செவ்வாய், 23 ஜூன், 2009

கண்முன்னே அழியும் கலையொன்று...கடிதம்!




அப்பல்லாம், விடுதியிலேயிருந்து வீட்டுக்குக் கடிதம் போடும்போது, அப்பா, அம்மா, அக்கா, தம்பி, ஆடு,மாடு,அக்கம்பக்கத்துக்காரங்கன்னு அத்தனை பேரையும் விசாரிச்சு எழுதுவேன்.

அம்மா உன்னைப் பாக்காம, உன்னோட சமையலை சாப்பிடாம ரொம்ப கஷ்டமா இருக்கும்மான்னு எழுதினதுக்காக எங்கம்மா ரெண்டுமூணுநாள் கண்ணீர்விட்டதா சொல்லி, "மகளே, உன் பாசத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திட்டுக் கடிதம் எழுதும்மா" ன்னு அப்பா அடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆனா, இப்ப ஒரு மகன் அவங்க அப்பாவுக்குஅஅனுப்பின மெயிலைப் பார்த்தபிறகு, இந்தக் காலத்தில பாசம்தான் குறைஞ்சுபோச்சா இல்லே, யாருக்கும் அதை வெளிப்படுத்தத் தெரியலியான்னு புரியவே இல்லேன்னு அநியாயத்துக்கு வருத்தப்பட்டார் அந்த பாவப்பட்ட அப்பா.

அவர், பிரிண்ட் எடுத்து வைத்திருந்த கடிதத்திலிருந்த விஷயம் இதுதான்...

hi dad,

h r u?

I have some urgent expenses here. Send Rs 2000 immediately.

tc

Ganesh

கொஞ்சமா எழுதினாலும் பையன் விஷயத்தில தெளிவாத்தான் இருக்கான்னு நான் நினைச்சுக்கிட்டேன்.

இன்லண்ட் லெட்டரிலும் ஏர் மெயிலிலும் இதயத்தைப் பரிமாறிக்கொண்ட காலம் அது...முன்னெல்லாம்,படிப்புக்காக விடுதியில இருந்தாலோ,வேலைக்காக வெளியூர்ல இருந்தாலோ வாரத்துக்கு ஒரு கடிதமாவது வீட்டுக்கு எழுதுவாங்க. கல்யாணமான புதுசுல மனைவியை விட்டு வேற ஊர்ல இருந்தா சொல்லவே வேண்டாம்... தினம்தினம் கடித மழைதான்.இந்தக் காலத்தில் செல்போனும், கணினியும் வந்து ஆக்ரமிச்சுகிட்டதால,கடிதம் எழுதுகிற அந்தக் கலையை நாம கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டுதான் வரோம்.

கணினியில தட்டித்தட்டி நிறைய பேருக்குக் கையெழுத்தே மறந்துபோச்சுங்கிறது தனிக்கதை.
எனக்கெல்லாம் இ கலப்பையில எழுதிப் பழகிட்டு, எங்கேயாவது கையால் எழுத நேர்ந்தா ஏகப்பட்ட எழுத்துப்பிழை வேற...

கல்லூரிக் காலத்தில கடிதம் எழுதும்போது இன்லாண்ட் லெட்டரில் ஒட்டும் இடம் தவிர எல்லா இடத்திலும் எழுதி நிறைத்ததுண்டு. எங்கம்மா எங்கிட்ட சொல்லுவாங்க, எல்லாரும் கடிதம் எழுதும்போது அன்புள்ள அம்மா அப்பாவுக்குன்னு ஆரம்பிப்பாங்க. ஆனா, உனக்கு அங்கேயும் அப்பாதான் முதல்ல, அம்மா அடுத்ததுதான்" என்று ஆதங்கப்படுவாங்க. அந்த அளவுக்கு கடிதங்கள் பாசத்தின் பிரதிபலிப்புகளாக இருக்கும்.

பல வருஷங்கள் முன்னால் எழுதிய கடிதங்களை எடுத்துத் திரும்பப் படித்துப்பார்ப்பதன் சுவாரசியமே தனிதான். முன்னெல்லாம் வீடுகளில், ஓட்டுச்சரிவிலோ அல்லது ஜன்னல் கம்பியிலோ ஒரு கனத்த கம்பியைத் தொங்கவிட்டு அதில அப்பப்போ வர்ற கடிதங்களை அழகா குத்தி அடுக்கி வச்சிருப்பாங்க.அன்புக்கு மட்டுமல்லாமல் பல அத்தியாவசியமான விஷயங்களில் சாட்சியாகவும் இருக்கும் இந்தக் கடிதங்கள்.எழுதியதை இல்லேன்னு சொல்லமுடியாதில்ல...

கடிதத்தில் எழுதும் விஷயங்கள் கல்வெட்டு மாதிரி.சிலர் எழுதும் கடிதங்களை பலமுறை படித்துப்பார்க்கத்தோன்றும்.உதாரணமா, என் தோழி ஒருத்தி எழுதிய கடிதங்களை நான் ஒன்றுக்குப் பத்து தடவை படித்ததுண்டு. புரியாம இல்லீங்க, அவ எழுதும் விதத்தில் எல்லா வார்த்தைகளும் அழகாகிவிட்டதுபோல ஒரு பிரமை தோன்றும் அப்போது.

"சின்னதொரு வட்டத்திற்குள் நிற்காம, அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்க"ன்னு இருபது வருஷங்களுக்கு முன்னால் அவ எழுதிய அந்த பொருள் பொதிந்த வார்த்தைகளை இன்னும் மனசிலிருந்து அழிக்கத்தான் முடியல...

*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக