தலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 நவம்பர், 2009

குறுக்குத்துறையும் குருவித்துறையும்

என்னைக் கவர்ந்த ரெண்டு துறைகள் எதுன்னா, கட்டாயம் சொல்லுவேன் ஒண்ணு குறுக்குத்துறை இன்னொண்ணு குருவித்துறைன்னு( அறிவியல், தொழில்நுட்பம்னு ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்திருந்தா ஏமாற்றம்தான் :))காரணம் என்னன்னா,சொல்லப்போற ரெண்டுமே ஆற்றங்கரையில் அமைந்த ரெண்டு ஊர்களைப் பற்றிய விஷயங்கள்...

சொந்த மண்ணுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு பாசம் குறுக்குத்துறையில. சிலநூறு அடிகளுக்கு அப்பாலிருக்கும் சிக்கநரசய்யன் கிராமம் எந்தையின் சொந்த ஊர். வீட்டில பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்ட கதையையெல்லாம் அத்தனை சுவாரசியமாய்ச் சொல்லுவாங்க என் அப்பா.

இதோ, ஆற்றங்கரையில் அழகிய கோயில்...



கோயிலின் பின்னாலிருந்து எடுக்கப்பட்ட கோபுரத்தோற்றம்...



அருகில், அரசமரத்தடிப் பிள்ளையார் கோயில்...




தன்னுடைய சிறுவயதில், ஆற்றங்கரைப் பாறைக்கருகில் தான் காசு சேர்த்துப் புதைத்துவைத்த கதையை என் அப்பா சொல்ல, ஆசையாய் என் பிள்ளைகள் அங்கே தோண்டிப்பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

காசுதோண்டிவைத்த பாறையும், தூரத்தெரியும் ரயில் பாலமும்...(படத்தை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் ரயில் பாலமெல்லாம் தெரியும்)



நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், செந்தூர்க் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சிலாரூபமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதனால், திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் இங்கே அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.

கோயிலின் முகப்பிலிருந்து...



மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தியது.படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்த கிராமம்,மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலிருக்கும் குருவித்துறை. பசுமைக்குள் புதைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமம்.சின்னச்சின்ன வீடுகள், கோயில்கள், தென்னைமரச் சோலைகளென்று வைகைக்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் அது.

வைகையாற்றின் கரையில் வல்லவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார் வெங்கடேசப் பெருமான்.குரு பகவான் தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால், இந்த இடம் குருவின் துறையெனப் பெயர்பெற்று, பின் மருவி குருவித்துறையாகி, அயன் குருவித்துறையென்று என்று தற்போது அழைக்கப்படுகிறது.

குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய மகன் கசனை மீட்டு தந்தாராம். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் புகழ்பெற்ற குருஸ்தலமாகத் திகழ்கிறது.இந்த ஆலயம் ஊர்க்கோடியில் அமைந்திருந்தாலும் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இதோ, வல்லபப் பெருமாள் ஆலயம்...(படம் தினமலர்.காமில் வெளியானது)


இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே பாருங்க.

நன்றி: தினமலர்.

மதுரையிலிருந்து அரசுப் பேருந்துகள் அடிக்கடி குருவித்துறைக்கு வந்து செல்கின்றன. கிராமத்திற்குள் போகும்போது கனகம்பீரமாகக் காட்சியளித்தது பெத்தண்ண சாமி கோயில். கிராமத்து மக்களின் காவல் தெய்வம் அவர். ஊர் மத்தியில் மையமாக அமைந்திருக்கிறது,
பத்திரகாளியம்மன் கோயில். சித்திரை மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பாய்த் திருவிழா நடக்கிறது.

விவசாயம், பால் உற்பத்தி, மற்றும் தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு முக்கியமான தொழில்களாகத் தெரிகிறது.

இதோ, பத்திரகாளியம்மன் ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செல்லப் பிள்ளையார்...



சிவனின் ஓவியம் வரைந்திருப்பது ஆலயச்சுவரில் தான். மறுபுறத்து ஓவியத்தில் மகிஷனை வதைத்த மாகாளி...



இதோ,பெத்தண்ண சாமி கோயில்...



கம்பீரமாகக் குதிரையில்...



குருவித்துறையை விட்டுப் புறப்படுகையில் இருட்டிவிட்டது. தூரத்து மலையில் நெருப்பு ஓவியமாகப் புகையுடன் தெரிந்தது காட்டுத்தீ. வழியில் கண்ட,கண்ணுக்கழகான காட்சிகள் மனதை நிறைத்திருந்தது.

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (2) **மந்த்ராலயம்**

முதல்நாளை ஆதோனியில் கழித்துவிட்டு,மறுநாள், மகான் ராகவேந்திரரின் மந்திராலயத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். ஆதோனியிலிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணம்.வழியெங்கும் மலைகளும், வானம்பார்த்த பூமியுமாகக் காணப்பட்டது.





முதலில் துங்கபத்ரா நதியினைப் பார்த்துவிட்டு அப்புறம் ஆலயத்திற்குள் சென்றோம்.

சிறிதளவே நீரோடிய துங்கபத்திரா நதி...



முதல்முறையாக அங்கு செல்வதால் ஆலய வரலாற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பகவான் நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு, குடல்கிழித்து உயிர்குடித்த இரண்யகசிபுவின் மகன் பக்தப் பிரகலாதனின் அவதாரமாகவே மகான் ராகவேந்திரர் இங்கு வழிபடப்படுகிறார்.

நதிக்கரையில் மரங்கள் சூழ்ந்த பிருந்தாவனப் பகுதியில் மகான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்ததாகவும் அவர் இறைவனோடு கலந்து முக்தியடைந்த இடத்தில் துளசிமாடம் போன்ற அமைப்புடன் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறக் கேட்டோம்.ஆலயத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. சுத்தம் சுத்தம் எங்குபார்த்தாலும் சுத்தம்.மகானின் அமைதி நிலவும் ஆலயத்தில் மோனத் தவமிருக்கும் பக்தர்கள் பலரைக் காணமுடிகிறது.

தரிசனம் முடிந்து வெளிவருகையில் துளசிதள தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆலய வளாகத்தினுள்ளேயே போஜன சாலையும் அமைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த மரங்களுக்கிடையேதான் மகானின் ஆலயம் அமைந்திருக்கிறது.



கோவில் அமைந்திருக்கும் இடம் முன்பு மாஞ்சாலா என்ற கிராமமாக இருந்ததாகவும், மந்திராலயம் கோவிலுக்கு இடமளித்த அம்மையாரும் மாஞ்சாலம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாகவும் கூறினர். முகப்பிலமைந்திருக்கும் மாஞ்சாலம்மன் சன்னிதியைத்தான் ராகவேந்திரரை வழிபடுமுன் அனைவரும் வழிபடுகிறார்கள்.

இதோ, ராகவேந்திர பிருந்தாவனத்தின் அழகிய நுழைவாயில்...





ஆலய முகப்பின் முழுத்தோற்றம்...



ஆலயத்தின் முகப்பில் ராகவேந்திரர் திருவுருவம்...



ஆலயத்தின் வெளியே அழகிய பிருந்தாவனம். மலர்ச் செடிகள் பூத்து அழகூட்டுகிறது. செயற்கை நீரூற்றுகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.







பிருந்தாவனத்து மான்களில் சில...



ஆலயத்திற்குவரும் பக்தர்கள் தங்க வசதியாக, மிக அருகிலேயே அறைகள் உள்ளது.வங்கி வசதிகளும் அருகிலேயே உள்ளது.

ஆலயத்திலிருந்து ஆதோனிக்குத் திரும்பும்போது நேரம் இரவாகிவிட்டது. அந்தப் பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் அடிக்கடி நடக்குமென்று கூடவந்தவர்கள் சொல்லி கிலியைக் கிளப்ப, மந்திராலய மகானை மனதில் நினைத்தபடி எந்தத் தொந்தரவுமில்லாமல் வந்துசேர்ந்தோம்.

மொத்தத்தில் இந்த ஆந்திரப்பயணம் மனதுக்கு மிகவும் நிறைவாய் அமைந்திருந்தது.