையில் பின்வாசலும் ஏகப்பட்ட ஜன்னல்களுமாய் எத்தனை அம்சமா கட்டியிருக்காங்க, அதைப்போய் மூடணும்ன்னு ஆளைக் கூட்டிவந்திருக்கியே என்றாள் மாமி.

படிக்கிற காலத்திலேயிருந்து மகன் கேட்கிறப்பல்லாம் காசைக்கொடுத்து நீ அவனை செலவாளியா வளத்துட்டே. சொந்தமா பிசினஸ் வச்சிக்கொடுத்து,போதாக்குறைக்கு சொந்தத்திலேயே ஒரு பொண்ணையும் கொண்டுவந்து கட்டி வச்சிட்டே. அவனுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாமப் போயிடுத்து. இனிமே, கொடுக்கிற கையைக் கொஞ்சம் சுருக்கிப்பார்...அவன் தன்னால சரியாயிடுவான். சம்பாதிச்சுட்டு வர்றதைவச்சு அவங்களோட செலவுகளைச் செய்யச்சொல். அவன் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா, எந்தக் கிரகமும் எதிர்க்க நிக்காது என்று சொல்லிச் சிரித்தாள் மாமி.

கமலம், மாமியின் வார்த்தைகளை ஆமோதித்ததுதான் தாமதம், வாசலில் சென்று வந்தவர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டு வேலைசெய்யவேண்டாமென்று அனுப்பிவைத்தார் சண்முகம். எங்கே புழக்கடை வாசலில், பூவாசக் காற்றோடு புத்தகம் படிக்கும் சந்தோஷம் கெட்டுப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு.

வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தாற்போலிருந்தது பூரணிக்கு.எழுந்து அமர்ந்தவள் ஜன்னல் வழியாகப் பின்பக்கம் பார்த்தாள்.மரக்கிளையில்,கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுக்குக் கொஞ்சிக்கொஞ்சி இரைகொடுத்துக்கொண்டிருந்தது குருவியொன்று.

உட்புறம் திரும்பினாள்... அங்கே,உரக்கப்பேசிக்கொண்டிருந்த மாமி அவள் கண்களுக்கு சாமியாகத் தெரிந்தாள்.

*********

சனி, 10 அக்டோபர், 2009

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 1 கப்

முட்டை - 1

எள் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு - ஒரு சிட்டிகை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.

************

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

துபாய் மால் (The Dubai Mall) தொடர்ச்சி - புதிய படங்களுடன்

ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்,

"இந்தப்பதிவில்" துபாய் மால் (The Dubai Mall)

பற்றிச் சொல்லியாச்சு.

இன்னும் சில புதிய பகுதிகளைப் பற்றி படங்களுடன் மீண்டும்...

துபாய் மால் ஆரம்பித்த புதிதில் சென்றபோது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்நடமாட்டம் இருந்தது. நேற்று மறுபடியும் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது, சும்மா சொல்லக்கூடாது...நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பைவிடக் கடைகளும் அதிகமாக, கூட்டமும் அதிகமாகத்தான் இருந்தது.
ரமதான் விடுமுறையும் ஆரம்பமாகியிருப்பதால் கடைகளெல்லாம் விதவிதமான விளம்பரங்களோடு களைகட்டியிருந்தன.





கடைகளைத் தவிர்த்து காட்சிக்கு விருந்தாகும் விஷயங்களும் நிறைய இருக்கத்தான் செய்யுது. பரந்து விரிந்த இடவசதி. நேர்த்தியான அலங்காரங்கள்,ஆங்காங்கே உட்கார அழகிய இருக்கைகள்,உணவுக்கூடத்தருகே குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி என்று எல்லாமே அழகாக அமைத்திருக்கிறார்கள்.



சுத்தமாய் மின்னும் தரைப்பரப்பும் இத்தனை இடவசதியும் இருந்தா நம்ம ஊரில் கட்டுச்சோறு கொண்டுவந்து குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொல்லிச் சிரித்தார் ஒருவர் :)

இதோ,இரைச்சலுடன் ஜொலிக்கிற நீரருவி, குதிக்கும் மனிதச் சிற்பங்களுடன்...








மையப்பகுதியில் மின்னும் நட்சத்திர அலங்காரம்...






நிறம் மாறும் தரைப்பகுதி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



 


நிஜமோ என எண்ணவைத்த மலர்க் குவியல்கள்...


 


 


இந்தமுறையும் எல்லாத் தளங்களையும் முழுவதுமாய்ப் பார்க்கமுடியவில்லை. சென்றமுறை பார்க்காமல்விட்ட பகுதிகளை மட்டுமே பார்த்தோம். ஆனாலும் அதுக்கே நாலுமணி நேரம் ஆகிப்போச்சு.ஏன்னா, மாலின் (mall)பரப்பளவு அத்தனை பெரியது. இன்னும் பார்க்காமல் விட்ட பகுதிகளெல்லாம் இனிவரும் அடுத்தபதிவில்...

***********

சனி, 12 செப்டம்பர், 2009

துபாய் மெட்ரோ (Dubai Metro)

இந்த ஊர் (துபாய்)ராஜாவுக்கு புதுமையும் பிரம்மாண்டமுமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பொருளாதார நெருக்கடி, வெளியேறும் மக்கள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை துபாய் சந்தித்தாலும், சொன்ன மாதிரியே 9/9/2009 இரவு 9 மணி 9 நிமிடத்தில் துபாயின் கனவு ரயில் முதலில் அரசகுடும்பத்தினரை மட்டும் சுமந்துகொண்டு புறப்பட்டது. மறுநாள் காலைமுதல், பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது துபாய் மெட்ரோ சேவை.

கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ நிலையங்கள் முழுக்கக் கூட்டமோ கூட்டம். இதுவரை ரயிலில்லாத ஊரில், புதிதாக ரயிலைப் பார்த்த சந்தோஷம். காரில் வந்து, காரை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ரயிலில் ஏறிச் சென்றுவிட்டுத் திரும்பும் உற்சாக மக்கள்கூட்டம். இந்த ரயில், ஓட்டுனர் இல்லாத, முழுக்கமுழுக்க கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பதால் எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம். அதே ஆர்வத்துடன்தான் புறப்பட்டோம் நாங்களும்.

முதல் கட்டமாக இப்போது பத்து ரயில் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. முதல் நாளில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 67,000 என்றும், இரண்டாம் நாள் வெள்ளியன்று அரைநாள் மட்டுமே இயக்கப்பட்டதால் அன்று பயணித்தவர்கள் 47,000 என்றும் அறிவித்துள்ளனர்.

நாங்கள் போகும்போது,இரவு நேரமானதால் விளக்கொளியில் மின்னியது மெட்ரோ ஸ்டேஷன்.



இதோ, ரயில்நிலையத்தின் உட்புற வேலைப்பாடுகளை,வியப்போடு பார்க்கும் மக்கள்...




உதவிக்கென்று ஊழியர்கள் பலர்...




நாங்கள் ஸ்டேஷனை அடைவதற்குச் சற்றுமுன்தான், ரயிலின் எமர்ஜென்சி வாயிலின் ((emergency exit) பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியதால் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரயிலில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்ய கோல்ட் கார்ட், சில்வர் கார்ட், ப்ளூ கார்ட், ரெட் கார்ட் என வித்தியாசமான வசதிகளுடன் கூடிய நுழைவு அட்டைகள் விற்பனையாகிறது. நமக்கேற்ற ஒன்றினைத் தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் அதை அங்குள்ள தானியங்கிக் கருவியில் காட்டியதும் நமக்கான பாதை திறந்து உள்ளே அனுமதிக்கிறது.




மேலே சென்று ரயில் வந்துநிற்கும் இடத்தினை அடைந்தோம். கண்ணாடியால் முழுவதும் மூடப்பட்டுள்ளது ரயில் வந்துநிற்கும் பகுதி. ரயில் வந்து நின்றதும் அந்தப்பகுதியின் வாயில்கள் திறந்துகொள்கிறது.



ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் வந்தவாறே இருக்க நாங்களும் ஒன்றில் ஏறினோம். ஏறியதும் ஒரு ஆப்பிரிக்கப் பெண் ஊழியர் வந்து, யாரும் வாசல் பட்டனை அழுத்திவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்துவிட்டுப்போக, தொடங்கியது ரயில் பயணம்.

ரயிலில் கோல்ட் கார்ட் கஸ்டமர்களுக்கு அதாவது 
வி ஐ பி க்களுக்கான முதல் வகுப்புப் பெட்டி ஒன்று, அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கான பெட்டி, அதனையடுத்து நான்கு பொதுப் பெட்டிகள், ஆக மொத்தம் ஆறு. எந்தப்பெட்டியில் ஏறினாலும் கடைசிவரை சென்றுவரலாம்.

உள்ளேயும் வெளியேயும் முழுக்கமுழுக்க நீலநிற வேலைப்பாடுகளுடன்
அழகாகவே இருந்தது ரயில்.

இது ரயிலின் நுழைவாயிலில்...







உயரத்தில் போகும் ரயிலிலிருந்து துபாயின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களைப் பார்த்தவாறே செல்வது சுவாரசியமாகத்தான் இருந்தது.ரயில்முழுக்க வயர்லெஸ் இணைய இணைப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால் ஆளாளுக்கு அவர்களுடைய செல்ஃபோனைச் சோதித்தவாறே இருந்தனார்.



இறுதி ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய ரயிலில் புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்தோம். ரயிலில் வந்து பஸ்சில் வேறு இடத்துக்குச் செல்லவேண்டியவர்களுக்கு வசதியாக, நிலையத்திற்குள்ளேயே தொலைக்காட்சித் திரையில் அறிவிப்பு வருகிறது. பஸ் வர எவ்வளவு நேரமாகும் என்று அறிந்துகொண்டு நிலையத்தைவிட்டு வெளியில் சென்றால்போதும்.



இதோ, இருளில் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக விரைகிறது துபாய் ரயில்...


**********