சனி, 9 அக்டோபர், 2010

நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!

நவராத்திரியும் நரிப்பயறு புளிக்குழம்பும்!


நவராத்திரி விரத காலம் பயறு வகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில் பலவகை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட காலத்தில் உடம்புக்கு அதிகமான நோய்எதிர்ப்பு சக்தி தேவை. அதற்காகத்தான் நவராத்திரி காலத்தில் நிறைய பயறுவகைத் தானியங்களை உண்ணும் வழக்கம் வந்ததுன்னு சொல்லுவாங்க.

* பயறுவகைகள் எல்லாமே அதிகமான புரதச் சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

* பயறு வகைகளில் நார்ச்சத்து, அதிகமென்பதால் இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

* தினமும் ஒரு கப் வேகவைத்த ஏதாவதொரு பயறை உணவில் சேர்த்துக்கொண்டால் அன்றாடத் தேவையில் 63% நார்ச்சத்து அதிலிருந்து நமக்குக் கிடைத்துவிடுகிறது.

* இது தவிர, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் இவற்றிலுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இவை அதிகம் உதவுகிறது.

எல்லாம் சரி, அதென்ன நரிப்பயிறுன்னுதானே யோசிக்கிறீங்க?
நேத்து யாராவது சொல்லியிருந்தா நானும் இதேமாதிரிதான் யோசிச்சிருப்பேன். ஏன்னா, இந்தப் பயறோட தமிழ்ப்பெயர் இப்பத்தான் எனக்கும் தெரிஞ்சிது. ஆங்கிலத்தில் இதுக்குப்பேரு Black Eye Beans. தமிழ்ல நரிப்பயறு...ஏன் இந்தப் பெயரை வச்சாங்கன்னு எனக்குத் தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லிட்டுப்போங்க.

சரி, இப்ப இந்த நரிப்பயறை வச்சு புளிக்குழம்பு பண்ண என்னென்ன பொருட்கள் தேவைன்னு பார்க்கலாம்.

நரிப்பயறு - 1/2 கப்

தக்காளி - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

சிறிய கத்தரிக்காய் - 2

தேங்காய்த்துருவல் - 1 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி - 1 தேக்கரண்டி

புளி - சிறு எலுமிச்சையளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு -தேவைக்கு

தாளிக்க...

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை...


பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வச்சுக்கங்க.

காய்கறிகளை நறுக்கி வச்சுக்கங்க.

புளியைக் கரைச்சு வடிகட்டி வச்சுக்கங்க.

தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைச்சு வச்சுக்கங்க.


செய்முறை:-

அடுப்பில் வாணலியை வச்சு, தேவையான அளவு எண்ணெய் விட்டுக்கணும்.

தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிச்சு,அதில் வெங்காயம் பச்சை மிளகாயப் போட்டு வதக்கணும்.

வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய், அப்புறம் தக்காளியையும் போட்டு வதக்கணும்.

தக்காளி கரைஞ்சு வரும்போது புளிக் கரைசலை ஊத்தி, அத்துடன் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.

கலவை,ரெண்டு நிமிஷம் கொதிக்கவிட்டு, அரைச்ச தேங்காய் சீரக விழுதைச் சேர்க்கவும்.

வேகவைத்த பயறைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போடவும்.

குழம்பை மூடி, எண்ணெய் பிரியும்வரை சிறுதீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நரிப்பயறு புளிக்குழம்பு ரெடி.

பின் குறிப்பு :- பயறு சாப்பிட்டு வரும் பின் விளைவுகளுக்கு வெள்ளைப்பூண்டு அக்கா, அல்லது பெருங்காயப் பாட்டியின் உதவியை நாடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக