ஞாயிறு, 14 ஜூன், 2009

கருப்பட்டிக்காப்பியும், கடந்தகாலத்து நினைவுகளும்...


ரொம்பநாளா அழைச்சிட்டிருந்த ஒருத்தங்க வீட்டுக்குப் போயிருந்தோம்...

அந்தம்மாவின் கணவர் வந்து எங்களை வரவேற்று உட்காரச்சொன்னார். வீட்டுக்கார அம்மாவையோ பிள்ளைகளையோ யாரையும் காணோம். கொஞ்சம் நேரம் கழிச்சு அந்தம்மா வந்தாங்க புன்னகையோட. பிள்ளைகளை எங்கேன்னு கேட்டேன். ஒவ்வொருத்தரா அவங்கவங்க ரூமுக்குள்ள இருந்து வந்து எட்டிப்பாத்துட்டுப் போனாங்க.

பேச ஆரம்பித்தோம்...நாங்க கேள்வி கேட்க அவங்க அளவா பதில்மட்டும் சொல்லிட்டிருந்தாங்க. ஒருவேளை அதிகமா பேசத்தெரியாதோன்னு ஆச்சரியமாயிருந்தது.
(ஒருவேளை நாமதான் அளவுக்கதிகமா பேசுறோமோன்னு சந்தேகம்கூட வந்தது)

கொஞ்சநேரத்தில் வேலையாள் வர,காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தாங்க. 50 மிலி சைசுக்கு அழகான கப். அதிலே ஆவி பறக்க காப்பி. காப்பியில ஆவி பறக்க, என் மனசு பழைய நினைவுகளில் பறக்க ஆரம்பிச்சிது.

ஆச்சி வீட்டு முற்றம்... மேலே கம்பியில் படந்த முல்லைக்கொடி.மயங்கிய மாலை...மணத்தோடு தழுவிய மெல்லிய காற்று.

பெரிய பாத்திரத்தில் மணக்கமணக்க கருப்பட்டிக் காப்பியும், அதனுள் பெரிய குழிக்கரண்டியுமாக சித்தி வந்து உட்கார, வாண்டுகள் பெரியவங்க அத்தனைபேரும் சுற்றி உட்கார்ந்திருப்போம். ஒரு பிளாப்பெட்டி (பனை ஓலையில் செய்த பெட்டி) நிறைய முறுக்கும், கால் லிட்டர் சைசுக்கு தம்ளர்களுமாய் ஆச்சி வர, ஒவ்வொருத்தருக்காய் காப்பியை ஆற்றி, அதுக்குள்ளே, ஆளுக்கு ரெண்டு கைமுறுக்கை நொறுக்கிப்போட்டு கையிலே கொடுக்க, காப்பியின் சுவையும் கதைபேசும் சுவாரசியமும் சேர, ஒரு டம்ளர் காப்பியைக் குடித்துவிட்டு இன்னும் வேணும்னு கைநீட்டிய அனுபவமும் ஒண்ணொண்ணாக நினைவுக்கு வந்தது. அப்பல்லாம், காப்பி குடித்து முடிந்ததும் வயிறு மட்டுமில்லை...மனசும் நிறைஞ்சிருக்கும்.

காப்பி குடிக்கையிலும், கையில் சோறு உருட்டித் தரும்போதும் எத்தனை கதைகள் பேசியிருப்போம்? எத்தனை விஷயங்கள் அறிந்திருப்போம்? இந்தக்காலத்தில் எத்தனைபேர் வீட்டில் எல்லாரும் ஒண்ணாக உட்கார்ந்து காப்பியோ, சாப்பாடோ சாப்பிடுகிறோம்? எத்தனைபேர் அந்நேரத்தில் மனசுவிட்டுப் பேசிக்கொள்கிறோம்?

எல்லாவற்றையும் மறந்துதான் போய்விட்டோம்...வீட்டில் ஆளுக்கொருமூலையில் ஒருத்தராக, அவரவர் விரும்பும்போது சாப்பிட்டுக்கொண்டு, தொலைக்காட்சியையோ, கணினித் திரையையோ வெறித்தபடி, வாய்விட்டுப்பேசக்கூட மனமில்லாததுபோல...மனசு நிறைய புழுக்கத்தைச் சுமந்தபடி...

சுருங்கிப்போனது காப்பி கப் மட்டுமா, நம் மனங்களும்தானா?

*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக