சனி, 8 மார்ச், 2014

பெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்!

இலக்கியத்திலும் சரி, இறைவழிபாட்டிலும் சரி, நம் நாட்டில் பெண்மைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு மிகப் பெருமையுடையது. 

முறமெடுத்துப் புலிவிரட்டியதும்தந்தையுடன்கூட என் சின்னஞ்சிறு புதல்வனும் போரில்வீரமரணமுற்றான். இதுவல்லவோ எமக்குக் கிடைத்த வெற்றி என்று  போர்க்களத்திலே பூரித்ததும் ம் தமிழ்குடிப் பெண்டிர்தான்.

"எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை"

அத்தகைய பெண்களின் வீரத்தைக் கண்டு கூற்றுவனும் நாணினானென்று புறநானூறு பாராட்டும்.


இறைவழிபாட்டில், அன்னை பராசக்தியே அகிலமனைத்துக்கும் காரணியென்று அவளை வழிபடுதலும்,  அவள் அம்சமான சக்தியாகவே பெண்ணைப் போற்றுதலும் பரவலாகக் காணப்படுகிற பழக்கம். 

அன்பே சிவமாகி ஆட்கொள்ளுகிற சிவபெருமானும் தன் இடப்பாகத்தை இறைவிக்குக் கொடுத்தவன்.  அவனை,

"மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே"

என்று திருஞானசம்பந்தரும்

"ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் மிவனென்ன
அருமையாக வுரைசெய்ய வமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்"

என்று திருநாவுக்கரசரும் போற்றிப் பாடியிருக்க,

அப்பேற்பட்ட இறைவனின் இயக்கத்திற்கும்கூட, இறைவியின் துணை அவசியம் என்று ஆதிசங்கரர் அவரது சௌந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். வரது சௌந்தர்யலஹரிப் பாடலொன்றின் தமிழாக்கத்தில்,

"திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால் 
தேவி நீ அன்புடன் ஒன்றித் 
தங்கிடி லன்றி இயங்கிடும் திறமும் 
இறைவனே இழந்திடும் என்னில் 
கங்கைவார் சடையன் அயன்திருமாலும்
கைதொழுதேந்தியே போற்றும் 
பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் 
நின் பாதமே தொழுவதும் எளிதோ?” 

என்று  பாடிப் பரவுகிறார்.

மனித உடலின் இடப்பாகம் இதயத்தைக் கொண்டது. உடலின் அத்தனை பகுதிக்கும் ரத்தத்தையும் பிராணவாயுவையும் செலுத்தி மனிதனைச் சக்தியுடன் நடமாட வைப்பது இதயத்தின் வேலை. அத்தகைய இடப்பக்கத்தைத் தனக்களித்த இறைவனையும் இயங்கவைப்பது இறைவியின் வேலையென்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

அத்துடன், பெண்ணைப் பராசக்தியாகப் போற்றிப் பெருமைப் படுத்தியதில் நம் எட்டையபுரத்து கவிஞன் இன்னும் சிறந்தவன்.                

தன்னுடைய புதுமைப்பெண் என் பாடலில்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்

என்று, இப்பூவுலகில் பெண்களாகப் பிறப்போரெல்லாம் அன்னை சிவசக்தியே என்று அடித்துச் சொல்லுகிறார் அழகாக.

அத்தகைய பெண்மைக்கு இன்னும் சிறப்புச்செய்யும் விதமாக,

"வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!"

என்றும்,

"மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!"

என்றும் கண்ணம்மா எனும் தன் கனவுப்பெண்ணிடம் தான் சரணடைந்ததாகப் போற்றிப் பாடுகிறார் பாரதி.

இப்படிப்பட்ட பெண்மை, தாயாய், தாதியாய், தங்கையாய், தமக்கையாய், தாரமாய், தோழியாய் எத்தனையோ வடிவில்  ஒவ்வொருவர் வாழ்வையும் அன்றாடம் புதுப்பிக்கிறது, புத்தொளி ஊட்டுகிறது. அத்தகைய மாண்புடைய பெண்டிர் 
அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

- சுந்தரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக