செவ்வாய், 5 அக்டோபர், 2010

எங்களுக்கு விவாகரத்து வேண்டும்!



ஊரிலிருந்து அந்த அப்பா, அமெரிக்காவிலிருக்கும் தம் மகனை அழைத்துச் சொன்னார்,

" உன்னுடைய இந்த நாளை வீணடிப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன் மகனே... ஆனால், இதற்கு மேலும் இதைச் சொல்லாமல் நாளைக் கடத்தமுடியாது. 35 வருஷ கல்யாண வாழ்க்கையில்,இதுவரை பட்ட கஷ்டமெல்லாம்போதும். நான் உன் அம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன் " என்று.

அப்பா, என்ன சொல்றீங்க நீங்க? சற்றேறக்குறைய அலறினான் மகன்.

இதற்குமேலும் எங்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு வெறுத்துப்போய்விட்டது இந்த வாழ்க்கை.

திரும்பத்திரும்ப இதையே பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதனால், ஹாங்காங்கில் இருக்கும் உன் தங்கையிடமும் நீயே இந்த விஷயத்தைச் சொல்லிவிடு என்றபடி ஃபோனை வைத்துவிட்டார் அந்த அப்பா.

அண்ணனிடமிருந்து வந்த அழைப்பைக் கேட்டதும் அதிர்ந்துபோனாள் தங்கை. இவங்க நினைச்சா, உடனே விவாகரத்து செஞ்சுக்குவாங்களா? பிரச்சனையை என்னிடம் விடு... நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, உடனே, தன் அப்பாவை அழைத்தாள் அவள்.

நீங்க என்னதான் நினைச்சுட்டிருக்கீங்க மனசில... உங்க இஷ்டப்படி, நீங்க அம்மாவை விவாகரத்துச் செய்யமுடியாது. இப்பவே நானும் அண்ணனும் அங்கே புறப்பட்டு வருகிறோம். அதுவரைக்கும் ஏதாவது பிரச்சனை பண்ணினீங்கன்னா... இருக்கு. என்ன, நான் சொல்றது காதில விழுதா? என்று கத்திவிட்டுத் தொலைபேசியை வைத்தாள்.

முதியவரும் தொலைபேசியை வைத்துவிட்டுத் துணைவியாரிடம் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சொன்னார், அவங்க ரெண்டு பேரும் இப்பவே புறப்பட்டு வராங்க... நம்ம கல்யாண நாளுக்கு. அதுவும் அவங்களோட சொந்த செலவில்...என்று சொல்லிவிட்டு கண்களில் கண்ணீர் வருமளவுக்கு உரக்கச்சிரித்தார். கூடவே சேர்ந்துகிட்டாங்க அவர் மனைவியும்.

இது, பிள்ளைகளுக்காக ஏங்குகிற பெற்றோரைப்பற்றி, நான் மின்னஞ்சலில் படித்த சாதாரணமாகச் சொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாயிருந்தாலும், அது சொல்லும் அர்த்தத்தைக் கட்டாயம் எல்லாரும் புரிஞ்சிக்கணும்.

1. வருஷத்தின் 365 நாளும் யாரும் வேலைவேலையென்று பரபரப்பாக இருப்பதில்லை.

2.வருஷத்தின் சில நாட்கள், வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதால் வானமொன்றும் இடிந்து நம் தலையில் விழுவதில்லை.

3.அலுவலக வேலையும், பணம் சம்பாதிப்பதுமே நம் வாழ்க்கையில்லை. அதற்கு மேலும் அன்பு பாசமென்று விலை மதிப்பற்ற சில விஷயங்களும் இருக்கிறது.

கடல்கடந்து வாழும் மக்களே...கவனம் வையுங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக