வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொள்ளை கொண்ட கதை!

அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.

ஒருநாள், வழிப்பறி பண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.  ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிறதுக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.
கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப் பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.  "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம் கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.

அதற்கு  அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிற மாதிரியே, இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.

அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.  அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய், கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளப்போனானாம் ரத்னாகரன். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.

என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக் கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்து விட்டுவிட்டு,"எங்கள் அனைவரையும்  காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.

அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.

தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சி நடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்  இன்றைக்கும் பேசப்படுகிற  ராமாயணம் எனும் இதிகாசம் பிறந்தது!

செவ்வாய், 11 டிசம்பர், 2018

விரிச்சி கேட்டல்!

பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.

படிக்கிற காலத்தில், கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை,  போன கடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப் பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து, ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.

நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால், அன்றைக்கு முழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.

இங்கேயும் அப்படியொரு காட்சி...

"அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை 
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்

நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வம் களைமாயோயென"

கார்காலம் வந்துவிட்டது. போருக்குச் சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த  முதிய பெண்கள், நெல்லுடன் முல்லை மலர்களைத் தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர். 

அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினை நோக்கி, "கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, உன் தாய் 
இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே" என்று கூறியதைக் கேட்கிறார்கள். 

நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச் சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள். 

இது, முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.  


பெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்

பாதிக்கப்பட்ட பெண்கள் பலநூறாயிருந்தாலும், சாதிக்கும் துடிப்புடன் தடைகளைமீறி வெற்றிகொண்ட பெண்கள் சிலநூறுபேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனைப்பெண்களைப்பற்றிப் பேசப்போகும் பகுதி இந்தப் பெண்டிர் தேசம்.

இதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.


பார்வதியின் சபதம்
--------------------------

 


நாட்டையும் பெண்ணென்போம்
நடை நெளிந்து ஓடுகிற
ஆற்றையும் பெண்ணென்போம்
அளவிலா அறிவுதரும்
ஏட்டையும் பெண்ணென்போம்
இடையின்றித் தேடுகிற
தேட்டையும் பெண்ணென்போம்
ஆனால்,
வீட்டுப் பெண்ணைமட்டும்
வேலைசெய்யும் அடிமையென்போம்

என்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை. சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.

திண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள்.

கணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்ற செலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.

அடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்ன செய்யப்போகிறாய்? படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப் பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.

பெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பை முடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகு பார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்து பேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.

மேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின் முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்று நின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து. பெண்ணென்றால் பார்வதியை மாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,
இன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.


பெண்டிர் தேசம் (2) * நெருப்பினில் கருகாத நம்பிக்கை *


முகத்தில் பரு வந்தால்கூட முகத்தை மறைக்கிற பெண்களையும், ஒப்பனை செய்துகொள்ளாமல் வெளியுலகிற்கு முகம்காட்டாத பெண்களையும்கூடப் பார்த்திருப்போம். ஆனால், இந்தப் பெண்ணின் கதை, தன் தோற்றத்தினால் கிடைத்த அவமானங்களையும் மீறி, சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை.

அன்றைக்கு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், வீட்டிலிருந்த பம்ப் ஸ்டவ்வில் தேநீர் போடப்போன எட்டுவயதுச் சிறுமி பிரேமாவின் உடலில்,  நெருப்புப் பற்றிக்கொண்டது. 50 சதவீதம் நெருப்புக் காயங்களுடன், அடையாளம் தெரியாத சதைக் கோளமாய் வெந்துபோனது அந்தச் சிறுமியின் முகம்.

வேலூரிலுள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமா, உயிருக்குப் போராடியதைப் பார்த்த அவரின் அன்னை, மகள் உயிர் பிழைத்தால் அவளை அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவைக்கிறேனென்று கடவுளை வேண்டிக்கொண்டாராம்.

அந்தச் சின்ன முகத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்தபின், நான்கு வருடம் கழித்து மீண்டும் பள்ளிக்குப்போன சிறுமி பிரேமாவுக்குப் பரிசாகக் கிடைத்ததோ அவமானமும் நிராகரிப்புமே. 13 வயதிலேயே பள்ளியிறுதித் தேர்வெழுதி, அடுத்த ஆண்டே பி.யூ.சி யில் சேர, அங்கே, அவரது உழைப்புக்குக் கிடைத்தது உயர்ந்த மதிப்பெண்கள்.

மதிப்பெண் அதிகம் வாங்கியதும் அருகில்வர ஆரம்பித்தார்கள் உடன் பயின்றவர்கள். பி யூ சியில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்து, அடுத்து ஹூப்ளி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமும் பெற்றார் பிரேமா. 

அடுத்தபடியாக, அவரது அன்னை செய்த வேண்டுதல் நிறைவேற, தனக்குச் சிகிச்சையளித்த பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர்.ஜோசஃப்பிடமே பிளாஸ்டிக் சர்ஜரியில் மேல் படிப்புக்காக மாணவியாகச் சேர்ந்தார். அது தவிர அமெரிக்காவிலும் சென்று, பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிப் படித்துவந்தார்.

அமெரிக்காவில் மட்டுமன்றி, நார்வே,கென்யா, எதியோப்பியா, தான்சானியா போன்ற நாடுகளுக்கும் சென்று, அங்கிருக்கும் பலருக்கும் மருத்துவ சேவையாற்றியிருக்கிறார் டாக்டர் பிரேமா. அன்றைக்குப் பலர் பார்க்க வெறுத்த அவரது முகமே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட பலருக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறுகிறார் அவர்.

தற்போது, பிளவுபட்ட உதடுகளுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்தும், பெங்களூரில் அக்னி ரக்ஷா என்ற சேவை நிறுவனத்தை நடத்தியும், பலருக்கு ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் டாக்டர் பிரேமா தன்ராஜ். இவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றிய (Plastic Surgery Made Easy) என்ற நூலும் எழுதியிருக்கிறார்.

*** தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை ***


வடக்குவீட்டு சாமி!


பூசை முடிந்து பிரசாதம் கொடுத்த கையோடு,அம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு ஆரம்பமானது. கோயில் திடலுக்குக் கூட்டம்கூட்டமாக வந்தவர்களில், ஒருசிலர் விரிப்பிலும் மற்றவர்கள் குளிர்ந்த மணலிலும் உட்கார்ந்து, வில்லுப்பாட்டுக் கேட்கிற பாவனையில், கோயிலுக்கு வருகிற போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஊரே கோயிலில் கூடிக்கிடந்தாலும், துரைப்பாண்டிக்கு மட்டும் கடையே கோயில், கல்லாப்பெட்டியே தெய்வமாக இருந்தது. காலையிலிருந்து கடை வேலையாக அங்குமிங்கும் அலைந்ததும், சாயங்காலம்,கடைக்கு வந்திருந்த சின்னவயசுக் கூட்டாளிகள் சிலருடன் நுங்கு போட்டுக்குடித்த மாலைப் பதநீருமாகச் சேர்ந்து, துரைப்பாண்டிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கடையைச் சாத்தி, வாசலில் கற்பூரம் ஏற்றிவைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடந்தார் அவர். மனைவி செல்லக்கனியும், மகள் வனஜாவும் வில்லுப்பாட்டு முடிந்ததும்தான் வீட்டுக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தார்கள். பரீட்சையிருப்பதால் கொடைக்கு வரமுடியாதென்று, காரைக்குடியில் இஞ்சினீயரிங் படித்துக்கொண்டிருந்த மகன் கணேசன் சொல்லிவிட, துரைப்பாண்டிக்கும் அவர் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம்.

ஊர்க்கோடியில், சுற்றிலும் தென்னத்தோப்புக்கு மத்தியில் தன்னந்தனியாய் இருந்தது துரைப்பாண்டியின் பண்ணை வீடு. பத்து ஏக்கர் தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒற்றையாய் வீடு. வீட்டைப்பூட்டி, அடுப்படிக் கதவுக்குப் பின்னாலிருந்த ஆணியில் சாவியை மாட்டிவிட்டுப் போவதாக மனைவி சொன்னது நினைவிருந்தாலும்,கதவைத் திறக்க மனசில்லாமல், திண்ணையில் கிடந்த நார்க்கட்டிலில் படுத்தார் துரைப்பாண்டி. கோயிலில், வனவாசம் போன பாண்டவர்களைப் பற்றி, வில்லுப்பாட்டுக்காரர் பாடியது ஒலிபெருக்கியில் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. படுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு, அடிவயிறு கனத்தது போலிருக்க, எழுந்து வடக்குவீட்டுக்குப் பின்னால், வேலிப்பக்கம் போய்விட்டு வந்தார்.

வடக்குவீடு, புதிதாய்க் கட்டிய மேலவீட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்தது. அது, துரைப்பாண்டியின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு. பத்துக்குப் பதினைந்தில் ஒற்றை அறையும் முற்றத்துத் திண்ணையும் மட்டுமேயுள்ளது.சின்னதாக இருந்தாலும் உத்திரக் கட்டைகளும் முன்வாசல் கதவும் சுத்தத்தேக்கு என்று அப்பா பெருமையாகச் சொல்லுவார். அம்மா இருக்கிற வரைக்கும் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். அப்புறம், இன்னும் கொஞ்சம் வசதிக்காகக் கட்டியதுதான் மேலவீடு. புதுவீடு கட்டியதும் வடக்குவீடு, வயலிலிருந்து வரும் நெல்லையும், தோட்டத்துத் தேங்காய்களையும் சேமித்து வைக்கிற இடமாகிப்போனது. இப்பவும் பெற்றவர்களின் ஞாபகம் வரும்போதெல்லாம் வடக்குவீட்டுத் திண்ணையில்போய் வெறுந்தரையில் கொஞ்சநேரம் படுத்திருப்பார் துரைப்பாண்டி.

பழைய நினைவுகளுடன் பாதையில் நடந்தவர், அப்போதுதான் கவனித்தார். வடக்குவீட்டுத் திண்ணையில் எப்பவும் எரிகிற குண்டு பல்பு அன்றைக்கு ஏனோ எரியவில்லை. அனிச்சையாய் அவரது பார்வை கதவுப்பக்கம்போக, கதவின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் கசிந்தது தெரிந்தது. சந்தேகமாய்ப் பார்த்தார் துரைப்பாண்டி. உள்ள யாரு லைட்டைப் போட்டிருப்பாங்க என்ற கேள்வியுடன், திண்ணைப் படியேறி, கதவில் கைவைத்தார்.

கதவு, உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திக்கென்றிருந்தது அவருக்கு. இந்நேரத்தில் இங்கே யார் வந்திருப்பார்கள்? எவனாவது, திருட வந்திருப்பானோ என்ற சந்தேகத்தோடு, வலப்பக்கத்து ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தார். அதுவும் உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெல்ல வந்து, மீண்டும் கதவு இடைவெளியில் எட்டிப்பார்த்தார் துரைப்பாண்டி.

உள்ளே, அரைக்கை சட்டையும்,கைலியுமாகக் கதவுக்கு முதுகுகாட்டி யாரோ நின்றுகொண்டிருக்க, அவன் கையில் புகைந்துகொண்டிருந்தது சிகரெட். ஒருசில வினாடிகளில், அவன் மிகமெதுவாக, யாருடனோ பேசியபடித் திரும்பினான். திரும்பிய அவன் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார் துரைப்பாண்டி. தேரிக்காட்டு ஏலத் தகறாரில் அவருடன் பகைத்துக்கொண்ட பக்கத்துத்தெரு பால்த்துரையின் மகன் தாமோதரன். அப்பனைப்போலவே இவனும் சண்டை சச்சரவுக்குப் பயப்படாதவன். உள்ளே, அவனுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்களென்று தோன்றியது அவருக்கு.

அவன் எதுக்காக இந்த நேரத்தில் இங்கே வந்தான்? நிச்சயம்,ஏதாவது கெடுதல் செய்வதற்காகத்தானிருக்குமென்று தோன்றியது அவருக்கு. ஒருவேளை, பழைய பகையை மனதில்வைத்து, தன்னை அடித்துப்போட வந்திருப்பானோ? அல்லது, ஊரே கோயிலில் இருக்கும்போது, உள்ளே நுழைந்து, கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருப்பானோ என்று பலவாறாய் எண்ணியபடி, உள்ளே தாளிட்டிருந்த வடக்குவீட்டுக் கதவைச் சத்தமின்றி வெளியில் தாளிட்டார் துரைப்பாண்டி. வில்லுப்பாட்டுச் சத்தத்தில், வெளியில் பூட்டியது அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

மேலவீட்டுப்பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் வாசல்கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. உள்ளறையிலிருந்த அலமாரி மட்டும் திறந்திருந்தது. மற்றபடி என்னவெல்லாம் இல்லையென்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. "பாவிப்பய, பாட்டுச்சத்தத்துல, வீட்டைக் கொள்ளையடிக்கலாம்னு வந்திருக்கிறானென்று நினைத்து ஆத்திரத்துடன் வெளியேவந்தார். மறுபடிபோய், வடக்குவீட்டுக் கதவைப் பூட்டு வைத்துப் பூட்டினார். அந்தச் சத்தம் உள்ளே கேட்டிருக்கவேண்டும். ஒருசில வினாடிகளில், உள்ளிருந்து 'யாரு'ன்னு கேட்டபடியே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர். பின்னால், ஜன்னல் திறக்கிற சத்தம் கேட்டது. எவ்வளவு தைரியமிருந்தா என்னோட வீட்டுக்குள்ளயே நுழைஞ்சிருப்பானுங்க என்று நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது அவருக்கு. "இருங்கடா, இன்னிக்கு ஊரைக்கூட்டி உங்க திருட்டுத்தனத்தை எல்லாருக்கும் தெரியவச்சிட்டுத்தான் மறுவேலை" என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு, காம்பவுண்ட் கேட்டைத் தாண்டித் தெருவில் இறங்கி   நடந்தார்.

கதவு தட்டப்படுவது இப்போது காதில் விழவில்லை. எட்டிநடந்தார் அவர். அதற்குள் குப்பென்று ஒரு வெளிச்சம் வரத் திரும்பிப்பார்த்தார். வடக்கு வீட்டின் ஜன்னல் பக்கத்திலிருந்து, நெருப்பின் ஜுவாலை தெரிந்தது. திக்கென்று அதிர்ந்தார் அவர். வடக்கு வீட்டுக்குள், டிராக்டருக்கு வாங்கிவைத்த டீசல், ஜெனெரேட்டருக்கு வாங்கிவைத்த பெட்ரோல், காலிக் கோணிகளென்று எரிவதற்குத் தோதான ஏகப்பட்டபொருட்கள் இருந்தது நினைவுவந்தது அவருக்கு. விக்கித்து நின்றார். சட்டென்று சமாளித்துக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறக்க எத்தனிக்க, அதற்குள், கெட்டிக்கதவோடு, வடக்குவீடு மொத்தமாகப் பற்றி எரியத் தொடங்கியது.

அடப்பாவமே, அவசரப்பட்டுட்டானே, அவமானத்துக்குப் பயப்பட்டு அவனுக்கே தீ வச்சுக்கிட்டானோ? அவனோட, உள்ளே இன்னும் யாரெல்லாம் இருந்திருப்பார்களோ என்ற கேள்விகளோடு, இப்போ யாரைக்கூப்பிடுவது? எப்படிப்போய்ச் சொல்வது? யாரிடம் சொன்னாலும் நான்தான் பற்றவைத்தேனென்று நினைப்பார்களோ என்று யோசித்து, மொத்தமாய் அதிர்ந்துபோன அவர், சத்தமில்லாமல் அங்கிருந்து வேகவேகமாய் வெளியேறி நடந்தார்.

வழியில் போகும்போதே, கோயிலில் வேட்டுச்சத்தம் கேட்டது. மண்டபத்தில்போய் உட்கார்ந்தார் அவர். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவரை மேலும் அதிரவைக்க, அங்கே, பாண்டவர்களைத் தங்கவைத்த அரக்குவீடு பற்றியெரிந்த கதையைப் பாடிக்கொண்டிருந்தார் பாட்டுக்காரர். அதற்குள், கோயிலில்,நள்ளிரவு பூஜைக்கான மணியொலித்தது. வில்லுப்பாட்டை நிறுத்திவிட்டு, எல்லாரும் பூஜையைப் பார்க்க எழுந்துபோனார்கள்.

பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே, "ஐயோ,துரையண்ணன் வீடு தீப்பிடிச்சு எரியுது"ன்னு யாரோ சத்தமாய்க் குரல்கொடுக்க, மொத்தக் கூட்டமும் கலைந்து ஓடியது. "ஐயையோ..." என்று குரல்கொடுத்தபடி செல்லக்கனி ஓட, அவளுக்குப் பின்னால் துரைப்பாண்டியும் ஒன்றுமறியாதவர்போல ஓடிப்போனார். ஆளாளுக்கு, தோட்டத்துப் பம்புசெட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அணைப்பதற்குள், வடக்குவீடு மொத்தமாய் எரிந்துபோயிருந்தது.

பத்துமூடை நெல்லு, மூணு மூடை கடலை, ஐநூறு அறுநூறு தேங்கா, என் மாமியார் புழங்கின அருமையான தேக்குமர பீரோ அத்தனையும் போச்சே என்று அலறினாள் செல்லக்கனி. அதிர்ந்துபோனவராய் மேலவீட்டுத் திண்ணையில் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார் துரைப்பாண்டி. எரிந்ததை அணைத்துவிட்டு, அவரவருக்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு, மீண்டும் கோயிலுக்குப் புறப்பட்டது ஊர். அழுதுகொண்டிருந்த செல்லக்கனி அப்போதுதான் கவனித்தாள், இத்தனை ஆர்ப்பாட்டத்திலும், தன் வயசுப் பெண்பிள்ளைகளோடு உட்கார்ந்து வில்லுப்பாட்டு கேட்கப்போகிறேனென்று சொல்லிப்போன வனஜா, இதுவரைக்கும் வீடு வரவில்லையென்று.

கண்ணைத் துடைத்துக்கொண்டவளுக்கு மனதில் என்னென்னவோ பயம் கிளம்ப, மகளைப் பாத்தீங்களா என்று கணவரிடம் கேட்டாள். அவர் இல்லையென்று தலையசைக்க, மறுபடியும் கோயில் பக்கம் ஓடினாள் அவள். வனஜாவைக் காணவில்லை. அவளுடைய தோழிப்பெண்கள் ஒவ்வொருவர் வீடாய்ப் போய்த்தேடினாள். யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அதிர்ந்துபோனாள் அவள். வீடு பற்றியெறிந்த துயரம் சட்டென்று தொலைந்துபோக,பொட்டப்புள்ளயப்போயி எங்கேன்னு தேடுவேன் என்று தலையைப் பற்றி அழுதபடி வீட்டைநோக்கி நடந்தாள் அவள்.

அதற்குள், ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேசிக்கொண்டார்கள், வனஜாவும் பால்த்துரை மகன் தாமோதரனும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார்களென்று. மகன் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அந்த மாய்மாலக்காரி, என்ன பொடிபோட்டாளோ என் புள்ளையை மயக்கிக் கூட்டிட்டுப்போயிட்டா... அவ எங்கபோனாலும் வெளங்கமாட்டா. அவ பண்ணின காரியத்துக்குத்தான், வேட்டு நெருப்பால வீட்டை எரிச்சிட்டாரு சாமி என்று, வாசலில்வந்து மண்ணைவாரித் தூற்றிவிட்டுப்போனாள் தாமோதரனின் தாய்.

கேட்டுக்கொண்டிருந்த துரைப்பாண்டி, நெடுமரமாய்ச் சரிந்தார். சட்டென்று வடக்குவீடு பற்றிக்கொண்டதன் மர்மம் விளங்கிப்போனது அவருக்கு. நடந்ததெல்லாம் கேள்விப்பட்டு, ஊரிலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தான் கணேசன். "அந்த கழுத, செத்துப்போச்சுதுன்னு நினைச்சுக்கோங்கப்பா. எங்களுக்கு நீங்க வேணும். நீங்க தைரியமாயிருங்கப்பா"ன்னு கையைப் பிடித்துக்கொண்டு அழுதான் அவன்.

துரைப்பாண்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. மகள் வனஜாவின்மேல் ஏகப்பட்ட பாசம் அவருக்கு. குலதெய்வம் வனபத்ரகாளியின் பெயரையொட்டி அவரது அம்மா, ஆசையாய்ப் பேத்திக்கு வைத்த பெயர். பக்தியில்லையென்றாலும் அழகாயிருந்ததென்பதால் அந்தப்பெயர் பிடித்துப்போனது அவருக்கு. மகளை வாய்நிறையக் கூப்பிடுவார் அவர்.

அந்த மகள், அப்பாவின் முன்னால் அசிங்கப்பட்டு நிற்க அஞ்சி, அவளையும் அவளோடு சேர்ந்தவனையும் அனலில் பொசுக்கிக்கொண்டாளென்பதை நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது அவருக்கு. உடைத்துச் சொல்லிவிட்டால் ரெண்டு குடும்பத்து நிம்மதியும் போய்விடும் என்பதோடு, செய்யாத கொலைப்பழியையும் சுமக்கவேண்டிவருமோவென்று அச்சமும் தோன்றியது அவருக்கு.

கணவனின் உள்ளத்துத் தவிப்பினை உணராதவளாக, "கவலைப்படாதீங்க...பொம்பளப்புள்ளமேல இம்புட்டுப்பாசம் வைக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். என்னிக்கிருந்தாலும் ஒருநாள், அது கல்யாணம் கட்டிக்கிட்டு இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். ஆனா, இன்னிக்கி, நம்மளை அவமானப்படுத்தி அழவச்சிட்டுப் போயிருக்கு. பட்டுத் திருந்தினபிறகு, அந்த ரெண்டு கழுதையும் நம்ம கால்ல வந்து விழத்தான் போகுது. நீங்க கவலைப்படாதீங்க..." என்று அவரது கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள் அவர் மனைவி.

அவள் சொல்லச்சொல்ல, இன்னுங்கொஞ்சம் அழுகைவந்தது அவருக்கு. மகள், ஓடிப்போகவில்லை, ஒரேயடியாய்ப் போய்விட்டாளென்ற உண்மை தெரிந்தால், செல்லக்கனி என்ன ஆவாள் என்று நினைக்க நினைக்க இற்றுப்போனது அவர் மனசு.

மொட்டைக் கட்டிடமாய் நின்றது வடக்குவீடு. அதைப் பார்க்கப்பார்க்க ஆறவில்லை அவருக்கு. எரிந்து கிடந்தவற்றின் மிச்சத்தை மனைவி தடுக்கத்தடுக்க தானே ஒற்றை ஆளாய்ச் சுத்தம் செய்தார் துரைப்பாண்டி. சுற்றி நின்ற சுவரை, மொத்தமாய்த் தட்டிவிட்டு, கெட்டித்தூண்களும், நடுவில் ஒற்றைப் பீடமுமாய் அங்கே ஒரு கோயில் கட்டச்சொன்னார்.

நடப்பது என்னவென்று புரியாமல் நின்ற மனைவியிடம், "இதுவரைக்கும் நடந்ததெல்லாம் குலதெய்வக் குத்தம் கனி...நம்ம சாமி, வனபத்ரகாளியை நெனைச்சு, இனி இங்க நித்தமும் வெளக்கேத்தணும்" என்றார் அவர். சாமியுமாகாது கோயிலுமாகாது என்றிருந்த கணவனின் அந்தத் திடீர் பக்திக்குக் காரணம் புரியாவிட்டாலும், இப்பவாவது புத்தி வந்ததேயென்ற திருப்தியுடன், சம்மதமாய்த் தலையாட்டினாள் செல்லக்கனி.


பாலும் சோறும், பக்கோடாக் கூட்டணியும்!

மதுரையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். இரவில், பரோட்டா சப்பாத்தி, இடியாப்பம் குருமாவுக்குப்பின் கொஞ்சமாய்ச் சோறு வைத்தார்கள். குழைவாய்ப் பிசைந்த தயிர்ச்சோறு போலிருந்தது அது. ராத்திரியில் தயிர் சாப்பிடுவதில்லை, வேண்டாமென்று மறுத்தபோது, இது பால்சோறு, இதைச் சாப்பிட்டால்தான் விருந்து சாப்பிட்ட நிறைவே வரும் என்று கட்டாயப்படுத்திச் சாப்பிடவைத்தார்கள்.

அப்போதுதான், பத்துப்பதினைந்து வயதில் விருதுநகரில் அத்தைவீட்டுக் கல்யாணத்தின்போது பக்கோடாக் கூட்டணியுடன் பால்சோறு சாப்பிடுவதைப்பற்றி அங்கேயிருந்த ஒரு பாட்டி சொன்னது நினைவுக்குவந்தது.

விருதுநகர் சிவகாசிப்பக்கம் பெண்கள் பலரும் மதியத்துக்குமேல் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத்தொழிலில் ஈடுபடுவதால் இரவில், எளிதாக ஏதாவது சமைத்துச் சாப்பிடும் நோக்கத்தில் உண்டாக்கியதுதான் இந்தப் பால்சோறுக்கும் பக்கோடாவுக்குமான கூட்டணி என்று பாட்டி சொன்னாங்க. பாட்டி சொல்லைத் தட்டாமல் அதன் பின் சில நாட்கள் பக்கோடாவும் பால்சோறுமாகவே கழிந்தது. ஆனா, சும்மா சொல்லக்கூடாது, இது சூப்பர் கூட்டணிதான்.

பொங்கலன்றைக்கு எங்க ஊர்ப்பக்கம், வெறும் பச்சைஅரிசியில் வெள்ளைப் பொங்கல் வைப்பார்கள்.வழக்கமாக அதை, அவியலுடனும் சாம்பாருடனும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஆனால்,அந்தப் பொங்கல் சோற்றில் பசும்பால் அல்லது தேங்காய்ப்பாலும் சீனியும் சேர்த்துச் சாப்பிடுவார்களாம் என் தாத்தா. அம்மா, சொன்னதிலிருந்து வெள்ளைப்பொங்கலும் தேங்காய்ப்பாலும் இன்றைக்கு எங்க வீட்டிலும் வழக்கமாகிவிட்டது.

பாலுக்கும் சோறுக்குமான பந்தம், பத்து மாசக்குழந்தையிலிருந்து பல்லில்லாத பாட்டி தாத்தா வரைக்கும் எல்லாருக்கும் ஏற்றது. ஆனால், பக்கோடா சேர்த்துச்
சாப்பிடுவது எல்லாருக்கும் ஒத்துவராத ஒன்று. அது மட்டுமல்லாமல்,
சோறு என்று பேச்சை எடுத்தாலே இன்றைக்கு அநேகர், சோறா, அதுவும் ராத்திரியா? அதெல்லாம் விட்டுப் பல வருஷமாச்சு என்று சொல்வதைத்தான் கேட்கவேண்டியிருக்கிறது. இன்னும் சிலரோ, சோறு என்ற சுத்தத் தமிழ்ச் சொல்லையே மறந்து, ஒருவேளை மட்டும் சாதம், ஒயிட் ரைஸ் என்ற லெவலுக்கு உயர்ந்துவிட்டார்கள்!

ஆக, கலோரி கணக்கும், கார்போஹைட்ரேட் அளவும், கொழுப்பின் சதவீதமும் பார்த்துச் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த பால்சோறு பக்கோடாக்கூட்டணி ஆகாத கூட்டணி. மற்றபடி, உடல் உழைப்பும் உற்சாகமுமாயிருக்கிற எல்லாருக்கும் ஏற்ற கூட்டணி இது.


செவ்வாய், 23 அக்டோபர், 2018

உறக்கமில்லாத இரவு

தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா.  தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள்,  "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா?  ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.

கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.

வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது. 

மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது.  மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.

செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள்.  அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள்  இதழைக் கையில் எடுத்தாள். 

முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.

வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.

முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

  மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். 

நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.

சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள். 

அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.

பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.

அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள். 

இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.
மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.

தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது. அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும்  தனிமையும்.



திங்கள், 10 செப்டம்பர், 2018

சங்ககால சமையல்


ஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :-

வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத்துச் சித்திரங்களாக விளங்குகின்றன சங்ககால இலக்கியங்கள்.

படிக்கப்படிக்கப் பெருமிதமும் வியப்பும் தொன்றுமளவுக்கு வாழ்ந்த நம் மூத்த தமிழ்க்குடியின் வாழ்வியல் நெறிகள், வளர்த்த உயிரினங்கள், ஆடிய நடனம், அணிந்த அணிகலன்கள், சூடிய மலர்கள், பாடிய பண், பசித்துப் புசித்த உணவு, ரசித்து விளையாடிய விளையாட்டுக்கள் என்று அவர்கள் வாழ்வின் அத்தனை செய்திகளையும் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைத்திருக்கிற இந்த இலக்கியங்களுக்குள் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்ற அந்நாளைய உணவுகள் பற்றிய செய்திகள் நம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.


இன்றைக்கு, பச்சரிசி, புழுங்கலரிசி, சிவப்பரிசி, பாசுமதி அரிசி என்று நெல்லரிசி வகைக்குள்ளே நிறைவடைந்துவிட்ட நம் தமிழர்கள், முற்காலத்தில், நெல்லரிசியோடு, வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கிலரிசி என்ற பல்வேறு அரிசி வகைகளைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்


பரந்து கிடக்கிற சங்க இலக்கியத்தில் உணவு பற்றிய ஏகப்பட்ட செய்திகள் இருக்குமென்பதால் முதலில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படைப் பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிற அந்நாளைய உணவுப்பழக்கவழக்கங்கள் மட்டும் இங்கே...


முதலில், ஆற்றுப்படை பற்றி,  வள்ளல் ஒருவனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்ற புலவன் வறுமையில் வாடுகிற இன்னொரு புலவனை வழிப்படுத்தி அனுப்புகிற பாடல் வகையே சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படை எனும் துறையாகும்.


பத்துப்பாட்டில்,


1. திருமுருகாற்றுப்படை

2.பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை

எனும் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உண்டு.


அவற்றுள், திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகப்பெருமானின் அருள் பெற்ற ஒரு பக்தன், இன்னொரு பக்தனை இறையருள் பெற ஆற்றுப்படுத்தும் பாடல்களாக அமைந்திருப்பதால் இங்கே உணவு பற்றிய செய்திகளில்லாமல், முருகனுக்குப் படையலிட்ட பொருட்களைப்பற்றிய குறிப்புகள் மட்டுமே காணப்படுகிறது.

மன்னன் வீட்டு விருந்தும் உபசரிப்பும் 


பொருநராற்றுப்படையில் பரிசில் வேண்டிச்சென்ற ஏழையொருவனுக்கு, தணலில் வேகப்பட்ட தந்தூரி வகை உணவைக் கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி காணக்கிடைக்கிறது.


"பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை  
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே..."

அதுவும் எப்பேற்பட்ட உணவு, அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சியை, இரும்புக் கம்பிகளில் குத்தி பக்குவமாகச் சமைத்துப் பரிமாற, அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட்டுவிட்டு, அதன் வெம்மை தாளாமல் வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.

அதுமட்டுமன்றி, வேறுவேறு வடிவங்களில் சமைக்கப்பட்ட பல்வேறு தின்பண்டங்களையும் கொண்டு வந்துகொடுத்து அவற்றை முழவின் இசைக்கு விரலியர் நடனமாட, அதனை ரசித்தவாறே உண்ணவைத்து மகிழ்ச்சிப்படுத்துகிறான் மன்னன்.

அதன் பின்னர், சோறும் உண்ணவேண்டுமென்று அந்த வறியவனை வற்புறுத்தி, முனைமுறியாத முல்லை மொட்டினைப்போன்ற விரலளவு நீளமான அரிசிச் சோற்றை, பலவகை பொரித்த காய்கறிகளோடு பரிமாற, அதனைக் கழுத்துவரை நிரம்புமாறு மன்னனுடன் அமர்ந்து உணவருந்திய மகிழ்ச்சியைப் பகிர்கிறான் புலவன்.
,
மக்களின் உணவுமுறையும் உபசரிப்பும்

விதம்விதமான அரிசிச் சோற்றினை நம் மக்கள் வகைவகையான கறிகளுடன் சமைத்துப் பரிமாறிய விதங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை.

மருத நிலமான ஆமூரில்,


"இருங்காழ் உலக்கை இரும்புமுகந் தேய்த்த

அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு"

இரும்பு உலக்கையால் தீட்டிய வெண்ணெல் சோற்றினை, சமைத்த நண்டுக்கறியுடன் பரிமாறியதையும்,


குறிஞ்சி நிலத்துக் கானவர் வீட்டில்,


"சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்"


சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு உடும்புக் கறிப்  பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த உபசரிப்பையும்,


 பசுக்களைப் பராமரித்து, அவற்றின் பாலையும், மோரையும் விற்றுத் தொழில் செய்யும் கோவலர் குடியிருப்புகளில், 


"இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன

பசுந்திணை மூரல் பாலொடும் பெருகுவீர்"

பசுந்தினை அரிசிச் சோறும் பாலும் சேர்த்த பால்சோற்றினை உண்ணத்தருவார்கள்.


மேலும், முல்லை நிலமக்களின், வைக்கோல் வேயப்பட்ட குடியிருப்புகளில்,


"நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெறுவிர்"


பூளைப்பூவினைப்போன்ற சிறிய வரகரிசிச் சோற்றுடன், வேங்கைப் பூப்போன்ற அவரையின் பருப்பைக் கலந்து பிசைந்த  பருப்புச் சோற்றினைப் படைத்துப் பரிமாறிய பாங்கினையும் காணமுடிகிறது.


இவை மட்டுமன்றி, கூத்தராற்றுப்படை காட்டும் கானகக் குறமகளின் வீட்டில், 

"வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..." 


சமைத்த கடமானின் கொழுப்புமிக்க தசையினையும், பன்றியின் தசையினையும், உடும்பின் கறியோடு, புளியும், பசுமோரும் கலந்து உலையிலேற்றிச் சமைத்த மூங்கிலரிசிச் சோற்றுடன் தருவார்கள் என்று நாம் அறியத்தருகிறார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.


அந்தணர் வீட்டு அடிசில்


பெரும்பாணாற்றுப்படையில், வீடுகளில், நாய், கோழி இவற்றை வளர்க்காமல் கிளிகளை வளர்த்து அவற்றுக்கு வேதத்தைக் கற்றுக்கொடுக்கும் அந்தணர் வீடுகளில்,


"வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்" 


கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெய்யில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்று பாணன் கூறுவதாகப் பாடல்கள் உள்ளன.


வறியவன் வீட்டு உணவு


வள்ளலும் வசதி படைத்தவர்களும் விருந்தளித்த விஷயங்கள் மட்டுமல்லாமல், வறியவரின் உணவுமுறையும் இங்கே காணக்கிடைக்கிறது. நல்லியக்கோடன் எனும் வள்ளலொருவனைக் காணச் செல்கின்றான் பாணன். வறியவனான அவன் வீட்டில்,


"ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து 
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் 
அழிபசி வருத்தம்..."

வாட்டுகிற பசித்துன்பத்திலிருந்து தக்களைக் காத்துக்கொள்ள, உப்பில்லாமல் சமைக்கப்பட்ட வேளைக்கீரையை மற்றவர்கள் தங்கள் வறுமையை அறிந்துவிடக்கூடாதென்று அஞ்சி, வாயிலின் கதவடைத்துக்கொண்டு குடும்பத்தோடு உண்ணுகின்ற காட்சியைச் சிறுபாணாற்றுப்படை  சொல்ல,

வறுமையிலே வாழ்ந்தாலும் கூட வந்தவர்க்கு உணவளித்து வாழும் நிலைமையையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்தியம்புகிறது.

"நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் . . ."


எயினர் எயிற்றியர் வாழும் ஈச்ச இலையினால் வேயப்பட்ட குடிசை. சமைப்பதற்கு எதுவுமின்றி, தரிசு நிலத்தைத் தோண்டிக்கிளறிச் சேகரித்துக் கொண்டுவந்த புல்லரிசியைக் குத்தி சுத்தம் செய்து, உப்பு நீர்க் கிணற்றில் ஊறிய நீரை உடைந்த பானையிலிட்டு, உலையிலேற்றிச் சமைத்த சோற்றை, சுட்ட கருவாட்டுடன் பரிமாறும் காட்சியையும் காணமுடிகிறது.


இது வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த நம் தமிழர்களின் பெருமை.


இவ்வாறாக ஆற்றுப்படை நூல்கள் நம் மக்களின் அக்கால உணவுப் பழக்கத்தையும் உயர்ந்த நெறிமுறைகளையும் எடுத்தியம்புகிறது.


                                                                           *****




புதன், 25 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டும் சிறுவீட்டுப் பொங்கலும்

தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்று எப்போதும் சொல்வார்கள் நம் மக்கள். இந்தத் தை, இதுவரை உறங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒரு உத்வேகத்தையும் ஒற்றுமையையும் ஒன்றாய்க் கொண்டுவந்திருக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.

மாற்றங்கள் மட்டுமே மாறாதிருக்கிற இந்த உலகில், மாறி மறந்துபோன விஷயங்களுள் ஒன்றாகிவிடுமோ என்று அச்சப்பட வைத்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு மீண்டும் சாத்தியமாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு விஷயம்.

இப்போதெல்லாம் ஊருக்குள் நான்கைந்துபேர் சொந்தமாக மாடு வளர்ப்பதைப் பார்ப்பதே அரிதாகி, ஆவினும் ஆரோக்யாவும் ஆட்சி செய்கிற தமிழ்நாட்டில், அன்றைக்கெல்லாம், பத்து வீட்டுக்கு ஒரு வீட்டில் கட்டாயம் மாடுகள் இருக்கும். பொங்கலுக்கு மறுநாள்,  மாடு வளர்க்கிற வீடுகளில் அவற்றைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணமடித்து, கொம்புகளைச் சுற்றிலும் பூச்சூட்டி, சுத்தம் செய்த தொழுவத்தில் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாடுகளுக்கும் பொங்கலை ஊட்டி விடுவார்கள்.

பின்னர், அலங்கரித்த காளைகள் மற்றும் கன்றுக்குட்டிகளின் கழுத்தில் சல்லிக்காசுகள் அதாவது நாணயங்கள் மற்றும் தேங்காய் பழம் முதலியவற்றையும் துணியில் முடிந்து மாலையுடன் கட்டிவிடுவார்கள். பின்னர் பறையடித்து ஒலியெழுப்பி அந்த மாடுகளைத் தெருவில் ஓடவிடுவார்கள். இளவட்டங்களும் சிறுவர்களும் மாட்டையும் கன்றையும் விரட்டிக்கொண்டு போய், அதன் கழுத்திலிருக்கிற காசு முடிப்பைக் கழட்டி எடுத்துக்கொள்வார்கள். இது கிராமங்களில் போட்டியாக நடத்தப்படாமல் அவரவர் தங்கள் காளைகளைக் கொண்டு தெருவில் மகிழ்ச்சிக்காக நடத்துவது. மாட்டுப் பொங்கலைச்  சிறப்பிக்கிற ஒரு மரபு விளையாட்டு.

இன்றைக்குக் காணும் பொங்கலென்று கொண்டாடப்படுகிற தினத்தில், சிறுவீட்டுப் பொங்கலென்று ஒரு கொண்டாட்டமும் இருந்தது. பெண் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் இது கொண்டாடப்படும். வீட்டு முற்றத்தில் மணலால் கரைகட்டி, ஒரு சிறுவீடு செய்து, அதன் வாசலில் கோலமிட்டு, சாணத்தில் பூச்சொருகி அலங்கரிப்பார்கள். பின், அந்த வாசலில் அடுப்புக்கூட்டி, சிறிய பொங்கல் பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்தப் பொங்கலை, அந்தச் சிறுவீட்டுக்குள், சாணத்தில் பிடித்துவைத்த பிள்ளையாரின் முன் வைத்துப் பூசை செய்வார்கள்.

