சனி, 12 செப்டம்பர், 2009

துபாய் மெட்ரோ (Dubai Metro)

இந்த ஊர் (துபாய்)ராஜாவுக்கு புதுமையும் பிரம்மாண்டமுமான விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பொருளாதார நெருக்கடி, வெளியேறும் மக்கள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை துபாய் சந்தித்தாலும், சொன்ன மாதிரியே 9/9/2009 இரவு 9 மணி 9 நிமிடத்தில் துபாயின் கனவு ரயில் முதலில் அரசகுடும்பத்தினரை மட்டும் சுமந்துகொண்டு புறப்பட்டது. மறுநாள் காலைமுதல், பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது துபாய் மெட்ரோ சேவை.

கடந்த இரண்டு நாட்களாக மெட்ரோ நிலையங்கள் முழுக்கக் கூட்டமோ கூட்டம். இதுவரை ரயிலில்லாத ஊரில், புதிதாக ரயிலைப் பார்த்த சந்தோஷம். காரில் வந்து, காரை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ரயிலில் ஏறிச் சென்றுவிட்டுத் திரும்பும் உற்சாக மக்கள்கூட்டம். இந்த ரயில், ஓட்டுனர் இல்லாத, முழுக்கமுழுக்க கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பதால் எப்படித்தான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம். அதே ஆர்வத்துடன்தான் புறப்பட்டோம் நாங்களும்.

முதல் கட்டமாக இப்போது பத்து ரயில் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன. முதல் நாளில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 67,000 என்றும், இரண்டாம் நாள் வெள்ளியன்று அரைநாள் மட்டுமே இயக்கப்பட்டதால் அன்று பயணித்தவர்கள் 47,000 என்றும் அறிவித்துள்ளனர்.

நாங்கள் போகும்போது,இரவு நேரமானதால் விளக்கொளியில் மின்னியது மெட்ரோ ஸ்டேஷன்.



இதோ, ரயில்நிலையத்தின் உட்புற வேலைப்பாடுகளை,வியப்போடு பார்க்கும் மக்கள்...




உதவிக்கென்று ஊழியர்கள் பலர்...




நாங்கள் ஸ்டேஷனை அடைவதற்குச் சற்றுமுன்தான், ரயிலின் எமர்ஜென்சி வாயிலின் ((emergency exit) பட்டனை யாரோ தவறுதலாக அழுத்தியதால் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக ரயிலில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் ரயில் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்ய கோல்ட் கார்ட், சில்வர் கார்ட், ப்ளூ கார்ட், ரெட் கார்ட் என வித்தியாசமான வசதிகளுடன் கூடிய நுழைவு அட்டைகள் விற்பனையாகிறது. நமக்கேற்ற ஒன்றினைத் தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் வாங்கியதும் அதை அங்குள்ள தானியங்கிக் கருவியில் காட்டியதும் நமக்கான பாதை திறந்து உள்ளே அனுமதிக்கிறது.




மேலே சென்று ரயில் வந்துநிற்கும் இடத்தினை அடைந்தோம். கண்ணாடியால் முழுவதும் மூடப்பட்டுள்ளது ரயில் வந்துநிற்கும் பகுதி. ரயில் வந்து நின்றதும் அந்தப்பகுதியின் வாயில்கள் திறந்துகொள்கிறது.



ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் வந்தவாறே இருக்க நாங்களும் ஒன்றில் ஏறினோம். ஏறியதும் ஒரு ஆப்பிரிக்கப் பெண் ஊழியர் வந்து, யாரும் வாசல் பட்டனை அழுத்திவிடக்கூடாதென்று எச்சரிக்கை செய்துவிட்டுப்போக, தொடங்கியது ரயில் பயணம்.

ரயிலில் கோல்ட் கார்ட் கஸ்டமர்களுக்கு அதாவது 
வி ஐ பி க்களுக்கான முதல் வகுப்புப் பெட்டி ஒன்று, அதனையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கான பெட்டி, அதனையடுத்து நான்கு பொதுப் பெட்டிகள், ஆக மொத்தம் ஆறு. எந்தப்பெட்டியில் ஏறினாலும் கடைசிவரை சென்றுவரலாம்.

உள்ளேயும் வெளியேயும் முழுக்கமுழுக்க நீலநிற வேலைப்பாடுகளுடன்
அழகாகவே இருந்தது ரயில்.

இது ரயிலின் நுழைவாயிலில்...







உயரத்தில் போகும் ரயிலிலிருந்து துபாயின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களைப் பார்த்தவாறே செல்வது சுவாரசியமாகத்தான் இருந்தது.ரயில்முழுக்க வயர்லெஸ் இணைய இணைப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால் ஆளாளுக்கு அவர்களுடைய செல்ஃபோனைச் சோதித்தவாறே இருந்தனார்.



இறுதி ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய ரயிலில் புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்தோம். ரயிலில் வந்து பஸ்சில் வேறு இடத்துக்குச் செல்லவேண்டியவர்களுக்கு வசதியாக, நிலையத்திற்குள்ளேயே தொலைக்காட்சித் திரையில் அறிவிப்பு வருகிறது. பஸ் வர எவ்வளவு நேரமாகும் என்று அறிந்துகொண்டு நிலையத்தைவிட்டு வெளியில் சென்றால்போதும்.



இதோ, இருளில் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக விரைகிறது துபாய் ரயில்...


**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக