ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

யார் அம்மா?

"அம்மா....இவளப் பாரும்மா...கலரிங் புக்கைக் குடுக்கமாட்டேங்கறா..."என்று கத்தினான் சின்னவன் சதீஷ்

"அடியேய், உனக்கும் அவனுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்டி, அவன்கிட்ட போயி மல்லுக்கட்டறியே என்றாள் கோமதி", பன்னிரண்டு வயதான சாருவின் அம்மா.

"அஞ்சு வயசு வித்தியாசம்...அதுக்கு நான் என்னம்மா பண்ணட்டும்? அஞ்சு வயசு சின்னவங்கிறதுக்காக இந்தப் பையன் பண்ற தொல்லையெல்லாம் தாங்கிக்கணுமா நான்?" என்று அழத் தயாரானாள் சாரு.

"அதென்னடி, இந்தப்பையன், அந்தப்பையன்னு பேசறே... அவன் உன் தம்பிடீ..." என்றவளிடம்,

"இதையே திருப்பி அவனுக்கும் சொல்லிக்குடும்மா... அவ உன்னோட அக்காடா..."ன்னு என்றாள் சாரு.

"அவனுக்கும் உன்னோட வயசு வந்தா அவனும் புரிஞ்சுக்குவான். கொஞ்சநாள் பொறுத்துக்கோடீ..."

"ஓ...அவனுக்கும் என்னோட வயசு வரணும்னா இன்னும் அஞ்சு வருஷம்...அதுவரைக்கும் இந்தக் கழுதை பண்ணுறதையெல்லாம் நான் தாங்கிக்கணும். ஆனா, அப்பவும் அவன் என்னோட அஞ்சு வயசு சின்னவனா தானே இருப்பான். அதுமட்டுமில்லாம, இதே வசனத்தை நீயும் மறக்கமாட்டியே..." என்று சாரு பதில் சொல்ல, அவளிடம்

"பெரிய பொண்னுன்னா கொஞ்சம் பொறுத்துத்தான் போகணும்டா குட்டி" என்றாள் கோமதி.

"ஆமாம்மா, நீ பெரியவ... நீ பெரியவன்னு சொல்லியே என்னோட சின்னவயசு  ஆசையெல்லாம் மழுங்கடிச்சிட்டே... ஏம்மா நீ என்ன மொதல்ல பெத்தே?  இவன் பொறந்த அன்னிலேருந்து நான் நானா இல்லை... அவனுக்கு அக்காவாதான் இருக்கேன்.

அவன் பொறந்ததுலே இருந்து, ஒரு அஞ்சு வயசுப் பொண்ணுக்குரிய என்னோட எதிர்பார்ப்புகளை நீங்க யாரும் புரிஞ்சுக்கலை. ஆனா, ஒரு அக்காவா, மூத்த பொண்ணா உங்க எதிர்பார்ப்புகளைத்தான் நான் நிறைவேத்தியிருக்கேன்.

அவனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டுப் போணும். பஸ்ல இருந்து இறக்கி வகுப்புல கொண்டு விடணும்.  பஸ்ல போகும்போது தூங்கிட்டா எழுப்பி விடணும். வாந்தி எடுத்தா துடைச்சு விடணும். லஞ்ச் டைம்ல, அவனைச் சாப்பிட வைக்கணும். அவன் க்ளாஸில எதையாச்சு தொலைச்சிட்டா தேடிக் குடுக்கணும். இவன் கூட யாராச்சும் சண்டை போட்டா விலக்கி விடணும். திரும்பி வரும்போது பஸ்ஸுக்கு வராம விளையாடிட்டு இருக்கிறவனைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து பஸ்ல உக்கார வைக்கணும். ஆக, இவனையே கவனிச்சு கவனிச்சு, எனக்கு என்னோட வேலையைக் கூடக் கவனிக்கமுடியாமப் போகுது"  என்று சாரு அடுக்கிக்கொண்டே போக,

"ஏய், என்ன இது... கொஞ்சம் விட்டா பெரியமனுஷி மாதிரி பேசிட்டே போறே..." என்றாள் கோமதி.

"ம்ம்...ஆமாம்மா...பெரியவ மாதிரி நடந்துக்கணும்...ஆனா, பேசக்கூடாது...அப்டித்தானே?

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. நான் நாலாவது படிச்சப்ப அரைப் பரிட்சையில கணக்குல கம்மி மார்க்ன்னு என்னைக் கரண்டிக் கணையால அடிச்சே ஞாபகம் இருக்கா? உனக்கு எங்கே இருக்கப்போகுது... இன்னமும் பாரு... அந்தத் தழும்பு என் கால்லயும் மனசுலயும் அப்டியே இருக்கு. ஆனா, அந்தப் பரிட்சைக்கு முந்தினநாள் என்ன நடந்திச்சுன்னு ஞாபகம் இருக்கா? இருக்காது உனக்கு.

அன்னிக்கி இந்தப் பையன், அதான் உன்னோட அருமை மகன், அப்பாவோட சைக்கிள்ல ஏறி, கீழே விடுந்து அடிபட்டுக்கிட்டான். அவனைத் தூக்கிட்டு நீங்கல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடுனீங்க... என்னை அடுத்த வீட்டுல விட்டுட்டு... நான் அங்கேயிருந்து அழுது அழுது எதுவுமே படிக்கல. ஸோ, நான் குறைஞ்ச மார்க் வாங்கக் காரணம் நீங்க... ஆனா, அடி வாங்கினது நான். 

இது மட்டுமா, இன்னும் பாட்டி வீட்டுக்குப் போனப்ப அவன் பைப் தொட்டியில விழுந்து அடிபட்டுக்கிட்டான். ஓடிவந்த நீ, அப்பவும் என்னைத்தான் திட்டினே... நான் ஏன் அவனைக் கவனிச்சுக்கலேன்னு...

நீயே நினைச்சுப் பாரும்மா. நான் சின்னவளா இருந்தப்ப எனக்கு அம்மாவா இருந்த மாதிரி, தம்பிக்கும் நீதானே அம்மா? அப்போ, நீ ஏன் அவனை கவனிச்சுக்கக்கூடாது? உன்னோட பொறுப்பையெல்லாம் என் மேல இறக்கி வச்சிட்டமாதிரி, அவனை  நான் ஏன் கவனிச்சுக்கணும்?  அவன் செய்யிறதெல்லாம் நான் ஏன் பொறுத்துக்கணும்? அவனால நான் ஏன் திட்டும் அடியும் வாங்கி அழணும்?

போனவாரம் கூட இப்படித்தான்... என்று அவள் இன்னொரு சம்பவத்துக்கு  நீதி கேட்க ஆயத்தமாக, அவளை ஓடிச்சென்று இறுக அணைத்துக்கொண்டாள் கோமதி. அம்மாவின் அணைப்பில் குலுங்கிக்குலுங்கி அழுதுவிட்டாள் குழந்தை.

 அழுகிற அந்தக் குழந்தையின் உடல் குலுங்கக் குலுங்க, கோமதியின் மனசில் குற்றவுணர்ச்சி பெருக்கெடுத்தது. சின்னச் சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியம், இந்தக் குழந்தையின் மனசில் எத்தனை பரிதவிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கையில் அவளுக்கு உடம்பு நடுங்கியது.

மகளின் மனபாரத்தைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக, "அம்மாவை மன்னிச்சுக்கடா குட்டி" என்று சொல்லி, அழுகிற மகளின் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாள்.  இனி, அவனுக்கும் அம்மாவா உங்க ரெண்டு பேரையும் நானே கவனிச்சிக்கிறேன் என்று சொன்னபோது, அவள் கண்களும் நிறைந்திருந்தது.

                                                          *******


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக