சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பாலும் சோறும், பக்கோடாக் கூட்டணியும்!

மதுரையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். இரவில், பரோட்டா சப்பாத்தி, இடியாப்பம் குருமாவுக்குப்பின் கொஞ்சமாய்ச் சோறு வைத்தார்கள். குழைவாய்ப் பிசைந்த தயிர்ச்சோறு போலிருந்தது அது. ராத்திரியில் தயிர் சாப்பிடுவதில்லை, வேண்டாமென்று மறுத்தபோது, இது பால்சோறு, இதைச் சாப்பிட்டால்தான் விருந்து சாப்பிட்ட நிறைவே வரும் என்று கட்டாயப்படுத்திச் சாப்பிடவைத்தார்கள்.

அப்போதுதான், பத்துப்பதினைந்து வயதில் விருதுநகரில் அத்தைவீட்டுக் கல்யாணத்தின்போது பக்கோடாக் கூட்டணியுடன் பால்சோறு சாப்பிடுவதைப்பற்றி அங்கேயிருந்த ஒரு பாட்டி சொன்னது நினைவுக்குவந்தது.

விருதுநகர் சிவகாசிப்பக்கம் பெண்கள் பலரும் மதியத்துக்குமேல் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத்தொழிலில் ஈடுபடுவதால் இரவில், எளிதாக ஏதாவது சமைத்துச் சாப்பிடும் நோக்கத்தில் உண்டாக்கியதுதான் இந்தப் பால்சோறுக்கும் பக்கோடாவுக்குமான கூட்டணி என்று பாட்டி சொன்னாங்க. பாட்டி சொல்லைத் தட்டாமல் அதன் பின் சில நாட்கள் பக்கோடாவும் பால்சோறுமாகவே கழிந்தது. ஆனா, சும்மா சொல்லக்கூடாது, இது சூப்பர் கூட்டணிதான்.

பொங்கலன்றைக்கு எங்க ஊர்ப்பக்கம், வெறும் பச்சைஅரிசியில் வெள்ளைப் பொங்கல் வைப்பார்கள்.வழக்கமாக அதை, அவியலுடனும் சாம்பாருடனும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஆனால்,அந்தப் பொங்கல் சோற்றில் பசும்பால் அல்லது தேங்காய்ப்பாலும் சீனியும் சேர்த்துச் சாப்பிடுவார்களாம் என் தாத்தா. அம்மா, சொன்னதிலிருந்து வெள்ளைப்பொங்கலும் தேங்காய்ப்பாலும் இன்றைக்கு எங்க வீட்டிலும் வழக்கமாகிவிட்டது.

பாலுக்கும் சோறுக்குமான பந்தம், பத்து மாசக்குழந்தையிலிருந்து பல்லில்லாத பாட்டி தாத்தா வரைக்கும் எல்லாருக்கும் ஏற்றது. ஆனால், பக்கோடா சேர்த்துச்
சாப்பிடுவது எல்லாருக்கும் ஒத்துவராத ஒன்று. அது மட்டுமல்லாமல்,
சோறு என்று பேச்சை எடுத்தாலே இன்றைக்கு அநேகர், சோறா, அதுவும் ராத்திரியா? அதெல்லாம் விட்டுப் பல வருஷமாச்சு என்று சொல்வதைத்தான் கேட்கவேண்டியிருக்கிறது. இன்னும் சிலரோ, சோறு என்ற சுத்தத் தமிழ்ச் சொல்லையே மறந்து, ஒருவேளை மட்டும் சாதம், ஒயிட் ரைஸ் என்ற லெவலுக்கு உயர்ந்துவிட்டார்கள்!

ஆக, கலோரி கணக்கும், கார்போஹைட்ரேட் அளவும், கொழுப்பின் சதவீதமும் பார்த்துச் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த பால்சோறு பக்கோடாக்கூட்டணி ஆகாத கூட்டணி. மற்றபடி, உடல் உழைப்பும் உற்சாகமுமாயிருக்கிற எல்லாருக்கும் ஏற்ற கூட்டணி இது.


வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மைதா முறுக்கு



கைமுறுக்கு, அச்சு முறுக்கு, தேன்குழல்ன்னு எத்தனையோ வகை சாப்பிட்டிருப்பீங்க...ஆனா, அத்தனையிலும் எளிதானது இந்த மைதா முறுக்கு. ஒருமுறை செய்து ருசிபார்த்தா அப்புறம், உங்க அடுப்படியில் அடிக்கடி மைதாமாவு காலியாகும்.

மைதா முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1/4 கிலோ

எள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை

மைதாவை மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து ஆறிய மைதாவை உதிர்த்துவிட்டு, உப்பு கலந்த நீர், சீரகம், எள் சேர்த்து கெட்டியாக, முறுக்கு அச்சில் பிழியும் பக்குவத்தில் பிசைந்துகொள்ளவும். காரம் தேவையென்றால் சிறிது காரப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

பிசைந்த மாவை, சிறு சிறு தட்டுகளில் பிழிந்து,அதனை எண்ணெயில் இட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான, எளிதான மைதா முறுக்கு தயார்.

************


செவ்வாய், 14 செப்டம்பர், 2010

குடைமிளகாய் பொரியல் செய்முறை



குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்.

தேவையான பொருட்கள்
-----------------------

பச்சை குடைமிளகாய் - 300 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
--------
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை
------------

குடைமிளகாயைக் கழுவி, காம்பு மற்றும் விதைப் பகுதியை நீக்கிவிட்டு, மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காயுடன், சீரகம், இஞ்சியைச் சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு உப்புச் சேர்த்து வதக்கவும். மூடிவைக்க வேண்டியதில்லை. மிக விரைவில் வதங்கிவிடும். வதங்கி வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.

இறுதியில், அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.

சூப்பரான குடைமிளகாய் பொரியல் ரெடி. இந்தப் பொரியலை, உதிர வடித்த சாதத்துடன் கலந்து, காப்ஸிகம் ரைஸ் என்று பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸிற்கும் தயார் செய்து அனுப்பலாம்.

************

திங்கள், 26 மே, 2008

சீரக சாதம் | ஜீரக சாதம் | Jeera Rice

தினமும் அதே சாதம்தானா என்று வீட்டில் சலிப்பாய்க் குரல் எழும்புகிறதா? ஒரு மாறுதலுக்காய் மிகச் சுலபமான ஜீரகசாதம் செய்து அசத்துங்க...

Variety Rice Recipe - Jeera Rice


தேவையான பொருட்கள்

பாஸ்மதி/சோனா மசூரி அரிசி - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 3
முந்திரிப்பருப்பு - 10
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
__________

1. அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. குக்கரில் எண்ணெய் + நெய் விட்டு சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும். 

ஜீரகம் வெடித்ததும் அதில் வடிகட்டிய அரிசியைச் சேர்த்து, கூடவே தயிரையும் சேர்த்து, 2 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த அரிசியில் தேவையான அளவு நீரை ஊற்றி, அளவாக உப்புச் சேர்த்துக் கலந்துவிடவும்.

3. குக்கரை மூடி சிறுதீயில் வைத்து 1 அல்லது 2 விசில் விட்டதும் இறக்கிவிடலாம்.

மிக எளிதான இந்த ஜீரக சாதத்தை, எந்தவகை காய்கறி குருமாவுடனோ, அல்லது அசைவ உணவுவகைகளுடனோ சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள வடகமோ, அப்பளமோ இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
                                                            ***