திங்கள், 14 செப்டம்பர், 2020

திரிபலா சூரணத்தின் பலன்கள் & உண்ணும் முறை



திரிபலா சூரணம், இதனைத் தாய் மருந்து என்று சொல்வார்கள். அதாவது, தாய்க்கு நிகராக, ஒரு மனிதனைப் பாதுகாக்கக் கூடியது என்று அதற்குப் பொருள். 

திரிபலா சூரணம் என்பது மூன்று பழங்கள் அல்லது மூன்று காய்கள் சேர்ந்த ஒரு பொடி. இந்தப் பொடியில், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று காய்கள் அல்லது பழங்கள் சேர்ந்திருக்கின்றன. உணவு செரிப்பதற்கும், வயிறு சுத்தமாகவும் உதவி செய்யக்கூடிய ஒரு அருமையான மருந்து திரிபலா சூரணம் என்று சொல்லுவார்கள்.

மனிதனுடைய உள் உறுப்புகள் சரிவர வேலை செய்யும் போது, மனிதனுடைய முகம் தெளிவாக இருக்கும். இந்தத் திரிபலா சூரணத்தின் முக்கியமான பலன் என்னவென்றால், இது வயிற்றைச் சுத்தபடுத்தி, உடம்பு சரிவர இயங்க உதவி செய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகிவிடும்.

அதனால், முகப்பரு மற்றும் பல தோல் நோய்கள் போன்றவை இந்தத் திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நீங்கிவிடும். இந்தத் திரிபலா சூரணம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது.

திரிபலா சூரணத்தை, நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு திரிபலா சூரணம் ஒரு சிறந்த தீர்வு. இரவில் இந்த திரிபலா சூரணத்தை வென்னீருடன் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் தீர்ந்துவிடும்.

இந்தத் திரிபலா சூரணத்தில் கலந்திருக்கின்ற  நெல்லிக்கனியை உயிரை வளர்க்கும் அமிர்தம் என்று சொல்லுவார்கள். அதனால்தான், அவ்வளவு சிறந்த நெல்லிக்கனியை, அதியமான் அவ்வை எனும் தமிழ்ப் புலவருக்கு கொடுத்ததாகச் சொல்லுவார்கள். 

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது. அடுத்ததாக, திரிபலா சூரணத்தில் கலந்திருக்கும் இன்னொரு பொருள் கடுக்காய். இந்தக் கடுக்காயும் தாய்க்கு நிகராக நோயைத் தீர்க்கக் கூடியது என்று சொல்வார்கள். இந்தக் கடுக்காயில் விதை நஞ்சு. அதனால், அதன் தோலை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதனால், விதையை நீக்கிவிட்டுத் தோலைப் பொடி செய்து அதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இந்த கடுக்காயைக் குழந்தைகளுக்கு மருந்தாகக் கல்லில் உரசிக் கொடுப்பார்கள். 

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு 

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 

விருத்தனும் பாலனாமே" 

என்கிறது ஒரு பழம்பாடல். 

காலையில் இஞ்சியும், கடும்பகல் சுக்கும், மாலையில் கடுக்காயும் சாப்பிட்டால், முதியவர்கள் கூட இளமையாகிவிடுவார்கள் என்பது இதன் பொருள். இந்தக் கடுக்காய்ப்பொடியைத் தனியாக வாங்கியும் பயமன்படுத்தலாம்.

அடுத்ததாக, தான்றிக்காய். தான்றிக்காய் துவர்ப்பு சுவை உடையது. இது, நுரையீரல் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. இதன் பிஞ்சுகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மூன்று காய்களையும் காயவைத்துத் தயாரிக்கும் பொடிதான் திரிபலா சூரணம். 

இந்தத் திரிபலா சூரணத்தை, தினமும் எந்த அளவு சாப்பிடலாம் என்ற கேள்வி எழலாம். பொதுவாக, திரிபலா சூரணத்தை ஒரு வெருகடி அளவு சாப்பிடவேண்டும் என்பார்கள். வெருகடி என்பதற்கு,  பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் ஆகிய மூன்று விரல்களால் ஒரு பொடியை எடுத்தால் எந்த அளவு வருமோ அதுதான் வெருகடி அளவு.

வெருகடி அளவு பொடியை, இரவில் சுடு தண்ணீர் அல்லது தேனில் குழைத்துச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை இரவில் எடுத்துக்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது. 

இந்தத் திரிபலா சூரணம், பொடியாக மட்டுமன்றி, திரிபலா மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. திரிபலா சூரணம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, வீட்டிலேயே அவற்றைப் பொடி செய்தும் நாம் பயன்படுத்தலாம்.

இந்தத் திரிபலா சூரணப் பொடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்று பிரச்சினைகளைத் தீர்க்கவும், நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கும் ரொம்பவே உதவக்கூடியது. இதனை, நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். 

திரிபலா சூரணம் பற்றியும், அதனை, எப்படி வாங்கலாமென்றும் மேலும் தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.

நலமுடன் வாழ்வோம்!

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக