வியாழன், 1 ஜனவரி, 2015

பாவம் பிள்ளைகள்!



ஞாயிற்றுக்கிழமை...காலை எட்டுமணி...

என்னங்க, இங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்களேன்... என்றாள் என் தர்மபத்தினி. 

என்னடா இது அதிசயம்? இன்னிக்கி அவ வாய்ஸ்ல ஒரு மென்மை தெரியுதேன்னு படிச்சிக்கிட்டிருந்த பேப்பரை பட்டுன்னு மூடி வச்சுட்டு பக்கத்துல போயி நின்னேன்.

"ஆமா, இது யாருன்னு தெரியிதா?" என்றாள், டேபிளின் மேல் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த என் மகளைக் காட்டி.

என்னம்மா, இது? நம்ம புள்ளையப் பாத்து இப்பிடிக் கேக்குறே...

"ஆமா, புள்ளைய எதுக்கு இப்பவே எழுப்பி உக்கார வச்சிருக்கே... அது உக்காந்துகிட்டே தூங்குது பாரு... முன்னெல்லாம் ஞாயித்துக்கிழமைல நாம ரெண்டுபேருமே கூட மத்தியானம் வரைக்கும் தூங்கியிருக்கோம்..." என்றேன் பெருமூச்சுடன்.

"அதெல்லாம் அந்தக்காலம்... நீங்க நடக்கிற கதைக்கு வாங்க..." என்றாள்.

"அந்தக்காலம் இல்லம்மா... இப்பத்தான்  ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தின காலம்..." என்ற என்னை அவள் உறுத்துப் பார்க்க, "சரி... உனக்கு அது கடந்த காலம்... என்னைப் பொருத்தவரைக்கும் அது ஒரு பொற்காலம்... விடு... இப்ப என்னை எதுக்குக் கூப்ட்டே?" என்றேன்.

"உங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு வாரம் ஆகுது ஞாபகம் இருக்கா?" என்றாள். 

"ஏன்மா இல்லாம? பார்ட்டி ஹால் புக் பண்ணி, கேக் வெட்டி, விருந்து வச்சு,  வந்தவங்களுக்கெல்லம் கிஃப்ட் குடுத்து, ஒரு சின்னத் திருவிழா மாதிரி செலிபரேட் பண்ணோமே... காசு எத்தனை ஆயிரம் செலவாச்சு... அதுகூட மறக்குமா என்ன?"

"ஓ... சந்தடி சாக்குல செலவுக்கணக்குக் காட்டுறீங்களோ?" என்று கண்ணை உருட்டி  என்னைப் பார்த்து அவள் கடுப்படிக்க, "இல்லம்மா... இயல்பாச் சொன்னேன்..." என்று அசடு வழிந்தேன்.

"சரி, ரெண்டு வயசாச்சு...பொறந்தநாள் கொண்டாடியாச்சு. இனிமே, அடுத்தது என்னன்னு ஏதாவது யோசிச்சீங்களா? " என்றாள். 

"அடுத்து என்ன? ரெண்டு வயசு தானே... இருவத்திரண்டு இல்லையே... என்னத்துக்கு இப்படி காலங்காத்தால டென்ஷன் பண்றா?" என்று மனசுக்குள் எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

ஓ...ஒருவேளை, அடுத்து இவளுக்குப் பொறந்தநாள் வருதோ??? கடவுளே பொறந்தநாள் கொண்டாடியே நான் 
போண்டியாயிடுவேன் போலயே...என்று நினைத்து என் பிபி எகிறத்தொடங்க, அதற்குள் சட்டென்று நினைவுக்கு வந்தது. 

இப்பத்தானே நவம்பர்ல, டொமினொஸ் பீசா, அதோட கேக், ஆரெம்கேவில பட்டுப்புடவை, அதுக்கு மேட்சா ஒரு ஜோடி கம்மல்னு, ரெண்டு மாசத்துக்கு முன்னால பிறந்தநாள் கொண்டாடி இருவத்தஞ்சாயிரம் செலவு வச்சா... அப்போ, அவ பொறந்தநாள் இல்லை என்று மனசை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அதற்குள், "நீங்கல்லாம் படிச்சவர் தானே...?" என்று எதிர்பார்க்காத இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. 

"என்னம்மா இப்பிடிக் கேட்டுட்டே? என்னோட படிப்பையும் வேலையையும் பாத்துத்தானே உங்கப்பா உன்னை எனக்குக் கட்டிவச்சார்" என்று நான் பெருமிதமாய் எதிர்க்கேள்வியை எழுப்பினேன்.

"ஹூக்கும்...பெரிய்ய படிப்பு...ஒத்தப் பிள்ளைய வச்சுக்கிட்டு அடுத்து என்ன செய்யணும்ன்னு கேட்டா, ஏதோ என்ட்ரன்ஸ் எக்சாம்ல எக்குத்தப்பா கேள்வி கேட்ட மாதிரி முழிக்கிறீங்க... என்னத்தைப் படிச்சித் தொலைச்சீங்களோ..." என்று அவள் எகிற, 

என்னது, ஒத்தப் பிள்ளையா... ஓ... ஒருவேளை, அவ அப்டி வராளோ? இன்னொரு குழந்தை வேணும்னு நம்ம வாயால சொல்லணும்னு எதிர்பார்க்கிறாபோல... என்று நினைத்து உள்ளம் துள்ள, அடச்சே... உண்மையிலேயே நான் சரியான மக்குதான்... "செல்லம், இப்பத்தான்டா புரியுது எனக்கு... நம்ம அனுக்குட்டிக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வேணும்னு தானே நீ நினைக்கிறே?" என்று நான் வாயெல்லாம் பல்லாகிக் கேட்டேன்.

"ஓஹ்ஹோ... அப்படியொரு எண்ணம் வேற இருக்கா உங்களுக்கு? இருக்கிற ஒரு குழந்தைக்கே அடுத்து என்ன பண்ணனும்னு அறிவு இல்ல, இன்னொரு குழந்தை வேற கேக்குதோ?" என்று சின்னப் பத்திரகாளியாய் அவள் சீற,

"ஐயோ... அப்போ அதுவுமில்லையா? நான் அம்பேல்... என்னன்னு நீயே சொல்லிரு தாயி..." என்று நான் அலுத்துப்போய் சரண்டராக, கண்ணுக்கு முன்னால் ஒரு காகிதத்தை நீட்டினாள். 

"லிட்டில் பட்ஸ் ப்ளே ஸ்கூல்" என்று பெரிய எழுத்தில் அதன் தலைப்பைப் பார்த்ததும் புரிந்தது, இதற்குத்தான் இத்தனை களேபரம் என்று. "ஏம்மா, ரெண்டு வயசுக்குள்ள ஸ்கூல்ல சேர்க்கணுமா? நானெல்லாம் நாலு வயசிலதான் ஸ்கூலுக்குப் போனேன்... நீயெல்லாம் கிராமத்துல அதைவிட லேட்டாக்கூட சேர்ந்திருப்பே, அப்டித்தானே?" என்று அவளைக் கேட்டேன் 

"நீங்க படிச்சுக்கிழிச்ச பவிசு தான் அன்றாடம் கிழியுதே... இன்னும் எதுக்கு அதையே பேசிட்டிருக்கீங்க? என்றவள், இந்த ஸ்கூல்ல, அடுத்த வருஷ அட்மிஷனுக்கு இப்ப ரிசர்வேஷன் நடக்குதாம். அதுக்கு இன்னிக்கு அப்ளிக்கேஷன் தராங்களாம். போன வருஷம் ரெண்டே மணி நேரத்துல அப்ளிக்கேஷனெல்லாம் தீர்ந்து போயிருச்சாம். என்னோட ஃப்ரெண்டோட  பையன், வத்சனுக்கு சரியாப் பேசக்கூடத் தெரியாது. அந்த ஸ்கூல்ல சேர்த்த பிறகு இப்ப என்னாமாப் பேசறான் தெரியுமா?" என்றாள். 

 "சரிம்மா, அந்தப் பையனுக்கு பேசத்தெரியலை... அப்பாவும் அம்மாவும் வேலைக்கு வேற போறாங்க... கூட இருந்து பேச யாருமில்லே... ஆயாகிட்ட விடவும் அவங்களுக்கு விருப்பமில்லே. அதனால அங்கே அனுப்பியிருக்காங்க. 

நம்ம பொண்ணுக்குத்தான் வீட்ல நீ கூட இருக்கியே... அவளும் இப்பவே கிளிமாதிரி அழகா, சமயத்துல உன்னை மாதிரியும் சூப்பரா பேசறா...அவளுக்கு எதுக்கு ப்ளே ஸ்கூல்லாம்...? இன்னும் குறைஞ்சது ஒரு வருஷமாவது போகட்டும். அப்புறமா நேரடியா ஸ்கூலுக்கு அனுப்பலாம்" என்றேன்.

என்னைப் பார்த்து எரித்துவிடுபவள்போல முறைத்தவள்,  "சாரதாவோட குழந்தை மூணு வயசுலய உலக மேப்ல உள்ள அத்தனை நாடுகளையும் அதோட தலைநகரங்களையும் புட்டுப்புட்டு வைக்குது. ஜூலி அவ கொழந்தையை ஐ ஏ எஸ் ஆக்கணும்னு இப்பவே ஜெனரல் நாலட்ஜ் கோச்சிங் அனுப்பிட்டிருக்கா. நர்மதாவோட பையன் அபாக்கஸ் ட்ரெயினிங் போறான். நம்ம பொண்ணு மட்டும் இன்னும் எதையுமே கத்துக்காம மக்கு மாதிரி வளரணுமா என்ன?"

இல்லம்மா...நீ புரிஞ்சுக்காம பேசுறே. இப்படி ரெண்டே வயசுல பள்ளிக்கூடத்துக்குத் தள்ளிவிடறதாலயோ, சின்ன வயசுலயே தலைநகரங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதாலயோ, திருக்குறளைத் தலைப்பாடமா ஒப்பிக்கிறதாலயோ அறிவு வளர்ந்துடாது. குழந்தைகளுக்கு இயல்பா எந்த விஷயத்துல ஆர்வம் இருக்குன்னு படிப்படியா தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி நாம சப்போர்ட் பண்ணி வழிநடத்தினாலே போதும்.

இப்பல்லாம் தினசரி செய்திகளைப் பார்த்தாலே புரியும் உனக்கு. படிப்பு விஷயத்துல அப்பா அம்மாவோட அதீத வற்புறுத்தல், பள்ளிக்கூடத்துல சந்திக்கிற படிப்பு சம்பந்தமான பிரச்சனைகள் தாங்காம நிறையக் குழந்தைகள்  சின்ன வயசிலயே தற்கொலை வரைக்கும் போயிடறாங்க. பள்ளிக்கூடப் படிப்பும் அதுல வாங்குற மதிப்பெண்களுமே முக்கியம்ங்கற நம்ம மனநிலை மாறணும். படிப்பு விஷயத்துல பிள்ளைகளை அடக்கியாளணும், அவங்களை நாம விரும்பின துறைல உக்காரவச்சிடணும்னு நினைக்கக்கூடாது"

நின்று, நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவள், சில வினாடிகள் மௌனமாய் என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். அப்பாடா, ஒருவழியா நாம சொன்னதை உணர்ந்து ஒத்துக்கிட்டா போலிருக்குது.  நம்ம பிள்ளையை 'ப்ளே ஸ்கூல்'ல இருந்து காப்பத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன், மகளின் அருகே போய் அவளைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டேன்.

அதற்குள் உள்ளேயிருந்து திரும்பி வந்தவள், "இந்தக் கவர்ல ப்ரெட் சாண்ட்விச் இருக்கு. சட்டுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டுப்போயி, பத்து மணிக்கு ஸ்கூலோட ஆஃபீஸ் திறந்ததும் அப்ளிக்கேஷனை வாங்குங்க..." என்றாள்

"ஜானு, நான் இன்னும் குளிக்கக்கூட இல்லம்மா. அதுக்குள்ள என்ன அவசரம்...குளிச்சிட்டுக் கிளம்புறேன்..." என்றவனிடம்

"குளிச்சு, அலங்கரிச்சு, ஆடி அசைஞ்சு போயி, அப்ளிக்கேஷன் முடிஞ்சுபோச்சுன்னு வாங்காம மட்டும் வந்தீங்கன்னா அப்புறம்... " என்று அவள் வாக்கியத்தை உக்கிரமாக உச்சரித்து முடிப்பதற்குள் நான் வாசல் கேட்டில் இருந்தேன். என்னுடைய ஞாயிற்றுக்கிழமை ப்ரேக்ஃபாஸ்ட்  என் கையில் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக