செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பாரதம் படிக்கலாம் வாங்க (7)

வியாசரின் வரலாறும் குருவம்ச விருத்தியும்

அஸ்தினாபுரத்து மன்னன் சாந்தனுவின் மனைவியான மீனவப்பெண் சத்தியவதி, தன் திருமணத்திற்குமுன் ஒருநாள், தந்தைக்குப் பதிலாகத் தான் யமுனை நதியில் படகோட்டிக்கொண்டிருந்த வேளையில்,வசிஷ்ட முனியின் வழித்தோன்றலான பராசர முனிவர் அங்கு வந்தார். மீனவப்பெண்ணவளின் அழகில் மயங்கிய அவர் அவளை விரும்பி,அவளோடு கூடிவாழ, அவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கரிய நிறமாயிருந்ததால் அக்குழந்தைக்கு கிருஷ்ணன் என்றும், யமுனை நதியின் இடையில் அமைந்த தீவினில் பிறந்ததால் துவிபாயனன் என்றும் அம்மகனுக்குப் பெயரிட்டனர்.(துவீபம் என்றால் தீவு என்று அர்த்தமாகும். உதாரணமாக,சிங்களத்வீபம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா?)

சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த, புத்திரர் இருவரும் சந்ததியின்றி இறந்துபோக, பராசரர் மூலம் தனக்குப் பிறந்த தன் மூத்த மகனான வியாசமுனிவரிடம் சென்று குருவம்சம் தழைக்க வழிசெய்யுமாறு கூறினாள் அன்னை சத்தியவதி.

அன்னையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வியாசமுனிவரும், விசித்திரவீரியனின் மனைவியரான அம்பிகா, அம்பாலிகாவைத் தன்னிடம் அனுப்பிவைக்குமாறும் தன்னுடைய யோக சக்தியினால் தான் அவர்களுக்கு புத்திரபாக்கியம் தருவதாகவும் கூறினார்.

மகனின் பதிலில் மகிழ்ந்த அன்னை சத்தியவதி முதலில் அம்பிகாவை வியாசரிடம் அனுப்பி வைத்தாள். வியாசரின் உருவத் தோற்றத்தைக் கண்டு அஞ்சியதாலும், கூச்ச உணர்வினாலும் வியாசரின் அருகில் வந்ததும் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அம்பிகா. அதனால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறக்க அதற்கு திருதராஷ்டிரன் எனப் பெயரிட்டனர்.

பார்வையற்ற குழந்தை பின்னாளில் அரியணை ஏற இயலாது என்று எண்ணிய சத்தியவதி, தம் இரண்டாவது மருமகளான அம்பாலிகாவை முன்னதாகவே எச்சரிக்கை செய்து, வியாசரின் யோகத்துக்கு ஒத்துழைக்குமாறு கூறி அனுப்பிவைத்தாள். ஆனால், அச்சத்தின் காரணமாய் அவளும் முகம் வெளுத்துப்போக, அவளுக்கு பாண்டு எனும் பெயருடைய உடல் வெளுத்த,சோகையுற்ற பிள்ளை பிறந்தது. இந்தக் குழந்தையும் சத்தியவதிக்கு திருப்தியளிக்காததால் மீண்டும் மகன் வியாசரைச் சென்று வேண்டினாள்.

அன்னையின் வேண்டுதலை ஏற்று, வியாசமுனிவரும் மருமகள் இருவரில் ஒருத்தியை மீண்டும் அனுப்பிவைக்குமாறு சத்தியவதியிடம்கூற, இந்தமுறை, அம்பிகாவும் அம்பாலிகாவும் சேர்ந்து, அவர்களுடைய பணிப்பெண் ஒருத்தியை அலங்கரித்து வியாசரிடம் அனுப்பி வைத்தனர். அச்சமோ, பயமோ இன்றி வியாசரின் யோகமுறைக்கு உடன்பட்ட அப்பணிப்பெண்ணுக்கு, அறிவும் ஆரோக்கியமுமான ஆண் குழந்தை பிறந்தது. அவரே பின்னாளில் விதுரர் என அழைக்கப்பட்டார்.

ஆக, வாரிசின்றிப்போன குருவம்சம் வியாசரின் மூலமாக வாரிசை அடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக