ஞாயிறு, 17 அக்டோபர், 2010

சாலை விபத்துகளும் சரியும் கனவுகளும்!



அம்மா, இனிமே எனக்கு ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் குடுக்கும்போது கூடகொஞ்சம் சேத்துக்குடும்மா என்றாள் என் மகள்.

சரிடா, யாருக்கு ஃபிரெண்டுக்கா? என்றேன்.

பிரெண்டுதான்...ஆனா, குட்டி ஃபிரண்ட்...நாலுவயசுதான், என்றாள்.

அதென்னடா, கே.ஜி புள்ளையா என்றேன்.

ஆமாம்மா... என்றாள்.

தினமும் காலையில போகும்போது அந்தப்பொண்ணு எங்ககூட வரும். ஸ்கூல் பஸ்ஸில் தன்னோட இடத்துல அஞ்சு நிமிஷம்கூட உக்காராது...பேரு அஜிதா. ஒவ்வொருத்தர் மடியிலயா வந்து உக்காந்துகிட்டு, ஏதாவது சொல்லிக்கிட்டு, இல்லேன்னா கேட்டுக்கிட்டு வரும். எங்க எல்லாருக்கும் அது பெட்.

ஆனா, நேத்திலேருந்து அந்தக்குழந்தைமேல எல்லாருக்கும் பாசத்தோட, பரிதாபமும் சேந்துகிடுச்சு.

நேத்து காலையில ஸ்கூலுக்கு பஸ்ஸில் வந்தப்போ, எங்க வீட்டுக்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க. ஆனா, எங்கம்மா மட்டும் அழுதுகிட்டு, ரூமைவிட்டு வெளியவே வரல,என் குட்டித்தம்பியைக்கூட தூக்கல...என்று அஜிதா கவலையாகச் சொன்னது.

பக்கத்திலிருந்த ஒரு பெண், பஸ்ஸில் வந்து, தன் காலைச் சிற்றுண்டியாக பர்கர் (burger) சாப்பிட்டதைப் பாத்துட்டு, எங்கப்பாவும் எங்களை ஷாப்பிங் கூட்டிட்டுப்போகும்போது, பர்கர் ஐஸ்க்ரீமெல்லாம் வாங்கிக்குடுப்பாங்க ஆனா, இனிமே எங்கப்பா எங்களைக் கடைக்கெல்லாம் கூட்டிப்போகமுடியாது...அப்பா, வெளிநாட்டுக்குப் போயிட்டாங்களாம். இனிமே, நான் வளந்து, படிச்சு, கல்யாணம் பண்ணும்போதுதான் திரும்பி வருவாங்களாம்...எங்க வீட்டுக்கு வந்திருக்கிற கிராண்ட்மா (grand mother)சொன்னாங்க என்று அஜிதா சொன்னப்ப எங்க யாருக்கும் எதுவும் புரியல.

ஆனா, மத்தியானம் கே ஜி ஸ்டூடண்ட்ஸையெல்லாம் பன்னிரண்டுமணிக்குக் கொண்டுவிட்டுட்டு, அடுத்து எங்களைக் கூட்டிட்டுவரும்போதுதான் பஸ் கண்டக்டர் சொன்னார், அஜிதாவோட அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோட் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அஜிதாவுக்கு விபரம் தெரியவேண்டாம்னுட்டு, அதை வீட்ல வச்சுக்காம ஸ்கூலுக்கு அனுப்பிட்டிருக்காங்க என்று.

கேட்டதும் எனக்கு தொண்டைக்குள்ள வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சும்மா...ஒருத்தரையொருத்தர் பாத்து வந்த கண்ணீரை அடக்கிக்கிட்டோம். இன்னிக்கும் அஜிதா ஸ்கூலுக்கு வரும். ஒவ்வொருத்தர் மடியிலயும் வந்து உக்காந்து அவங்க வீட்டுக்கதையைச் சொல்லும். நினைக்கவே கஷ்டமா இருக்கும்மா என்று சொல்லிவிட்டு, பஸ் வரவும் கிளம்பினாள் என் மகள்.

அவளைக் கையசைத்து வழியனுப்பமுடியாமல் செயலற்றுப்போய் நின்றேன் நான்.

பி.கு:-சாலையில் பாதுகாப்பு, நம் சகலருக்கும் உயிர் காப்பு!

********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக