செவ்வாய், 23 ஜூன், 2009

கண்முன்னே அழியும் கலையொன்று...கடிதம்!




அப்பல்லாம், விடுதியிலேயிருந்து வீட்டுக்குக் கடிதம் போடும்போது, அப்பா, அம்மா, அக்கா, தம்பி, ஆடு,மாடு,அக்கம்பக்கத்துக்காரங்கன்னு அத்தனை பேரையும் விசாரிச்சு எழுதுவேன்.

அம்மா உன்னைப் பாக்காம, உன்னோட சமையலை சாப்பிடாம ரொம்ப கஷ்டமா இருக்கும்மான்னு எழுதினதுக்காக எங்கம்மா ரெண்டுமூணுநாள் கண்ணீர்விட்டதா சொல்லி, "மகளே, உன் பாசத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திட்டுக் கடிதம் எழுதும்மா" ன்னு அப்பா அடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆனா, இப்ப ஒரு மகன் அவங்க அப்பாவுக்குஅஅனுப்பின மெயிலைப் பார்த்தபிறகு, இந்தக் காலத்தில பாசம்தான் குறைஞ்சுபோச்சா இல்லே, யாருக்கும் அதை வெளிப்படுத்தத் தெரியலியான்னு புரியவே இல்லேன்னு அநியாயத்துக்கு வருத்தப்பட்டார் அந்த பாவப்பட்ட அப்பா.

அவர், பிரிண்ட் எடுத்து வைத்திருந்த கடிதத்திலிருந்த விஷயம் இதுதான்...

hi dad,

h r u?

I have some urgent expenses here. Send Rs 2000 immediately.

tc

Ganesh

கொஞ்சமா எழுதினாலும் பையன் விஷயத்தில தெளிவாத்தான் இருக்கான்னு நான் நினைச்சுக்கிட்டேன்.

இன்லண்ட் லெட்டரிலும் ஏர் மெயிலிலும் இதயத்தைப் பரிமாறிக்கொண்ட காலம் அது...முன்னெல்லாம்,படிப்புக்காக விடுதியில இருந்தாலோ,வேலைக்காக வெளியூர்ல இருந்தாலோ வாரத்துக்கு ஒரு கடிதமாவது வீட்டுக்கு எழுதுவாங்க. கல்யாணமான புதுசுல மனைவியை விட்டு வேற ஊர்ல இருந்தா சொல்லவே வேண்டாம்... தினம்தினம் கடித மழைதான்.இந்தக் காலத்தில் செல்போனும், கணினியும் வந்து ஆக்ரமிச்சுகிட்டதால,கடிதம் எழுதுகிற அந்தக் கலையை நாம கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டுதான் வரோம்.

கணினியில தட்டித்தட்டி நிறைய பேருக்குக் கையெழுத்தே மறந்துபோச்சுங்கிறது தனிக்கதை.
எனக்கெல்லாம் இ கலப்பையில எழுதிப் பழகிட்டு, எங்கேயாவது கையால் எழுத நேர்ந்தா ஏகப்பட்ட எழுத்துப்பிழை வேற...

கல்லூரிக் காலத்தில கடிதம் எழுதும்போது இன்லாண்ட் லெட்டரில் ஒட்டும் இடம் தவிர எல்லா இடத்திலும் எழுதி நிறைத்ததுண்டு. எங்கம்மா எங்கிட்ட சொல்லுவாங்க, எல்லாரும் கடிதம் எழுதும்போது அன்புள்ள அம்மா அப்பாவுக்குன்னு ஆரம்பிப்பாங்க. ஆனா, உனக்கு அங்கேயும் அப்பாதான் முதல்ல, அம்மா அடுத்ததுதான்" என்று ஆதங்கப்படுவாங்க. அந்த அளவுக்கு கடிதங்கள் பாசத்தின் பிரதிபலிப்புகளாக இருக்கும்.

பல வருஷங்கள் முன்னால் எழுதிய கடிதங்களை எடுத்துத் திரும்பப் படித்துப்பார்ப்பதன் சுவாரசியமே தனிதான். முன்னெல்லாம் வீடுகளில், ஓட்டுச்சரிவிலோ அல்லது ஜன்னல் கம்பியிலோ ஒரு கனத்த கம்பியைத் தொங்கவிட்டு அதில அப்பப்போ வர்ற கடிதங்களை அழகா குத்தி அடுக்கி வச்சிருப்பாங்க.அன்புக்கு மட்டுமல்லாமல் பல அத்தியாவசியமான விஷயங்களில் சாட்சியாகவும் இருக்கும் இந்தக் கடிதங்கள்.எழுதியதை இல்லேன்னு சொல்லமுடியாதில்ல...

கடிதத்தில் எழுதும் விஷயங்கள் கல்வெட்டு மாதிரி.சிலர் எழுதும் கடிதங்களை பலமுறை படித்துப்பார்க்கத்தோன்றும்.உதாரணமா, என் தோழி ஒருத்தி எழுதிய கடிதங்களை நான் ஒன்றுக்குப் பத்து தடவை படித்ததுண்டு. புரியாம இல்லீங்க, அவ எழுதும் விதத்தில் எல்லா வார்த்தைகளும் அழகாகிவிட்டதுபோல ஒரு பிரமை தோன்றும் அப்போது.

"சின்னதொரு வட்டத்திற்குள் நிற்காம, அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்க"ன்னு இருபது வருஷங்களுக்கு முன்னால் அவ எழுதிய அந்த பொருள் பொதிந்த வார்த்தைகளை இன்னும் மனசிலிருந்து அழிக்கத்தான் முடியல...

*************

ஞாயிறு, 21 ஜூன், 2009

ரோஜாப்பூ சட்னி

ரோஜாப்பூச்சட்னின்னதும், நிஜமாவே ரோஜாப்பூவை வச்சு செய்யிற சட்னின்னு நினைக்காதீங்க...இது காரணப்பெயராக்கும். பக்குவமா வதக்கி பதமா அரைச்செடுத்தா இந்தச் சட்னி ரோஜாப்பூ நிறத்தில் வரும். சிவப்பு ரோஜா இல்லை...பிங்க் ரோஜா.

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் - 2

பழுத்த தக்காளி - 1

மிளகாய் வற்றல் - 6

உப்பு - தேவையான அளவு

தாளிக்க, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு...


பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கோங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து, அதில் மிளகாய்வற்றலைப் போடுங்க.

எண்ணெயில் மிளகாய் வறுபட்டதும், வெங்காயம் தக்காளியை உப்புச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கிக்கோங்க.

வதக்கிய கலவையை ஆறவிட்டு, மிக்சியில் அரைத்தெடுத்தால் ரோஜாப்பூச்சட்னி ரெடி.

இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்.

பி.கு : மிளகாய் கருகினாலோ,வெங்காயம், தக்காளி அதிகமாக வதங்கினாலோ நிறம் சரியாக வராது.

**********

ஞாயிறு, 14 ஜூன், 2009

கருப்பட்டிக்காப்பியும், கடந்தகாலத்து நினைவுகளும்...


ரொம்பநாளா அழைச்சிட்டிருந்த ஒருத்தங்க வீட்டுக்குப் போயிருந்தோம்...

அந்தம்மாவின் கணவர் வந்து எங்களை வரவேற்று உட்காரச்சொன்னார். வீட்டுக்கார அம்மாவையோ பிள்ளைகளையோ யாரையும் காணோம். கொஞ்சம் நேரம் கழிச்சு அந்தம்மா வந்தாங்க புன்னகையோட. பிள்ளைகளை எங்கேன்னு கேட்டேன். ஒவ்வொருத்தரா அவங்கவங்க ரூமுக்குள்ள இருந்து வந்து எட்டிப்பாத்துட்டுப் போனாங்க.

பேச ஆரம்பித்தோம்...நாங்க கேள்வி கேட்க அவங்க அளவா பதில்மட்டும் சொல்லிட்டிருந்தாங்க. ஒருவேளை அதிகமா பேசத்தெரியாதோன்னு ஆச்சரியமாயிருந்தது.
(ஒருவேளை நாமதான் அளவுக்கதிகமா பேசுறோமோன்னு சந்தேகம்கூட வந்தது)

கொஞ்சநேரத்தில் வேலையாள் வர,காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தாங்க. 50 மிலி சைசுக்கு அழகான கப். அதிலே ஆவி பறக்க காப்பி. காப்பியில ஆவி பறக்க, என் மனசு பழைய நினைவுகளில் பறக்க ஆரம்பிச்சிது.

ஆச்சி வீட்டு முற்றம்... மேலே கம்பியில் படந்த முல்லைக்கொடி.மயங்கிய மாலை...மணத்தோடு தழுவிய மெல்லிய காற்று.

பெரிய பாத்திரத்தில் மணக்கமணக்க கருப்பட்டிக் காப்பியும், அதனுள் பெரிய குழிக்கரண்டியுமாக சித்தி வந்து உட்கார, வாண்டுகள் பெரியவங்க அத்தனைபேரும் சுற்றி உட்கார்ந்திருப்போம். ஒரு பிளாப்பெட்டி (பனை ஓலையில் செய்த பெட்டி) நிறைய முறுக்கும், கால் லிட்டர் சைசுக்கு தம்ளர்களுமாய் ஆச்சி வர, ஒவ்வொருத்தருக்காய் காப்பியை ஆற்றி, அதுக்குள்ளே, ஆளுக்கு ரெண்டு கைமுறுக்கை நொறுக்கிப்போட்டு கையிலே கொடுக்க, காப்பியின் சுவையும் கதைபேசும் சுவாரசியமும் சேர, ஒரு டம்ளர் காப்பியைக் குடித்துவிட்டு இன்னும் வேணும்னு கைநீட்டிய அனுபவமும் ஒண்ணொண்ணாக நினைவுக்கு வந்தது. அப்பல்லாம், காப்பி குடித்து முடிந்ததும் வயிறு மட்டுமில்லை...மனசும் நிறைஞ்சிருக்கும்.

காப்பி குடிக்கையிலும், கையில் சோறு உருட்டித் தரும்போதும் எத்தனை கதைகள் பேசியிருப்போம்? எத்தனை விஷயங்கள் அறிந்திருப்போம்? இந்தக்காலத்தில் எத்தனைபேர் வீட்டில் எல்லாரும் ஒண்ணாக உட்கார்ந்து காப்பியோ, சாப்பாடோ சாப்பிடுகிறோம்? எத்தனைபேர் அந்நேரத்தில் மனசுவிட்டுப் பேசிக்கொள்கிறோம்?

எல்லாவற்றையும் மறந்துதான் போய்விட்டோம்...வீட்டில் ஆளுக்கொருமூலையில் ஒருத்தராக, அவரவர் விரும்பும்போது சாப்பிட்டுக்கொண்டு, தொலைக்காட்சியையோ, கணினித் திரையையோ வெறித்தபடி, வாய்விட்டுப்பேசக்கூட மனமில்லாததுபோல...மனசு நிறைய புழுக்கத்தைச் சுமந்தபடி...

சுருங்கிப்போனது காப்பி கப் மட்டுமா, நம் மனங்களும்தானா?

*************

சனி, 13 ஜூன், 2009

கண்ணாடி மேஜை வாங்கப்போறீங்களா? கவனம்!!!

புதுசா வீட்டுக்குக் கண்ணாடிமேஜை வாங்கப்போறீங்களா??? கவனம்!! ஏற்கெனவே உங்க வீட்டில் இருக்குதுன்னாலும் கவனம்!!!

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை... இன்றும் விடுமுறையென்பதால் நேற்று உறங்கப்போகையில் இரவு மணி 1.45 இருக்கும். படுக்கப்போகும்போது, விடியலில் அப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.

காலையில் 6.30 க்கு விழிப்பு வந்தது. கண்ணைக் கசக்கியபடி அறையைவிட்டு வெளியே வந்தேன். முன்னறையில், தரையில் சின்னச்சின்ன ஒளிப்பிரதிபலிப்புகள். வெளியிலிருந்துவரும் வெளிச்சம் ஏதோ கண்ணாடியில்பட்டு எதிரொளிக்கிறதோ என்று உற்றுப்பார்த்தேன். தரையில் சின்னச்சின்ன கண்ணாடி மின்னல்கள். அவற்றிலொன்றைக் கையிலெடுத்துப் பார்த்தபடி, எங்கேயிருந்து வருகிறதென்று பார்வையை ஓட்டினேன். டைனிங் ரூம் கதவு பாதியளவு திறந்திருக்க, அங்கேயிருந்து கண்ணாடிச்சில்லுகள் வெளியே சிதறியிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியுடன் கால்களைச் செருப்புக்குள் நுழைத்தபடி அறைக்குள் எட்டிப்பார்த்தேன்.

வீட்டுக்குள் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மூளையில் பளிச்சிட, என் கணவரை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு, குழந்தைகளின் அறைக்குள் சென்று பார்த்தேன். எல்லாரும் அசந்து தூங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் வந்து டைனிங் ரூமை எட்டிப்பார்த்தேன். அறையின் இன்டீரியருக்குப் பொருத்தமாகத் தேடிப்பிடித்து வாங்கி ஒரே மாதமான கண்ணாடி மேஜை சில்லுசில்லாகச் சிதறிப்போயிருந்தது. வேகமாய்ச்சென்று அறையின் திரையை விலக்கிப்பார்த்தேன். ஜன்னல் மூடியபடியே இருந்தது. வாசல் கதவினைப்பார்த்தேன். அதுவும் இரவில் நான் பூட்டியபடியே இருந்தது.

அறையில் மின்விசிறியின் சுவிட்சைப்போட்டேன். தலையில் விழுந்து சிதறியது கண்ணாடி அட்சதை. அதிர்ந்துதான் போனேன். அறையின் சுவரோரமெங்கும் தெறித்துச் சேர்ந்திருந்த கண்ணாடிச்சில்லுகள். கலவரம் நீங்காமல் வந்து கணினியை உயிர்ப்பித்துப் பார்த்தேன். என்னைப்போல் அனுபவம் ஏகப்பட்டவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறதை நினைத்து இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

வாங்கி இருபத்தொன்பதே நாளில், இப்படியிருந்த எங்க வீட்டு மேஜை,



எந்த ஒரு அதிர்வுக்கும் ஆளாகாமல் இப்படி வெடித்துச் சிதறியதன் மர்மம் என்ன?



மேஜையிலிருந்து சிதறிய பாத்திரம் வைக்கும் தட்டுகள்...



இன்னமும் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு...



அறையின் மூலையெங்கும் சிதறல்கள்...



மேஜைக்கு மேலிருந்த தண்ணீர் ஜாடி தானும் சிதறிப்போய்...



என்னைப்போன்ற சிலரின் அனுபவங்கள்
இங்கே...

இன்னும் இங்கே...

இன்னும், இங்கேயும் கூட...

கண்ணாடியை உருவாக்கும்போது இடையில் ஏதேனும் காற்றுக்குமிழ்கள் இருந்தாலோ, கண்ணாடியைப் பொருத்துகையில் மெல்லிய நூலிழை விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ, இன்னும் சில தொழில்முறைக் கோளாறுகளாலோ இவ்வாறு கண்ணாடி வெடித்துச் சிதறும் வாய்ப்பு உண்டு என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன்.

ஆசையாய் வாங்கிய மேஜை சிதறிப்போனாலும், ஒரு சில இடங்களில் நிகழ்ந்ததுபோல ஆபத்தான காயங்களை யாருக்கு ஏற்படுத்தாமல் எல்லாரும் உறங்கும்வேளையில் உடைந்து சிதறியது ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது.

இனிமேலும் வீட்டில் கண்ணாடி மேஜை வாங்கணுமா?

ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிச்சிட்டு வாங்குங்க...

*************

வெள்ளி, 12 ஜூன், 2009

உளுத்தங் கஞ்சி ( Urad Dal Porridge)



உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. எளிதாகச் செய்யப்படும் இந்த உளுத்தங் கஞ்சி மிகவும் மணமானதும் சுவையானதும் கூட. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.

தேவையான பொருட்கள்

தோலில்லாத வெள்ளை உளுந்து - 100 கிராம்

பச்சரிசி - 50 கிராம்

பால் -1/2 லிட்டர்

சர்க்கரை - தேவைக்கேற்ப

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:-

பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும். உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும். குக்கரைத் திறந்தபின் வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும்.தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்துவிடவும். சுவையான உளுத்தங் கஞ்சி தயார்.

தேவையானா, ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். ஆனா, அப்படிச் சேர்க்கும்போது உளுந்தோட இயல்பான வாசனை இல்லாம போயிடும். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோல கஞ்சி செய்யலாம்.

செவ்வாய், 9 ஜூன், 2009

அலைக்கரையில் அழகனின் வீடு | திருச்செந்தூர்

அறுபடைவீடெனும் அழகன் முருகனின் ஆலயங்கள் ஆறினைத் தன்னகத்தேகொண்ட பெருமையுடையது அன்னைத் தமிழ்நாடு. அவற்றுள் இரண்டாவது இடமாகச் சிறப்புபெற்றிருப்பது செந்திலம்பதியென்றும் திருச்சீரலைவாயென்றும் அழைக்கப்படும் திருச்செந்தூர்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுக்காலப் பழமையான வரலாறுடைய இந்தக் கோயில், குன்றுதோறாடிய குமரனுக்காக, அலைக்கரையில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புக் காணப்பட்டுள்ளதாகக் கூறுவதன்மூலம், இக்கோயிலின் தொன்மையையும் பெருமையையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

இது, கடற்கரையிலிருந்து தெரியும் கந்தனின் ஆலயத்தோற்றம்...



கோயில் வாயிலில் கொள்ளை அழகாய் குட்டி யானை...



சேயோன் முருகன் சூரனை வதைத்து தேவர்களைக் காத்த நிகழ்வு இங்கே சூரசம்காரமாக ஆண்டுதோறும் அலைக்கரையில் நிகழ்த்தப்படுவது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும்.
கந்த சஷ்டியில் ஆறுநாளும் விரதமிருந்து அழகனை வேண்டினால், குழந்தையில்லாதவர்களுக்கும் குழந்தைப்பேறு நிச்சயம் என்பது இங்குள்ள மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனைச் சுருக்கமாக, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்று கூறுவார்கள். அதாவது சஷ்டியாகிய கந்தனுக்குகந்த நாட்களில் விரதமிருந்தால் அகப் பையாகிய கருப்பையில் குழந்தைச் செல்வம் உருவாகிவரும் என்பது இதன் பொருளாகும்.

கந்தசஷ்டிக்கவசம் பாடிய தேவராயமுனிவர், தீராத வயிற்றுவலியினால் அவதிப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்தாராம். அச்சமயம் அங்கே நடந்துகொண்டிருந்த சஷ்டி விழாவினைக்கண்டு பக்தியுடன் பாலன் முருகனை வேண்டிக்கொள்ள, அவருடைய குறைதீர்ந்ததாகவும், அதனால் மனமகிழ்ந்த அவர் முருகப்பெருமான்மேல் கந்த சஷ்டிக்கவசம் இயற்றி, பாடிப் பரவினாரென்றும் பக்தர்கள் கூறுவர்.

கடற்கரையில் கந்தசஷ்டியின்போது சூரனை வதைத்தபின் சுப்பிரமணியக்கடவுள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் மண்டபம் தூரத்தெரிகிறது. சூரசம்காரத்தன்று அலைக்கரையெங்கும் மக்களின் தலைகளாகக் காட்சியளிக்குமென்பார்கள்.



ஆலயத்தின் ராஜகோபுரம் பராமரிப்புப்பணிகளுக்காகக் கூரையின் மறைவில்...



கோபுரவாயில்...குளிர்நிழலில் உறங்கும் மக்கள்...



கருவறைக்கோபுரம்...கற்சுவர் இடைவெளியில்...



கடற்கரையை அடுத்து வள்ளி ஒளிந்ததாகக் கூறப்படும் வள்ளிகுகை உள்ளது இதன் உள்ளே பக்தர்கள் சென்று தரிசிக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது இதுதான் வள்ளிகுகையின் நுழைவாயில்...



உள்ளே தெரிகிறது வள்ளிகுகை...



அலைகடலிலிருந்து சில அடிகள் தொலைவிலேயே நாழிக்கிணறு எனும் நன்னீர் ஊற்று உண்டு. கடலில் நீராடியபின் ஸ்கந்ததீர்த்தமெனும் இந்த நாழிக்கிணற்றிலும் நீராடினால் தீராத நோயும் தீருமென்பது ஐதீகம். சூரபதுமனை வென்ற தன் படையினரின் தாகம்தீர்க்க கந்தனே இக்கிணற்றை உண்டாக்கியதாகக் கூறுவார்கள்.

நாழிக்கிணற்றருகே நெடிதுயர்ந்த பனைமரங்கள்...



ஓயாமல் அழகன் முருகனின் புகழ்பாடும் ஓங்கார அலைகள்...



செந்திலதிபனின் ஆலயத்தில் பன்னீர் இலையில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் பிரசித்தமானது. சுப்பிரமணியக்கடவுளிடம் இந்த இலைவிபூதியை வாங்கியணிந்த விஸ்வாமித்திரமுனிவர், தன் காசநோயிலிருந்து விடுபட்டதாகவும் புராணங்கள் கூறுவதாகச் சொல்வார்கள். முருகனின் பன்னிரு கரங்கள்போல் இப்பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் ஓடுமென்றும் சொல்வார்கள்.

நவக்கிரகத்தலங்களில் இது குருவுக்கு உகந்த தலமாகும். பாஞ்சால மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் சுரங்கவழியாக தினமும் வந்து சுப்பிரமணியப்பெருமானைத் தரிசித்ததாகவும் கூறுவர். இன்றும் அன்றாடம் திருவிழாப்போல ஆயிரமாயிரம் மக்கள் இக்கோயிலுக்கு வந்து குமரனருள் பெற்றுச்செல்வதைக் காணமுடிகிறது.

ஆயிரம் பெருமைகளுடைய அழகன் முருகனின் ஆலயத்தை அனைவரும் தரிசித்து அவனருள் பெற்று அல்லலில்லாப் பெருவாழ்வினை அடைந்திட வேண்டுகிறேன்.

*************

திங்கள், 8 ஜூன், 2009

மிரள வைத்த புரளிகள்!

புரளி, இந்த வார்த்தைக்கு இருக்கும் மவுசு மிகமிக அதிகம்ங்க...காத்தைக்காட்டிலும் வேகமா பரவுவது இதோட முக்கியமான ஸ்பெஷாலிடி...மறக்கமுடியாத அந்த சுனாமிக்கப்புறம், எங்கே பூகம்பம் வந்தாலும் கூடவே சுனாமி புரளி...அடிக்கடி ரயிலிலும், விமானத்திலும் வெடிகுண்டு புரளி. இருப்பவரை இறந்துட்டார்ன்னும், இறந்தவரை இருக்கிறார்ன்னும் சொல்லும் இதுமாதிரி ஏகப்பட்ட புரளிகளை இன்றைக்கும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

சின்ன வயசில் கேட்டு, அச்சத்தோடு அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டு தூங்கவைத்த இதுமாதிரி விஷயங்களின் எண்ணிக்கை நிஜமாகவே அதிகம்ங்க. அப்போ, செல்லம்மா பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆடிமாச சீசன்ல, நெசவாளிங்க, சிவப்புப் புடவையில சாயம் சரியா ஏறலேன்னா, ஏதாவது புரளியைக் கிளப்பிவிடுவாங்கன்னு....இது என்ன டெக்னிக்கோ என்னவோ, அப்ப விபரம் புரியாம கேட்டுக்கிட்டிருந்தாச்சு. இப்ப விபரம் கேட்க பாட்டிவேற உசுரோட இல்ல...

ஆலங்குளத்துல தலையில்லாத முண்டமொண்ணு அலையுதாம்ன்னு சொல்லி, அறுவது கிலோமீட்டர்க்கு அப்பால கிலியைக் கிளப்பின அந்த நினைவுகளை இன்னும் மறக்கமுடியல. வீட்டு வாசல்ல, வேப்பிலையைச் சொருகி வச்சிட்டு, பாத்ரூமுக்குப் போகையில், படு சத்தமாகப் பாடுப்பாடிய அந்தநாள் நினைவுகளை இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருது ( சத்தமா பாட்டுப் பாடினா பக்கத்துல ஏதும் வராதுன்னு ஒரு அசட்டு தைரியம்...அதிலயும் நல்ல சாமிப் பாட்டா தேர்ந்தெடுத்துப் பாடுவோம்ல...)

அது மாதிரி இன்னோண்ணு...இருக்கன்குடி மாரியம்மனுக்கு, இருக்கிற இடத்தில் ஒழுங்காக மரியாதை செய்யப்படலியாம். அதனால ஆத்தா கோவிச்சுக்கிட்டு, சின்னக்குழந்தையா உருவமெடுத்து, அழகா பட்டுப்பாவாடையெல்லாம் கட்டி, அந்த ஊர் டவுண் பஸ்ஸில ஏறி, டிக்கெட் எடுக்காம, அடுத்த ஊர்ல போயி அலுங்காம இறங்கிடுச்சாம். 

ஒத்தையா இறங்கின சின்னப்பொண்ணைப் பார்த்து, எங்கேதான் போகுதுன்னு பார்க்க பஸ் கண்டக்டர் பின்னாடியே போனாராம். சட்டுன்னு பார்த்தா அந்த குட்டிப்பொண்ணு கல்லு சிலையா மாறிப்போக, பஸ் டிக்கட்டுக்கான காசு, சிலையோட காலடியில் சில்லறையா இருந்துச்சாம்.

இந்தக் கதையைக் கேட்டுட்டு, அப்ப ஏராளம்பேர், செவப்புச்சேலை கட்டிக்கிட்டு இருக்கன்குடி பக்கம் போனாக. போய்ட்டு வந்து அவுக சொன்ன கதைகள் அதைவிட இன்னும் ஏராளம் ஏராளம்.

இந்தியாவில ஏதோ ஒரு மூலையில பரப்பப்படும் ஒரு புரளி, எந்தச் செலவுமில்லாம கடல் கடந்துவந்து, இங்கேயும் பரவுவது இன்னும் அதிசயம்தான். ரெண்டு வருஷமிருக்கும்... திருப்பதியில அம்மா அலர்மேல் மங்கையோட கழுத்தில இருந்த தாலிச்சரடு கழண்டு விழுந்திடுச்சாம்னு சொல்லி, அவங்கவங்க ஆத்துக்காரருக்கு ஆயுசு கெட்டியா இருக்கணும்னா, எல்லாரும் கழுத்தில மஞ்சள் கயிறு கட்டிக்கோங்கன்னு ஊர்லேருந்து உத்தரவுவர, அக்கம்பக்கமிருந்தவங்கல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கயிறு வாங்கிக் கட்டிக்கொண்டது தனிக்கதை.

ஆக, வெருள வைக்கும் புரளிகள் அப்பப்போ வந்து கிலியைக் கிளப்பினாலும் அப்புறம் கேட்க, எல்லாமே சுவாரஸ்யம்தான்.

************

வெள்ளி, 5 ஜூன், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க...(6)

அம்பாவின் அவலமும்,அவள்செய்த சபதமும்
************************************************

பீஷ்மர் அனுப்பிய பாதுகாவலர்களுடன் சௌபல நாட்டை அடைந்தாள் அம்பா. தான் விரும்பிய மன்னன் சால்வனிடன் சென்று நடந்த விபரங்களை எடுத்துரைத்தாள். பீஷ்மர் தன்னை விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்ததையும் கூறினாள் அவள்.

அம்பாவின் வாய்மொழியைக் கேட்ட மன்னன் சால்வன், ஏற்கெனவே தான் பீஷ்மரிடம் தோல்வி அடைந்த கசப்பான நினைவினில் தோய்ந்திருந்தபடியால்,

" சுயம்வரத்தில் நடந்த போரில் இறுதிவரை போராடி பீஷ்மரிடம் தோற்றுப்போனேன் நான். இனி என்னால் உன்னை மணக்க இயலாது. நீ சென்று உன்னைச் சிறையெடுத்துச்சென்ற பீஷ்மரையே திருமணம் புரிந்துகொள்"

என்று மனவெறுப்புடன்கூறி, அம்பாவை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கே அனுப்பிவிட்டான்.

மீண்டும் வந்து பீஷ்மரைச் சந்தித்தாள் அம்பா. மன்னன் சால்வன் தன்னை நிராகரித்ததைக் கூறினாள் அவரிடம். அம்பாவின் துயரம் கண்டு மனவருத்தமடைந்த பீஷ்மர், தம்பி விசித்திரவீரியனிடம் அம்பாவையும் மணம்புரிந்துகொள்ளுமாறு கூறினார்.

" இன்னொருவனை விரும்பிய பெண்னை நான் மணம்புரியமாட்டேன்" என்று விசித்திரவீரியனும் மறுக்க,அம்பாவின் மனதில் இயலாமையால் எழுந்த கோபம் இன்னும் அதிகமாகியது.

"பீஷ்மரே, உம்மால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. அதனால் நீரே என்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்"

என்று சினத்துடன் கூற, சத்தியம் தவறாத பீஷ்மர், தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாய் வாழ்வதாகச் செய்த சபதத்தை எடுத்துரைத்து, அம்பாவின் வேண்டுகோளை மறுத்தார்.

அம்பாவின் கோபம் அளவின்றிப் பெருக, பீஷ்மரைப் பழிவாங்கிடும் வெறியும், வெறுப்பும் அவள் மனதில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

"பீஷ்மரே, என் வாழ்வின் அத்தனை வலிகளுக்கும் காரணமான உம்மைக் கொல்லாமல் விடமாட்டேன்"

என்று சபதம் செய்தாள் அம்பா.

பீஷ்மருக்கு எதிரியான மன்னர்களை ஒன்றுகூட்டி அஸ்தினாபுரத்தின்மேல் படையெடுக்கத் திட்டமிட, பீஷ்மரின் போர்த்திறமைக்கு அஞ்சிய மன்னர்கள் அம்பாவின் வேண்டுகோளை நிராகரித்தனர்.

மன்னர்கள் மறுதலிக்க, மாயோன் மருகனாகிய சுப்ரமணியக்கடவுளின் கருணை வேண்டினாள் அம்பா. அம்பாவின்முன் தோன்றிய அழகுக்கடவுள் அவளுக்கு வாடாத மலர்களுடைய தாமரைமலர் மாலையைக் கொடுத்து,

"இந்த மாலையைச் சூடுபவன் எவனோ, அவன் பீஷ்மருக்கு எதிரியாவான்"

என்று கூற,வாடாமலர் மாலையைச் சூடும் வீரனைத் தேடலானாள் அம்பா. பீஷ்மரின் பராக்கிரமம் அறிந்த யாரும் அம்மாலையைச் சூட முன்வராதுபோக, இறுதியாக மன்னன் துருபதனின் மாளிகைக்குச் சென்று, தன் வேண்டுதலை ஏற்று, மாலையைச் சூடிக்கொள்ளுமாறு கூற, அம்பாவின் துயரம் அதிகரிக்கும்படியாக, துருபத மன்னனும் அதைச் சூட மறுத்துவிட்டான்.

மன்னன் மறுத்த மாலையை, அவன் மாளிகையின் வாயிற்கதவில் தொங்கவிட்டுவிட்டு, கானகம் நோக்கிக் கவலையுடன் சென்றாள் அம்பா. கானகத்தில் கண்ட துறவிகளில் சிலர், அவளுடைய சோகக்கதையைக் கேட்டு, பீஷ்மரின் குருவாகிய பரசுராமரிடம் செல்லும்படி அறிவுறுத்தினர்.

குருவின் ஆணையை பீஷ்மர் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன், பரசுராமரைச் சென்று சந்தித்தாள் அம்பா. தன் அளவிலாத சோகத்தை அவரிடம் எடுத்துரைத்தாள். அம்பாவின் கதை அவரை நெகிழச்செய்ய, தன் சீடனான பீஷ்மரிடம் அவளை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார் பரசுராமர். தன் உறுதிமொழியை மனதில்கொண்டு மறுத்தார் பீஷ்மர். எடுத்த சபதத்தை எக்காரணம்கொண்டும் விடமாட்டேன் என்று கூறிய பீஷ்மரின் பதில் பரசுராமரையும் ஆத்திரம் கொள்ளச் செய்தது.

ஆத்திரம் வலுத்து, ஆசானும் மாணவனும் ஆயுதமேந்திப் போரிட ஆரம்பித்தனர். பலநாள் நீடித்தபோர் இறுதியில் பரசுராமர் பீஷ்மரிடம் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள, பரசுராமர் அம்பாவிடம், பீஷ்மரின் கருணையைப் பெறுதலே கடைசி வழியென்று கூற,பீஷ்மரின் காலில் விழுவதைக் காட்டிலும் பிறைசூடிய பரமனின் பாதத்தில் சரணடைவதே சிறந்தவழியென்று எண்ணி, சிவனை நாடி இமயம் சென்று கடுந்தவம் இயற்றலானாள் அம்பா.

தவத்தில் அகமகிழ்ந்து அம்பாவின் முன் தோன்றினார் ஆலகாலமுண்ட சிவபெருமான். பீஷ்மரைக் கொல்லவேண்டுமென்ற அம்பாவின் வேண்டுகோளைக் கேட்டு,

" பெண்ணே, நீ வேண்டும் வரம் இறை நியதிக்கு மாறானது. யாராலும் கொல்ல இயலாத ஆசிகளையும்,வரத்தையும் பெற்றவன் பீஷ்மன்.ஆனால், மனிதப் பிறவியெடுத்த எவரும் ஒருநாள் மரணமடைந்துதான் ஆகவேண்டும். அதனால், பீஷ்மரை கொல்லும் வரத்தை உனக்கு நான் வழங்குகிறேன். ஆயினும், உன்னுடய இந்தப் பிறவியில் நீ அவரை வெல்ல இயலாது. இன்னொரு பிறவியெடுத்து நீ துருபத மன்னனின் மகளாகப் பிறக்கும்போது உன்னுடைய இந்த ஆசை நிறைவேறும்"

என்று வரமளித்தார் சிவபெருமான்.

அடுத்த பிறவிவரை காத்திருந்து தன் ஆவேசத்தைத் தீர்த்துக்கொள்ள இயலாத அம்பா, துருபத மன்னனின் நாட்டுக்குச் சென்று அங்கு அரண்மனை முன்னர், தீயை வளர்த்து, அந்த நெருப்பில் புகுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

தோல்வியும்,துயரமுமாய், தன் உயிரைமுடித்த அம்பா, துருபத மன்னனின் மகளாக மறுபிறவியெடுத்தாள். பிறவியைக் கடந்தும் பிறழாத உறுதியுடன், இளமை முதலே யுத்தநெறிகளைக் கற்றுத் தெளிந்தாள் அவள். சில ஆண்டுகளுக்குப்பின் அரண்மனை வாயிலில் கிடந்த, அச்சத்தின் காரணமாய் யாரும் தொடாமலே இருந்த, ஆறுமுகக்கடவுள் கொடுத்த அழகிய மலர்மாலையை எடுத்துச் சூடிக்கொண்டாள்.

மகள் சிகண்டினியின் செயலால், அவளுக்கும் தனக்கும் பீஷ்மரால் ஆபத்துவரும் என்று எண்ணிய துருபத மன்னன், அவளை அரண்மனையைவிட்டு காட்டுக்கு அனுப்பிவிட்டான்.காட்டில் கந்தர்வன் ஒருவனின் உதவியால் ஆணாக மாறி சிகண்டி என அழைக்கப்பட்டாள் சிகண்டினி.

சிகண்டி எனும் ஆணின் உருவத்தில் இருந்தபடி,தன் இணையற்ற போர்த்திறனால் புகழ்பெற்று ,மக்களால் மஹாரதி என்று அழைக்கப்பட்டாள் அவள். மனமெங்கும் பரவிய பழியுணர்ச்சியுடன் பீஷ்மரைக் கொல்லும் நாளுக்காகக் காத்திருக்கலானாள் சிகண்டியின் உருவிலிருந்த சினம்கொண்ட அம்பா.

வியாழன், 4 ஜூன், 2009

கோதுமைப் பணியாரம் | காரம் & இனிப்புப் பணியாரம்



இது, மிகவும் எளிதான ஒரு சிற்றுண்டியாகும்.

கோதுமை மாவை பணியாரம் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் முன்பாகவே உப்பு மட்டும் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவேண்டியது மிகவும் முக்கியம். கரைத்து ஊறவிட்ட மாவில், இனிப்பு, காரம் இரண்டு வகைப் பணியாரமும் செய்துகொள்ளலாம்.

காரப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு - 1 கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

சோடா உப்பு - 1 சிட்டிகை




செய்முறை:-

கோதுமை மாவை மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே கெட்டியாகக் கரைத்துவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை அணைத்துவிடவும்.

வதக்கிய வெங்காயக் கலவையை, கரைத்து வைத்த கோதுமை மாவில் சேர்த்து, திட்டமாக உப்புப் போட்டுக்கொள்ளவும். அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சிறு கரண்டியால் மாவை முக்கால் குழி நிரம்புமளவுக்கு ஊற்றி, முள்கரண்டியால் திருப்பி, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட, இந்தப் பணியாரம் மிகச் சுவையாக இருக்கும்.

                                                           ********
இனிப்புப் பணியாரம்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் / சீனி - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

பொடித்த முந்திரிப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்

ஏலப்பொடி - சிறிதளவு

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

உப்பு ஒரு சிட்டிகை



கோதுமை மாவை மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே கெட்டியாகக் கரைத்துவைக்கவும்.

கரைத்துவைத்த மாவில், தேவையான அளவு வெல்லம் அல்லது சீனி, துருவிய தேங்காய், ஏலப்பொடி, பொடித்த முந்திரிப்பருப்பு, உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

 மேலே கூறியதுபோலவே குழிகளில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பணியாரம் செய்யலாம்.

சுவையான, சுலபமான மாலை நேரப் பலகாரம் தயார்!

                                                   ********

கடலை மாவு அடை - உடனடி செய்முறை

காலையோ மாலையோ டிபனுக்கு என்ன பண்ணன்னு தெரியலியா?

சட்டுன்னு செய்ய எளிதான அடை செய்முறை இதோ...

Instant Kadalai maavu adai


தேவையான பொருட்கள்:-

கடலைமாவு - 1 கப்

கோதுமை மாவு - 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய பச்சைமிளகாய் - 2

துருவிய கேரட் - 1/4 கப்

நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1 மேஜைக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

மேலே கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அடைமாவு பக்குவத்தில் கலந்துக்கங்க. 

சூடான தோசைக்கல்லில், ஒரு கரண்டி மாவை ஊற்றி, தேவைக்கேற்ப நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். அடை ரெடி...

இதை அப்படியே சாப்பிடலாம். அவசியம்னா, கொத்துமல்லிச் சட்னியோடவும் சாப்பிடலாம். கூடவே பக்கத்தில் ஒரு கப் சூடான காஃபியும் இருந்தா ரொம்பவே நல்லாயிருக்கும்.

                                                         *******

திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஐன்ஸ்டீன் ரொம்ப நல்லவர்!

ஆண்களைப்பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக அவதூறுகள் அவ்வப்போது கிளம்பினாலும், சில ஆண்கள் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு இன்னிக்கி கேள்விப்பட்ட சம்பவம் ஒண்ணு பளிச்சுன்னு புரியவச்சுது...

அப்படிப்பட்ட 'அநியாயத்துக்கு நல்லவங்க' பட்டியலில் நம்ம ஐன்ஸ்டீனுக்கு முதலிடம் கொடுக்கலாம்ன்னு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கல்லாம் அழுத்தமா சொல்றாங்கன்னா பாருங்களேன்...

ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். குறிப்பா சொல்லணும்ன்னா நம்ம புவியோட ஈர்ப்பு விசையைப்பற்றி எல்லாருக்கும் எடுத்துச்சொன்னவர், தன்னோட மனைவிமேல எவ்வளவு அன்பாகவும், குடும்ப வாழ்க்கையில எத்தனை பொறுமையாவும் இருந்திருக்கார் தெரியுமா?

பகல் இரவென்று பாராமல், தனது ஆராய்ச்சிகளிலேயே எப்போதும் மூழ்கிக்கிடந்த ஐன்ஸ்டீன் வீட்டிலும், "விடிஞ்சது முதல் அத்தனை வேலையும் நானே தான் இழுத்துப்போட்டுட்டு செய்யறேன். வீட்டிலே இருக்கிறப்பவாவது ஏதாவது உதவி செய்யக்கூடாதா?" என்பது மாதிரியான புலம்பல்கள் அடிக்கடி உண்டுபோலிருக்கிறது.

அன்றும் ஏகப்பட்ட எரிச்சலில் அந்தம்மா, முன்னால் நடந்தது, பின்னால் நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் கூட்டிப்பெருக்கி உச்சஸ்தாயியில் உச்சாடனம் பண்ண, அசையவேயில்லையே மனுஷர்.

"நோபல் பரிசு வாங்கினாப் போதுமா? மனைவியோட மனசைப் புரிஞ்சுக்க வேண்டாமா?" என்று புலம்பி, எதற்கும் அசையாமல் அமைதியாயிருந்த ஐன்ஸ்டீனின் மேல் கோபம் இன்னும் அதிகமாக, ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டுபோய் அவரது அறையில்,ஆராய்ச்சி பற்றிய புத்தகங்களோடும் கட்டுரைகளோடும் உட்கார்ந்திருந்த அவர் தலையில் போய் மொத்தமாய்க் கவிழ்த்தாள் அவர் மனைவி. அத்தனை பொருட்களும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிப் புத்தகங்களும் தொப்பலாய் நனைந்துபோக,..............................................................................................................................................................................................................................................................................ஐன்ஸ்டீன் என்ன செய்திருப்பார்ன்னு நினைக்கிறீங்க???............................................................................................................................................................

முகத்தில் வழிந்த நீரைக் கையால் வழித்துவிட்டு, சிரித்தபடி, "இவ்வளவு நேரமும் இடி இடிச்சுது, இப்போ, மழையும் பெய்யிது" ன்னு சொன்னாராம்!!!

எவ்வளவு நல்லவர் பாருங்க நம்ம ஐன்ஸ்டீன்!!!

***********

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துபாய் மால் (The Dubai Mall)

பன்னிரண்டு மில்லியன் சதுரஅடிப் பரப்பளவு, கிட்டத்தட்ட 50 கால்பந்தாட்ட மைதானங்களின் அளவைவிடப் பெரியதாய்ப் பரந்துவிரிந்திருக்கும் துபாய் மால், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாயின் (Burj dubai) அடிவாரத்தில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரும் ஷாப்பிங் மால்களுள் ஒன்று. உலகப்புகழ்பெற்ற 600 நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் தற்போது இங்கே இருக்கிறது. இதுதவிர,இன்னும் 600 கடைகளுக்கான இடம் இன்னும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கிறதாம்.





இங்கே அமைந்திருப்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய தங்க ஆபரணங்களுக்கான விற்பனைப்பகுதி என்று சொல்கிறார்கள். 220 நகைக்கடைகள் இங்கே ஒரே இடத்தில் இருக்கிறதாம். அதனால் வரும்போது மறக்காம பை நிறைய்ய்ய பணம் எடுத்துட்டு வாங்க.

இதோ, தங்கச்சுரங்கத்தின் நுழைவாயிலில்...







இதுதவிர பொழுதுபோக்குக்காக, டிஸ்கவரி செண்டர், துபாய் ஐஸ் ரிங் எனும் பனிச்சறுக்கு விளையாட்டுத்திடல் மற்றும் துபாய் அக்வேரியமும்(மீன் காட்சியகம்) இங்கே அமைக்கப்பட்டுள்ளது.காலையிலேயே நுழைந்தாலும் இரவுக்குள் முழுப்பகுதியையும் சுற்றிப்பார்க்கமுடியுமா என்பது சந்தேகம்தான்.













மீனோடு மீனாக மனிதர் ஒருவர்...



பனியில் சறுக்கி விளையாடுகிறார்கள் சிறியவர்களும் பெரியவர்களும்...











உற்சாகமாய் உறைபனியில் விளையாட்டு நடக்கையில் சட்டென்று ஒரு விபரீதம் நடந்தது.
கீழே விழுந்த ஒரு பெண் வலியில் துடிக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த முதலுதவிக்குழுவினர்...





மையப்பகுதியில், உலோகத்தால் அமைக்கப்பட்ட தரைஓவியம்...



மையப்பகுதியிலுள்ள இந்த விதானத்தில் ஏற்படும் நிறமாற்றத்திற்கேற்ப தரையிலுள்ள உலோகப்பரப்பும் அழகழகாய் மாறுகிறது.



விளக்கொளியில் பொன்னாக மின்னும் அழகு...



அன்றைய பொழுதில் பார்க்கமுடிந்தது இவ்வளவுதான். சுற்றிய காலுக்கு ஆறுதலாக, பரந்துகிடக்கும் food court ல் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, மிச்சப்பகுதிகளை இன்னொரு நாளுக்கு ஒதுக்கிவிட்டுத் திரும்பினோம்.

*******

சனி, 7 பிப்ரவரி, 2009

நாசமத்துப்போற மக்கா...நல்லதமிழ் பேசுங்க!

அம்மா, இன்னிக்கு என்ன டே?

வியாழக்கிழமை...

அப்டின்னா?

வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி வருமே அது...

time-table எடுத்துவைக்கணும்...சரியாச் சொல்லும்மா...

வெள்ளிக்கிழமைன்னா friday..அப்ப, இன்னிக்கு thursday,வியாழக்கிழமை...

thursday ன்னு முதல்லயே தெளிவாச் சொல்லவேண்டியதுதானே?

முகத்தைக் கோணலாக்கிச் சொல்கிறது வாண்டு...

இப்படியே இங்கேயிருந்துகிட்டு, வீட்டில தமிழ்லதான் பேசணும்னு எங்ககிட்ட சொல்றமாதிரி, தமிழ்நாட்டுல போய் சொல்லிப்பாருங்க...அப்புறம் என்னதான் பாஸ்போர்ட்டைக் காட்டினாக்கூட நீங்க துபாய்லதான் இருக்கிறீங்கன்னு நம்பமாட்டாங்க யாரும். பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்னாலும் நிஜம் சுடத்தான் செய்தது.

"வங்கிக்குப் போகணும், தானி ஒண்ணு கூட்டிக்கொண்டுவா" ன்னு சொன்னா, தமிழ்நாட்டுக்காரங்களே ஏதோ கீழ்ப்பாக்கத்து உருப்படியோன்னு சந்தேகமாத்தான் பார்ப்பாங்க.

அடுக்குப்பானையும் குதிருமா அழகா செம்மண் காவிபூசி, திண்ணையும் தூணுமா இருந்த கிராமத்துவீடுகளும், மாமம்மா பேசிய அழகு தமிழும்கூட இன்று மாறித்தான் போய்விட்டது.டவுண்பஸ்,லேட்டு,லெட்டர்,ஸ்டேஷன்,ஸ்பீக்கர்செட்டுன்னு அடுக்கடுக்கா ஆங்கிலத்தில் பேச ஆரம்பிச்சுட்டாங்க நம்மாளுங்க.

குதிருன்னு சொன்னதும் நம்ம ஊர்ப் பழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்திருக்குமே... இடம் பொருள் அறியாமல் ஏதாவது உளறிக்கொட்டும்போது, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே"ங்கிற மாதிரி இப்படியா பேசுறதுன்னு கடிஞ்சுக்குவாங்க பெரியவங்க.

குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்களின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.

குதிரிலில் சேமித்த நெல்லை எடுத்து,பெரிய பெரிய குத்துப்போணிகளில்,புழுங்க வச்சு, தட்டடியில கொட்டி, வரிவரியா கிண்டிக் காயவச்சு, பறவைகள் கொத்தாமலிருக்க பிள்ளைகளைக் காவல் வைக்க,

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு,

மழ வருது மழ வருது நெல்லள்ளுங்க
முக்காப்படி அரிசிபோட்டு முறுக்கு சுடுங்க
தஞ்சாவூரு மாமனுக்குக் கொஞ்சம் குடுங்க
சும்மா வார மாமனுக்குச் சூடுபோடுங்க

என்று கூடிப்பாடிக் குதூகலித்ததாக மாமம்மா கதை சொல்ல,விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்ததுண்டு.மாமனின் அம்மா மாமம்மா, அம்மாவுடன் பிறந்த சகோதரன் அம்மாமன். எத்தனை அருமையான உறவுப்பெயர்களை மறந்துவிட்டோம்?...

வெள்ளென எழுந்திருச்சி, செம்பு நெறைய நீத்துப்பாவத்தைக் குடிச்சிட்டு,வயலுக்குப்போயி வேர்க்க விறுவிறுக்க கமலையில தண்ணியெறச்சு வயலுக்குப் பாய்ச்சிட்டு,வீட்டுக்குவந்து, கும்பா நிறைய பழைய சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட அந்தக்கால மக்களின் உடலுரம் எங்கே, நாமெல்லாம் எங்கே!

வெள்ளென என்ற வார்த்தையை, விடியலில், அதிகாலையில் என்ற பொருளில் இன்னும் உபயோகிப்பார்கள்.நீராகாரத்தை நீத்துப்பாவம் என்று சொல்லுவதைச் நெல்லை மாவட்ட முதியவர்களிடம் இன்னும் கேட்கலாம்.கமலை என்பது மாடுகளை வைத்துக் கிணறுகளில் நீரிறைக்கும் முறை.

கும்பா, வட்டில் இரண்டும் அந்தக்காலத்து உணவு உண்ணும் பாத்திரங்களின் பெயர்களாம். கும்பா என்பது கிட்டத்தட்ட நம் சந்தனக் கிண்ணம் போலப் பெரியதாக இருக்குமாம்.நீருடன் உண்ணும் பழையசாதம் போன்றவற்றை உண்ண ஏற்றதாக இருக்குமாம். வட்டில் என்பது, தட்டுப்போல இன்னும் கொஞ்சம் உயரமான விளிம்புடன் வேலைப்பாடுகளுடன் கூடியதாய் இருக்குமென்று கூறக்கேட்டிருக்கிறேன்.



(பெரிதாக்கிப் பார்க்க படத்தின்மேல் சொடுக்குங்க...)


வைக்கப்படப்புல வாழக்காய் பழுக்கவச்சு, கொச்சக்கயித்தில மட்டைவச்சு ஊஞ்சல்கட்டி, கருக்கலானதுகூடத் தெரியாம கூட்டாளிகளோட விளையாடிட்டு வீட்டுக்குவந்தா, அம்மா சட்டகப்பையை அடுப்பில வச்சு, சூடுவைப்பேனென்று சுத்திவர, ஆச்சியோட மடியில் அடைக்கலம் புகுந்து...நம் தமிழ்க் குடும்பங்களில்தான் நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்...

வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...

கடைசியா, தலைப்புக்கு வருவோம்...

அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டுவந்து,  நல்லதமிழை எல்லாரும் பேசிடுவோம்.


சனி, 10 ஜனவரி, 2009

*ஒரு மருத்துவரின் நாட்குறிப்பு*



"ஒரு மருத்துவரின் நாட்குறிப்பு' எனும் இந்தக்கவிதை ஆங்கில எழுத்தாளர் 'விக்ரம் சேத்' என்பவரால் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதப்பட்டது.

இந்த நாட்குறிப்பினை எழுதியவர் பிரபல ஜப்பானிய கவிஞரும் மருத்துவருமான "டாகே-சான்கி சி" ஆவார்.

உலகச் சரித்திரத்தில் ஒரு கறைபடிந்த நாள்...ஆகஸ்ட் 6, 1945.

ஜப்பானின் ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா, 'லிட்டில் பாய்' எனும்
அபாயம் சுமந்த அணுகுண்டினை வீசிய நாள். 80,000 உயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பலியாயினர்.
ஜப்பானிலிருந்த 55 மருத்துவமனைகளில் 3 மட்டுமே தப்பியது.

குண்டு வீசப்பட்டதும் கிளம்பிய வெப்பம் சூரிய வெப்பத்தைக்காட்டிலும் 900 மடங்கு அதிகம்.
உடைகள் உருகி ஆவியாகிட, மனித உடல்கள் பஸ்பமாகின.
குண்டுவீச்சுக்குப்பின் ஏற்பட்ட உடல் உபாதைகளால் இறந்தவர்கள் சுமார் 97,000 பேர்.
ஆகமொத்தம் 200,000 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கொடுமையை விளக்கும் நாட்குறிப்பினை எழுதிய மருத்துவரான கவிஞர், அவரது 24 வயதில் நடந்த அணுகுண்டுவீச்சின் அனுபவத்தை எழுதிவைத்துவிட்டு, 36 ம் வயதில் அணுக்கதிர்வீச்சினால் ஏற்பட்ட 'லூக்கேமியா' எனும் நோயினால் மரணமடைந்தார்.

நடந்து முடிந்த நடுங்கவைக்கும் நிகழ்வை ஆங்கிலக் கவிதையின் மூலத்திலிருந்து என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் மொழிபெயர்த்திருக்கிறேன்.போரெனும் புயலுக்குள் சிக்கித்தவிக்கும் நம் பூமிப்பந்தினை அமைதியெனும் அச்சில் சுழலவைக்க அனைவரும் முயற்சி செய்யவேண்டிய இத்தருணத்திற்கு ஏற்றதாய் இக்கவிதை அமைந்திருக்கிறது.


இதோ கவிதை...

ஒரு மருத்துவரின் நாட்குறிப்பு

அழகும் அமைதியும் கைகோர்த்து இணைய
கதகதப்புடன் விரிந்ததோர் அரைகுறை விடியல்...

படர்ந்த நிழலும் பளபளக்கும் இலைகளும்
பார்வைக்கு இதமாகப் பளிச்சிட்ட வேளையில்,
சட்டென்ற ஒளிமின்னல், தொடர்ந்தது மற்றொன்று
திக்கென்று அதிர்வுடன் திகைத்தேன் நானும்...

ஒளியுடன் எரிந்த விளக்குப் போலவே
வேதிப்பொருளோ? விளங்கவில்லை எனக்கு...

மனதின் கேள்விகள் அடங்கிடும் முன்னரே
மண்ணும் மரமுமாய்ச் சரிந்ததென் உலகம்
புழுதியாய் எழுந்த புகையின் மத்தியில்
தோட்டத்தில் நின்றேன் புதிதாய் உணர்ந்தேன்...

உடுத்திய ஆடைகள் மர்மமாய் மறைந்திட
நிர்வாணக்கோலத்தில் நின்ற என்தொடையினில்
மரத்தின் செதிலொன்று தைத்துச் செருகியது...

கிழிந்தஎன் கன்னத்தில் கண்ணாடித் துண்டொன்று
வெளிப்பட, வலப்பாகம் குருதி சொரிந்தது...
இத்தனை அவலங்கள் நடந்திடும்போதிலும்
அறியாமல் திகைத்தேன் நடந்தது என்னவென்று...

எங்கேயென் மனைவி? அதிர்வுடன் அழைத்தேன்
எங்கேயிருக்கிறாய் யெக்கோ சான் என்று
ரத்தம் பீறிடக் கதறினேன் அழுகையில்...

கழுத்தின் நாளங்கள் கசிந்து வழிந்திட
உயிரின் அச்சத்தில் அழைத்தேன் என் மனைவியை...

வெளிறியமுகமும், குருதியின் சுவடுமாய்
அஞ்சிடும் படியாய் எழுந்தாளென் துணைவி...

முட்டியைத் தாங்கிப் பிடித்த கரத்துடன்
கண்ணுக்குத் தென்பட்டாள் தேற்றினேன் அவளை
கடிதாக வெளியாற வேண்டுமென் றெண்ணி
தடுமாறி நடக்கையில் ஏதோ தடுக்கியது காலில்...

திடுக்கிட்டுப் பார்க்கையில் தலையென்று உணர்ந்து
மன்னித்து விடுங்களென்று மருகி உரைக்கையில்
உயிரற்ற தலையென்று உணர்ந்தேன், பயம்கொண்டேன்...

நசுங்கிய உடல்கண்டு நடுங்கி நிற்கையில்
எதிரிருந்த இல்லம் இடிந்து நொறுங்கிட
நெருப்பும் தூசுமாய்ப் பரவியது அங்கே...

காற்றோடு கலந்து பரவிய நெருப்பொடு
மனதின் எண்ணமோ மருத்துவம் தேடியது...

உதவிபெற் றிடவும் உதவி செய்திடவும்
இயலாத நிலையிலும் தவித்தது மனது...
பொருந்தாத எண்ணமென் றறிந்த போதிலும்
உதவ விரும்பிடும் மனதினை வியந்தேன்...

கால்கள் சோர்ந்திடத் தரையினில் அமர்ந்தேன்
தாகம் எழுந்தது நீரெங்கும் இல்லை
மூச்சுக் குறுகிடத் துளித் துளியாக
ஆற்றல் பெருகிட எழுந்து நின்றேன்...

ஆடை யில்லாமை உணர்ந்தேன் அக்கணம்
நாண மெதுவும் தோன்றவு மில்லை...

காணக்கிடைத்த போர்வீரனொருவன்
கழுத்துத் துணியதை அமைதியாய்க் கொடுத்திட
காய்ந்த குருதியால் கால்கள் விறைத்ததால்
நடக்க இயலாமல் உரைத்தேன் மனைவியிடம்...

சென்று நீயாவது பிழைத்திடு என்றதும்
நின்று மறுத்திடத் தோன்றியும் வழியின்றி
சென்றாள் அவளும், சூழ்ந்தது தனிமை
கொன்றுயிர் குடிக்கும் கூற்றுவன்போலவே...

வென்றிட மனமும் வேகமாய்த் துடித்திட
ஒன்றும் இயலாமல் துவண்டது தேகம்...

நிழலாய் நடக்கும் மனிதப் பிறவிகள்
ஆவிகள் போலவும் பொம்மைகள் போலவும்
அசைந்து நடந்தனர் அமைதியைப் போர்த்தியே
உடலை ஒட்டாமல் நீட்டிய கரங்களுடன்
மெதுவாய் நடந்தனர் ஊமையாய் மாறியே...

நேராகக் கரங்களை இயல்பாய் விடுகையில்
தீயாகத் தகிக்கும் தசைகள் உரசினால்
இன்னமும் தகிக்கும் என்ற பயத்தினால்
புண்ணான கரங்களை விரித்தநிலையிலே
மருத்துவ மனைநோக்கிச் சென்றனர் அனைவரும்...

பெண் ஒருத்தியும் பிள்ளையும் வழியினில்
நீராடி நிற்றல்போல் உடையின்றித் தெரிந்திடப்
பார்வையைத் திருப்பினேன் பரிதாபம் கொண்டேன்...

மற்றொரு மனிதனும் அப்படித் தெரிந்திட
ஆடையைப் பறித்திட்ட மாயம் எதுவென்று
மனதுள் வியந்தேன் மறுமொழி அறியேன்...

மண்ணில் அமர்ந்துதன் வலியைச் சுமந்தபடி
மருள்விழி முதியவள் மௌனத்தில் உறைந்திட
மக்களனைவரும் அமைதியை அணிந்திட
அங்கே,
அழுகையோ வார்த்தையோ எதுவுமே இல்லை...

-விக்ரம் சேத்

திங்கள், 22 டிசம்பர், 2008

உருளைக்கிழங்கு புளிக்குழம்பு

கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பாகற்காய்ன்னு பல காய்களை வச்சு புளிக்குழம்பு செய்திருப்பீங்க. புதுசா, இந்த உருளைக்கிழங்கு புளிக்குழம்பையும் செய்து பார்த்தீங்கன்னா கட்டாயம் பிடிச்சுப்போகும் உங்களுக்கு.

இவையெல்லாம் வேண்டும்...

உருளைக்கிழங்கு - 1 பெரியதாக

சிறிய வெங்காயம் - 5 அல்லது 6

புளி - எலுமிச்சை அளவு

வத்தல் தூள் - 1 டீ ஸ்பூன்

மல்லித்தூள் -2 டீ ஸ்பூன்

சாம்பார்ப்பொடி - 1 டீ ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வெல்லம் - பாக்கு அளவு

தாளிக்க...

எண்ணெய் - தேவையான அளவுக்கு

கடுகு, வெந்தயம் _ தலா 1/2 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

இதுபோலச் செய்யணும்...

சிறிய வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை விரல் அளவு துண்டுகளாக (ஃபிங்கர் சிப்ஸுக்கு நறுக்குவதைவிட கொஞ்சம் பருமனாக)நறுக்கிக்கொள்ளவும்.புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள்பொடி, வத்தல், மல்லித்தூள், சாம்பார்ப்பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு,கடலைப்பருப்பு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும். கிழங்கு வதங்கியதும் கரைத்துவைத்த புளி,மசாலாக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். எடுத்துவைத்திருக்கும் வெல்லத்தைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து குழம்பு சற்று கெட்டியானதும் இறக்கவும்.

தேவையென்றால், கடைசியில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டும் இறக்கலாம்.

புதன், 17 டிசம்பர், 2008

அமீரகத் தலைநகரில் அழகின் ஆலயம் - 2

மசூதியின் தரைப்பரப்பெங்கும் வண்ணமயமான அழகு. பலவண்ண சிறுசிறு மார்பிள் கற்களைச் சேர்த்து தரையெங்கும் அமைத்திருந்த பூக்களும் இலைகளும் மிகவும் அழகாக இருந்தது.

அவற்றில் சில இதோ...






மசூதியைச் சுற்றி வருகையில் ஒவ்வொருபுறமும் ஒவ்வொரு அழகாய்த் தெரிந்தது. ஆனால்,சில இடங்களில், இன்னமும் பணிகள் முழுமையடையாமலும் தென்பட்டது....



நீரில் பிரதிபலிக்கும் நெடிய தூண்களின் அழகு...



மசூதியின் உயர்ந்த கோபுர அமைப்பில் ஒன்றும் அருகில் நிலாவும்...



வி.ஐ.பி க்களுக்கான சிறப்பு வாயில்...



மசூதியின் உட்புறச் சுற்றுப்பாதை...



மசூதிக்கு வெளியே, இன்னொரு சிறிய மசூதியில் மன்னர் ஷேக் செய்யத் அவர்களை அடக்கம் செய்த இடம் உள்ளது. இங்கே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.அதனால் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட அந்த மசூதியின் புகைப்படம்...



மாபெரும் கனவுகளுடன், அமீரகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மன்னர் ஷேக் செய்யத் அவர்களின் நினைவிடத்தையும் தரிசித்துவிட்டு அபுதாபி நகரத்திற்குப் புறப்பட்டோம்.