செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (2) **மந்த்ராலயம்**

முதல்நாளை ஆதோனியில் கழித்துவிட்டு,மறுநாள், மகான் ராகவேந்திரரின் மந்திராலயத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். ஆதோனியிலிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணம்.வழியெங்கும் மலைகளும், வானம்பார்த்த பூமியுமாகக் காணப்பட்டது.





முதலில் துங்கபத்ரா நதியினைப் பார்த்துவிட்டு அப்புறம் ஆலயத்திற்குள் சென்றோம்.

சிறிதளவே நீரோடிய துங்கபத்திரா நதி...



முதல்முறையாக அங்கு செல்வதால் ஆலய வரலாற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பகவான் நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு, குடல்கிழித்து உயிர்குடித்த இரண்யகசிபுவின் மகன் பக்தப் பிரகலாதனின் அவதாரமாகவே மகான் ராகவேந்திரர் இங்கு வழிபடப்படுகிறார்.

நதிக்கரையில் மரங்கள் சூழ்ந்த பிருந்தாவனப் பகுதியில் மகான் ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்ததாகவும் அவர் இறைவனோடு கலந்து முக்தியடைந்த இடத்தில் துளசிமாடம் போன்ற அமைப்புடன் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறக் கேட்டோம்.ஆலயத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. சுத்தம் சுத்தம் எங்குபார்த்தாலும் சுத்தம்.மகானின் அமைதி நிலவும் ஆலயத்தில் மோனத் தவமிருக்கும் பக்தர்கள் பலரைக் காணமுடிகிறது.

தரிசனம் முடிந்து வெளிவருகையில் துளசிதள தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆலய வளாகத்தினுள்ளேயே போஜன சாலையும் அமைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த மரங்களுக்கிடையேதான் மகானின் ஆலயம் அமைந்திருக்கிறது.



கோவில் அமைந்திருக்கும் இடம் முன்பு மாஞ்சாலா என்ற கிராமமாக இருந்ததாகவும், மந்திராலயம் கோவிலுக்கு இடமளித்த அம்மையாரும் மாஞ்சாலம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாகவும் கூறினர். முகப்பிலமைந்திருக்கும் மாஞ்சாலம்மன் சன்னிதியைத்தான் ராகவேந்திரரை வழிபடுமுன் அனைவரும் வழிபடுகிறார்கள்.

இதோ, ராகவேந்திர பிருந்தாவனத்தின் அழகிய நுழைவாயில்...





ஆலய முகப்பின் முழுத்தோற்றம்...



ஆலயத்தின் முகப்பில் ராகவேந்திரர் திருவுருவம்...



ஆலயத்தின் வெளியே அழகிய பிருந்தாவனம். மலர்ச் செடிகள் பூத்து அழகூட்டுகிறது. செயற்கை நீரூற்றுகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.







பிருந்தாவனத்து மான்களில் சில...



ஆலயத்திற்குவரும் பக்தர்கள் தங்க வசதியாக, மிக அருகிலேயே அறைகள் உள்ளது.வங்கி வசதிகளும் அருகிலேயே உள்ளது.

ஆலயத்திலிருந்து ஆதோனிக்குத் திரும்பும்போது நேரம் இரவாகிவிட்டது. அந்தப் பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் அடிக்கடி நடக்குமென்று கூடவந்தவர்கள் சொல்லி கிலியைக் கிளப்ப, மந்திராலய மகானை மனதில் நினைத்தபடி எந்தத் தொந்தரவுமில்லாமல் வந்துசேர்ந்தோம்.

மொத்தத்தில் இந்த ஆந்திரப்பயணம் மனதுக்கு மிகவும் நிறைவாய் அமைந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக