kulambu recipe in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kulambu recipe in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 அக்டோபர், 2010

நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!

நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!


நவராத்திரி விரத காலம் பயறு வகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில் பலவகை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட காலத்தில் உடம்புக்கு அதிகமான நோய்எதிர்ப்பு சக்தி தேவை. அதற்காகத்தான் நவராத்திரி காலத்தில் நிறைய பயறுவகைத் தானியங்களை உண்ணும் வழக்கம் வந்ததுன்னு சொல்லுவாங்க.

* பயறுவகைகள் எல்லாமே அதிகமான புரதச் சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

* பயறு வகைகளில் நார்ச்சத்து, அதிகமென்பதால் இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

* தினமும் ஒரு கப் வேகவைத்த ஏதாவதொரு பயறை உணவில் சேர்த்துக்கொண்டால் அன்றாடத் தேவையில் 63% நார்ச்சத்து அதிலிருந்து நமக்குக் கிடைத்துவிடுகிறது.

* இது தவிர, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் இவற்றிலுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இவை அதிகம் உதவுகிறது.

எல்லாம் சரி, அதென்ன நரிப்பயிறுன்னுதானே யோசிக்கிறீங்க?
நேத்து யாராவது சொல்லியிருந்தா நானும் இதேமாதிரிதான் யோசிச்சிருப்பேன். ஏன்னா, இந்தப் பயறோட தமிழ்ப்பெயர் இப்பத்தான் எனக்கும் தெரிஞ்சிது. ஆங்கிலத்தில் இதுக்குப்பேரு Black Eye Beans. தமிழ்ல நரிப்பயறு...ஏன் இந்தப் பெயரை வச்சாங்கன்னு எனக்குத் தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லிட்டுப்போங்க.

சரி, இப்ப இந்த நரிப்பயறை வச்சு புளிக்குழம்பு பண்ண என்னென்ன பொருட்கள் தேவைன்னு பார்க்கலாம்.

நரிப்பயறு - 1/2 கப்

தக்காளி - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

சிறிய கத்தரிக்காய் - 2

தேங்காய்த்துருவல் - 1 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி - 1 தேக்கரண்டி

புளி - சிறு எலுமிச்சையளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு -தேவைக்கு

தாளிக்க...

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை...


பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வச்சுக்கங்க.

காய்கறிகளை நறுக்கி வச்சுக்கங்க.

புளியைக் கரைச்சு வடிகட்டி வச்சுக்கங்க.

தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைச்சு வச்சுக்கங்க.


செய்முறை:-

அடுப்பில் வாணலியை வச்சு, தேவையான அளவு எண்ணெய் விட்டுக்கணும்.

தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிச்சு,அதில் வெங்காயம் பச்சை மிளகாயப் போட்டு வதக்கணும்.

வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய், அப்புறம் தக்காளியையும் போட்டு வதக்கணும்.

தக்காளி கரைஞ்சு வரும்போது புளிக் கரைசலை ஊத்தி, அத்துடன் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.

கலவை,ரெண்டு நிமிஷம் கொதிக்கவிட்டு, அரைச்ச தேங்காய் சீரக விழுதைச் சேர்க்கவும்.

வேகவைத்த பயறைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போடவும்.

குழம்பை மூடி, எண்ணெய் பிரியும்வரை சிறுதீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நரிப்பயறு புளிக்குழம்பு ரெடி.

பின் குறிப்பு :- பயறு சாப்பிட்டு வரும் பின் விளைவுகளுக்கு வெள்ளைப்பூண்டு அக்கா, அல்லது பெருங்காயப் பாட்டியின் உதவியை நாடலாம்.

சனி, 21 நவம்பர், 2009

சுலபமான தக்காளிக் குழம்பு



கடைக்குப்போய் காய்கறி வாங்க நேரமில்லையா? வீட்ல தக்காளி, வெங்காயம் மட்டும்தான் இருக்கா? இருக்கிறதை வச்சு எளிதாகச் செய்யக்கூடிய குழம்பு இதோ...

தேவையான பொருட்கள் 

தக்காளி -கால் கிலோ
மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி -1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் (நறுக்கியது) -1
தேங்காய்துருவல் -1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் -1 குழி கரண்டி
நறுக்கிய வெங்காயம்- 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

*வெங்காயத்தை உரித்து நறுக்கி தேங்காய், சீரகத்துடன் அரைத்துக்கொள்ளவும்.

*புளியைக் கரைத்து வடிகட்டவும்.

*வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தை இட்டு சிவந்தவுடன் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*தக்காளி வதங்கியதும் அதனுடன் புளிக்கரைசல், அரைத்த கலவை மற்றும் பொடிகள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடியிட்டுக் கொதிக்கவிடவும்.

*பின் மூடியை நீக்கி உப்பு சரிபார்த்துவிட்டு, மேலும் இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

சுலபமான தக்காளிக் குழம்பு தயார்.

இதனை, தாளித்த துவரம்பருப்புக் கூட்டுடனோ, முட்டை பொரியலுடனோ, இல்லை அப்பளத்துடனோ சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

திங்கள், 22 டிசம்பர், 2008

உருளைக்கிழங்கு புளிக்குழம்பு

கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பாகற்காய்ன்னு பல காய்களை வச்சு புளிக்குழம்பு செய்திருப்பீங்க. புதுசா, இந்த உருளைக்கிழங்கு புளிக்குழம்பையும் செய்து பார்த்தீங்கன்னா கட்டாயம் பிடிச்சுப்போகும் உங்களுக்கு.

இவையெல்லாம் வேண்டும்...

உருளைக்கிழங்கு - 1 பெரியதாக

சிறிய வெங்காயம் - 5 அல்லது 6

புளி - எலுமிச்சை அளவு

வத்தல் தூள் - 1 டீ ஸ்பூன்

மல்லித்தூள் -2 டீ ஸ்பூன்

சாம்பார்ப்பொடி - 1 டீ ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வெல்லம் - பாக்கு அளவு

தாளிக்க...

எண்ணெய் - தேவையான அளவுக்கு

கடுகு, வெந்தயம் _ தலா 1/2 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

இதுபோலச் செய்யணும்...

சிறிய வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை விரல் அளவு துண்டுகளாக (ஃபிங்கர் சிப்ஸுக்கு நறுக்குவதைவிட கொஞ்சம் பருமனாக)நறுக்கிக்கொள்ளவும்.புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள்பொடி, வத்தல், மல்லித்தூள், சாம்பார்ப்பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு,கடலைப்பருப்பு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும். கிழங்கு வதங்கியதும் கரைத்துவைத்த புளி,மசாலாக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். எடுத்துவைத்திருக்கும் வெல்லத்தைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து குழம்பு சற்று கெட்டியானதும் இறக்கவும்.

தேவையென்றால், கடைசியில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டும் இறக்கலாம்.