அவர்களின் சிறிய வீட்டில் வைத்த பொங்கலை அண்டை அயலில் உள்ள குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் அந்தக் குழந்தைகளின் முகத்தில் அன்றைக்கு ஒரு அதீத மகிழ்ச்சி தென்படும். இது பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கும் ஒருநாள். தமிழரின் பண்பாட்டைச் சொல்லும் திருநாள்.

ஆக, தமிழர் திருநாளின் முதல்நாள் சூரியப் பொங்கலாகவும், மறுநாள் உழவுக்கு உறுதுணையான மாடுகளைச் சிறப்பிப்பதாகவும், மூன்றாம் நாள் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் என்பதை ஆங்காங்கே கேள்விப்பட்டாலும் சிறுவீட்டுப் பொங்கல் என்பது கிட்டத்தட்ட மறந்துபோன ஒரு நிகழ்வாகி விட்டது.

ஆணின் வீரத்தைச் சிறப்பிக்க ஜல்லிக்கட்டை நடத்தும் நாம் பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கச் சிறுவீட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்வோம்.

வெள்ளி, 17 ஜூன், 2016

கொசுப் பேச்சுக் கேட்கலாம் வாங்க...




அம்மா கொசு: செல்லம், மாடிவீட்டுப்பக்கம் மறந்துகூடப் போயிராதே...


குட்டிக்கொசு : ஏம்மா, அவங்கல்லாம் குட் நைட் கொளுத்துறவங்களா? 

அம்மா கொசு : இல்லடா, அந்த வீட்டுக்காரருக்கு கொரோனா வந்திருக்குதாம்!

                                                                  **********************

ராமு கொசு : நேத்திலேருந்து ஆளையே காணமே...எங்கடா போனே?

சோமு கொசு : கவுன்சிலர் வீட்டு ஏசி கார்ல கொஞ்சநேரம் கண்ணசந்துட்டேனா, அவங்க கூட பழனி வரைக்கும் போகவேண்டியதாப்போச்சு. சும்மா சொல்லக்கூடாதுடா, பழனிக் கொசுவெல்லாம் பக்தர்களைக் கடிச்சுக்கடிச்சு, நம்மளைவிட ரொம்ப சௌக்கியமா ஸ்ட்ராங்கா இருக்குதுங்க.

*********************


கணவன் கொசு: பிள்ளைங்களும் நானும் தொழிலுக்குப் போகும்போது முகத்தைச் சோகமா வச்சிட்டு உட்கார்ந்திருக்காதேன்னு எத்தனை நாள் சொல்றது?

மனவி கொசு : உங்களுக்கென்ன, யாரை வேணுன்னாலும் கடிக்கலாம், எந்த ரத்தத்தை வேணுன்னாலும் குடிக்கலாம். சர்க்கரை வியாதி வந்ததுலேருந்து பத்திய ரத்தம் தேடித்தேடி, எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கு. 

**********************

அண்ணன் கொசு : விடிஞ்சும் விடியாமலும் வெளியில புறப்பட்டுட்டியே, என்னடா வேலை?

தம்பி கொசு : நம்ம ஊர் லயன்ஸ் கிளப் ல ரத்ததானம் பண்றாங்களாம். ரகரகமா ரத்தமெல்லாம் ஒரே இடத்துல கிடைச்சா வேணாம்னா சொல்லுவாங்க, அதான்...

**********************

கொசு கமலா : அந்த கோழிப்பண்ணைக் கொசுவோட கொஞ்சிக்கிட்டுத் திரியாதேன்னு எத்தனைநாள் சொல்றேன்?

கொசு விமலா : ஏண்டி, உனக்கென்ன பொறாமை?

கொசு கமலா : பொறாமையா, அடிபோடீ... பறவைக்காய்ச்சல் வந்திச்சுன்னா, யாரும் பக்கத்துலகூட வரமாட்டாங்க, பாத்துக்கோ...

***********************

மனைவி கொசு(அலைபேசியில்) : ஏங்க, கோயிலூர் பக்கம் இலவசமா கொசு மருந்தடிக்கிற வண்டி வந்திருக்காம். அந்தப் பக்கம் போயிராதீங்க.

கணவன் கொசு : அடிப்போடி இவளே...காலைலேருந்து அந்தக் கொசு மருந்து வண்டியிலதான் உக்காந்திருக்கேன். கொஞ்சம் புகைமூட்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணும் ஆகல.                                                                                                                                                                                                                                                                     :):):):):)

புதன், 9 டிசம்பர், 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!



மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால், இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. 

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல, அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே, பாதிக்கப்பட்டவர்களைவிட உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும் பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கி வந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி, ஓடி ஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர் வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. 

அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி, என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

                                                              ******

வியாழன், 10 செப்டம்பர், 2015

மூதுரைக் கதைகள் - 2 புலி கிடந்த புதர்



மாலை மணி ஐந்து முப்பது. அலுவலகம் காலியாய்த் தெரிந்தது. இருந்த ஒன்றிரண்டுபேரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"சண்முகம் சார், உங்களுக்கு காப்பி, டீ ஏதாச்சும் வாங்கியாரவா?" என்றபடி அவரது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார் பியூன் மாணிக்கம். "வேண்டாம் மாணிக்கம் கொஞ்ச நேரம் கழிச்சு டிபனே வாங்கிட்டு வந்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. நான், இன்னிக்கி நைட் ஷிஃப்டும் முடிச்சுதான் வீட்டுக்குப் போகணும்" என்றபடி ஃபைலில் பார்வையைப் புதைத்துக்கொண்டார் சண்முகம்.

"அப்போ, காலாற நடந்துபோயி டீ சாப்டுட்டு வந்து உக்காரலாமே சார்...காலைல வந்ததுலே இருந்து ஃபைலே கதின்னு இருக்கீங்களே...மத்தியானம் கூட வெளியே போகல...உடம்பு கிடம்பு சரியில்லயா சார்?" என்று அக்கறையுடன் அவர் முகத்தைப் பார்த்தார் மாணிக்கம். மாணிக்கத்துக்கும் அவருக்கும் அலுவலக இடைவெளிகளை மீறிய நல்ல நட்பு உண்டு.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், "நீ போயி வேலையைப் பாரு மாணிக்கம்" என்றபடி, அலைபேசியை எடுத்து அரிசிக்கடை செட்டியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவந்து அமர்ந்தார். காதுகளில் காலையில் மனைவி பரமு சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

"வக்கத்த வாத்தியாரும் வேண்டாம், போக்கத்த போலீசும் வேண்டாம்னு சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு இந்த ஆக்கங்கெட்ட ஆபீசருக்குக் கட்டிவச்சார் எங்க அப்பா. இங்க என்ன வாழுது? ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கிற மாதிரியா இருக்கு? ஆசைஆசையா வாங்கின நகைய அடகு வச்சுத்தான் பிள்ளையைப் படிக்கவைக்கவேண்டியிருக்கு. 

நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது...வீட்டுக்கு வரும்போது என்னோட வளையலோட வரணும். இல்லேன்னா..." என்றவாறு அவள் அடுப்படிக்குள் நுழையவும் இவர் ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். காலையில் காப்பி கொடுக்கையில் ஆரம்பித்த அர்ச்சனை அதுவரைக்கும் ஓயவில்லை.

மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஏகப்பட்ட செலவாகிவிட்டது அவருக்கு. சேமிப்பெல்லாம் கரைந்துபோக, இறுதியில், போனவருஷம் தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த வளையலை வங்கியில் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

அடுத்த வாரம் வருகிற அண்ணன் மகனின் பிறந்த நாளுக்கு அந்த வளையல் இல்லாமல் போகமுடியாது என்ற பிடிவாதம் வேறு. அவரவருக்கு இருக்கிற பிரச்சனையில், உன்னோட கையில் கிடக்கிற வளையல் புதுசா பழசா என்று யாரும் பார்க்கப்போவதில்லை" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார். பரமு கேட்பதாயில்லை. 

அரிசிக்கடை செட்டியாரிடம் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார். நாளைதான் கிடைக்கும். அதற்குள் வீட்டுக்குப்போய் இன்னும் கொஞ்சம் வாய்ப்பரப்பு வாங்கிக்கொள்ள விருப்பமில்லை சண்முகத்துக்கு.

சண்முகத்தைப்போலப் பலரும் இல்லற வாழ்க்கையில் சங்கடப்படுவது தெரிந்துதான் அன்றைக்கே ஔவை மூதாட்டி, சுடுசொல் பேசுகிற இல்லாள் அமைந்த வீடு, புலி பதுங்கிக்கிடக்கும் புதருக்கு சமமானது என்று அழுத்திச் சொல்லியிருக்கிறாள்.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்".

மூதுரையின் இருபத்தோராவது பாடலில், மனைவி நல்லவளாக அமைகிற குடும்பத்தில், இல்லாதது எதுவுமே இல்லை. அங்கே எல்லாச் சிறப்புகளும் நிறைந்திருக்கும். அவளே, சுடுசொல்லால் தகிக்கிறவளாக அமைந்துவிட்டால், அந்த வீடு புலி பதுங்கிக் கிடக்கிற புதரைப்போல அச்சத்தைத் தருவதாக அமைந்துவிடும் என்று அழகாகச் சொல்லுகிறாள் ஔவைப்பாட்டி.

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டா நல்லதுதானே?


                                                    **************











சனி, 5 செப்டம்பர், 2015

பாரதியின் கண்ணன்


அவன் என்றைக்கு வந்தான், எப்போது என்னில் கலந்தான், எந்தத் தருணத்தில் என்னைத் தன்னுடையதாக்கினான் எதுவும் புரியவில்லை...ஆனால், அவன் இதயப் பரப்பெல்லாம் வியாபித்து விளையாடுகின்றான். என்ன நினைத்தாலும் கண்ணில் தெரிகிறான்...என் வழிகளில் கரம்பிடித்து வழிப்படுத்திச் சிரிக்கிறான்.


இவனை என்னென்று விளிப்பேன்? யாரென்று நினைப்பேன்? எதுவும் புரியாமல் தவிக்கிற மனசு அவனை எல்லாமாகப் பார்த்து மகிழ்கிறது. இப்படித்தான் வியந்திருக்கிறான் பாரதி.

கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய்,
மாணவனாய், சற்குருவாய், சின்னக்குழந்தையாய், காதலனாய்,
காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய்க் கண்டு வியக்கிறான் அவன். காதலியாகிற கண்ணன் கண்ணம்மாவாகியிருக்கிறான் அவன் கவிதைகளில்.


எத்தனை காதல் அவனுக்குக் கண்னனிடத்தில்! சொல்லத்தெரியாத பிள்ளையெனத் தவிக்கிற அவன் மனது, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று உருகிப்போகிறது. அனைத்தும் அவனென்ற அன்பினில் கட்டுண்டு அகமகிழ்ந்து நிற்கிறது.

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான் - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

அவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான். 

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதைநாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.

காதல்மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான்கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுஅவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான்.


அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.


காதல், மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான், கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறதுமனசு.

எண்ணும்  பொழுதிலெல்லாம் -அவன்கை 
           இட்ட விடத்தினிலே 
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் 
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் - அவன்தான் 
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்கனே 
            கண்ணின் முன் நின்றதடீ!

பலவிதமான பிரச்சனைகளின் மத்தியிலும், பற்றுக்கோடாய் ஒரு நம்பிக்கையிருந்தால், மனிதனின் மனது அந்தத் தளைகளில் கட்டுப்படாமல் உயர உயர உற்சாகமாய்ப் பறக்கும். கற்பனைச் சிறகுகொண்டு காற்றிலே மிதக்கும். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் என்கிற உறுதி வரும். பற்றுக்கோடாய்ப் பராசக்தியும்கரம் பற்றி வழிநடத்தக் கண்ணனும் பாரதிக்குக் கிடைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் அடிமைத்தளையிலும் ஆனந்த சுதந்திரத்தைக் கண்ணில் கண்டான். 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே"

என்று சிங்கநாதம் எழுப்புகிறான். சோர்ந்து கிடந்த அடிமை மனங்களுக்கு உற்சாகமூட்டுகிறான். மேலும்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்".

என்று தன் கற்பனைச் சிறகுவீசிக் கனவு காண்கிறான். இது ஒரு கவிஞனுக்கே உரித்தான உணர்வு. அவனால் மட்டுமே அப்போதைய நினைவுகளிலிருந்து அப்பால் விலகி, ஒரு அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கமுடியும். அவனும் சஞ்சரித்தான். அழகான ஒரு உலகம் அவன் கண்ணில் விரிந்தது. அடிமைத் தளைகள் நீங்கிய ஒரு ஆனந்த உலகம். கண்ணனின் கரங்களைப் பற்றியபடி கனவுகளோடு மரித்துப் புத்துலகம் போனான் அந்தக் கவிஞன். தன்னை  மகாகவியாய் மக்கள் மனதில் நிறுத்திப்போனான். கண்ணனின் காதல், அவன் வரிகளில் காலங்காலமாய் நிலைத்திருக்கும். காதல் மனங்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.