திங்கள், 11 அக்டோபர், 2010

மருமக வந்த நேரம்!



காலைலேருந்தே தூறல் விழுந்துகிட்டுதான் இருக்கு...வங்காள விரிகுடாவுல புயல் வந்துருக்காம். இன்னும் நாலுநாளைக்கு மழை இருக்கும்னு சொல்றாக... என்று மதினிக்காரியிடம் சொன்னபடி, ரேடியோவைப் போடப்போனா செவந்தி.

கரண்டு இல்லாம இருந்தது தெரியவர, போச்சா...எலக்ட்ரி லைட்ட நம்பி எல போடாதன்னு சும்மாவா சொன்னாக...உரக்க நாலுதூறல் விழுந்தாப்போதும், உடனே கரண்டை நிப்பாட்டிருவானுங்களே,வேலையத்தபசங்க...என்று வைதபடி வெளியே போனா செவந்தி.

எதிரே, பேச்சியக்கா வீட்டுல போட்டிருந்த கல்யாணப் பந்தலில் ஆட்டுக்குட்டிகள் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தன. வெளியூர்ல கல்யாணம் முடிஞ்சி, விளக்குவச்சதும் பொண்ணும் மாப்பிள்ளையும் வருவாகன்னு ராசாத்தி சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு.

சாயங்காலத்துக்குள்ள நாலுநேரம் வந்துவந்து போயிட்டுது கரண்டு. திரும்ப வந்ததும், குறை கரண்டாயிருக்க, எதுக்கும் தேவைன்னு, சிம்னி விளக்கத் தொடச்சு மண்ணெண்ணெய் ஊத்தி,எடுத்து வச்சா செவந்தி.

அதுக்குள்ள, செவந்தியக்கா, பேச்சியக்கா வீட்டு மாப்பிள்ளையும் பொண்ணும் தெருமுக்குல வந்துட்டாகளாம்...என்று குரல் கொடுத்தபடி, வேடிக்கைபாக்க ஓடிப்போனா லெச்சுமி. விடாம, தூறல் விழுந்துகிட்டேயிருக்க, அக்கம்பக்கத்துக்காரவுகல்லாம் அவுகவுக வீட்டுவாசல் கிட்டயே நின்னு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சாக.

நாலுவீடுதள்ளிக் காரு வரும்போது, மறுபடியும் பட்டுன்னு போயிட்டுது கரண்டு. மணமகளே மருமகளேன்னு பாட ஆரம்பிச்சு, விக்கிக்கிட்டு நின்னுபோச்சு பாட்டு. "அடி ஆத்தி, பேச்சியம்மா வீட்டுக்கு மருமக வாரநேரம், பூரா ஊரும்ல இருட்டாப் போச்சுது... என்று, நீட்டி முழக்கியது நல்லம்மாக் கிழவி.

அட, ஆமால்ல... என்று உச்சுக்கொட்டியபடி ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டாங்க அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க. அதுவரைக்கும், பளிச்சுன்னு இருந்த பேச்சியக்கா முகமும், தீஞ்சுபோன பல்பாட்டம் ஓஞ்சு போக, உள்ள வரும்போதே நல்ல யோகத்தோடதான் வந்திருக்க.... என்று, வந்த மருமக கிட்ட வாசப்படியிலயே எரிஞ்சு விழுந்தா பேச்சியக்கா.

**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக